Saturday, February 5, 2011

திருமணத்தடை நீக்கும் பெருமாள்

தடைகள் நீக்கி திருமண வரம் தந்தருளும் வேதநாராயணப் பெருமாள், திருச்சி அருகிலுள்ள திருநாராயணபுரத்தில் அருள்பாலிக்கிறார். திருமணம் நடக்க இவரது சன்னதியில் நட்சத்திர தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.தல வரலாறு: தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை ஒரு சமயம் பிரம்மா வேண்டினார். அவருக்கு வேதத்தை உபதேசித்த பெருமாள், இங்கேயே பள்ளி கொண்டார். சுவாமிக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்த சிலை மண்ணால் மூடப்பட்டது. வானவராயர் என்ற மன்னர், இவ்வூர் வந்து தங்கினார். அவரது கனவில் தோன்றிய சுவாமி, தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதைக் கூறினார். சிலையைக் கண்டெடுத்த மன்னர், கோயில் எழுப்பினார்.அரையருக்கு அருளிய பெருமாள்: பிள்ளைத் திருநறையூர் அரையர் என்ற பக்தர், தன் மனைவி மற்றும் ஆறு குழந்தைகளுடன் சுவாமியைத் தரிசிக்க வந்தார். சன்னதியின் மேலே பனை ஓலை வேயப்பட்டிருந்தது. அப்போது, ஓலையில் தீப்பற்றும்படி சுவாமியே மாயச்செயல் ஒன்றை நிகழ்த்தினார். அதிர்ந்துபோன பக்தர் சுவாமி மீது தீப்பிழம்புகள் விழாமல் இருக்க மனைவி, குழந்தைகளை படுக்க வைத்து, அவர்கள் மீது குறுக்காக விழுந்து அவர்கள் மீது தீப்பிழம்புகள் விழாதபடி தடுத்தார். குடும்பத்தினர் மீது அக்கறை கொண்ட அவருக்கு காட்சி தந்த பெருமாள், அனைவருக்கும் மோட்சம் கொடுத்தருளினார். பிரகாரத்திலுள்ள ஆழ்வார் சன்னதியில் பிள்ளைத் திருநறையூர் அரையர் இருக்கிறார். பிறப்பற்ற நிலை வேண்டியும், ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு வேண்டியும் இவரை வழிபடலாம்.தோஷ நிவர்த்தி தலம்: வேதநாராயணர், புஜங்க சயனத்தில் தலைக்கு அடியில் நான்கு வேதங்களையும் வைத்து, நாபியிலுள்ள பிரம்மாவிற்கு வேதத்தை உபதேசிக்கும் கோலத்தில் இருக்கிறார். இரணியனை அழித்தபோது உக்கிர நரசிம்மராக பிரகலாதனுக்கு காட்சி தந்த சுவாமி, அவனுக்கு இங்கு குழந்தை வடிவில் காட்சி தருகிறார்.


சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் இருக்கிறார்.ஆதிசேஷனும், அவரது மனைவியும் வேதநாராயணரை தாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே ஆதிசேஷன், கீழே அவரது மனைவி என இங்கு பத்து தலைகளுடன் நாகத்தை தரிசிக்கலாம். இந்த அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். நாகதோஷம், களத்திர தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள் பெருமாளை வழிபட தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.காவியுடை ராமானுஜர்: ராமானுஜர் இங்கு வந்தபோது, சுவாமி அவரிடம், 'காவிரியில் நீராடி காவி உடுத்தி வா!' என்றார். ராமானுஜரும் அவ்வாறே வந்தார். சித்திரை திருவாதிரை நட்சத்திரத்தன்று, ராமானுஜர் காவியுடை அணிந்து புறப்பாடாவார். மற்ற நாட்களில் இவருக்கு வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது.நட்சத்திர தீபம்: கல்வி வழிபாட்டிற்குரிய தலமாகத் திகழும் இங்கு, வேதநாராயணருக்கு திருவோணம், ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விசேஷ பூஜை நடக்கிறது. ஒருவரது ஜாதகத்தில் குரு பலமின்றி இருந்தால் திருமணம் தள்ளிப்போகும் என்பர். இத்தகைய தோஷத்தால் திருமணத்தடை உள்ளவர்கள், வேதநாராயணருக்கு துளசி மாலை அணிவித்து, 27 நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டை வியாழன் அல்லது தோஷம் உள்ளவரின் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தன்று செய்வது விசேஷம்.சத்திய ஆஞ்சநேயர்: பங்குனி உத்திரத்தன்று சுவாமி, வேதவல்லித்தாயார் சன்னதிக்கு எழுந்தருளி சேர்த்திக்காட்சி தருவார். ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பிள்ளை லோகாச்சாரியார், மணவாளமாமுனிகள் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். கோயில் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதியில் வசிக்கும் மக்கள், தங்களுக்குள் ஏதேனும் பிரச்னை உண்டானால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். இப்பகுதியில் யாராவது பொய் சொன்னாலோ, பிறரை நயவஞ்சமாக ஏமாற்றினாலோ, கம்பத்தடியார் முன் சத்தியம் செய்து தரும்படி கேட்கும் வழக்கமும் இருக்கிறது.இருப்பிடம்: திருச்சியில் இருந்து 52 கி.மீ., தூரத்திலுள்ள தொட்டியம் சென்று, அங்கிருந்து 5 கி.மீ., சென்றால் திருநாராயணபுரத்தை அடையலாம். தொட்டியத்தில் இருந்து பஸ் வசதி குறைவு. ஆட்டோ உண்டு.திறக்கும் நேரம்: காலை 7- மதியம் 12, மாலை 4- இரவு 8 மணி.போன்: 99766 11898.



