Friday, May 13, 2011
தலையங்கம்: தன்மானத் தமிழன்!


இதை ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கூட்டணியின் அமோக வெற்றி என்று கூறுவதைவிட, திமுக தலைமையிலான கூட்டணிக்கு எதிராக எழுந்த மக்களின் மௌனப் புரட்சி என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். தமிழகம் முழுவதும் திமுகவுக்கு எதிராக ஒரே மாதிரியான மனோபாவம் காணப்பட்டிருப்பது புதியதொன்றும் அல்ல. தமிழக மக்கள் கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலைத் தவிர, ஏனைய தேர்தல்களில் எல்லாம் ஏதாவது ஒரு கட்சிக்குப் பேராதரவு அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாக்களித்து வந்திருக்கிறார்கள் என்பதுதான் சரித்திர உண்மை.
1967-லும், 1977-லும், 1996-லும் காணப்பட்ட எழுச்சியை இந்தத் தேர்தலிலும் காண முடிகிறது. பெருந்திரளாக மக்கள் வாக்குச்சாவடியை நோக்கிப் படையெடுத்ததை, ஆளும் கட்சியினர் தங்களது பணப் பட்டுவாடாவின் விளைவு என்று தப்புக்கணக்குப் போட்டனர் என்றால், பல தேசியத் தொலைக்காட்சி சேனல்களின் கருத்துக் கணிப்புகளும்கூட அல்லவா, எதார்த்த நிலைமையைப் புரிந்துகொள்ளாமல் திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்குக் கட்டியம் கூறின? குழப்பம் ஆட்சியாளர்களிடமும், ஊடகங்களிடமும் இருந்ததே தவிர, மக்களிடம் இருக்கவில்லை.
மின் வெட்டு, விலைவாசி உயர்வு, ஊழல் போன்ற பிரச்னைகள் திமுக ஆட்சியினர்மீது மக்களுக்குப் பரவலான அதிருப்தி ஏற்படுவதற்குக் காரணிகள் என்றாலும், திமுகவைத் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓட ஓட விரட்டியது என்னவோ "குடும்ப ஆட்சி' என்கிற அருவருப்பான விஷயம்தான். ஜெயலலிதா தலைமையில் அமைய இருக்கும் அதிமுக ஆட்சியில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாவிட்டாலும் நிச்சயமாகத் தலையீடு தவிர்க்க முடியாதது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது நன்றாகத் தெரிந்திருந்தும் வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்?
கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில், அவரது மனைவி மட்டுமோ அல்லது அவரால் வாரிசு என்று அடையாளம் காட்டப்பட்ட துணை முதல்வர் மு.க. ஸ்டாலினின் குடும்பம் மட்டுமோ ஆதிக்கம் செலுத்தி இருந்தால்கூட மக்கள் இந்த அளவுக்குக் கோபமும் வெறுப்பும் அடைந்திருக்க மாட்டார்கள். கருணாநிதியின் குடும்பம் என்கிற பெயரில், மனைவி, துணைவி, மக்கள், பேரக் குழந்தைகள் என்று ஒரு டஜன் குடும்பங்களின் ஆதிக்கமல்லவா நடந்தது?
அதைக்கூடப் பொறுத்துக் கொண்டிருப்பார்கள். மாவட்டத்துக்கு மாவட்டம், தொகுதிக்குத் தொகுதி, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு என்று அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினர்கள், வட்டச் செயலர்கள் என்று பல நூறு குடும்பங்கள் செலுத்திய ஆதிக்கமும், அரங்கேற்றிய அட்டகாசங்களும் கொஞ்சமா நஞ்சமா? அத்தனை அடாவடிப் பேர்வழிகளுக்கும் வாக்குச் சீட்டின் மூலம் தக்க பாடம் புகட்டி இருக்கிறாôர்கள்.
தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?
முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
ஈரோட்டில் முத்துசாமி, முதுகுளத்தூரில் சத்தியமூர்த்தி, கிணத்துக் கடவில் மு. கண்ணப்பன், ஆர்.கே. நகரில் சேகர்பாபு என்று கடைசி நேரத்தில் கட்சி மாறிய அத்தனை சந்தர்ப்பவாதிகளும் தோல்வியைத் தழுவி இருக்கிறார்கள். ஜாதிக் கட்சிகளான பாமக, விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் என்று சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்தவை மண்ணைக் கவ்வி இருக்கின்றன. காங்கிரûஸப் பற்றி சொல்லவே வேண்டாம். வாக்காளர்களிடம்தான் என்னவொரு தெளிவு...
கடந்த மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் ஒரு மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பூத் வாரியான வாக்குகளைப் பதிவு செய்து காட்டுகின்ற படிவம் 20-ல் அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனுக்குக் கிடைத்த வாக்குகளைக் காங்கிரஸ் வேட்பாளரான மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்துக்கும், அவரது வாக்குகளை ராஜகண்ணப்பனுக்கும் மாற்றி எழுதி, காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்கிற குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறார் முதல்வராகப் பதவி ஏற்க இருக்கும் ஜெயலலிதா. யார் கண்டது, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக அணியின் முழு வெற்றியே இப்படி ஒரு தில்லுமுல்லால் பெறப்பட்டதுதானோ என்னவோ? சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அப்படி ஓர் ஐயத்தை எழுப்புகிறதே...
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் தரப்பட்டிருக்கும் தண்டனை என்றால், திறமையான அதேநேரத்தில் நேர்மையான நிர்வாகம், மக்களின் உணர்வுகளையும், பிரச்னைகளையும் பிரதிபலிக்கும் ஆட்சி, கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய குடும்ப ஆதிக்கமும், தலையீடும் இவையெல்லாம் இல்லாமல், கேவலம், பணத்தையும், இலவசங்களையும் காட்டி இனிமேலும் யாரும் எங்களை ஏமாற்ற முடியாது என்பது அதிமுகவுக்கும், மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் செல்வி. ஜெயலலிதாவுக்கும் அவர்கள் உணர்த்தும் பாடம்.
