Monday, June 6, 2011

“60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்”

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூவாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று பின்னர் தேசிய அளவில் தகிடுதத்தம் செய்த மான!மிகு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி ஜவகர்லால் பல்கலைகழகத்தில் காங்கிரசு கட்சியின் உட்பிரிவான இந்திய தேசிய மாணவர் அமைப்பின் கூட்டம் ஒன்றில் பேசுகையில் “60கோடி அலைபேசி இணைப்புகள் உள்ள இந்தியாவில் எப்படி 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமையில் உள்ளார்கள் என ஏற்றுக்கொள்ளமுடியும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காரைக்குடி செல்வந்தரும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வக்காலத்து வாங்குபவருமான ப.சிதம்பரத்திற்கு ஏழ்மை, வறுமைக்கோடு என்றால் இப்படி தான் புரியும். ப.சிதம்ப‌ரத்தின் கூற்று முற்று முழுதான பொய் என்பதை இந்த கட்டுரை மிக தெளிவாக விளக்குகின்றது. இந்த கட்டுரை சங்கதி (sanhati) இணையதள உறுப்பினர்களால் எழுதப்பட்டது. தோழர்களின் வேண்டுகோளிற்கிணங்க இதை தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்.

___________________________________________________________

60 கோடி அலைபேசி இணைப்புகள் அதன் உண்மை பற்றி விரிவாக‌ செல்லும் முன்னர், 77 விழுக்காடு பொதுமக்கள் வறுமைக்கோட்டிற்க்கு கீழே உள்ளனர் என்ற தரவு எப்படி வந்தது என பார்ப்போம்.2006 ஆம் ஆண்டு தாங்கள் செய்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம். இந்த ஆணையம் இந்திய அரசினால் அமைக்கப்பட்ட ஒரு ஆணையம். தேசிய மாதிரி ஆராய்ச்சி நிறுவனம் (இதுவும் இந்திய அரசின் நிறுவனமே) வெளியிட்ட புள்ளிவிரங்களை அடிப்படையாக வைத்தே 77 விழுக்காடு மக்கள் 20 ரூபாய் வருமானம் பெறுகின்றனர் என்ற அறிக்கையை அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் அடிவருடியான ப.சிதம்பரத்திற்க்கு இது தெரியவில்லையா அல்லது தெரியாதது போல நடிக்கின்றாரா?

இந்த ஆய்வறிக்கையும், அதன் புள்ளிவிவரங்களும், அதை ஒட்டி பொருளாதார, அரசியல் வார இதழ்(ச‌வகர்லால் பல்கலைகழகத்தின் அரசியல் துறையினால் வெளியிடப்படும் வார இதழ்) என்ற இதழில் வந்த அறிக்கையும் இந்திய நவகாலனிய ஆதரவாளர்களுக்கு ஒரு பேரிடியாக வந்திறங்கியது. ஏனென்றால் இந்த ஆய்வை நடத்தி அறிக்கையை வெளியிட்டிருப்பது அரசின் உதவியினால் நடத்தபடுகின்ற‌ ஆணையம், அப்படியானால் இது வரை இந்திய அரசு மேற்கொண்ட பொருளாதார மறுமலர்ச்சி திட்டங்கள் எல்லாம் படு தோல்வி மற்றும் ஏழ்மையில் வாடும் மக்களின் வாழ்வில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.சமூக பிரிவினைகளிலும், பொருளாதார‌ ஏற்றதாழ்வுகளிலும், மிகக் கொடுமையான வறுமையிலுமே மிகப்பெரும்பான்மையான மக்கள்தொகை உழன்று வருவ‌தை இந்த அறிக்கை மிகத் துல்லியமாக காட்டியுள்ளது.

அமைப்புசாரா தொழில்களுக்கான தேசிய ஆணையம் வெளியிட்ட இந்த அறிக்கைகளுக்கு பக்க பலமாக இந்தியாவில் வறுமையில் வாழும்,அரசால் புறக்கணிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக வெளிவரும் புள்ளிவிவரங்கள் உள்ளன. வருமானம் மட்டுமல்ல அடிப்படை மருத்துவ வசதிகள், சுகாதாரமான இடங்களில் வாழ்தல் போன்றவையும் வறுமையை நிர்ணியக்கும் காரணிகள் என்று இந்திய அரசே ஒத்துக் கொள்கின்ற‌து.

