Wednesday, May 18, 2011

திகைத்துப்போய், ஓரடி பின்வாங்கிய அழகிரி!



“இந்த நாட்டைவிட, ‘அந்த’ வீட்டைக் கவனிப்பதுதான் அவருக்கு (கருணாநிதி) முக்கியமாகப் போச்சு… இன்னும் 1 மாதத்தில் நாட்டைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் அவர் இருக்கமாட்டார். சந்தோஷமாக ‘அந்த’ வீட்டில் இருந்து, ‘அவர்களையே’ கவனித்துக் கொள்ளட்டும்”

மேலேயுள்ள வாக்கியத்தைச் சொன்னது ஒரு அ.தி.மு.க. தலைவராகவோ, தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகராகவோ இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நம்புங்கள், மேலேயுள்ள வார்த்தைகள் வெளிவந்தது தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி என்று கூறப்படும் அழகிரியின் வாயிலிருந்து! தேர்தல் தினத்துக்குச் சில நாட்களுக்குமுன், கோபத்துடன் அவர் கூறிய வார்த்தைகள் அவை!

தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தி.மு.க. ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை ஊகிக்காதவர்கள் மிகக்குறைவு. ஆனால், இப்போது நடந்திருப்பதுபோல மிகக் கேவலமான தோல்வியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை.

ஆனால் அழகிரி அதை ஊகித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

மதுரையில் தான் கட்டியெழுப்பிய சாம்ராச்சியம் இப்போது சரசரவெனச் சரிவதை, அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. இனி எச்சரிக்கை ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியதில்லை. வெள்ளம் தலைக்கு மேல்!

அவரது ஆட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மதுரையிலிருந்து கிளம்ப பெட்டியைக் கட்டி விட்டார்கள். மதுரை மாநகருக்கு உள்ளேயுள்ள பல பில்டிங்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள், அவசர அவசரமாக ரிஜிஸ்தார் ஆபீசில் மாறுகின்றன.

மதுரை மத்தியில் கட்சிக் கொடியுடன் பந்தாவாகப் பவனிவந்த பல சுமோக்கள் இப்போதெல்லாம் மதுரை எல்லைக்குள்ளேயே தென்படுவதில்லை. இவற்றில் பல, மதுரைக்கு வெளியே கிராமங்களில் உள்ள பண்ணை வீடுகளில் கீற்றுக் கொட்டகைகளில் தற்காலிகமாகத் தூங்குகின்றன. கடந்த ஓரிரு தினங்களாக சில மதுரை வீடுகளில் டெம்போக்கள் இரவு நேரத்தில் வந்து நிற்கின்றன. பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இரவோடு இரவாக மதுரை மாநகர எல்லைக்கு வெளியே பறக்கின்றன.

ஒரு சாம்ராச்சியம் காலி செய்யப்படுகின்றது.

இவற்றில் ஏதும் அவருடன் (அழகிரி) நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவையெல்லாம் அவரைச் சுற்றி வளைய வந்துகொண்டிருந்த ஆட்களின் சொத்துக்களாம். “தேர்தல் முடிவுகள் வருமுன்னரே, அண்ணன் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டார்… தெரியுமோ?” என்று கண்ணடிக்கிறார்கள் அவர்கள்.

சரி. நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று ‘அண்ணனுக்கு’ எப்படித் தெரிந்தது?

தேர்தல் பிரசார டைமிலேயே அண்ணனை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்களாம். அவசரப் படாதீர்கள். அப்படிச் செய்தது எதிரணியினர் அல்ல… அவரது சொந்தக் கட்சித் தலைமைதான்!

அப்படி என்னதான் நடந்தது என்று அழகிரியுடன் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். சுவாரசியமான விஷயங்கள் வெளிவருகின்றன.

தேர்தல் கமிஷன் கடுமை காட்டப்போகின்றது என்பது உறுதியானவுடன், முதன்முதலில் ‘மாற்று வழிகளை’ கண்டுபிடித்தது மதுரையில்தான். அந்தளவுக்கு அழகிரி அலேர்ட்டாக இருந்திருக்கிறார்.

தென்மாவட்ட வேட்பாளர் தேர்விலும் ஓரிரு நெருடல்கள் இருந்தாலும், ஓவர்ஆல் நிலைமை அவருக்குத் திருப்தியாகவே இருந்தது. நிதி நிலைமையில் எப்போதும், எந்தக் கவலையும் இல்லை. மொத்தத்தில் யுத்தத்துக்கு 100% அஞ்சாநெஞ்சர் ரெடியாகவே இருந்தார்.

ஆனால் அதன்பின்தான் சென்னையிலிருந்து சரம்சரமாக உத்தரவுகள் வரத் தொடங்கின.

மதுரைப் படப்பிடிப்பில் இவர்தான் டைரக்டர் என்பதே அதுவரை இருந்த நிலை. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க, டைரக்ஷன் உத்தரவுகள் சென்னையிலிருந்து வர, இவர் உதவி டைரக்டர்போல ஆகிவிட்டார்!