""தமிழனென்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா!'' என்கிற நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களை ""தினமணி'' பெருமிதத்துடன் தலைவணங்கிப் பாராட்டுகிறது!
Thursday, May 12, 2011
கருணாஸ் ஒரு சுயநலவாதி
எழுத்தாளர் சவுக்கு |
திங்கட்கிழமை, 09 மே 2011 07:16 |
“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.” இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள். திமுக என்பது எத்தனை தியாகங்களால் உருவானது ? அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை நூலுக்குத் தடை, திமுக கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு, மீறி நடந்த குன்றத்தூர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, என்று தொடங்கிய காலம் முதலாகவே எத்தனை தடைகள் ? அடக்குமுறைகள் ? ஆனால், இந்த அடக்குமுறைகள் அத்தனைனையும் மீறி, திமுக வளர்ந்ததற்காக காரணம், காலத்தின் தேவை. திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சியின் அவசியத்தை அன்று மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதே திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, இன்றோ நாளையோ அவிழும் நெல்லிக்காய் மூட்டை போன்ற நிலைக்கு ஆளாக்கியது நீங்கள் தான். நீங்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, நீங்கள் சம்பந்தப் படாத அத்தனை விவகாரங்களையும் கல்லறைக்கு அனுப்பினீர்கள். அண்ணாவால் தொடங்கப் பட்ட திராவிட நாடு இதழ் எங்கே ? கழக செய்திகளைத் தாங்கி வந்த மாலை மணி இதழ் எங்கே ? அந்த இதழ்கள் அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு, நீங்கள் தொடங்கியது என்ற ஒரே காரணத்துக்காக முரசொலியை கட்சியின் அதிகார பூர்வ ஏடாக ஆக்கியது உங்கள் அகந்தையும் சுயநலமும் அல்லாமல் வேறு என்ன ?
அந்த முரசொலியை திமுகவுக்கு வழங்கியதற்காக நீங்கள் செய்த தந்திரம் என்ன ? போதுமான நிதி இல்லாததால் இனி முரசொலியை நடத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டு, ஒரு வாரத்திற்கு அந்த ஏட்டை நிறுத்தி, கோடானு கோடி தொண்டர்கள் ‘தலைவா, இதழைத் தொடங்கு தலைவா’ என்று கடிதமும் தந்தியும் அனுப்பியதும், அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, நீங்கள் தொடங்கிய இதழ் என்பதால், திமுகவுக்கு அந்த இதழை விற்க, 2 கோடியை திமுகவிடமிருந்தே பெற்ற அற்ப மனிதர் தானே நீங்கள் ? இப்படி ஆரம்பம் முதலாகவே, சுயநலம், சுயநலம் என்று சுயநலத்தின் மொத்த உருவமாகத்தானே இருந்தீர்கள். ? இன்று இப்படி ஒரு மோசமான சூழலில் சிக்கி, அவமானப்பட நேர்ந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல கருணாநிதி அவர்களே.. நீங்களே தான். பதவியையும் அதிகாரத்தையும் உங்கள் மகனுக்காக கூட விட்டுத் தரத் தயாராக இல்லை நீங்கள். அந்த அகந்தையே உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. எண்பத்து ஏழு வயது வரை ஓயாமல் உழைப்பதும், படிப்பதும், எழுதுவதும், நல்ல விஷயம் என்றாலும் கூட, உழைப்பதற்கு வேறு நபர்கள் இருக்கும் போது, அதுவும் உங்கள் சொந்த வாரிசாக இருக்கும் போது, அவருக்குக் கூட விட்டுத் தராமல், தொடர்ந்து தள்ளுவண்டியிலும் அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது உங்களின் பிடிவாதம் மற்றும் அதிகார வெறி காரணமாகவே… இது போல தள்ளுவண்டியில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு, பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் ? அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இலக்கியப் பணி ஆற்றப் போகிறேன் என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள் ? வசதியாக அதை மறந்து விட்டு, ஆறாவது முறையாக முதல்வராகப் போகிறேன் என்று கூசாமல் பேசினால், ஊர் சிரிக்காது ? திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தொடங்கப் பட்ட திமுகவை, உங்களின் மூட நம்பிக்கைகளினாலும், திருட்டுத் தனத்தாலும், சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போடுவது வரை கேவலப்படுத்தி விட்டீர்கள். திமுக வரலாற்றில் என்றாவது ஒரு சாமியாருக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது உண்டா ? வாயைத் திறந்தால், அறிஞர் அண்ணாவின் வழியில், பெரியாரின் நிழலில் என்று ஜிகர்தண்டா கதைகளாக விடுகிறீர்களே… அண்ணாவும் பெரியாரும், இப்படியா தீர்மானம் போட உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ? உங்கள் துறையைச் நேர்ந்த அமைச்சர் தீமிதித்தார் என்பதற்காக, தீமிதிப்பது காட்டுமிராண்டிச் செயல் என்று சொல்லி, அந்தியூர் செல்வராஜ் என்ற அமைச்சரை ஓரங்கட்டவில்லை ? உங்கள் மனைவி காற்றிலிருந்து மோதிரம் எடுக்கும் போலிச் சாமியார் சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், உங்கள் அருமைப் பிள்ளை சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், பிறந்த நாளுக்கு ஆசி வாங்க புட்டபர்த்தி சென்ற போதும் அது காட்டுமிராண்டித்தனமாக செயலாக உங்களுக்குப் படவில்லையா ? ஊர் ஊராக நாத்திகம் பிரச்சாரம் செய்த, பெரியாரும், அண்ணாவும் உங்களுக்கு இதையா கற்றுக் கொடுத்தார்கள் ? மிகப் பெரிய தானைத் தலைவராக, டெல்லியை அசைத்த உங்களை நம்பாமல், உங்கள் மகளே தனக்கும், ராசாவுக்கும் மந்திரிப் பதவி வேண்டும் என்று ஒரு தரகரோடு உரையாடிய விபரங்கள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறதே…. ? ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால், அப்போதே அல்லவா கனிமொழியை கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்க வேண்டும் ? அப்போது விலக்கி வைத்திருந்தால், இன்று இத்தனை சிக்கல்கள் சமாளிக்க முடியாதது போல் உருவாகியிருக்காதே ? இரண்டு பெண்மணிகள் பேசுவதில் என்ன தவறு என்றல்லவா சப்பைக் கட்டு கட்டினீர்கள் ? பேராசைக்கு ஓர் அளவில்லையா கருணாநிதி அவர்களே ? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் குடும்பத்திடம் பணம் இல்லையா ? சொத்து இல்லையா ? என்று நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனீர்களோ, அன்று முதல், நீங்கள் ஊழல் புரிந்து வந்துள்ளீர்கள் என்பதை நீதிபதி சர்க்கரியாவின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. பணம் பண்ணுவதையே முழு நேரத் தொழிலாகவும், ஆட்சி புரிவதையும் கட்சி நடத்துவதையும் அதற்காக வழியாகவும் கடைபிடித்தவர் நீங்கள். அத்தனை பணம் வைத்திருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதற்காக இத்தனை பேராசை கருணாநிதி ? எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவர் நீங்கள் ? எத்தனை விசாரணைகளை சந்தித்திருப்பீர்கள் ? ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான முதல் நாளே ஆயிரம் கோடியை உங்களிடம் வந்து கொடுத்த போது, நீங்கள் உஷாராயிருக்க வேண்டாமா ? இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளாக பணம் வந்து கொட்டினால், இதில் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா ? பேராசைப் பிடித்த உலகில், மிகப் பெரிய ஆதாயத்தை அடையாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை எவனும் தர மாட்டான் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா ? மற்ற ஊழல்களைப் புரிந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும், ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உங்களை யாருமே அசைத்திருக்க முடியாதே ? தமிழ்நாட்டில் ஊழல் புரிந்திருந்தால், பதவி போகும் வரை உங்கள் ஆட்சி என்பதால், தடயத்தையாவது அழித்திருக்க முடியும். வட இந்தியாவில், டெல்லியில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் இப்படி ஒரு இமாலய ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எப்படி நம்பினீர்கள் ? நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் அருமைப் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு எதிராக திரும்பிய போது, அவசர அவசரமாக கலைஞர் டிவியை தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள். விருப்பம் சரி. அவ்வாறு தொடங்கப் பட்ட டிவிக்கு இயக்குநராக, கட்சியில் எந்த நாயையாவது போட்டிருக்கலாமே ? உங்களை மீறி யாராவது செயல்பட முடியுமா ? அதையும் மீறி செயல்பட்டால் விட்டு விடுவீர்களா ? அதிகபட்சம் அந்த நபர் 10 ரூபாயை கையாடுவான். அவ்வளவு தானே ? உலகத்தில் யாராவது பெண்டாட்டியையும், பெண்ணையும் இயக்குநராக போட்டு, லஞ்சப் பணத்தில் டிவியை தொடங்குவார்களா ? உங்கள் கீழ் செயல்படும் துறையான லஞ்ச ஒழிப்புத் துறையில் போடப்படும் வழக்குகளில், மனைவி பெயரில் சொத்துக்கள் இருந்தால், குற்றவாளிக்கு உடந்தை என்ற, மனைவியையும் குற்றவாளியாக சேர்ப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கு மறந்து விட்டது ? அப்படி இருக்கும் போது, யாராவது ஒரு குப்பனையோ, சுப்பனையோ, கலைஞர் டிவியில் இயக்குநராகப் போட்டிருக்கலாமே ? அதாவது பத்து பைசா கூட வேறு யாருக்கும் போகக் கூடாது. அந்த பத்து பைசாவையும் குடும்பம் தான் தின்ன வேண்டும். ஏன் கருணாநிதி உங்களுக்கு இப்படி ஒரு பேராசை ? கடன் வாங்கினார்கள், திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினீர்களே…. ராசா கைது செய்யப் பட்டதும் திருப்பிக் கொடுக்கப் பட்டால், இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் என்று சிபிஐ கேட்காது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் ? கலைஞர் டிவியின் நிகர லாபமே, 1.34 கோடியாக இருக்கும் போது, 200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று சிபிஐ கேட்காதா ? சிபிஐ அதிகாரிகள் அவ்வளவு முட்டாள்களா ? ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியதும், இந்த இமாலய ஊழலை மறைக்க நீங்கள் எடுத்த முயற்சி மிக மிக கேவலமானது கருணாநிதி அவர்களே… ராசா தலித் என்பதால் வட இந்திய ஊடகங்களும், பார்ப்பன சக்திகளும் ராசாவை குற்றம் சொல்லுகின்றன என்பது எத்தனை அபத்தமான வாதம் ? அபத்தமானது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. இந்த ஊழலில் சாதி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? தலித்தாகிய ராசா வாங்கித் தந்த பணத்தை, இசை வேளாளராகிய தயாளு அம்மாள், நாடார்களாகிய ராசாத்தி கனிமொழி, ரெட்டியாராகிய நக்கீரன் காமராஜ், இஸ்லாமியராகிய ஜாபர் சேட், தேவராகிய டி.