இந்தியாவில் 37 கோடிக்கு பேர் அடிப்படை கழிப்பிடம் கூட இல்லாமல் வாழ்கின்றனர் என்று சமீபத்திய ஐ.நா அறிக்கை கூறுகின்றது. இந்தியாவில் 3 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகளில் 79 விழுக்காடு குழந்தைகள் இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5 வயதிற்கும் கீழுள்ள குழந்தைகளில் 40 விழுக்காட்டினர் சத்தான உணவு இல்லாமல் இருப்பதாக கூறுகின்றன சமீபத்தில் எடுக்கப்பட்ட பல மருத்துவ ஆய்வு புள்ளிவிவரங்கள். மேலும் சத்தான உணவு இல்லாமலும், பசியால் மக்கள் வாடும் 88 நாடுகளின் பட்டியலில் இந்தியா 65ஆவது இடத்தில் இருப்பதாக ஐ.நாவின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ப.சிதம்பரத்தின் மக்கள் வளர்ச்சிக்கான அளவுகோலாக அலைபேசி இணைப்புகளை இந்தியாவில் எடுத்துக்கொள்ள முடியாது என உள்நாட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிதம்பரம் இந்த‌ வாதத்தை மிகவும் பெருமையோடு அந்த கூட்டத்தில் எடுத்துவைத்துள்ளார். மேலும் கேள்வி எழுப்பிய அந்த பல்கலைகழக மாணவனுக்கு சில பொருளாதாரயியலையும் போதித்துள்ளார். “நீங்கள் ஒரு சிறந்த பொருளாதார நிபுணராவதற்கு நான் உதவமுடியும்” என மிகவும் கம்பீரமாக கூறியுள்ளார். ப.சிதம்ரத்தின் இந்த கூற்று எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை விளக்க வேண்டியுள்ள‌து. 60 கோடி அலைபேசி இணைப்புகள் வறுமை குறைந்து விட்டதற்கான ஒரு அடையாளமா என்பதை பற்றிய விரிவான ஆய்வை நாம் இங்கே காணப்போகின்றோம். நாம் இதைச் சொல்லவில்லை என்றால் எதிர்காலத்தில் இவர்கள் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை வைத்து வறுமையை கணக்கிட்டு வறுமையை ஒழித்து விடுவார்கள், இதன் மூலம் உண்மையிலேயே வறுமையில் வாடும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

“ஏழ்மை நிலையிலுள்ள குறிப்பாக நகரப்பகுதிகளில் வாழும் ஏழ்மை நிலையிலுள்ள மக்களில் ஒரு பகுதியினர் அலைபேசி இணைப்புகளை கொண்டுள்ளனர். அமைப்புசாரா தொழிலாளர் சந்தையில் தங்களது வேலையை தக்கவைத்து கொள்வதற்கான அடிப்படை தேவையாக இந்த அலைபேசிகள் உள்ளதால் அவர்கள் இந்த அலைபேசி இணைப்பை வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றார்கள்.அலைபேசி கட்டணங்கள் அதிக அளவு குறைந்ததன் காரணமாக தான் ஏழ்மையில் வாழும் மக்கள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பது அதிகரித்துள்ளது. இந்த கட்டணம் சிறிய அளவு அதிகரித்தாலும் அவர்கள் அலைபேசி இணைப்பை துண்டித்துவிடுவார்கள்”.

“இதை எல்லாம் விடுத்து அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு வறுமை நிலையை கணக்கெடுத்தால் தில்லியில் வறுமையில் யாருமே இருக்கமாட்டார்கள் ஏனெனில் அவ்வளவு அலைபேசி இணைப்புகள் உள்ளன. தொலைபேசி இணைப்புகள் வேண்டுமென்றால் நடுத்தர வகுப்பினரை காட்டும் ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளலாம்”.

இந்தியாவில் வறுமையில் வாடும் ஒருவருக்கு அலைபேசி ஆடம்பரமா?