செல்போனால் விபரீதம்...உஷார்..


எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.

அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.

செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர்.

வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.

கோபுரங்களால் கோடி தொல்லை

செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

கழிவறைகளில்…

யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர்.

ரயில் கழிவறைகள்என்றில்லை, பேருந்து நிலையம்,மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?

செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. முழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும் என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் விற்பதற்கில்லை என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்

சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், ‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை.

அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.

எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்’ என்றார்.

செல்போனில் ‘நீலம்’

செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். த்ரில் லுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர்.

அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.

ஆண்மைக்கும் ஆபத்தா…

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், ‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.

செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.

செல்போன் போதை

வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.


Read more: http://www.livingextra.com/2011/01/blog-post.html#ixzz1D6unqXJ3

நாடும் , நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் ... பெட்ரோலும் ... உலக மகா மோசடியும்..

கச்சா எண்ணெய் உயர்வு – எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் என்ற ஒரே ரிக்கார்டை போட்டு மக்கள் தலையில் கல்லை போடுகின்றனர் இந்த பாராளுமன்ற ஓட்டுப் பொறுக்கிகள்.


இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைச் சந்தைச் சூதாட்டம் தீர்மானிப்பதற்கு இருந்து வந்த பெயரளவிலான தடையும் நீக்கப்பட்டுவிட்டது.

காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்றாம் முறையாக பெட்ரோல்-டீசலின் விலையை உயர்த்தியிருக்கிறது. அதே சமயம், தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள விலையேற்றத்தை வழக்கமான ஒன்றாக எடுத்துக் கொண்டுவிட முடியாது.

‘‘பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பதில் அரசு குறுக்கிடக் கூடாது; அதனைச் சந்தைதான் தீர்மானிக்க வேண்டும்" என்ற தாராளமயக் கொள்கைப்படி இவ்விலையேற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இக்கொள்கையை, காங்கிரசு கூட்டணி ஆட்சி 2010-இல் நடைமுறைப்படுத்தத் துணிந்திருக்கிறது. இதன்படி, பெட்ரோலுக்கு வழங்கப்பட்டு வந்த ‘மானியத்தை’ முற்றிலுமாக நிறுத்திவிடுவதோடு, இனி அதனின் விலை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை சர்வதேசச் சந்தை நிலவரத்துக்கு ஏற்பத் தீர்மானிக்கப்படும் என்றும்; டீசலுக்கு வழங்கப்பட்டு வரும் "மானியத்தையும்" வெகுவிரைவில் நிறுத்தப் போவதாகவும் காங்கிரசு கூட்டணி ஆட்சி அறிவித்திருக்கிறது. இதோடு திருப்தியடையாத தாராளமயத் தீவிரவாதிகளோ, சமையல் எரிவாயுவுக்கும், மண்ணெண்ணெய்க்கும் வழங்கப்படும் ‘மானியத்தையும்’ அடியோடு உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கூப்பாடு போட்டு வருகிறார்கள்.

மன்மோகன் சிங் கும்பல் இவ்விலை உயர்வை நியாயப்படுத்தச் சொல்லிவரும் காரணங்கள் - சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துக் கொண்டே போவது; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோல்-டீசல்-மண்ணெண்ணெய்-சமையல் எரிவாயுவை விற்பதால் சந்தித்து வரும் நட்டம்; அரசு, பெட்ரோலியப் பொருட்களுக்கு அளித்து வரும் பல ஆயிரம் கோடி ரூபாய் மானியத்தால் சந்தித்து வரும் பற்றாக்குறை - யாவும் உலுத்துப் போன பொய்கள். எனினும், இந்தப் பொய்களை, பொருளாதாரப் புள்ளிவிவரங்களைத் திரித்துப் புரட்டுவதன் மூலம் உண்மையைப் போல விற்று, படித்தவர்களைக் கூட ஏமாற்றிவருகிறது, மன்மோகன் சிங் அரசு.