ஆர்.பாலு, நாயுடுவாகிய ஆற்காடு வீராச்சாமி, கிறித்துவரான ஜெகத் கஸ்பர், என சாதி மதப்பாகுபாடு இல்லாமல் தானே அனைவரும் பங்கு போட்டுக் கொண்டீர்கள் ? இதில் சாதி எங்கிருந்து வந்தது ? மேலும், உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்புவதை மக்கள் எப்போதோ நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை ? நீங்கள் கோலோச்சும் அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதே நீங்கள் பதவி விலகியிருக்க வேண்டும் கருணாநிதி. இதை விட உங்களுக்கு பெரிய அவமானம் என்ன வேண்டும் ? உங்கள் மகளையும், மனைவியையும், சிபிஐ உங்கள் மூக்குக்கு கீழே கேள்வி கேட்டுச் செல்கிறார்கள் இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல், கலைஞர் டிவியில் தவறே நடக்கவில்லை என்று சொல்லுவதன் மூலம், தப்பித்து விடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டீர்கள் ? கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றதும், உடனடியாக திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டினீர்களே… கனிமொழி உங்கள் மகள் என்பதை விட, திமுகவில் அப்படி என்ன பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் ? உங்கள் மகள் ஊரான் பணத்தை திருடினால், கேள்வி கேட்க மாட்டார்களா ? விசாரிக்க மாட்டார்களா ? உங்கள் மகளை குற்றம் சாட்டி விட்டார்கள் என்பதற்கும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் பெண்டாட்டி, பிள்ளை, மகளுக்காகத் தான் திமுக இருக்கிறதா ? அந்தக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்திலும், ஏதாவது உப்பு சப்பு இருந்ததா ? யாரையாவது கண்டித்தீர்களா ? ‘சரத்குமார் மற்றும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பது, ஆச்சயர்யத்தை அளிக்கிறது’ என்றால் என்ன ஆச்சர்யம் இதில் உங்களுக்கு ? காலில் விழுந்து கெஞ்சிக் கதறியும், மாட்டி விட்டு விட்டார்களே என்றா ? திமுகவின் தீர்மானங்கள் எப்படி இருக்கும் தெரியுமா ? மறந்திருப்பீர்கள். நினைவு படுத்துகிறேன். 1957ம் ஆண்டு, நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம். “பாராளும் பண்டிதரின் ஆணவம் - எதற்கும் எவரையும் நான்சென்ஸ் என்றும், அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்களைப் பித்தர்கள் என்றும், மூதறிஞர்களை ஆற்றல் மிக்கோரை முட்டாள்கள் என்றும், இன எழுச்சி ஊட்டுவோரை கட்டு மிராண்டிகள் என்றும், தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றிடும் பெரியார் ஈவெராவை மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு ஓடச் சொல்லும்படியும் பேசும் பண்டித நேரு – பஞ்சம் பேக்கினாரா ? பட்டினி துடைத்தாரா ? விலை ஏற்றம் போக்கினாரா ? செல்வம் வளரச் செய்தாரா ? எதைச் சாதித்துத் தந்தார் இந்நாட்டு மக்களுக்கு ? எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி எல்லாத் தலைவர்களையும் ஏசித் தமிழரின் மனம் புண்படச் செய்யும் பண்டித நேரு பவனி வருகிறார். பம்பாய் போல் பயங்கரம் வேண்டாம். குஜராத் போல் கலகம் வேண்டாம். கண்ணியமான முறையில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டாமா நாம் ? தமிழர்களே… ! உங்கள் நாடு சீரியது. உமது வரலாறு புகழ்மிக்கது. உமது தலைவர்கள் ஆற்றல் மிக்கோர். எனினும் ஏசுகிறார் நேறு ! ஆந்திரர் தமது உரிமையைப் பெற ரயிலை கவிழ்த்தனர். தபாலுக்குத் தீயிட்டனர். ஆமதாபாத்தில் கதர்சசட்டையை காந்தி குல்லாயைத் தீயிட்டனர். அந்த விதமான அநாகரிகம் வேண்டாம். அகில உலகில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நாகரிக முறையான கறுப்புக் கொடி காட்டுவது என்பதைச் செய்யவுமா வகையற்றுப் போனீர்கள் என்று இந்த வையகம் கேட்கும். தையலர் சிரிப்பர். பின் சந்ததியும் ஏசும். எனவே எல்லோரும் வாருங்கள். ஏசிப்பேசும் நேரு பண்டிதருக்கு காட்டுவோம் கருப்புக் கொடி.” எப்படி இருக்கிறது தீர்மானம் ? அனல் பறக்கவில்லை ? கனிமொழி குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க டெல்லி செல்கிறார் என்றதும், உங்கள் கட்சி எம்பிக்கள் அத்தனை பேரையும் டெல்லிக்கு அனுப்பினீர்கள். உங்கள் உள்துறைச் செயலாளரை அனுப்பினீர்கள். அனைவரையும், மகளோடு ஆதரவாக இருக்கச் செய்தீர்கள். உங்களால் தகத்தகாய கதிரவன் என்று அழைக்கப் பட்ட ராசாவை சிபிஐ விசாரணைக்கு அனுப்பிய போது, ஏன் உங்கள் கட்சி எம்பிக்களை அனுப்பவில்லை ? தலித் இனத்தின் தன்னிகரில்லாத தலைவனல்லவா ராசா ? பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கிய பூச்செடி இல்லையா ராசா ? இதையெல்லாம் விட நீங்கள் செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், உங்கள் மகளுக்காக ராம் ஜெத்மலானி செய்த வாதம். கைது செய்யப் பட்டதனாலேயே ஒருவர் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக ஆகாது என்று