இந்த கேள்விக்கு பதில் கூறும் வகையில் சமீபத்தில் அஃகுயூரோ மற்றும் டீ சில்வாவின் கட்டுரை வெளிவந்துள்ளது (“தேர்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளில் அலைபேசி செலவுகள் தொடர்பான ஆய்வு”). இந்த கட்டுரை ப‌சிபிக் த‌க‌வ‌ல் தொட‌ர்பு குழும‌த்தின் க‌ல‌ந்தாய்வில் ச‌ம‌ர்பிக்க‌ப்ப‌ட்ட‌து. இந்த‌ க‌ட்டுரையில் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் இந்திய‌ ம‌க்க‌ள் தொகை க‌ண‌க்குக‌ளிலிருந்து நேர‌டியாக‌ பெற‌ப்ப‌ட்ட‌வை (இதே போன்ற‌ ஆய்வை ம‌ற்ற‌ வ‌ள‌ர்ச்சி அடையாத‌ நாடுக‌ளிலும் மேற்கொண்டுள்ள‌ன‌ர்). மாத‌ வ‌ருமான‌த்தையும், அதில் அலைபேசிக்கான‌ செல‌வுக்கும் உள்ள‌ தொட‌ர்பையும் புள்ளியிய‌ல் மூல‌ம் ஆராய்கின்ற‌து இக்க‌ட்டுரை. மேலும் அலைபேசியின் மூலமாக‌ அவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌த்தில் ஏற்ப‌டும் மாற்ற‌த்தையும் இந்த‌க் க‌ட்டுரை ஆராய்கின்ற‌து.

ஒரு எடுத்துகாட்டுக்கு ஒருவ‌ரின் வ‌ருமான‌ம் ஒரு விழுக்காடு குறைந்தால் அவ‌ரின் அலைபேசி உப‌யோக‌ம் எந்த‌ அள‌வுக்கு குறையும். இது போன்ற‌ ஆய்வுக‌ளிலிருந்து அவ‌ர்க‌ள் க‌ண்ட‌ உண்மை அலைபேசி என்ப‌து இந்தியாவில் ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, பொருளாதாராயிய‌லின் வார்த்தையில் அது ஒரு அத்தியாவ‌சிய‌ பொருளாக மாறி உள்ள‌து. அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌ம் குறையும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டை நிறுத்திவிடுவார்க‌ள். அதே ச‌ம‌ய‌ம் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌ம் உய‌ரும் பொழுது அலைபேசி ப‌ய‌ன்பாட்டு விகித‌த்தில் எந்த‌வொரு பெரிய‌ மாற்ற‌மும் இருக்காது என்கிற‌து ஆய்வு முடிவுக‌ள்.

இந்தியாவில் வ‌றுமையில் வாழும் ஒருவ‌ர் கூட‌ அலைபேசி இணைப்பு கொள்ள‌ முடியும் என்ப‌து உண்மைதானா?

இந்த‌ கேள்விக்கு பதில‌ளிக்கும் முன் இந்திய‌ அலைபேசி இணைப்புக‌ளின் அப‌ரிமித‌மான‌ வ‌ள‌ர்ச்சியை நாம் பார்த்து விடுவோம். இந்திய த‌க‌வ‌ல் தொட‌ர்பு ஒழுங்குமுறை ஆணைய‌த்தினால் (TRAI) வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌ ப‌ல‌ அறிக்கைக‌ளிலிருந்து மேலே உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ள் பெற‌ப்ப‌ட்டுள்ள‌ன‌.

2006 லிருந்து 2007ஆம் ஆண்டில் அலைபேசி இணைப்புக‌ள் க‌ணிச‌மான‌ அள‌வு உய‌ர்ந்துள்ள‌தை அட்ட‌வ‌ணையிலிருந்து நாம் காணலாம். இத‌ற்கு பின்னால் உள்ள‌ கார‌ண‌ங்க‌ளை ஆராய்ந்து ‍‍‍‍‍‍ “Vodafone” நிறுவ‌ன‌ம் ஒரு அறிக்கையை ச‌ம‌ர்ப்பித்துள்ள‌து. ‌ மிக‌ பெரிய‌ அள‌வில் இந்த‌ அலைபேசி இணைப்புக‌ள் அதிக‌மான‌த‌ற்கு “அலைபேசி க‌ட்ட‌ண‌ங்க‌ள் மிக‌ பெரிய‌ அள‌வில் குறைந்த‌தே” கார‌ண‌ம் என்கிற‌து அந்த‌ அறிக்கை.
அறிக்கையிலிருந்து:

அலைபேசியில் ஒருவ‌ரிட‌ம் பேசுவ‌தற்கான‌ ஒரு நிமிட‌ க‌ட்ட‌ண‌ம் ரூபாய் 15.30 (1998) லிருந்து ரூபாய் 0.68(2010) குறைந்துள்ள‌து. இந்த‌ 98 விழுக்காடு க‌ட்ட‌ண‌ குறைவு என்ப‌து உண்மையில் மிக‌ப் பெரிய‌ க‌ட்ட‌ண‌ குறைப்பாகும். மேலும் மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும்(Pre paid) வ‌ச‌திக‌ளும், அலைபேசியின் விலை ரூபாய். 1000ற்க்கும் கீழீருந்த‌தும் ஒருவ‌ர் அலைபேசி இணைப்பை எடுப்ப‌த‌ற்கான‌ க‌ட்ட‌ண‌த்தை மேலும் குறைத்து, இத‌னால் இந்த‌ ச‌ந்தை மேலும் விரிவ‌டைந்த‌து. இது ம‌ட்டும‌ல்லாம‌ல் அலைபேசிக‌ளுக்கு மாத‌ த‌வ‌ணையில் ப‌ண‌ம் செலுத்தும் முறையும் அலைபேசி விற்ப‌னையாள‌ர்க‌ளால் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து. இத‌னால் அவ‌ர்க‌ள் செலுத்தும் மாத‌ த‌வ‌ணை ஒரு மிக‌ப் பெரிய‌ அள‌வில் இல்லாம‌ல் அவ‌ர்க‌ள் வ‌ருமான‌த்திற்குள் வ‌ந்த‌து. ரூபாய் 10 என்ற மிக‌க் குறைந்த‌ க‌ட்ட‌ண‌ அள‌வில் முன்கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் வ‌ச‌திக‌ளும் பெருகின‌. இந்த‌ முன் கூட்டியே ப‌ண‌ம் செலுத்தி பேசும் திட்ட‌த்தில் “வாழ்நாள் இறுதி வ‌ரை”(Life time) அழைப்புக‌ள் என்ற‌ திட்ட‌ம், ஒரே அலைவ‌ரிசைக்குள் பேசினால் ச‌லுகை விலை போன்ற‌ திட்ட‌ங்க‌ளும் அறிமுக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ன‌. புதிய அலைபேசி இணைப்புக‌ளில் 95 விழுக்காடு முன் கூட்டி ப‌ண‌ம் செலுத்தும் திட்டத்தில் உள்ள‌வ‌ர்க‌ள் என்ப‌து ஆச்ச‌ரிய‌மான‌ ஒன்ற‌ல்ல‌. இது மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் த‌ன‌து ப‌ங்கை 76 விழுக்காட்டிலிருந்து(2007) 85 விழுக்காடாக‌(2008 இறுதி வ‌ரை) அதிக‌ப்ப‌டுத்தி உள்ள‌து. (அறிக்கை ப‌க்க‌ எண்.9)

இந்த‌ அறிக்கையில் உள்ள‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை வைத்து நமக்கு அறிய கிடைப்பது என்ன்வெனில் இந்தியாவில் சாதாரண பொதுமக்கள் வெறும் தொட‌ர்புக்கு ம‌ட்டும் ஒரு சாதார‌ண‌ அலைபேசி இணைப்பை பெறுவ‌த‌ற்கு எவ்வ‌ள‌வு ஆகும் என்ப‌தே.

ஒரு அலைபேசியும், வாழ்நாள் இறுதி வ‌ரை அழைப்புக‌ள் உள்ள‌ இணைப்பிற்க்கு ரூபாய் 1,000ற்க்கும் கீழே தான் தேவை, இதுவும் மாத‌ த‌வ‌ணைக‌ளில் செலுத்தினால் போதும். மேலும் இணைப்பை தொட‌ருவ‌த‌ற்காக‌ மாத‌ம் ரூபாய்.10 ம‌ட்டுமே போதும்( Vodafone அறிக்கையின் ப‌டி சாதார‌ண‌ ம‌க்க‌ளின் ச‌ராச‌ரி மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய். 250) இதில் வ‌ருகின்ற‌ அழைப்புக‌ள் ம‌ட்டுமே போதும் என்றால் மாத‌க‌ட்ட‌ண‌மே தேவை இல்லை. இது போன்ற‌ இணைப்புக‌ளை ஒரு குடும்ப‌த்தில் உள்ள‌ ஒருவ‌ரோ, இருவ‌ரோ வைத்து கொள்ள‌ முடியும், இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு நாளுக்கு ஆகும் செல‌வு ரூபாய்.20. இந்த‌ அறிக்கையை நாம் கிராம‌புற‌ , ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ இணைப்புக‌ள் எவ்வ‌ள‌வு, ஒவ்வொரு அலைவ‌ரிசைக்கும் எவ்வ‌ளவு இணைப்புகள் உள்ள‌து என‌ பிரித்தும் பார்க்க‌லாம்.