ராசா-கனிமொழி ஊழல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருக்க, தென்மாவட்டங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அப்படியான நிலையில் மக்களை வாக்களிக்க அனுப்பி வைத்தால், ‘கோவிந்தா’ தான் என்பது பலவருட அரசியல்வாதியான அவருக்கும் தெரியும்.

போதும் போதாதற்கு, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வேறு! காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் களம் இறங்கியிருந்த தமிழின உணர்வாளர்களின் ஸ்ட்ராங் ஸ்பாட்டே, தென் மாவட்டங்கள்தான். சீமான் போன்றவர்களுக்குக் கூட்டம் அதிகம் கூடியதும் தென்மாவட்டங்களில்தான்.

இதற்காக அழகிரி வகுத்திருந்த வியூகம், வாக்களிக்கச் செல்லும்போது மக்களை மகிழ்ச்சியான மனநிலையில் செல்ல வைப்பது. ஆடல், பாடல், வடிவேலு காமடி என்று மக்களின் மனநிலையை லேசாக்கும் வேலையில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்க-

பிரசாரத்துக்கு கனிமொழியைக் களம் இறக்குவது என்ற முடிவு சென்னையில் எடுக்கப்பட்டது.

இந்தத் தகவல் மதுரையை வந்தடைந்தபோது, அழகிரி முதலில் அதை நம்பவில்லை. “தலைமை அப்படியெல்லாம் செய்யாது. பிரச்சினையே அவங்கதானே (கனிமொழி). பிரசாரத்துக்காக அவங்க வெளியே வரமாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, சென்னையைத் தொடர்பு கொண்டு கேட்டால், கிடைத்த சேதி நிஜம்!

அப்போதே “இந்த விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை, அப்போது ஆஃப் ஆகிவிட்டார்.

“தலைமை என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். தென் மாவட்டங்களில் எங்கள் வேலையை நாங்கள் தொடர்வோம். கனிமொழி நம்ம ஏரியாவுக்கு வரமாட்டார்” என்று தன்னையும் சமாதானப்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், இதுகூட ஓரிரு மணிநேரத்துக்குமேல் நீடிக்கவில்லை. அடுத்த தகவல் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது – “கனிமொழி தென்மாவட்டங்களிலும் சூறாவளிப் பிரசாரம்!”

பொங்கியெழுந்தார் அஞ்சாநெஞ்சர்! தலைமையுடன் டெலிபோனில் அவர் போட்ட சண்டையில் ‘காரமான’ சொற்களும் வந்து விழுந்தன என்கிறார்கள். நான்கைந்து தடவைகள் போன் போட்டுப் பேசியபின், “இல்லை.. நிச்சயம் கனிமொழி நம்ம ஏரியா பக்கம் வரப்போவதில்லை” என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குச் சொல்லி உற்சாகப் படுத்தினார்.

ஒருவேளை சென்னையிலிருந்து அப்படியொரு உறுதிமொழி அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சென்னைக்கு என்ன அழுத்தமோ(!), ‘டாண்’ என்று தெற்கே வந்திறங்கினார் கனிமொழி! நடப்பதை நம்ப முடியாமல், திகைத்துப்போய் ஓரடி பின்வாங்கினார் அழகிரி.

“என்னய்யா… அவங்க (கனிமொழி) பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாயிருக்கு. அதையெல்லாம் மக்களை மறக்க வைக்கலாம் என்று நான் கிடந்து அல்லாட, அவங்களையே கொண்டுவந்து இறக்கிறாங்களா? எதுக்கு? மக்களுக்கு ஞாபகப்படுத்தவா?” என்றெல்லாம் நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் அவர்.

“நிலைமை கையை மீறிப் போய்விட்டது. தெற்கே இனியும் நான் ராஜா இல்லை” என்று அப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது அவருக்கு. அதன்பின்தான் ஒதுங்கிக் கொண்டார். ஏதோ, சம்பிரதாயத்துக்கு தலையைக் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, ஆட்சி மாற்றம் வந்தால் என்ன செய்வது என்ற ‘தனது வேலைகளை’ பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது நிஜமாகவே ஆட்சி மாறிவிட்டது. அழகிரி, ‘தனது விஷயத்தில்’ மதுரையை கிளீன் ஸ்லேட்டாக மாற்றி வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள். புதிய அரசு தலைகீழாக முயன்றாலும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளில் அவரைச் சிக்க வைக்க முடியாதாம்! ஆட்சி முடியும் முன்னரே, முடிக்க வேண்டிய விஷயங்கள் முடிக்கப்பட்டு விட்டனவாம்!

நம்புவோம். இவ்வளவு கால அவகாசத்தில் அதைச் செய்திருக்க முடியும்தான்.

ஆனால், புதிய அரசு பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைத் தொடாமல், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் கவனத்தைத் திருப்பினால்?

ஏனென்றால் அவை அசையாச் சொத்துக்களைப் பற்றியவையல்ல… (எந்தப் பக்கமும்) அசையக்கூடிய சாட்சிகளைப் பற்றியவை அல்லவா!

http://viruvirupu.com/2011/05/16/1796/



ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!!



சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.

“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!

படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.

“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!

நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.

“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.

அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!

ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.

எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.

தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.

கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.

ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.

கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.

இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!

அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!

இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.

இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.

“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!

ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!

ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.

http://viruvirupu.com/2011/05/18/1994/


குடும்ப அரசியலும்; இனத் துரோகமும் பெற்ற வீழ்ச்சி!

karunanidhi_01தமிழகத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்து விட்டன.

கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழகத்தில் ஆட்சிசெய்த தி.மு.க வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் பிரியாவிடை அளித்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அவர்களது தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றிருக்கும் இம் மாபெரும் வெற்றி, உண்மையில் ;அறிஞர் அண்ணாவின் வழியை விட்டுத் தடம் மாறி – மிதமிஞ்சிய ஆடம்பரத்துக்கும் தன் குடும்பம் தன் பதவி என்னும் சுயநலத்துக்கும் அடுத்திருக்கும் குட்டித்தீவில் தமிழினப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையிலுங்கூட ‘பாசாங்குத் தனமான’ செயல்களில் ஈடுபட்டும் வந்த – கலைஞரின் ஆட்சி மீது தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்குக் கிடைத்த ‘விலை’ என்பதே பொருந்தும்.

அதிலும், அண்ணாவுக்குப் பின்னர்,-1991 ஆம் வருடம் ராஜீவ் கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தி.மு.க அடைந்த பின்னடைவைத் தவிர்த்து- தொடர்ந்து முதல்வராயும் அவ்வாறு இல்லாவிடில் எதிர்க்கட்சித் தலைவராயும் தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த கலைஞர் இந்தத் தடவை எதிர்க்கட்சிக்கான தகுதியையே இழந்து விட்டிருக்கிறார்.

தி.மு.க வோடு கடைசிவரை போராடித் தமக்கு 63 இடங்களைப் பெற்றுக்கொண்ட காங்கிரசால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது.

’இது வெற்றிக் கூட்டணி’ எனப் புளகாங்கிதமடைந்த பா.ம.க வுக்குக் கிடைத்ததோ மூன்றேமூன்று இடங்கள். வேண்டுமானால்;மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் கட்சிக்கு முட்டுக் கொடுத்தவருக்கு மூன்றிடங்கள் கிடைத்திருக்கிறது என ‘கவித்துவத்துடன்’ கூறித் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் யாருமே எதிர் பார்க்காத வகையில் இந்தத் தடவை தமிழக மக்கள்; தி.மு.க வுக்கும் அதன் கூட்டணியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் காங்கிரசுக்கும் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கட்சியும் இதன் கூட்டணியும் இனித் தமிழகத்தில் அரசியல் நடாத்துவதையே எண்ணிப்பார்க்கக் கூடாது என்னுமாப்போல், எதிரணிக்கு மிகப் பெருமளவில் தங்கள் ஆதரவினை வழங்கிய தமிழக மக்களது நாடித்துடிப்பினை அறியாது…..; தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இடைப்பட்ட ஒரு மாதகாலத்தில் தி.மு.க வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர்மாறி மற்றொருவராய், கலைஞரைச் சந்தித்து தங்கள் கூட்டணியே அதிக பெரும்பானமையுடன் ஆட்சிக்கு வரும் எனப் பேட்டி அளித்துக் கொண்டிருந்ததை நினைக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. தங்களால் ஆளப்படும் மக்களின் உணர்வுகளை, அவர்களது எண்ணங்களை அறியாத அரசுத் தலைவராகக் கலைஞர் செயல்பட்டிருக்கிறார் என்பது வியப்பாகவும் இருக்கிறது.

எனினும், இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்றிருக்கும் மோசமான தோல்வியின் பின்னால்…….. 2ஜி ஊழல் தொடங்கி ஈழப் படுகொலைகள் வரை பல காரணங்கள் வரிசை பிடித்து நிற்கின்றன.

தி.மு.க வின் வரலாற்றில், ஊழலுக்குப் பிள்ளையார் சுழி இட்டவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கும் கலைஞர்( தி.மு.க வின் முதலாவது அமைச்சரவையின் தலைவராக இருந்த அண்ணா ஊழல் வதந்திகளுக்கு ஆட்படவில்லை) இந்தத் தடவை தனது துணைவி உட்படப் பலர் இந்த ஊழல் சாக்கடையில் புரண்டெழுந்து ‘முத்துக் குளிக்கும்’ வாய்ப்பினைத் தாராளமாகவே வழங்கியிருக்கிறார் என்னும் சந்தேகம் தமிழக மக்களிடம் பதிந்து விட்டிருக்கிறது.

முதலில் அமைச்சர் ராசா, தொடர்ந்து அவரது மகள் கனிமொழி என ஊழலின் பரிமாணம் விரிவடைந்த நேரத்தில் தேர்தலும் இடம் பெற்றது ஒரு காரணம் என்றால்; தமிழகத்தில் ‘கட்டெறும்’பாகிக் கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சி, இறுதி நேரத்தில் கலைஞரை மிரட்டும் பாணியில் செயலில் இறங்கியதும்…… தனது மகள் கனி மொழியைப் பாதுகாப்பதற்காக அக்கட்சிக்கு 63 தொகுதிகளைத் தாரை வார்த்ததும் மற்றொரு காரணம் எனலாம்.