கச்சா எண்ணெய் விலையேற்றம், முதல் மோசடி:

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை தேவைக்கும் (demanad) வரத்துக்கும் (supply) இடையேயான பொருளாதார விதி எதுவும் தீர்மானிக்கவில்லை. மாறாக, கச்சா எண்ணெய் சந்தையைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கோல்டுமேன் சாக்ஸ், மார்கன் ஸ்டான்லி, சிட்டி குரூப், ஜே.பி. மார்கன் செஸ் ஆகிய நான்கு அமெரிக்க முதலீட்டு வங்கிகள் நடத்தும் சூதாட்டம்தான் தீர்மானிக்கின்றன. தாராளமயம், இச்சூதாட்டத்திற்குச் சந்தை விதி என்ற பெயரைச் சூட்டிப் புனிதப்படுத்திவிடுகிறது.
மே 2009 நிலவரத்தின்படி, சர்வதேச சந்தையில் ரூ.21.43 என்றிருந்த ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை, தற்பொழுது ரூ.22.13 ஆக அதிகரித்திருக்கிறது. சர்வதேசச் சந்தையில் கடந்த ஓராண்டிற்குள் ஒரு லிட்டர் கச்சா எண்ணெயின் விலை பெறும் 70 காசுகள்தான் அதிகரித்திருக்கும் பொழுது, காங்கிரசு கூட்டணி ஆட்சி கடந்த ஆறு மாதங்களுக்குள் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையை ரூ.6.44; ஒரு லிட்டர் டீசலின் விலையை ரூ.4.55; ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலையை ரூ.3/-; ஒரு உருளை சமையல் எரிவாயுவின் விலையை ரூ.35/- என்ற கணக்கில் அதிகரித்திருக்கிறது. கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்க ஆகும் செலவைச் சேர்த்தால்கூட, இந்த விலையேற்றத்தைப் பகற்கொள்ளை என அடித்துக் கூறலாம்.

பெட்ரோலியத்துறை அமைச்சர் முரளி தியோரா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, வரிவிதிப்புக்கு முன்பாக ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை (இலாபத்தையும் சேர்த்து) ரூ.23.44-தான். அன்றைய சர்வதேச நிலவரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.30.20-க்கு இலாபத்தோடு விற்க முடியும். ஆனால், இந்தியாவில் ஆறு மாதத்திற்கு முன்பே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஐம்பது ரூபாயைத் தொட்டு விட்டது. இதிலிருந்தே, பெட்ரோல், டீசல் போன்ற பெட்ரோலியப் பொருட்கள் இந்தியாவில் சர்வதேச சந்தை விலையை விடக் குறைவாகவும், நட்டத்திலும் விற்கப்பட்டு வருவதாகக் கூறப்படுவது முழுப் பொய் எனப் புரிந்து கொள்ள முடியும்.

எண்ணெய் நிறுவனங்களின் நட்டம், இரண்டாவது மோசடி:

இந்தியா தனக்குத் தேவைப்படும் கச்சா எண்ணெயில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய நிலையில் இருந்தாலும், கச்சா எண்ணெயிலிருந்து சுத்திகரித்துப் பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையில் இல்லை. இப்பெட்ரோலியப் பொருட்கள் உள்நாட்டுத் தேவைக்கும் அதிகமாகவே பொதுத்துறை மற்றும் தனியார் எண்ணெய் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைப் பொருத்தவரை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகிய நான்கு பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்து விற்றால் என்ன விலைக்கு விற்க முடியுமோ அந்த விலைக்கு விற்று இலாபத்தை அள்ள முடியவில்லை என்பதைத்தான் நட்டம் நட்டமென அரற்றிக் கொண்டு திரிகின்றன.

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை, இறக்குமதி செய்யப்படும் பொருளாகக் காட்டி விற்பனை செய்ய வேண்டும் என்பது பேராசை பிடித்த ஏமாற்றுப் பேர்வழியின் மனோநிலை; உள்நாட்டில் உற்பத்தியான பொருளை, சர்வதேச விலைக்கு விற்க முடியாததை, இலாபம் குறைவதாகக் காட்டலாமே தவிர, அதனை நட்டம் நட்டமென ஊதிப் பெருக்குவதைப் பொருளாதார மோசடி என்றுதான் கூற முடியும்.
தனியார்மயம்-தாராளமயத்தின் முடிசூடா மன்னனாக விளங்கும் அமெரிக்காவிலேயே ஒரு லிட்டர் பெட்ரோலின் விலைரூ.32.76 விற்கப்படும் பொழுது, இந்தியாவில் பெட்ரோல் ரூ.52.13க்கு (பழைய விலை) விற்கப்பட்டது. அமெரிக்காவில் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.34.12-க்கு விற்கப்படும் பொழுது, இந்தியாவில் ஒரு லிட்டர் டீசல் ரூ.38.05 (பழைய விலை) விற்கப்பட்டது. உண்மை இப்படியிருக்கும் பொழுது, இந்தியாவில் பெட்ரோலும், டீசலும் குறைவான விலைக்கு விற்கப்படுவதாக நடத்தப்படும் பிரச்சாரம், கோயபல்சைக்கூடத் தனது கல்லறையில் நெளியச் செய்துவிடும்.