உதார‌ண‌த்திற்க்கு ந‌க‌ர்புற‌ ப‌குதிக‌ளில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தியுட‌ன் ஒப்பிட்டால் கிராம‌ப் ப‌குதியிலுள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் அட‌ர்த்தி 6 ம‌ட‌ங்கு குறைவு.மொத்த‌ அலைபேசி இணைப்புக‌ளில் ந‌க‌ர்புற‌த்தின் ப‌ங்க‌ளிப்பு தோராய‌மாக‌ 80 விழுக்காடு. மேலும் ஒரு நாளைக்கு ரூபாய்.20ற்கும் குறைவாக‌வே பெரும்பான்மையான‌ அலைபேசி உரிமையாள‌ர்க‌ள் செல‌வ‌ழிக்கின்ற‌ன‌ர்.

இந்த‌ அறிக்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்வ‌து இந்தியாவில் அலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையை கொண்டு இங்கு வாழும் ம‌க்க‌ளின் வ‌ள‌ர்ச்சியை தீர்மானிப்ப‌து த‌வ‌றாக‌வே முடியும். இதை இவ்வாறு கூற‌லாம் அதாவ‌து ந‌ம‌து ச‌மூக‌த்தில் இந்த‌ அலைபேசி நிறுவ‌ன‌ங்க‌ள் வெற்றிக‌ர‌மாக‌ எல்லா நிலையில் உள்ள‌ ம‌க்க‌ளிட‌மும் சென்று விட்ட‌ன‌. அலைபேசி க‌ட்ட‌ண‌ விகித‌ம் 10 விழுக்காடு அதிக‌ரித்தால் 23 விழுக்காடு வாடிக்கையாள‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை புற‌க்க‌ணித்து விடுவார்க‌ள்( Vodafone அறிக்கை ப‌க்க‌ எண்.14). தேவையின் அடிப்ப‌டையில் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை கொண்டிருப்பினும் ஒரு சிறிய‌ க‌ட்ட‌ண‌ மாற்ற‌ம் கூட‌ அவ‌ர்க‌ளின் அலைபேசி ப‌ய‌ன்பாட்டை வெகுவாக‌ குறைத்து விடும்.

இறுதியாக‌ நாம் இவ்வாறு கூற‌லாம். த‌ன்னுடைய‌ பிற‌ அத்தியாவ‌சிய‌ தேவைக‌ளில் ஒன்றை த‌விர்ப்ப‌த‌ன் மூல‌ம் ஏழ்மை நிலையில் உள்ள‌வ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெற‌ முடியும், ஆனால் அத‌ன் க‌ட்ட‌ண‌ விகித‌த்தில் ஏற்ப‌டும் சிறு அதிக‌ரிப்பு கூட‌ அவ‌ர்க‌ளை அத‌ன் ப‌ய‌ன்பாட்டிலிருந்து முற்றிலுமாக‌ வெளியேற்றி விடும்.

வருடம் அலைபேசி (கோடி பேர்) தொலைபேசி (கோடி பேர்)

2003 1.3 4.148
2004 3.360 4.258
2005 5.221 4.591
2006 9.000 4.975
2007 16.253 4.039
2008 26.109 3.942
2009 39.176 3.796
2010 58.432 3.696

அலைபேசி/தொலைபேசி பயனாளர்கள் 2003 முதல்
ஏன் அலைபேசி இணைப்பு இந்தியாவில் மிக‌ வ‌றுமையில் வாடும் ம‌க்க‌ளுக்கு மிக அத்தியாவ‌ச‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து ?

மேலே கூறிய‌வ‌ற்றிலிருந்து ந‌ம‌க்கு தெளிவாக‌ தெரிவ‌து என்ன‌வென்றால் அலைபேசி இணைப்பு வ‌ள‌ர்ச்சிக்கான‌ ஒரு காரணி இல்லை, த‌ன‌து வேலைக்காக‌வும் ம‌ற்ற‌ தேவைக‌ளுக்காகவும் தேவைப்ப‌டும் ஒரு அடிப்ப‌டை பொருள். இங்கு நாம் முக்கிய‌மாக‌ பார்க்க‌வேண்டிய‌து என்ன‌வெனில் இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளே மிகப் பெரும்பான்மையாக‌ (93%) உள்ள‌ன‌ர். இதிலும் பெரும்பான்மையின‌ர் த‌ங்க‌ள‌து வ‌ருமான‌த்தை எவ்வாறு ச‌ரியாக‌ செல‌வு செய்வ‌து என்ப‌தில் மிக‌வும் க‌வ‌ன‌ம் கொண்ட‌வ‌ர்க‌ள். இதில் ஒரு ப‌குதியின‌ர் அலைபேசி இணைப்புக‌ளுக்கான‌ க‌ட்ட‌ண‌ம் மிக‌வும் குறைவாக‌ ஆன‌ பொழுது அதை உப‌யோக‌ப‌டுத்த‌ தொட‌ங்கிவிட்ட‌ன‌ர் அதுவும் கூட‌ த‌னது வேலை சார்ந்த‌ தொட‌ர்புக‌ளுக்கு ம‌ட்டும். இவை பெரும்பான்மையான‌ ஆய்வாளர்க‌ளால் உறுதி செய்ய‌ப்ப‌ட்டும் உள்ள‌து. குர்கானில் உள்ள‌ அமைப்பு சாரா தொழிலாள‌ர்க‌ளின் நிலை ப‌ற்றி‌ ச‌மீப‌த்தில் வெளிவ‌ந்த ஆய்வுக் குறிப்பிலும் இது குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து. (http://sanhati.com/excerpted/2320/)