இவை மட்டும் அல்லாமல், ‘அஞ்சாநெஞ்ச சாகசம்’ புரிந்து தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்கும் மதுரை வித்தையாளரின் கரங்களைத் தேர்தல் ஆணையம் சாதுர்யத்துடன் முடக்கி விட்டிருந்தது. போதாதென்று, கலைஞரின் ‘பேரன்கள்’ திரைப்படத்துறையின் ’ஆக்டோபஸ்’களாய் உருவாகியதால் பாதிப்புற்றவர்கள் கலைஞரின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராகக் களமிறங்கி இருந்தார்கள்.

ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்த காங்கிரசுக்கு எதிராக சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் செயல்பட்டதால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் செல்வாக்கும் சேர்ந்தே சரியத் தொடங்கியது.போதாதென்று, தங்கபாலுவின் நடவடிக்கைகளால் உருவான உட்கட்சிப் பூசல்கள்…….

மாநிலம் தழுவிய மின் தட்டுப்பாடு……. ஊழல் பிரச்னை காரணமாக கலைஞரின் குடும்பதிற்குள்ளேயே உருவான முறுகல்கள்…….. ஆகியனவும் இவற்றோடு இணைந்து கொண்டன.

தி.மு.கவின் பங்குக்கு, குடும்ப ஆட்சியும்; காங்கிரசின் பங்குக்கு இனத் துரோகமும் என இவ்விரு கட்சிகளினதும் சம அளவிலான பங்களிப்பினால் ; அவற்றுடன் இணைந்து கொண்ட பா.ம.க வும், விடுதலைச் சிறுத்தைகளும் பலியாகி விட்டதாகவே தெரிகிறது.

மக்களாட்சியின் வலிமையினை நிரூபித்திருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுமாயின்; அது புதிதாக ஆட்சியில் அமரப்போகும் அ.தி.மு.க வுக்குப் பெருமை சேர்க்கும்.

"சர்வசித்தன்"

[www.sarvachitthan.wordpress.com]

Sunday, May 15, 2011

நல்லாட்சி வழங்குங்க மேடம்..........

சொல்லியா தரவேண்டும்?


வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள்.

தேமுதிக என்கிற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை 2006-லேயேகூட அதிமுக வெற்றிபெற்று தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும்கூட இப்போது அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கடந்த திமுக ஆட்சியின் தவறுகளைத் தவிர்த்து, ஒரு நல்லாட்சியைத் தலைமையேற்று நடத்தும் பக்குவத்தை இந்த இடைவெளி அவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். "ஆச்சாரியாரே' என்று ராஜாஜியைப் பெரியாரும், "நாயக்கரே' என்று பெரியாரை ராஜாஜியும் அழைத்து உரையாடும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்ததை உலகறியும்.

ஒரு கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டு அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்களாம். அப்போது, ஒருவர் ஏதோ ஒரு பிரச்னை பற்றிக் கூறிய கருத்துகள் ராஜாஜிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த தனது நண்பர் பெரியாரிடம், அந்தப் பேச்சாளரின் கருத்துகளுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துப் பேசும்படி கேட்டுக் கொண்டாராம் ராஜாஜி.

அடுத்தாற்போல பேசிய பெரியார், தனக்கு முன் பேசியவரின் அத்தனை கருத்துகளையும் தர்க்க ரீதியாக விமர்சித்துப் பேசி, அவரது வாதங்களை உடைத்தெறிந்தார். பேசிவிட்டுத் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும், "ஆச்சாரியாரே, எதற்காக என்னை அந்தக் கருத்துகளை விமர்சித்துப் பேசச் சொன்னீர்கள்?' என்று கேட்டாராம் பெரியார். அதற்கு ராஜாஜி ""அதைத்தானே நீங்கள் பிட்டுப் பிட்டு வைத்துப் பேசினீர்கள். அதற்காகத்தான் சொன்னேன்'' என்று பதிலளித்ததாகக் கூறுவார்கள்.

ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பட்டியல் எதுவுமே போடத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, திருச்சி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பேசிய பேச்சுகளை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும், இந்த அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும், என்னென்ன செய்யக்கூடாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிடும்.

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

அமோக வெற்றிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், தனது தனிப்பட்ட பேட்டிகளின்போதும், ஜெயலலிதாவின் பேச்சில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. "நான்' என்கிற வார்த்தைகள் குறைந்து "நாங்கள்' என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. "நான்', "எனது' என்கிற வார்த்தைகளை ஒரு முதல்வர் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை தவிர்ப்பது அவரது பெருமைக்குப் புகழ் சேர்க்கும். கடைசிவரை எம்.ஜி.ஆர். தனது அரசு என்று கூறிக்கொள்ளாமல், "உங்களது அண்ணாவின் அரசு' என்று குறிப்பிடுவார் என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

மக்கள் மத்தியில் ஜெயலலிதா என்று சொன்னாலே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சி என்கிற கருத்து இருக்கிறது. நிர்வாகத்திலோ, காவல்துறை தனது கடமையைச் செய்வதிலோ, ஆளும் கட்சி அமைச்சர்களோ, தொண்டர்களோ தலையிடுவதை அனுமதிக்காத நிர்வாகம் ஜெயலலிதாவுடையது என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, உண்மையும்கூட. கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களிலிருந்து, கவுன்சிலர்கள்வரை நடத்திய அதிகாரத் துஷ்பிரயோகங்களும், சட்ட வரைமுறை மீறல்களும், அவர்களது தலைமையில் நடந்த கட்டப் பஞ்சாயத்துகளும், நிச்சயமாக ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சியில் தொடராது என்று நம்பலாம்.