பெட்ரோலிய பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பெட்ரோலியப் பொருட்களை சர்வதேசச் சந்தை விலைக்குக் ‘குறைவாக’ விற்றாலும் கூட, 2009-10 ஆம் ஆண்டில் 10,998 கோடி ரூபாயை இலாபமாக ஈட்டியுள்ளது; மைய அரசுக்கு இலாப ஈவுத்தொகையாக ஏறத்தாழ 3,000 கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும்; பாரத் பெட்ரோலியக் கழகமும் சேர்ந்து ஏப்.2009 தொடங்கி டிச-2009-க்குள் அடைந்துள்ள இலாபம் 1,378 கோடி ரூபாய். ஒவ்வொரு ஆண்டும் இப்படி பல ஆயிரம் கோடி ரூபாய்களை இலாபமாக ஈட்டும் இந்த நிறுவனங்களை, சர்வதேச விலைக்குப் பெட்ரோலியப் பொருட்களை விற்க அனுமதிக்க வேண்டும் எனக் கோருவதன் பொருள், இந்திய மக்களைப் பகற்கொள்ளையடிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தவிர வேறென்ன?

அரசின் மானியம், மூன்றாவது மோசடி:

பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் பல்வேறு வகையான வரிகள் மூலம் மைய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் கிடைத்துவரும் வருமானத்தையும்; மைய அரசு பெட்ரோலியப் பொருட்களுக்குத் தருவதாகக் கூறும் மானியத்தையும் ஒப்பிட்டு பார்த்தால், இம்மோசடியைப் பாமரன் கூட எளிதாகப் புரிந்து கொண்டுவிடலாம்.

பெட்ரோலியப் பொருட்கள் மீது விதிக்கப்படும் விற்பனை வரி, சுங்கவரி, உற்பத்தி வரி மற்றும் பிற வரிகளின் மூலம் 2006-07 ஆம் ஆண்டில் மைய மற்றும் மாநில அரசுகளுக்குக் கிடைத்த வருமானம் 1,37,103 கோடி ரூபாய்; அதே ஆண்டில் மண்ணெண்ணெய்க்கும், சமையல் எரிவாயுவுக்கும் மைய அரசு வழங்கிய மானியம் 2,524 கோடி ரூபாய்தான். அதே ஆண்டில், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயுவை சர்வதேசச் சந்தை விலைக்குக் ‘குறைவாக’ விற்றதால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அடைந்ததாகக் கூறப்படும் ‘நட்டம்’ 49,387 கோடி ரூபாய்.

இந்த "நட்டத்தையும்" அரசு அளித்துள்ள மானியத்தையும் கூட்டி (51,911 கோடி ரூபாய்), பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை மூலம் மைய-மாநில அரசுகளுக்குக் கிடைத்த வரி வருமானத்திலிருந்து கழித்தால், ஆளும் கும்பலுக்குக் கிடைத்த நிகர வருமானம் 85,192 கோடி ரூபாய். இந்த நிகர வருமானம் 2007-08 ஆம் ஆண்டில் 68,002 கோடி; 2008-09 ஆம் ஆண்டில் 39,283 கோடி ரூபாய்.

பொதுத்துறை நிறுவனங்கள் அடைந்து வருவதாகக் கூறப்படும் கற்பனையான நட்டத்தை சேர்க்காவிட்டால், இந்த முன்று ஆண்டுகளில் மைய அரசுக்கு மட்டும் கிடைத்துள்ள மொத்த நிகர வரி வருமானம 2,30,593 கோடி ரூபாய். விலையேற்றத்திற்குப் பிறகு, இந்த ஆண்டில் மட்டும் (2010-11) மைய-மாநில அரசுகளுக்குக் கிடைக்கக்கூடிய வரி வருமானம் 1,20,000 கோடி ரூபாய்.

பெட்ரோலியப் பொருட்கள் நவீன சமூகப் பொருளாதார வாழ்க்கையின் என்ஜினாக இருப்பதால், அத்துறையை மைய-மாநில அரசுகள் பொன்முட்டையிடும் வாத்தாகக் கருதுகின்றன. அதனாலேயே, இப்பொருட்களின் மீது விதிக்கப்படும் அபரிதமான வரிகளைச் சிறிதளவு கூடக் குறைத்துக்கொள்ள மறுக்கின்றன.
‘‘பெட்ரோலியப் பொருட்களின் மீது விதிக்கப்படும் வரிகளைக் குறைத்தால், மாநில அரசின் நிதி நிலை மிகவும் பாதிக்கும்" எனக் கூறும் தமிழக முதல்வர் கருணாநிதி, தமிழகத்தில் நுழையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகளைகளை வாரி வழங்கும் பொழுது, அரசின் நிதிநிலை பற்றிக் கவலை கொள்வதில்லை.