அமைப்புசாரா தொழிலாள‌ர்க‌ள் த‌ங்க‌ள‌து நிர‌ந்த‌ர‌மில்லா வேலைத் த‌ன்மையின் காரண‌மாக‌வும், தனக்கு கிடைத்துள்ள‌ வேலையை தக்கவைத்து கொள்வதற்கும் அலைபேசியை உப‌யோகிக்க‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌ர். இதை ஏதோ அவ‌ர்க‌ளுக்கு அலைபேசியில் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுட‌ன் தொட‌ர்பு கொண்டு பேச‌ நிறைய‌ நேர‌ம் உள்ள‌தைப் போல‌ எண்ணிக் கொண்டு இதை வ‌ள‌ர்ச்சியின் ஒரு கார‌ணியாக‌ க‌ருதுவ‌து த‌வ‌று. வ‌ள‌ர்ந்து வ‌ரும் அமைப்புசாரா தொழிற் ச‌ந்தையில் த‌ன‌து வேலையை த‌க்க‌வைத்துக் கொள்ள‌வும், புதிய‌தாக‌ வேலைக்கு சேர‌வும் அலைபேசி செல‌வுக‌ள் த‌விர்க்க‌முடியாத‌ ஒன்றாக‌ மாறிவிட்ட‌ன‌.

இத‌ற்கு நிக‌ரான‌ ஒரு உதார‌ண‌த்தை நாம் வ‌ட‌ அமெரிக்காவில் பார்க்க‌ முடியும், தானிருக்கும் இட‌த்தில் இருந்து வேலைக்கு செல்லும் இட‌த்திற்க்கு அர‌சு போக்குவ‌ர‌த்துக‌ளோ, த‌னியார் போக்குவ‌ர‌த்துக‌ளோ இல்லாத‌ ப‌ட்ச‌த்தில் அங்கு ம‌கிழுந்து வாங்குவ‌தற்கு ந‌டுத்த‌ர‌ ம‌க்க‌ள் நிர்ப‌ந்திக்க‌ப்ப‌டுகின்றார்க‌ள். இங்கே ம‌கிழுந்து என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல‌, அத்தியாவ‌சிய‌மான‌ ஒன்றாக‌ உள்ள‌து. இதை போல‌ தான் இந்தியாவில் அலைபேசி இணைப்பு என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் கூறுவ‌து போல‌ ஆட‌ம்ப‌ரத்திற்காக‌ அல்ல‌, அத்தியாவ‌சிய‌த்திற்காக‌வே. அமைப்புசாரா தொழில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ அவ‌ர்க‌ள் அலைபேசி இணைப்பை பெறுகின்ற‌ன‌ர். இது ம‌ட்டும‌ல்லாம‌ல் ம‌ருத்துவ‌ம், க‌ல்வி போன்ற‌ அடிப்ப‌டை தேவைக‌ள் த‌னியார் ம‌ய‌ப்ப‌டுத்த‌ப் ப‌ட்டுவிட்ட‌தால் அவ‌ர்க‌ளின் வ‌ருமான‌த்தில் பெரும்பான‌மையை இவை பிடுங்கி விடுகின்ற‌ன‌‌. இவை எல்லாம் இந்திய‌ பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி திட்ட‌ங்க‌ளால் சமீபத்தில் ந‌டைபெற‌ ஆர‌ம்பித்துள்ள‌வைகள் மட்டுமே. (இது தொடர்ந்தால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோச‌மாக இருக்கும்)