பேசி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜெத்மலானியை தவறு செய்தவர் ராசாதான், கனிமொழிக்கு பொறுப்பில்லை என்று பேச வைத்தீர்கள் ? இதை விட ஒரு மனிதனின் முதுகில் குத்த முடியுமா ? ராசா யாருக்காக கொள்ளையடித்தார் கருணாநிதி ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்காகவும் தானே ? ஆயிரக்கணக்கான கோடிகளை உங்களுக்காக ராசா கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுத்த போது ராசா இனித்தாரா ? ராசா அப்ரூவராக மாறினால், தள்ளு வண்டியோடு நீங்களும் திஹார் செல்ல வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை ? இனி உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு வார்தையைக் கூட யாரும் நம்பப் போவதில்லை கருணாநிதி. இனியாவது எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்கள் பொய்யுரைகளும், புனை சுருட்டும் இனியும் நம்பப் படாது. உங்களுக்கு மான உணர்ச்சியெல்லாம் இல்லை என்பது நன்கு தெரியும். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் பெரியார். உங்களை நீங்கள் மனிதனாக கருதினால், உடனடியாக பதவி விலகுங்கள். உங்களுக்குப் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு ஒருவருக்குக் கூட தகுதி இருப்பதாக சவுக்கு கருதவில்லை. தகுதி இல்லை என்று சொல்வது, திறமை இல்லை என்பதற்காக அல்ல ? நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து, உங்கள் மகளுக்கு பாதுகாவலனாக டெல்லி சென்று காத்துக் கிடப்பவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமையான திருச்சி சிவா உட்பட. அதனால், உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் ஊழல் கறை படியாமல் இருப்பது, கனிமொழியின் மகன் ஆதித்யா தான். அதனால் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதை பற்றி சிந்தியுங்கள். அய்யன் வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று நினைவிருக்கிறதா ? நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர். நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள். நீங்கள் எப்போதா இறந்து விட்டீர்கள் கருணாநிதி. இனி இறப்பதற்கு வேலையில்லை. |
Wednesday, May 11, 2011
கிருத்துவ நிறுவனங்களின் இரட்டை வேடம்
கிருத்துவ அனாதை இல்லங்ளின் இரட்டை வேடம் – இளம் சிறுமிகள் கற்பழிப்பு, விபச்சாரம், ஆபாச படங்கள் தயாரிப்பு முதலியன!
vedaprakash எழுதியது
கிருத்துவ நிறுவனங்களின் இரட்டை வேடம்: அனைத்துலக கிருத்துவ நிறுவனங்கள், இந்த்யாவில் குழந்தைகள் பள்ளிகளுக்கு அனுப்பாமல், வேலைக்கு அனுப்புகின்றனர் என்றெல்லாம் புகைப்படங்கள், குறும்படங்கள், முதலியவற்றை எடுத்து, பிரபலப்படுத்தி, இந்தியப் பெற்றோர்கள் கொடியவர்கள் போலச் சித்தரித்துக் காட்டுகின்றனர். மாறாக, இந்தியர்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொண்டு, குழந்தைகளைக் காப்போம், சிறுவர்-சிறுமிகளைக் காப்போம், என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொண்டு, அவர்களது வாழ்க்கையினையே இப்படி சீரழித்து விடுகின்றனர். இப்பொழுது, மாட்டிக் கொண்ட இருவர் மற்றும் சென்னையில் மாட்டிக் கொண்டவர்கள் எல்லோருமே, இப்படி அனாட்தை இல்லங்கள் நடத்தும் கிருத்துவ நிறுவனங்கள் தாம்!
குழந்தைகள் காப்பகம் பெயரில் பிபச்சார இல்லங்கள்: டன்கேன் கிராண்ட் 1955ல் கொலபா என்ற இடத்தில் ஒரு காப்பகம், இல்லத்தை ஆரம்பித்தான்[1]. அதாவது 22 வயதிலேயே அங்கு வந்து இந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்று உறுதியாகவந்துள்ளது தெரிகிறது. ஆலன் வாட்டர்ஸ் என்பவனும், இங்கிலாந்திலிருந்து வரும் பணத்தை வைத்துக் கொண்டு அத்தகைய இல்லத்தை ஆரம்பித்து, தொழிலைத் தொடங்கினான். சிறுவர்-சிறுமிகளுக்கு இடம் கொடுத்தல், இரவில் தூங்க இடம் கொடுத்தல், என்று ஆரம்பித்து, மெதுவாக, அவகளது நலன்களை பதுபாப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தினர். பிறகு தமது திட்டத்திர்கேற்றபடி சுற்றுலா விபச்சாரத்திற்கு, அந்த அப்பொழுது தான் வயதிற்கு வந்துள்ள 12-18 வயது சிறுவர்-சிறுமிகளை அந்நியர்களுக்கு விபச்சாரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் வளர்த்த விதம்: தெருவில் சுற்றும், வேலை செய்யும் சிறுவர்களுக்கு அங்கு இடம் கொடுக் பட்டது. 25-30 என்று குழுக்களாக அவர்கள் பிரிக்கப் பட்டு மூரத் மற்றும் பத்வர் பார்க் ஏரியாக்களில் உள்ள அந்நியதேச சுற்றுலா பயனிகளுக்கு அனுப்பி வைப்பர். அவர்கள் அந்த அந்நியர்களுக்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்து வந்தனர். ஒன்று வெள்ளைத்தோல் அந்நியர், இரண்டு அவர்கள் நிறைய பணம் பரிசுப் பொருட்கள் முதலியவற்றை கொடுக்கிறார்கள் என்ற காரணங்களினால், செக்ஸ் மற்றும் புணர்ச்சிகளில் ஈடுபட்டாலும் முதலில் மறுத்தாலும் அல்லது ஏற்புடையதாக இல்லாமல் கர்தினாலும், பிறகு அவர்கள் பண ஆசை முதலியவற்ரை காட்டி உடன்பட செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் அவர்கள் செக்ஸ் டூரிஸம் / சுற்றுலா விபச்சாரம் செய்து வந்தனர்.