இவ்விலையேற்றத்தால், பெட்ரோலியப் பொருட்களுக்கு வழங்கப்படும் ‘மானியத்தில்’ 22,000 கோடி ரூபாய் மிச்சமாகும் என மைய அரசு கணக்குக் காட்டியிருக்கிறது. பொதுமக்களின் நலனுக்காக ஒரு 22,000 கோடி ரூபாயை விட்டுக் கொடுக்க மறுக்கும் மைய அரசு, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி கட்டும் கனவான்களுக்கு வாரிவழங்கியுள்ள மானியம் 26,000 கோடி ரூபாய்; சுங்கவரி மற்றும் கலால்வரி விலக்குகளின் மூலம் முதலாளித்துவ நிறுவனங்களுக்கு அளித்துள்ள மானியம் 4,19,786 கோடி ரூபாய். அவர்களுக்கு மானியம் அளித்தால் "வளர்ச்சியாம்" பொதுமக்களுக்கு ‘மானியம்’ அளித்தால் பற்றாக்குறையாம். இம்முரண்பாட்டைப் பொருளாதார நிபுணத்துவம் என்பதா? இல்லை, பித்தலாட்டம் என்பதா?

http://www.chennaivision.com/userfiles/9ddf91b87f16c858eda8745c721f-grande.jpg
‘‘பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையைத் தீர்மானிப்பதில் இனி அரசு தலையிடாது" என மைய அரசு அறிவித்த மறுநிமிடமே, அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் நாடெங்கும் 5,000 பெட்ரோல் பங்குகளைத் திறக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இன்று பெட்ரோல் பங்குகளைத் திறக்க ஆர்வம் காட்டும் இதே அம்பானிதான், இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பெட்ரோல்-டீசல் விலைகளைத் தீர்மானிப்பதில் அரசு தலையீடு செய்வதைக் கண்டித்து, அப்பொழுது தான் நடத்திவந்த 750 பெட்ரோல் பங்குகளை இழுத்து மூடினார். எனவே, தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள இந்த விலையேற்றத்தில், அரசின் கொள்ளை மட்டுமல்ல, அம்பானி, எஸ்ஸார் போன்ற தனியார் முதலாளிகளின் கொள்ளையும் அடங்கியிருக்கிறது.


நம்ம நாட்டுல பெட்ரோல் டீசல் மீதான வரி -

மத்திய அரசு-40%
தமிழக அரசு-33%

கணக்கு போட்டு பாருங்க இந்த வரி மட்டும் இல்லனா நமக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் 14.90ரூபாய் இதில் அரசு மானிய என்று அளிக்கும் 9 ரூபாயையும் சேர்த்தால் கூட அதிகபட்சம் 25 ரூபாய்க்கு கிடைக்கும்.

சர்வாதிகாரிகள் காலத்தில் குடியாட்சி முறையில் கூட இப்படியொரு வரி விதிப்பு இருந்திருக்குமா என்பது சந்தேகமே!

நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்பதுதான் நம் ஜனநாயகமோ? என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது இந்திய குடிமக்களுக்கு.



பிராமணர்களும் நம்பிக்கைகளும்

நான்கு வருடங்களுக்கு முன்னால் (இதழ் 5 ஜூலை 2004) நம் இதழ் முகப்புத் தலைப்பாக வந்த பிராமண நம்பிக்கைகளைப் பற்றி மீண்டும் ஒரு ஆய்வு செய்து சில கருத்துகளை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஜோதிடம் மற்றும் ஜாதகத் தொடர்புடைய சில அடிப்படை கருத்துகளை அடிகோடிட்டு அவ்விதழில் தெரிவித்த கருத்துகள்போல் அல்லாது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைப் பற்றி விரிவான விளக்கமான இம்மாத முகப்புத் தலைப்பை முன்வைக்க விரும்புகிறோம்.

அக்னிஹோத்ரம் தினமும் செய்து அவுபாசன அன்னத்திற்குப் பிறகே தங்கள் தினசரி நடைமுறைகளைத் தொடங்கும் வைதீக (அபூர்வ) பிராமணர்கள் முதல், அணிந்திருக்கும் பூணூல் தவிர, அத்தனை செயல்களிலும் பிராமணக் கலப்பு இல்லாத பெரியதனக்காரர்கள் வரை, இன்னும் விட்டுவிடாத ஒரு நம்பிக்கையாகத் திகழும் “சிரார்த்தம்” பற்றியே நாம் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறோம். அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்வதும் ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் பெற்றோர்கள் சிரார்த்தமும் நம்மை விட்டு நீங்கிய முன்னோர்கள் நம்மிடம் வந்து பசியாறிச் செல்வதாகக் கொள்ளும் ஒரு நம்பிக்கையே ஆகும். இது பற்றியே நாம் சிந்திக்க விரும்புகிறோம்.

இறைக்கும் எள்ளும் தண்ணீரும் எமலோகம் சென்று, பின்பு அவ்வழியே வைகுந்தம் சென்று அங்கு வசிக்கும் நம் முன்னோர்கள் உண்ணும் உணவாக உருமாறுகிறது. செய்யும் சிரார்த்தம் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டியதினால்தான் அது சிரார்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பிராமணனுக்கு மூன்று வித கடமைகள் உள்ளன. அவை பித்ரு கர்மா, நித்ய கர்மா, நைவேத்திய கர்மா. பித்ரு கர்மா எனப்படுவது நாம் செய்யும் அமாவாசை மற்றும் வருஷ சிரார்த்தங்கள். வருடம் முழுவதும் 96 பித்ரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இவை எல்லாம் செய்ய இயலாவிட்டாலும் அமாவாசை (சுமார் 15) மஹாளய பட்சம், வருஷ சிரார்த்தம் மற்றும் நான்கு மாத பிறப்புகளில் செய்ய வேண்டிய தர்ப்பணம் ஆகியவையாவது குறைந்தபட்சம் ஒவ்வொரு பூணூல் போட்ட பிராமணனும் செய்ய வேண்டும்.