ஜெயலலிதா தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்கிறது. முதன்முறையாக, சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க ஒரு தனித்துறை அமைக்கப்பட்டு அதற்கு ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் ஒருவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், உதகையைச் சேர்ந்தவர் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சராகவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மீன்வளத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நபர்கள் சரியான துறைக்கு, முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக்கப்படவில்லை என்பது மட்டும்தான் ஒரு சின்ன நெருடல்.

கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?

சரித்திரத்தில் தனது பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக, முந்தைய ஜெயலலிதா அரசு கட்ட இருந்த தலைமைச் செயலகத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுக் கருணாநிதி அரசால் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். தேவையில்லாமல் பல கோடி ரூபாயை விழுங்கி அரைக்கோள வடிவில் விதானம் அமைக்கப்பட்டிருப்பது பணவிரயம். ஆனாலும், மக்களின் வரிப்பணமல்லவா விரயம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் இருப்பது என்ன நியாயம்? புதிய தலைமைச் செயலகம், தலைமைச் செயலகமாகத் தொடர்ந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டியது என்று கூறுவார்கள் என்பதைவிட இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றி அவருக்குப் புகழ் சேர்க்கும் என்பதும் நிஜம்தானே?

ஒரு சில அனுபவசாலிகளும், பல புதியவர்களும் அடங்கிய இளமைப் பொலிவுடன்கூடிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. இதேபோல, செயல்திறம் மிக்க, நேர்மையாளர்கள் தலைமைச் செயலராகவும், செயலர்களாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவதைப் பொறுத்துத்தான் நல்லாட்சி அமையும் என்பதை மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்குச் சொல்லியா தரவேண்டும்?

துதிபாடிகளைச் சற்று தள்ளியே இருக்கச் செய்து, தேவையில்லாத விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் முந்தைய முதல்வர்போல ஆசைப்படாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொண்டு அந்தத் தவறுகளைத் திருத்த முற்படும் ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்!

Saturday, May 14, 2011

இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

இனி போயஸ் கார்டனா? அறிவாலயமா? குழப்பத்தில் வடிவேலு!

Vadivelu`s Next step
சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக் கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு!

http://cinema.dinamalar.com/tamil-news/4092/cinema/Kollywood/Vadivelu%60s-Next-step.htm

ஊழல் புகாரில் சிக்கியுள்ள சோனியா ஊழல் எதிர்ப்பாளரானார்!

நாட்டு மக்கள் அனைவரும் சொல்லிவிட்டார்கள், இத்தோடு போதும் என்று; அப்போதுதான் யாரும் எதிர்பாராதது நடக்கிறது.

யாராலும் நெருங்க முடியாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள், தீண்ட முடியாதவர்கள் என்று நினைக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் நெடிய கரங்களில் சிக்க ஆரம்பிக்கின்றனர்.

அப்படி இப்போது சிக்கியிருக்கும் மிகப்பெரிய விலாங்கு மீனாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி. ஃபோர்பஸ் பத்திரிகையில் வந்துள்ள கட்டுரைப்படி பார்த்தால் உலகிலேயே மிகவும் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருப்பவர் என்று அவரை யார் சொல்வது? சுப்பிரமணியன் சுவாமியா? நானா? இல்லை.

அப்படிச் சொல்வது கிளியோ பாஸ்கல்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளத்தில் எழுதுகிறவர்தான் இந்த கிளியோ பாஸ்கல். அவர்தான் கூறுகிறார் சோனியா காந்தி மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது என்று.

""உலகின் செல்வாக்கான மனிதர்கள் வரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருப்பவர் மீதுதான் ஊழல் குற்றச்சாட்டு கூறப்படுகிறது - அவர் வீழ்ச்சி அடைவாரா?'' என்று.

ஹஃபிங்டன் போஸ்டில் 2011 ஏப்ரல் 25-ம் தேதி அவர் இதை எழுதியிருக்கிறார்.

யார் இந்த கிளியோ பாஸ்கல்?

சிறந்த பத்திரிகையாளருக்கான விருதுகளைப் பெற்றவர். லண்டனில் உள்ள சர்வதேச விவகாரங்களுக்கான ராயல் கழகத்தில் அவர் உறுப்பினர். அமெரிக்க வெளியுறவுத்துறையில் கெüரவமிக்க உறுப்பினர்.

அமெரிக்க எரிசக்தித்துறை, அமெரிக்க ராணுவக் கல்லூரி, பிரிட்டிஷ் ராணுவத்துறை, பிரிட்டிஷ் வெளியுறவு, காமன்வெல்த் அலுவலகம், பிரிட்டிஷ் ராணுவ அகாதெமி, ஐரோப்பிய யூனியன், நேடோ, பாதுகாப்பு - ஒத்துழைப்புக்கான ஐரோப்பிய அமைப்பின் ஆலோசகர்.