மும்பை, கோவா முதலிய இடங்களில் சகஜமாக நடகும் விபச்சாரம்: இந்தியாவில், குறிப்பாக மும்பையில் இது மிகவும் சகஜமான நிகழ்ச்சியாக உள்ளது. வில்ஹெலம் மற்றும் லிலி மார்த்தி என்ற தம்பதியர் டிசம்பர் 12, 2002ல் மும்பையில், ஒரு ஹோட்டலில், சிறுமிகளுடன் தகாத முறையில் செக்ஸ் வைத்துஇக் கொண்டதற்கசக கையும் களவுமாக பிடிப்பட்டனர். நீதி மன்றம் அவகளுக்கு ஏழாண்டு கடுங்காவல் மற்ரும் ரூ. 15,000/- அபராதம் விதித்தது. ஆனால், மார்ச் 15, 2004ல் ஆளுக்கு ரூ. ஆறு லட்சம், ஒரு லட்சம் என அபராதம் கட்டி விட்டு, அப்பணத்தை பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுத்து விட்டி, தப்பித்து விட்டனர்[2].
டன்கேன் கிராண்ட் (67) மற்றும் ஆலன் வாடர்ஸ் (63) [Duncan Grant and Allan Waters ] இருவருமே மிகப் பெரிய சிறுவர் செக்ஸ் கொடூரர்கள். மும்பை 2008ல் அவர்களை எப்படியோ விடுவித்து விட்டது. ஆனால், உச்சநீதி கோர்ட்டில். நன்றாக மாட்டிக் கொண்டு விட்டனர். இதனால், அவர்கள் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம்[3]. அவர்களுடைய இந்திய கூட்டாளி வில்லியம் டிசௌஸா[William D’souza]வும் இதில் சம்ம்பந்தப்பட்டுள்ளான். இவர்களும் எல்லோரும் சிறுவர் காப்பகத்தில் இருக்கும் சிறுவர்-சிறுமியர்களை செக்ஸ் வன்புணர்ச்சி முதலிய காரியங்களை செய்து வந்தனர்[4]. மானேஜராக இருந்த வில்லியம் டிசௌஸா (49) அந்த இருவர்களுக்கும் வேண்டிய சிறுவர்-சிறுமியர்களை அனுப்பி வைத்தான்[5]. இதனால் 2006ல் கைது செய்யப் பட்டனர்.
2008ல் மும்பை நீதி மன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்து விட்டது. இருப்பினும், அவர்கள் இந்தியவை விட்டு செல்லக் கூடாது என்று உச்சநீதி மன்றம் ஆணையிட்டது[6]. மேலும் ஆறு வருட கால சிறை தண்டனை அவர்க்க்க்களுக்கு அளித்தது மிகவும் அதிகம் என்று கூறியது. ஆனால், கண்ணால் பார்த்த சாட்சிகள் அவர்கள் சிறுவர்-சிறுமியர்களுடன் செக்ஸ் வைத்துக் கொண்டிடுந்ததைப் பார்த்ததாக உள்ளது. ஆகவே, இதை சாதாரண பிரச்சினையாக விட்டுவிடமுடியாது என்ரு உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. அதாவது, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மறுடியும் கைத் செய்யப் படப்போகிறர்ர்கள்!
சைட் லைஒன் இந்தியா ஃபவுண்டேஷன் (Childline India Foundation) என்ற சிறுவர்-சிறுமியர்களின் உரிமைகளுக்குப் போராடும் நிறுவனம் தான், உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இன்று வெற்றிப் பெற்றது.
வேதபிரகாஷ்
21-03-2011
எம்.ஆர்.ராதாவும் எஸ்.வி.சேகரும் ஒன்றா : மு.கருணாநிதியின் ஒப்பீடு எழுப்பும் கேள்விகள்
| ||||
சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் நாடகத் துறையில் செய்த சாதனைகள் என்ன? மொத்தம் இவர் எழுதியது 24 நாடகங்கள். அதையே மீண்டும் மீண்டும் 5,600 முறை அரங்கேற்றி அனைவருக்கும் அல்வா கொடுத்து வருகிறார். அவரின் நகைச்சுவை என்பது ஒரு மட்டத்தில் கிச்சுகிச்சு மூட்டுவதாகவும் இன்னொரு மட்டத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட ஆபாசமாகவும் மட்டுமே இருந்திருக்கிறது. நாரதர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரான சேகர் திராவிட அரசியலில் பிராமணிய எதிர்ப்பு யுகம் முடிந்துவிட்டதன் சின்னமாகத் திகழ்கிறார். தனது வீட்டு விசேஷங்களுக்கான பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை அச்சிடும் நபரைத்தான் பகுத்தறிவின், கடவுள் மறுப்பின் ஒரே காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.வின் முதல்வரும் துணை முதல்வரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். திராவிட இயக்கப் போர்வாள் என்று அழைக்கப்படும் ஒரே தகுதி கொண்ட எம்.ஆர்.ராதாவை எஸ்.வி.சேகருடன் பட்டியலிடுவது என்பது உவர்க்களிக்கக்கூடிய சிந்தனை. தமிழ் நாடகம் புராணக் கதைகளிலிருந்து சமூகக் கருத்துகளுக்கு மாறத் தொடங்கிய பாய்ஸ் கம்பெனி யுகத்தில் தனது கலை-அரசியல் பயணத்தைத் தொடங்கிய மதராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகனான ராதாகிருஷ்ணன் உண்மையில் எந்த ஒப்பீடும் வைக்க முடியாத அளவுக்கு மிகுந்த தனித்துவமிக்கவர். கடந்த நூற்றாண்டின் கவனிக்கத்தக்க ஆளுமைகளுள் அவரும் ஒருவர். எம்.ஆர்.