நித்ய கர்மா என்னும் இரண்டாவது பிராமணக் கடமை, தினம் செய்ய வேண்டிய இருவேளை சந்தியா வந்தனம் ஆகும் (முடிந்தால் மூன்று வேளை) நம் குலத்தின் குருவாகத் திகழும் ரிஷிகளையும் ரிஷி பத்தினிகளையும் வணங்கிப் போற்றும் இந்தக் கடமையின் மூலம்தான் நாம் நலமாய் வாழ்வது சாத்தியம் என்ற நம்பிக்கை.

மூன்றாவது கர்மாவாக முன்நிற்பது நைய்வேத்திய கர்மா. ஒரு குறிப்பிட்ட பலன் வேண்டியும் தாம் மேற்கொள்ளும் செயல் வெற்றிபெறவும் நியமங்களின் மற்றும் கிரமங்களின் அடிப்படையில் யாக, ஹோம பூஜை முறைகள் மூலமாக இறைவனை வணங்கி அருள் பெறுவது நைய்வேத்திய கர்மா ஆகும்.

மேற்சொன்ன மூன்று பிராமணக் கடமைகளும் அரசாணை அல்லது ஆட்சிமுறை சட்டங்களினால் ஏற்பட்டது அல்ல. செய்துதான் ஆக வேண்டும் இல்லையென்றால் நைய்யப் புடைத்துவிடுவோம் என்று வற்புறுத்தி வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் அல்ல. மதக் கட்டுப்பாடு என்ற பெயரில் உதை கொடுத்து உருட்டி, மிரட்டி, உருவான ‘தொப்பி, தாடி’ வகை சார்ந்தது அல்ல. “இது மாதிரி செய்தால் இன்னும் ஏராளம் பணம் தருவோம். எது சொன்னாலும் ஏனென்று கேட்காமல் எங்களில் ஒருவராக இணைந்துகொள்ளுங்கள். என்றென்றும் நீங்கள் வளமாய் வாழும் வழியாகும் அது,” என்றெல்லாம் சொல்லி மனத்தில் ஏற்பட்ட நம்பிக்கைகள் அல்ல பிராமண நம்பிக்கைகள். அன்பின் உணர்வுகளை அறிவுகொண்டு ஆராய்ந்து கண்டெடுத்த சில கருத்துகளின் அடிப்படையில் தொன்று தொட்டுப் பின்பற்றி வரும் இந்த நம்பிக்கைகளில் சிரார்த்தம் பற்றிய சில சிந்தனைகள் நம் சமூக மக்களால் தற்போது எழுப்பப்படத் தொடங்கியுள்ளது.

படித்துப் பட்டம் பெற்றுக் கிடைத்த நல்ல பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிராமணர்களில் பலர் தற்போது ஆத்ம விசாரம் ஆன்மிக விசாரம் மற்றும் பிராமணப் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். நேரில் காணாமல் நீண்ட விவாதங்களின் சாதனமாக விளங்கும் இன்டர்நெட்டில் இடைவிடாது எழுப்பப்படும் இவ்விதக் கருத்துப் பரிமாற்றங்கள் நம் கவனத்தில் உள்ளன.

சிரார்த்தம் பற்றிய அவ்வித சில விவாதங்களில், ‘சிரார்த்தம் செய்வதற்கான சரியான நேரம் எது’, ‘அன்று சமைக்க வேண்டிய சமைக்கக் கூடாத காய்கறிகள் எவை?’ ‘ஹோமத்துடன் தான் கண்டிப்பாகச் சிரார்த்தம் செய்யப்பட வேண்டுமா?’ அவ்விதம் செய்ய ‘இயலாதவர்களும் நேரமில்லாதவர்களும் என்ன செய்வது?’, ‘காசிக்குச் சென்று ஒருமுறை கயா சிரார்த்தம் செய்துவிட்டால் பின்பு வருடா வருடம் வீட்டில் சிரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பது சரியா’ போன்ற செயல்முறை சந்தேகங்களும் நடைமுறை விளக்கங்களும் சார்ந்த பல கேள்விகளும் பதில்களும் காணப்படுகின்றன.

இது இப்படி இருக்க, சிரார்த்தம் செய்வதால் என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது, உயிருடன் இருக்கும்பொழுது ஒத்தாசையாக இல்லாமல் இருந்துவிட்டு, தயிர், பால், காய்கறிகளுடன் தவறாமல் செய்யும் சிரார்த்தம், போனவர்களுக்கு எந்தப் புண்ணியத்தையும் தேடித் தராது என்பது போன்ற சிந்தனைகளில் பொறிந்து தள்ளும் இளைஞர்கள் ஒருபுறம்.

