Saturday, June 4, 2011

வரவேற்கிறோம் தயாநிதி மாறன்...

எஸ். குருமூர்த்தி

சென்னை, ஜூன் 3: "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.

தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.

மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.

தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.

இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.

சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.

சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.

இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது.

24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.

24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.

சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.

மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி? ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா? மேலும் பார்க்கலாம்.

"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.

சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.

அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.

மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.

ஆனால் அவை எங்கே இருக்கின்றன? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.

இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.

இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=426922&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

Friday, June 3, 2011

தலையங்கம்: முதலில் பதவி விலகுங்கள்...





சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்துகொண்டு தாங்கள் செய்யும் தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் ஒரு கூட்டம் வேறெங்குமே இல்லாத அளவுக்கு இந்தியாவில் அதிகரித்து விட்டிருக்கிறது. குறிப்பாக, ஆட்சியிலும் அதிகாரத்திலும் செல்வாக்குப் படைத்த கட்சித் தலைவர்களாக, அமைச்சர்களாகப் பொறுப்பான பதவி வகிப்பவர்கள், தங்களது குடும்பத்தையும், சுற்றத்தையும், நண்பர்களையும் வளப்படுத்துவதற்காகத்தான் மக்கள் தங்களுக்கு வாக்களித்துப் பதவிக் கட்டிலில் அமர வைத்திருக்கிறார்கள் என்று நினைத்துச் செயல்படுவது வாடிக்கையாகிவிட்டது. இவர்களது செயல்பாடுகளால் நமக்கு மக்களாட்சித் தத்துவத்திலேயே நம்பிக்கை குறையத் தொடங்கி இருக்கிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் முறைகேடு, ராணுவ வீரர்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறோம் என்கிற சாக்கில் அரசியல்வாதிகளின் பினாமிகள் அரங்கேற்றி இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் என்று இந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுப்பப்பட்டிருக்கும் தொலைபேசி இணைப்பு மோசடிக் குற்றச்சாட்டு.

தங்களது நிறுவனத்தின் சார்பில் ஒரு சட்டப் பிரிவும், அதில் சில வழக்குரைஞர்கள் ஊழியர்களாகவும் இருப்பதால், எந்தப் பத்திரிகை தங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டாலும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும், மான நஷ்ட வழக்குப் போட்டு அந்தப் பத்திரிகையாளரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றுவதாகப் பயமுறுத்துவதும் சன் குழுமத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.

சக பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சிச் சேனல்களையும் மிரட்டியும், பயமுறுத்தியும் பணிய வைக்கும் முயற்சியில், ஒரு அமைச்சரே ஈடுபடும்போது அதை வாய் பொத்திக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்பது பத்திரிகை தர்மத்துக்கே அடுக்காது என்பதால் தலையங்கம் தீட்டி பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அன்றைய மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இன்றைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் இருந்தபோது, தனது சென்னை போட் ஹவுசிலுள்ள வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சித் தலைமையகத்தைத் தொலைபேசி மூலம் இணைத்து, அந்தத் தனியார் சேனலின் பயன்பாட்டுக்கு அமைச்சரின் பெயரிலான தொலைபேசி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இதற்காக 3.4 கி.மீ. தூரத்துக்கு ரகசியமாக சாலைக்கடியில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

ஏறத்தாழ 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் ஒரு குட்டி தொலைபேசி இணைப்பகம்போல, தனது குடும்பத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் பயன்பாட்டுக்காக அன்றைய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனால் முறைகேடாக உபயோகப்படுத்தப்பட்டன என்கிற குற்றச்சாட்டு 2009 தேர்தலின்போதே எழுப்பப்பட்டது. அமைச்சர் அதிபுத்திசாலித்தனமாக, பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ஒருவரிடமிருந்து, அமைச்சரின் பெயரில் ஒரு தொலைபேசி மட்டுமே இயங்குவதாக ஒரு கடிதம் எழுதி வாங்கி வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.