ராதாவின் வாழ்வையும் கலை-அரசியல் பங்களிப்பையும் பார்க்கும்போது மயிர்க்கூச்செரிகிறது. சே குவேரா போர்ப் படைகள் மூலம் செய்ய நினைத்ததை அவர் தனது நாடகங்கள், சமூகக் கருத்துக்கள் மூலம் செய்ய நினைத்தார். கலகக்காரர், கொள்கைப் பற்றுள்ளவர், தனது சமூக நோக்கிலிருந்து இம்மியும் பிசகாதவர், தான் உண்மையென நம்பியதன் வழியில் செல்வதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் சளைக்காதவர் என்று அழைக்கக்கூடிய ராதாவே பெரியாரின் முதலும் முடிவுமான கொள்கை விசுவாசியாகத் திகழ்ந்தார். குரலின் ஏற்ற இறக்கம், குறும்பு, சமய சந்தர்ப்பத்திற்கேற்ப அடிக்கும் நறுக்குத்தெரித்தாற்போன்ற கருத்துக்கள் போன்ற அவரின் கலைத் திறன்கள் எந்த மலிவான நோக்கத்திற்காகவும் பயன்பட்டதில்லை. தனது லீலைகளை அம்பலப்படுத்தியவரை ஆள் வைத்துக் கொன்ற ஜெயந்திரர் மீதான விசுவாசத்தின் காரணமாகக் கட்சி மாறியவர் எஸ்.வி.சேகர். அதற்கு மாறாக, பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும் தனது வாழ்க்கையாகக் கொண்ட பெரியாரின் கொள்கைகள் மீதான விசுவாசத்திற்காக எமர்ஜென்சி சிறைவாசத்தை அனுபவித்தவர் ராதா. ஆனால் பிராமணியத்திற்கு எதிராகப் போரிட்ட ஒரு இயக்கத்தின் வழித்தோன்றல்கள் பிராமணியத்தின் தொடர்ச்சியான எஸ்.வி.சேகரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, பெரியாரியத்தின் பிதாமகரைத் தாழ்த்தியிருக்கிறார்கள். ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகத்தின் நடிப்பிற்கு எஸ்.வி.சேகரின் ஒட்டுமொத்த நாடகங்களின் தொகுப்பும் ஈடாகாது. ‘தூக்கு மேடை’, ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ போன்ற பிரபலமான நாடகங்கள் போக ராமாயணத்தைக் கிண்டலடித்து ராதா எடுத்த நாடகங்களும் முக்கியமானவை. என்.எஸ்.கிருஷ்ணன்கூட தனக்குப் பாதிப்பு இல்லாத மென்மையான பிரச்சினைகளில்தான் தனது சமூகக் கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் ராதா எந்தவித அச்சமும் இன்றி கடுமையான சமூக-அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் திளைத்தார். அவரது நாடகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. அதனால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது நாடகக் குழுவை ஒரு போர்ப் படையைப் போலத்தான் ராதா வைத்திருந்தார். நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்துவது பற்றிய ஒரு கேள்விக்கு, "பொன்னாடைகள் பிணத்திற்குத்தான்" என்று கூறிய அவர், இன்றைய கட் அவுட் அரசியலையும் தனி நபர் துதி பாடலையும் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. ஏனெனில் பெரியாரிடம் காணப்பட்ட அதே போர்க்குணம் ராதாவிடமும் இருந்தது. திராவிட இயக்கத்தின் பிற கலைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பில் தங்கள் திராவிட சிந்தாந்தங்களைக் காற்றில் பறக்க விட்டார்கள். சினிமாவிற்குத் தாவினார்கள். ஆனால் ராதா எவ்வளவு எதிர்ப்பு வந்தபோதும் திராவிட இயக்க சிந்தனைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. தனது சினிமா வாழ்வை 'ரிட்டயர்மெண்ட்' என அழைத்தவர் ராதா. தனது சமூக-அரசியல் கருத்துக்களை முன்கொண்டு செல்ல நாடகமே சிறந்த ஊடகம் என்று கருதியதால் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தபோதும் அவர் நாடகத்திலேயே தொடர்ந்தார். சினிமாவில் வில்லனாக நடித்த போதுகூட தனது சமூக, அரசியல் கருத்துக்களைக் கிடைத்த வாய்ப்பில் புகுத்த அவர் தவறவில்லை. எஸ்.வி.சேகரின் நண்பனாகக் காட்டிக்கொள்வதன் மூலம் தங்கள் மீதான பிராமண எதிர்ப்பு பிம்பம் அகலும் என தி.மு.க. தலைவர் கணக்குப் போடுகிறாரா என தெரியவில்லை. இதன் மூலம் சென்னையில் ஒரு சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் பிராமண ஓட்டுகள் கிடைத்தால் தமிழகத் தலைநகரில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வரும் சரிவு தடுக்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்களா? ஆனால் தமிழகத்தில் வெறும் 2 சதவீதம் இருக்கும் ஒரு சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக திராவிட இயக்கத்தின் ஆதாரமாக இருந்த ராதா போன்றவர்களை அவமானப்படுத்துவது தி.மு.க. தனது அடித்தளத்தை தானே அசைப்பதற்கு சமமானது. சித்தாந்தத்தை தொலைக்கும் அரசியல் கட்சிகள் திடீர் சரிவுகளுக்குத் தங்களை எளிய இலக்காக்கிக்கொள்கின்றன. maya.flowerpower@gmail.com |
Sunday, May 8, 2011
M.G.R - 23 நினைவு நாள்
M.G.R ஒரு பத்திரிக்கையாளரின் பார்வையில்
துணிச்சலுக்கு மறுபெயர் எம்.ஜி.ஆர்
"எம்.ஜி.ஆரை சந்திக்கலாமா?` என்று, வெளியே இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியிடம் கேட்டதற்கு, "அதனாலென்ன, தலைவர் ப்ரீயாக தான் உள்ளார். போய் பேசுங்கள்!` என்றார்.