இப்படிப்பட்ட எதிர்மறை புரட்சிக் கருத்துகள் இல்லாவிடினும் இடைப்பட்ட சில பிராமணர்களின் சில சிரார்த்த அனுபவங்கள் வேறுமாதிரி அமைகின்றன. சிரார்த்தம் செய்விக்க வரும் புரோகிதர்களின் அவசரமும் அநியாயம் என்று கருதப்படும் அதிகமான தட்க்ஷணைகளும் விருப்பத்துடன் செய்ய வேண்டிய இந்த பித்ரு காரியத்தை வேண்டா வெறுப்பாகச் செய்யும் தண்டனையாக இவர்கள் உணருகிறார்கள். துக்கம் மேலிட்டுத் துயரமாக இருக்கும் இத் தருணங்களில் சிக்கனமாக இச்செயல்களைச் செய்து முடிக்கும் மனப்பாங்கு உருவாவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடத்தி முடிக்க வேண்டிய ஒரு கடமையாக நினைக்கப்படும் இந்த பித்ரு கர்மாவைப் பற்றி அச்சமயங்களில் எவ்வித ஆராய்ச்சியையும் மேற்கொண்டு முடிவுகள் எட்ட முடியாது.

பித்ரு கர்மா எனப்படும் சிரார்த்தத்தின் மூலப்பொருள் என்ன? இறந்தவர்கள் தங்கள் உடலை நீத்த பின்பு இறந்தவரின் ஆன்மா ஆகாச மண்டலத்தில் அமைதியின்றிச் சுற்றித் திரிகிறது. பதிமூன்று நாட்கள் நாம் செய்யும் பல சடங்குகளின் மூலம்தான் அது வைகுந்தம் சென்று அமைதியாக வசிக்கத் தொடங்குகிறது. விண்ணுலகின் ஒருநாள் என்பது நம்முடைய ஒரு வருடம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடமும் நாம் செய்யும் சிரார்த்தங்களின் மூலம் நம் பித்ருக்களின் ஒவ்வொரு நாள் தேவையும் பூர்த்தியாகின்றன. இறந்தவுடன் செய்யும் கிரியைகளும் ஒவ்வொரு வருடம் பின்பு செய்யும் சிரார்த்தமும் இந்த அடிப்படையின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தருணத்தில் நாம் டிசம்பர் 2005 இதழில் Volume - 2, lssue 10, Sparks பகுதியில் குறிப்பிட்ட சில விஷயங்கள் மீண்டும் நினைவுக்கூரத் தக்கவை.

பூலோகத்தில் ஒரு வைகுந்தம் என்ற தலைப்பில் அவ்விதழில்

“ஜாதோ ஹி த்ருவோ ம்ருத் யு”, “உலகில் பிறந்தவர் இறப்பது நிச்சயம்” என்பது பொதுவான இயற்கை நியதி. மனிதன் பிறந்து, பின் ஒருநாள் மரணம் அடைந்தவுடன் என்ன நிகழ்கிறது என்பது தொன்றுதொட்டு வரும் தொடர் எண்ணங்களாகும். ஒரு பிராமண நம்பிக்கையின் அடிப்படையில் உடலை விட்டுப் பிரிந்த தன் முன்னோர்களின் ஆன்மா உருவமற்று ஆனால் உணர்ச்சி பெற்று நம்மைச் சுற்றி உலவுகிறது.

நாம் செய்யும் பிதுர் காரியங்கள் உண்டென்றால் உண்டு என்றும் இல்லையென்றால் இல்லையென்றும் உருவகப்படுத்தப்படும் சாஸ்திர நம்பிக்கைகள். சகட்டுமேனிக்கு விளக்கம் பெறும் சாதாரண விஷயங்கள் அல்ல. பரிசோதனைச் சாலையில் சோதனைக் குடுவையில் சோதிக்கப்படும் சோடியம் குளோரைடு வகையைச் சார்ந்தது அல்ல. இறந்த தலைவரின் இரும்புச்சிலையை மாலையிட்டு மணிக்கணக்கில் சொற்பொழிவு ஆற்றும் மனிதச் செயல்களை மையம் கொண்டது அல்ல. மகத்தான சமஸ்காரங்கள் மூன்று தலைமுறை முன்னோர்கள்வரை அவர்களது முழுப்பெயர், கோத்திரம்வரை முற்றிலும் கூறப்பட்டு நடத்தப்படும் சாஸ்திரப் பின்னணியை உணர்ந்துகொள்வது கடினம் என்றாலும் முடியாதது அல்ல.