ஹஃபிங்டன் போஸ்ட் செய்தி இணையதளம் உலகிலேயே 3-வது இடத்தில் இருக்கிறது. 3 கோடியே 80 லட்சம் பேரால் படிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை 50 கோடி. 2005-ல் தொடங்கப்பட்ட இந்தச் செய்தி இணைய தளம் உடனடியாக உலக அளவில் புகழ்பெற்றுவிட்டது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஏ.ஓ.எல். என்ற நிறுவனம் ரூ.1,450 கோடி கொடுத்து இந்த இணையதளத்தை வாங்கியிருக்கிறது.

2008-ம் ஆண்டு இந்த இணையதளத்தைத்தான் உலகின் மிகச்சிறந்த செய்தி இணையதளமாக லண்டனிலிருந்து வெளிவரும் "தி அப்சர்வர்' மதிப்பிட்டிருக்கிறது.

கிளியோ பாஸ்கல் யார், அவர் எழுதும் ஹஃபிங்டன் போஸ்ட் இணையதள செய்திப் பத்திரிகை எத்தகையது என்று பார்த்தோம். சோனியா காந்தி குறித்து அவர் என்ன எழுதியிருக்கிறார் என்று இனி பார்ப்போம்.

"கணவருக்கு அடங்கிய, குடும்ப பாரத்தை விரும்பிச் சுமக்கிற இந்திய மருமகளாக, இப்போது கணவரை இழந்த பெண்ணாகத் திகழ்கிறார்.

சந்தேகிக்கத்தக்க சில வர்த்தக நடவடிக்கைகள் மூலம் சோனியா காந்தியுடைய, அவருடைய குடும்பத்தாருடைய சொத்துகளின் மதிப்பு பல மடங்காக உயர்ந்து வருவது குறித்து ஆங்காங்கே முணுமுணுப்புகள், புருவ நெறிப்புகள், கேள்விக்கணைகள் எழுந்துள்ளன.

1995-ம் ஆண்டிலேயே எம்.டி. நளப்பாட் என்கிற பத்திரிகையாளர் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் சோனியா காந்தி குறித்து திடுக்கிடவைக்கும் சில கட்டுரைகளை எழுதினார்.

எதுவுமே தெரியாத சாதாரண குடும்பப் பெண் போல அவர் காட்சி தருவதெல்லாம் வெறும் வெளிவேஷம், அவருக்குள் தீவிரமான அரசியல் அபிலாஷைகள் இருக்கின்றன என்று அப்போதே அவர் எழுதினார். பின்னாளில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை சோனியா ஏற்றபோது நளப்பாட் எழுதியது வெறும் வார்த்தைகள் அல்ல என்று நிரூபணம் ஆயின.

காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றதற்குக் காரணம் தன்னுடைய கணவரின் தாய் நாடு வளம் பெற்று முன்னேற வேண்டும் என்ற பொதுநல நோக்கு அல்ல என்பது அவருடைய தனிப்பட்ட சொத்தும், அவருடைய குடும்பத்தாருடைய சொத்துமதிப்பும் ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்ற பிறகு 1984-ல் இருந்து கற்பனைக்கு எட்டாத வேகத்தில் அதிகரித்தபோது நிரூபணம் ஆயின.

நளப்பாட் எழுதிய அரசியல் கட்டுரைகளில் யாரும் குறை சொல்ல முடியாதபடி இருந்தாலும் 1998-ல் பத்திரிகைத் தொழிலைவிட்டே நளப்பாட் விலக நேர்ந்தது. சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரானார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் சுவீடன் நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம் நடத்திய விசாரணை அடிப்படையில் எழுந்த பல அடிப்படையான கேள்விகளை பாஸ்கல் தொட்டுக்காட்டுகிறார்.

போஃபர்ஸ் பீரங்கி பேரத்துக்குப் பிறகு ஆட்டோவியோ குவாத்ரோச்சியின் நிறுவனங்களுக்கு எப்படிப் பெரும் தொகை கிடைத்தது என்பதை காந்திகள் - அதிலும் குறிப்பாக சோனியா காந்தி - விளக்க வேண்டும் என்று கேட்கிறார். சோனியா காந்தி குடும்பத்தாருக்கும் குவாத்ரோச்சிக்கும் என்ன உறவு என்று கேட்கிறார் லிண்ட்ஸ்ட்ராம். குவாத்ரோச்சியையும் அவருடைய ஏ.இ. சர்வீசஸ் என்ற நிறுவனத்தையும் போஃபர்ஸ் பீரங்கி பேர நிறுவனத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்தது யார் என்றும் லிண்ட்ஸ்ட்ராம் கேட்கிறார்.

இதிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரிகிறது. பீரங்கி பேர கமிஷனின் ஒரு பகுதி குவாத்ரோச்சிகளுக்குக் கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் சோனியா காந்தி என்று எல்லா ஆவணங்களும் சுட்டுகின்றன என்று லிண்ட்ஸ்ட்ராம் கூறுகிறார்.