அத்துடன் முடிந்தது என்று அமைச்சர் தயாநிதி மாறன் நினைத்த விஷயம் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதற்குக் காரணம், "தினமணி'யோ, பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தியோ அல்ல.

2007-ம் ஆண்டு தயாநிதி மாறனின் தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அவரது இடத்தைப் பிடித்த ஆ. ராசாதான் இந்தப் பிரச்னை இப்போது பூதாகரமாக வடிவம் எடுத்திருப்பதற்குக் காரணம் என்பது தயாநிதி மாறனுக்கும் சன் குழுமத்துக்கும் தெரியாதா, இல்லை, அவர்களது தாத்தாவான திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் தெரியாதா?

தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்ற ஆ. ராசாவின் பரிந்துரையின் பேரில்தானே, ஜூன் 2004 முதல் ஜூன் 2007 வரையில் அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறனின் செயல்பாடுகளுக்குப் பயன்பட்ட தொலைபேசி இணைப்புகள் பற்றிய விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ.) முடுக்கிவிட்டனர். 2007 செப்டம்பர் மாதம் 10-ம் தேதி சிபிஐயின் சிறப்பு ஆணையர் எம்.எஸ். சர்மாவின் கையொப்பத்துடன் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

323 தொலைபேசி இணைப்புகளைத் தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்துக்காக அன்றைய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அறிக்கையின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாகவும் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.

இப்போதைய கேள்வி, தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தினாரா, இல்லையா என்பதல்ல. மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூங்குகிறதே அது ஏன் என்பதுதான்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்றும் தயாநிதி மாறன் கூறுவது உண்மையானால், முதலில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விசாரணைக்குத் தயாராகட்டுமே... பத்திரிகையாளர்களை நீதிமன்றத்தின் பெயராலும், மான நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் மிரட்டுவதை விட்டுவிட்டு, நீதி விசாரணைக்கு தயாநிதி மாறன் தயாராகத் துணியட்டுமே...

அவர் தயாராகிறாரோ இல்லையோ, அவரை அமைச்சரவையில் இருந்து அகற்றி, சிபிஐயின் அறிக்கை மீது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. "சட்டம் தனது கடமையைச் செய்யும்' என்கிற பிரதமரின் கூற்று உண்மையானால், நான்கு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சிபிஐயின் அறிக்கை தூசு தட்டப்பட்டு, நீதி நிலைநாட்டப்படட்டும்!


Wednesday, June 1, 2011

தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'

எஸ்.குருமூர்த்தி

சென்னை, ஜூன் 1: நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.

இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.

பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.

அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.

323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.

இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.

டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.

இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.

இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.

கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.

இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.

இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.





2 ஜி ஊழல் விவகாரம்: தயாநிதி மாறனுக்கு பாஜக 4 கேள்விகள்




புது தில்லி, மே 31: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு பாஜக நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் இப்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. இது தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு அவர் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் பாஜகவை பொறுத்தவரை, தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அமைச்சரிடம் விளக்கம் கோருவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார். 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது மத்திய அரசு, இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகளை மாற்றி 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழகத்தில் இருந்து ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு சர்க்களில் தனது பணியை தொடங்கி செயல்பட்டு வந்ததாகவும், பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 சர்க்கிள்களில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அது குறித்து பாஜக இந்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மாக்சிஸ் கம்யூனிகேஷன் தனது மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளதா? தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த போதுதான் அலைக்கற்றை விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சர் குழுவிடம் இருந்து மாற்றி தானே முடிவை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

2 ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். 2 ஜி ஊழலில் குறிப்பாக திமுகவின் குடும்ப நிறுவனங்கள் தொடர்பு கொண்டிருப்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க பிரிவு வெளிநாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளது. வெளிநாடுகளில் நடைபெற்ற விசாரணையில் தக்க ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் விரைவில் மேலும் சிலர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.