உதார‌ண‌த்திற்கு ந‌க‌ர‌ப்ப‌குதியில் வாழுகின்ற‌ ஐந்து பேர் கொண்ட‌ ஒரு குடும்ப‌த்தை எடுத்துக்கொள்வோம் (ஒரு ஆண், ஒரு பெண், இர‌ண்டு குழ‌ந்தைக‌ள், ஒரு முதிய‌வ‌ர்). இங்கே அந்த‌ குடும்ப‌த்தின் மாத‌ வ‌ருமான‌ம் ரூபாய்.2000. அவ‌ர்க‌ள் குடும்ப‌த்தில் இர‌ண்டு அலைப்பேசி இணைப்புக‌ள்(ஒன்று கண‌வ‌ரிட‌ம், இன்னொன்று ம‌னைவியிட‌ம்). க‌ண‌வ‌ன் அன்றைய தேதியில் காலியாக‌‌ உள்ள‌ வேலைக‌ளைப் ப‌ற்றி தெரிந்துகொள்வ‌த‌ற்கும், ம‌னைவி த‌ன‌க்கு கிடைக்கும் வேலைக‌ள் (ஏதாவ‌தோரு வீட்டில் துணி துவைப்ப‌து, வீட்டை தூய்மைப்ப‌டுத்துவ‌து) ப‌ற்றி தெரிந்து கொள்வ‌த‌ற்கும் உப‌யோக‌ப்ப‌டுகின்ற‌து. இத‌னால் இவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் ரூபாய் 200 செலவாகின்ற‌து, இதை அவ‌ர்க‌ள் ஏதாவ‌தொரு வேளை உண‌வை குறைப்ப‌த‌ன் மூல‌ம் ச‌ம‌ப்ப‌டுத்திக் கொள்கின்ற‌ன‌ர்.

இந்த‌ ஆய்வுக்க‌ட்டுரை மூல‌ம் நாம் அறிய‌ வ‌ருவ‌து இந்தியாவில் அலைபேசி என்ப‌து ஒரு ஆட‌ம்ப‌ர‌ பொருள் அல்ல, ஒரு நாளைக்கு ரூபாய்.20 அல்லது அதற்கு கீழ் வருமானம் கொண்ட‌ ஏழை கூட இங்கே அலைபேசி இணைப்பை பெற முடிகின்ற அளவிற்க்கு மிகவும் குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றது. அமைப்பு சாரா தொழில் வேலைவாய்ப்பில் உள்ள‌ நிர‌ந்த‌ர‌மின்மை கார‌ண‌மாக‌ நிர்ப‌ந்திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ ஒரு அத்தியாவ‌ச‌ பொருள் அலைபேசி இணைப்பு.

தொலைபேசி (land lines) இணைப்புக‌ள் ந‌டுத்த‌ர‌ வ‌குப்பை காட்டும் ஒரு கார‌ணி.

த‌க‌வ‌ல் தொட‌ர்புக‌ளின் மூல‌மாக‌ ந‌டுத்த‌ர‌ வகுப்பை ஒருவ‌ர் க‌ண‌க்கிட‌iவேண்டுமானால் தொலைபேசி இணைப்பு ஒரு ச‌ரியான‌ கார‌ணியாக‌ இருக்கும். ஒரே வீட்டிற்க்கு இர‌ண்டு தொலைபேசி இணைப்புக‌ள் இருப்ப‌து அரிதான‌ ஒன்று. இத‌னால் ஒருவ‌ரே அல்ல‌து ஒரு குடும்ப‌மே ப‌ல‌ இணைப்புக‌ள் கொண்டிருப்ப‌து இங்கே அரிது. ந‌ம‌க்கு என்ன‌ எண்ணிக்கை கிடைக்கின்றது?

நாம் தொலைபேசி இணைப்புக‌ள் ப‌க்க‌ம் க‌வ‌ன‌ம் செலுத்துபோது ந‌ம் கவனத்தில் படுவது. 50 விழுக்காடு இணைப்புக‌ள் அர‌சு நிறுவ‌ன‌ங்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன‌‌. வெறும் 2 கோடி ம‌க்க‌ள் ம‌ட்டுமே தொலைபேசி இணைப்பை கொண்டுள்ள‌ன‌ர். ச‌ராச‌ரியாக‌ ஒரு குடும்ப‌த்திற்கு 5 பேர் வைத்து கொண்டால், 10 கோடி மக்க‌ள் தொலைபேசி இணைப்பு கொண்டுள்ள‌ன‌ர்.