தொப்பி, கண்ணாடி இல்லாமல், முண்டா பனியன் மற்றும் கைலியுடன், தோளில் ஒரு வெள்ளை டர்க்கி டவல் அணிந்து, இரு தலையணை களை மடியில் வைத்தவாறு வெகு கேஷுவலாக அந்த அறையில் அமர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர்., உள்ளே சென்றவுடன், "வணக்கம்` சொல்லி, அவர் எதிரில் அமர்ந்தேன். கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்து அவரிடம் தனியாக சிறப்பு பேட்டி வேண்டும் என அடிக்கடி கேட்டு வந்தேன். "பிறகு பார்க்கலாம்!` என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். அப்போது நல்ல மூடில் இருந்த எம்.ஜி.ஆரிடம், "உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்கலாமா?` என்றேன்; அவரும், உடனே, "கேளுங்கள்...` என்றார். கொண்டு போயிருந்த டேப்-ரிகார்டரை ஆன் செய்து, எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
அன்றைய நிலையில், எம்.ஜி.ஆரை, மதுரை முத்து மற்றும், "சோ` ஆகியோர் தரக்குறைவாக தாக்கி பேசுவது பற்றி சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டவுடன், அதற்கு பதில் சொல்லாமல், என்னிடம் இருந்த டேப்-ரிகார்டரை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதில் இருந்த ஸ்டாப் பட்டனை அழுத்தி, நிறுத்திய பின், என்னிடம், "ஊம், கேளுங்கள்...` என்றார். நானும் விடாமல், "ஏன் டேப்-ரிகார்டரை ஆப் செய்தீர்கள்?` என்றேன். "பேட்டி முடிந்த பின் கூறுகிறேன்...` என்றார்.
அரைமணி நேரம் பேட்டி; சளைக்காமல் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்., அதன் பின் டேப் வேண்டாம் என்றதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்:
நாம் இவ்வளவு நேரம் பேட்டியில் எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். அது முழுவதும் பத்திரிகையில் வரப்போவதில்லை. குறிப்பிட்ட முக்கிய விஷயம் தவிர, தேவையில்லாத சில சர்ச்சைக்குரிய விஷயங்களும் பேசி உள்ளோம். அது, "ஆப் த ரிகார்ட்` ஆகும்-நமக்குள் பேசிக் கொண்டது. அது பத்திரிகையில் வெளிவந்தால், வீணான பிரச்னை ஆகும். ஆகவே, டேப்-ரிகார்டரில் பதிவாகாமல் இருப்பது நல்லது என்பதாலேயே வேண்டாம் என கருதி நிறுத்தினேன் என்றார்.
அரசியலில் தீவிரமாக எம்.ஜி.ஆரை எதிர்த்த மதுரை முத்து, பின்னாளில் தி.மு.க.,வை விட்டு விலகினார். தன் எதிரியாக நினைத்த எம்.ஜி.ஆரை ஆளுயர மாலை, பூச்செண்டுடன் சந்தித்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
தன்னை நம்பி வந்த மதுரை முத்துவுக்கு மீண்டும் மேயர் பதவி அளித்து கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., இப்படி பின் விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டதால் தான் யாரும் அவர் மீது குறை கூற முடியாதவாறு ஆயிற்று.
சினிமாவில் வீர, தீர செயல்களுக்கு டூப் போட்டு எடுப்பதை அறிவோம். ஆனால், பொதுமக்கள் முன் தைரியமாக, துணிச்சலுடன் செயல்படுபவர் எம்.ஜி.ஆர்., என்பதை அவரது கட்சி பிரசார சுற்றுப்பயணத்தின் போது பலமுறை நேரில் பார்த்துள்ளேன்.
முதல்வரான பின்பும் நடைபெற்ற ஒரு சம்பவம்... பெரியார் நூற்றாண்டு விழா என்று நினைக்கிறேன். மதுரையில், அரசு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் முக்கிய இடமான தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் அமைந்திருந்த மேடையில் இருந்து, ஊர்வலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் எம்.ஜி.ஆருடன் அப்போதைய கலெக்டர் சிரியாக் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.
ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது இடையில் கையில் மனுக்களுடன் மேடை அருகே நின்று கொண்டிருந்தனர் சிலர். அருகிலிருந்த காவல் துறையினர், அவர்களை ஒதுக்கப் பார்த்தும் போக மறுத்துவிட்டனர். "சரி, மனுக்களையாவது கொடுங்கள்; முதல்வரிடம் சேர்த்து விடுகிறோம்!` என்று கேட்டுப் பார்த்தும் பயனில்லை.
அவர்கள் தொடர்ந்து, "எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்!` என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தனர்.
மேடைக்கு கீழே நடந்த இந்த சலசலப்பை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னவென்று விசாரிக்க, "உங்களிடம் தான் மனு கொடுக்க வேண்டும் என கூறி, போக மறுக்கின்றனர்!` என்று அதிகாரிகள் சொன்னவுடன், சிறிதும் தயங்காமல், "அவ்வளவு தானே! நானே வாங்கிக் கொள்கிறேன்!` என்று சற்றும் எதிர்பாராதவிதமாக, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மேடை தடுப்பு கம்பியை தாண்டி வந்து, அந்த குறுகலான இடத்தில் மேடை விளம்பில் இருந்து குனிந்தவாறு அவர்களிடம் மனுக்களை வாங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் இருந் தவர்கள் பதறினர், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று; ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனுக்களை வாங்கியவுடன், மீண்டும் மேடைத் தடுப்பை தாண்டி, பழைய இடத்தில் புன்னகையுடன் நின்ற காட்சியைக் கண்டு, அங்கு கூடியிருந் தவர்கள் கரகோஷம் எழுப்பினர். (அந்த படம் தான் மேலே காண்பது) இப்படி அசாத்திய தைரியத்துடன் செயல்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., தவிர வேறு யாரேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
http://www.tamilulakam.com/news/view.php?id=751
தி மு க பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்
முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை - பகுதி 17
கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!
1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..
இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!
இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.
மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?
அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.
சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.
அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..
எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..
அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.
சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.
“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!
ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.
அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.
ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.
“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.
இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.
இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.
இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.
அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.
கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.
சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..
சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?
நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001