அர்த்தமுள்ள இந்தக் கேள்விகளுக்கு சோனியா காந்தி இதுவரை பதில் அளிக்கவில்லை; அது மட்டும் அல்ல, இந்த விவகாரத்தில் கமிஷன் வாங்கியது குவாத்ரோச்சிதான் என்பது சந்தேகம் அறத் தெரிந்துவிட்ட போதிலும் அவரால் இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் தப்பிக்க முடிகிறது. மேலும் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் முடக்கிவைக்கப்பட்ட அவருடைய வங்கிக் கணக்கையும் திறக்க உத்தரவிடப்பட்டு அவர் கணக்கில் இருந்த பணத்தையும் அவரால் எடுத்துக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் சோனியா காந்திக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் இப்போது பிரதமரின் மேஜை மேலே காத்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்காக சோனியா காந்தி மீது வழக்குத் தொடர பிரதமர் மன்மோகன் சிங்கின் ஒப்புதலைக் கேட்டு சுப்பிரமணியன் சுவாமி அளித்திருக்கும் மனுதான் அந்த அச்சுறுத்தல்.

சுப்பிரமணியன் சுவாமி அளித்திருப்பது வெறும் அனுமதி கோரும் கடிதம் அல்ல; மிகவும் நுணுக்கமாகத் தகவல்களைச் சேகரித்து ஆராய்ந்து எழுதப்பட்ட 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டது அந்தக் கடிதம். 1972 முதல் இந்தியாவில் நடந்த ஊழல்களில் சோனியா காந்திக்கு உள்ள பங்குகள் எவை என்று தோலுரித்துக் காட்டும் ஆவணங்கள் அவை.

1986-ல் போஃபர்ஸ் பீரங்கி பேர விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் சோனியா காந்தி அடைந்ததாகக் கருதப்படும் பணப் பயன்கள் பற்றிய தகவல்களும் அதில் உள்ளன.

1991-ம் ஆண்டு முதல் பல நூறு கோடி ரூபாய்கள் இந்தியாவைச் சேராத வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது உணவுக்குப் பதில் கச்சா பெட்ரோலிய எண்ணெய் என்ற திட்டத்தின் கீழ் இராக்கிலிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்கி விற்ற விதத்தில் சோனியா காந்தி கோடிக்கணக்கான ரூபாய்களைச் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் ரஷியாவுக்கும் பனிப்போர் நடந்த காலத்தில் ரஷியாவின் கே.ஜி.பி. என்ற உளவு அமைப்பு மூலம் பணம் பெற்ற தகவல்களும் கிடைத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.

பிரதமரின் மேஜை மீதுள்ள புகார் மனுவை பாஸ்கல் வெகு கவனமாகப் படித்துப் பார்த்திருக்கிறார். இந்த மனுவை ஏற்கவோ, நிராகரிக்கவோ பிரதமருக்கு 3 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பதிலும் வராமல் போனால் உச்ச நீதிமன்றத்தை அணுகி அதனிடம் அனுமதி பெற சுவாமிக்கு உரிமை இருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இப்போது இருக்கும் எஸ்.கே. கபாடியா இந்த மாதிரி வழக்குகளை உடனுக்குடன் அனுமதித்துவிடுவார்.

உலக அரங்கில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் பின்னணியில் பார்க்கும்போது, சோனியா மீது வழக்குத் தொடர சுவாமி அனுமதி கோரியிருப்பது வெறும் இந்திய அரசியல் விவகாரம் இல்லை, உலகில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கும் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விவகாரம் என்று முடித்திருக்கிறார் பாஸ்கல்.

சோனியா காந்தி மீதான ஊழல் புகாருக்கு சர்வதேசத் தன்மை இருக்கிறது என்கிறார் பாஸ்கல்.

இந்தியாவில் நடப்பவற்றை இப்போது நாம் பார்ப்போம். இந்தியாவில் உள்ள பத்திரிகைகளும் செய்தி ஊடகங்களும் சோனியா காந்தியின் பின்னணி பற்றிய உண்மைகளை அம்பலப்படுத்துவதற்குப் பதிலாக மறைக்கவே பார்க்கின்றன. சோனியா காந்தியின் ஊழல்குறித்து பாஸ்கல் எழுதுவது என்னவென்றே இந்தியர்களுக்குப் புரிவதில்லை. சோனியா பதவியை விரும்பாத தன்னலமற்ற தலைவி என்றும், ஊழலுக்கு எதிரான தேவதை என்றும்தான் இந்தியர்களில் பலர் பார்க்கின்றனர். அதனால்தான் ஊழலை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது என்று பெரிய நேர்மையாளரைப் போல அவரால் வேஷம் போட முடிகிறது.

அவர் உண்மையிலேயே நேர்மையானவர்தானா என்று ஆராய்வதற்குப் பதிலாக, ஊழலை ஒழிப்பதில் அவர் கொண்டுள்ள உறுதியைப் பாராட்டி மகிழ்கிறது.