இதே போல‌ மாத‌க் க‌ட்ட‌ண‌ம் செலுத்தும் அலைபேசி இணைப்புக‌ளை (Post paid) க‌ண‌க்கிட்டு பார்த்தால் மொத்த‌ இணைப்பில் 15 விழுக்காடு மட்டுமே த‌னி ந‌ப‌ர்க‌ளிட‌ம்(பொது ம‌க்க‌ளிட‌ம்) இருக்கும். இந்த‌ தோராய‌ க‌ணிப்பும் கூட‌ நாட்டில் உள்ள‌ ப‌ண‌க்கார, ந‌டுத்த‌ர‌ வ‌குப்பில் உள்ள‌வ‌ர்க‌ளின் எண்ணிக்கையும் ஒன்றாக‌ உள்ள‌து. ( 2006ல் சென் குப்தா அறிக்கையை பார்க்க‌வும்).

வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ள்.

இந்த‌ நேர‌த்தில் நாம் வ‌ளர்ச்சியின் ஒரு அள‌வுகோலாக‌ அலைபேசி இணைப்பை க‌ருதுவ‌தால் ஏற்ப‌டும் தொல்லைக‌ளைப் ப‌ற்றியும் குறிப்பிட‌ வேண்டிய‌ க‌ட்டாய‌ம் உள்ள‌து.

உதார‌ண‌த்திற்கு 2007ன் இறுதியில் பாகிசுதானில் 100பேருக்கு 50பேர் அலைபேசி இணைப்புக‌ளை கொண்டிருந்த‌ன‌ர். இந்தியாவில் அன்று இருந்த‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கையுட‌ன் ஒப்பிட்டால் இது இரும‌ட‌ங்கு. ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி பாகிசுதான் இந்தியாவை விட‌ வ‌ள‌ர்ந்து விட்ட‌து என்றும், இந்தியா இப்போது தான் வ‌ள‌ர்ந்து கொண்டு வ‌ருகின்ற‌து என்ற‌ முடிவிற்கு தான் வ‌ர‌வேண்டும், ஆப்ரிக்காவைச் சுற்றி உள்ள‌ நாடுகளில் மட்டும் 60 கோடி அலைபேசி இணைப்புக‌ள் உள்ள‌ன‌. ம‌னித வள வ‌ள‌ர்ச்சியில் 134 வ‌து இட‌த்தில் உள்ள‌ இந்தியாவையும், 141வ‌து இட‌த்தில் உள்ள‌ பாகிசுதானை அந்த‌ ம‌ட்டிய‌லில் க‌டைசியில் உள்ள‌ நாடுக‌ளுட‌ன் ஒப்பிடுவ‌து எப்ப‌டி ச‌ரியாகும்?

தில்லியில் உள்ள‌ அலைபேசி இணைப்புக‌ளின் எண்ணிக்கை தில்லியில் உள்ள‌ ம‌க்க‌ள் தொகையை விட‌ அதிக‌ம். ப‌.சித‌ம்ப‌ர‌த்தின் க‌ருத்துப‌டி தில்லியில் வ‌றுமை முற்றிலுமாக‌ ஒழிந்திருக்க‌ வேண்டும். அவ்வாறா உள்ள‌து தில்லி?

(இதில் ஒரு நிறுவ‌னமோ, தனி நபரோ ப‌ல‌ இணைப்புக‌ளை கொண்டிருப்ப‌தெல்லாம் எடுத்துக் கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. எங்க‌ளை பொருத்த‌வ‌ரையில் மிக‌ முக்கிய‌மாக‌ ப‌ட்ட‌ கார‌ணிக‌ளை ம‌ட்டுமே இங்கே ஆராய்ந்துள்ளோம்.)
_______________________________________________________
ந‌ன்றி… ச‌ங்க‌தி (sanhati) இணைய‌த‌ள‌ம். மூலப்பதிவு ‍ …. http://sanhati.com/excerpted/2388/
________________________________________________________

அப்ப‌டின்னா அதெல்லாத்தையும் க‌ண‌க்கில‌ எடுத்தா!!!!!. மான‌! மிகு ப‌.சித‌ம்ப‌ர‌ம் 1984 தில்லி கலவரம் குறித்து தவறாக கூறியதை கண்டித்து அவரை ஒரு சீக்கிய பத்திரிகையாளர் செருப்பாலடித்து போல‌ இங்கு பொதும‌க்க‌ள் சிதம்பரம் கூறியுள்ள‌‌ இந்த‌ பொய்யிற்கு அவ‌ரை செருப்பால் அடித்தால் அது தப்பா???

தமிழாக்கம்: ப‌.ந‌ற்ற‌மிழ‌ன்.