இந்தியர்கள் பேராசை பிடித்தவர்களாகிவிட்டார்கள், அவர்களுடைய தார்மிக உலகு சுருங்கிவிட்டது என்று அவர் இந்தியர்களையே வசை பாடுகிறார், ""ஆ, சோனியா எப்படி வெளிப்படையாகப் பேசிவிட்டார்'' என்று அகமகிழ்கின்றன இந்திய செய்தி ஊடகங்கள்.

ஊழல் ஒழிப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை நிறைவேறும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்த காந்தியவாதி அண்ணா ஹஸôரேவுக்குத் தனது ஆதரவு உண்டு என்று சோனியா அறிவித்தவுடன், அவரே அகமகிழ்ந்து சோனியாவுக்கு நன்றி தெரிவிக்கிறார், பாராட்டுகிறார்.

சோனியா அத்தோடு சும்மா இருக்கவில்லை, அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களான சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் ஆகியோர் என்ன யோக்கியமா, அவர்களுடைய வண்டவாளங்கள் தெரியாதா, அவர்களை வைத்துக்கொண்டு ஊழலை ஒழிக்கச் சட்டத் தயாரிப்பா என்று கபில் சிபல்கள், திக்விஜய் சிங்குகள், திவாரிகளை விட்டு வசைமாரிப் பொழிய கண்ஜாடை காட்டிவிட்டார்.

சோனியா பாராட்டும்போது அவருடைய தொண்டரடிப்பொடிகளால் எப்படி அண்ணா ஹஸôரேவின் ஆதரவாளர்களைத் திட்டித் தீர்க்க முடிகிறது என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கவில்லை.

அவ்வளவு ஏன், இந்தியாவின் பிரபல பத்திரிகைகளும் தொலைக்காட்சி ஊடகங்களும் சுப்பிரமணியன் சுவாமி மிகுந்த முயற்சி எடுத்துத் தயாரித்துள்ள 200 பக்கங்களுக்கும் மேற்பட்ட அந்த முக்கிய ஊழல் புகார் குறித்து சிறிதளவுகூட செய்தி வெளியிடவில்லை.

கிளியோ பாஸ்கல் எழுதிய கட்டுரைக்கு நன்றி தெரிவித்து இந்திய வாசகர் எழுதிய கடிதத்துக்குப் பிறகே இது பலரின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்: ஊழல் விவகாரங்களில் சிக்கி, சந்தேகத்துக்கு உரியவராகத் திகழும் சோனியா காந்தி, ஊழலை ஒழிக்க வந்த தேவதையாக இந்தியப் பத்திரிகைகளால் சித்திரிக்கப்படுகிறார்.

http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial

"மாப்புக்கு வெச்சிட்டாங்களே ஆப்பு" : வைகைப்புயல் வடிவேலு கடும் அதிர்ச்சி

சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து நடிகர் வடிவேலு அதிர்ச்சி அடைந்துள்ளார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் வடிவேலு வீட்டில் கல் வீசப்பட்டது. இதையடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட வடிவேலு, தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன் என்று பேசி கடுமையாக தாக்கினார். வடிவேலுவின் காமெடியான பேச்சை கேட்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். வந்தவர்கள் எல்லாம் திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்று நினைத்த வடிவேலு, தனது பேச்சில் மேலும் மேலும் கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தத் தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர் அளித்த பேட்டியில் கூட, செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் வரவேற்பு அதிக அளவில் இருந்ததாகவும், திமுக மாபெரும் வெற்றி பெறும் என்றும் கூறினார்.Image

இப்போது திமுக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. இது யாரை பாதிக்கிறதோ இல்லையோ... வடிவேலுவை நிச்சயம் பாதிக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்து முக்கிய புள்ளிகள். சக நடிகர் என்று கூட பாராமல் ஏக வசனத்தில் பேசி விஜயகாந்தை விமர்சித்ததால் சில சினிமா வாய்ப்புகளை இழந்திருக்கும் வடிவேலுவின் கதி இனி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ‌அதிமுக ஆட்சியை பிடிக்கும் நிலைமையை நெருங்கியதுமே, சென்னை சாலிகிராமத்தில் உள்ள வடிவேலு வீடு முன் கல் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் திரண்ட தேமுதிகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Imageதேர்தல் முடிவைத் தொடர்ந்து வடிவேலுவின் அடுத்த ஸ்டெப் என்னவாக இருக்கும்? என்ற ‌கேள்வி எழுந்துள்ள நிலையில் இருவேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. ஒன்று போயஸ் கார்டன் சென்று சமாதானம் ஆவது; இன்னொன்று திமுகவிலேயே ஐக்கியமாவது. இந்த இரண்டில் ஒரு முடிவைத்தான் வடிவேலு எடுக்கக்கூடும் என கோடம்பாக்கத்தில் பேச்சு எழுந்துள்ளது.

இதற்கிடையில் மதுரையில் மத்திய அமைச்சர் அழகிரியின் வீட்டுக்கு சென்ற வடிவேலு, அழகிரியுடன் சிறிது நேரம் பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. அதேநேரம் வடிவேலுவின் வீட்டுக்கு விஜயகாந்த் ரசிகர்களால் தாக்கப்படும் வாய்ப்பு உள்ளது என்பதால் சென்னை மற்றும் மதுரையில் உள்ள அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


நன்றி : தினமலர்