நம்முடன் வாழ்ந்து நமக்காக உழைத்த நல்லவர் இறந்துவிட்டால் நாம் செய்யும் செயல்களைச் சற்று நோக்க வேண்டும். உதிர பாசமும் உடனடித் தொடர்பு ஒன்றும் இல்லாவிட்டாலும் உயிரைவிட்ட உத்தமர் உடலை இரண்டு நாட்கள் அலங்கரித்து அனைவரின் அஞ்சலிக்கு வைத்து அடக்கம் செய்யும் முறைகள் எதற்காக? நம்மை விட்டுப் பிரிந்தவரின் நினைவைப் போற்றவும் அது ஏற்படுத்தும் நீண்ட சோகத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் சில முயற்சிகளே இவை எல்லாம். அல்லும் பகலும் நம் அருகில் இருந்து நம்மை அரவணைத்த பெற்றோர், பெரியோர், உயிரற்று உடலாய்க் கிடக்கும் நிகழ்ச்சி நம்மிடம் உருவாக்கும் அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை. அம்மாதிரிச் சோகச் சூழலில் மனம் நொந்து மதி கலங்கி நாம் அடையும் மயக்கங்கள் வார்த்தையில் அடங்கா வருத்தங்கள். விரும்பியதைச் செய்வதற்கு விதியில்லாத வாழ்வைத் திரும்பிப் பார்த்துத் திகைக்கும் தருணங்களில் தீர்வாக வருவது பணமும் காசும் அல்ல.

"வாழ்ந்த வாழ்க்கை வீழந்ததே என்று வீணாகக் குமையாமல் அவர் வானுலகம் சென்று வைகுந்தம் சேர வழி ஒன்று உள்ளது. இறந்த உடலை எரிப்பது தொடங்கி இனி வரும் நாளில் இவை இவை செய்தால் இறைவனை அடையும் இறந்தவர் ஆன்மா. உபநிஷதங்களில் குறிக்கப்பட்ட உட்கருத்தாகும் இது. உண்மை என்று நம்பி உயர்வடைவாய்" போன்ற சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் நம் சிந்தையில் புகுத்துவதே பிதுர் காரியத்தின் பெருமைமிகு நோக்கமாகும்.

பிராமண நம்பிக்கைகளின் மிகப் பெரியதான ஸ்ரார்த்தம் பற்றிய நம் முந்தைய இதழின் இந்தச் சிந்தனைகள் நாம் சொல்ல வந்த கருத்துகளின் விளக்கமாக அமைந்திருக்கின்றன. நீத்தார் நினைவு எல்லா மதங்களிலும் மற்றும் சாதிகளிலும் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டாலும் பிராமண சிராத்தங்கள் எந்தவித ஒப்பிடும் இல்லாத மிக விசேஷமாகச் சில சமயங்களில் விசித்தரமான ஒரு நீண்ட தொடர் நிகழ்ச்சியாகும். வேண்டும்பொழுது கலந்துகொள்ளவும் விரும்பும்போது விட்டுவிடவும் வசதியுள்ள சடங்குகள் நிறைந்த சம்பிரதாய நம்பிக்கை அல்ல இது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடத்தி முடிக்க வேண்டிய இந்தக் கட்டாயத்தின் கட்டுப்பாடுகள் ஓரளவுக்குத் தளர்ந்து நிற்கின்றன. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இம்மி அளவும் எந்தத் திருமண வழக்கத்தையும் விட்டுவிடாத பிராமணர்கள் முதல் தேடிப்பிடித்து தேர்ந் தெடுத்த ஒருத்தியுடன் ஓடிப்போய் திருமணங்கள் செய்துகொள்ளும் பிராமணர் வரை ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சடங்கினைப் பின்பற்றிதான் வருகிறார்கள். பிராமண நம்பிக்கைகளைப் பழித்தும் இழித்தும் பலவாறு கதைபேசி, பிராமண அடையாளங்களிலிருந்து தன்னை அழித்துக்கொண்டேன் என்று தம்பட்டம் அடித்துத் தடபுடல் செய்தவர்கூட நெருங்கிய சொந்தம் ஒன்று இறப்பின் மூலம் நீங்கிவிட்டால் மனம் நொறுங்கி நொந்து ச்ராத்தச் சடங்குகளின் மூலம்தான் மன அமைதி பெறுவது கண்கூடு.

சுருக்கமாக நம் கருத்துகளைச் சொல்வதானால், ச்ரார்த்த நம்பிக்கைகள் பிராமணர்களின் ஒரு முக்கிய அங்கமாக எப்போதும் அவர்கள் முன் நிற்கும். நிரூபிக்க முடியாத அறிவியல் கோட்பாடாக இந்த நம்பிக்கைகள் நிலைநிறுத்தப்பட்டாலும் மன நிம்மதி வேண்டியாவது அவை தொடரப்படத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. உளவியல் அடிப்படையில் இது உள்வாங்கிக் கொள்ளப்பட்டால் பெரும் உண்மையாகவே சிரார்த்த நம்பிக்கைகள் விளங்கும்.

மாற்றுக் கருத்துகள் உள்ள மகத்தான ஒரு பிரிவு இந்த நம்பிக்கைகளில் உண்டு. ஆதி நாள் முதல் பின்பற்றப்பட்டு வந்த சில அடிப்படைகளை மட்டும் வைத்துக்கொண்டு பாதியிலே வந்த பல விரும்பத்தகாத காலத்திற்கு ஒவ்வாத கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். இறந்துவிட்ட கொடுமை மட்டும் இல்லாது, இருக்கின்ற புரோகிதர்கள் மூலம் எழும் பொருட்செலவு, மனச்சிதைவு போன்ற இன்னல்களும் தொடரும்பொழுது இவ்விதச் சடங்குகளின் மேல் ஏற்படும் வெறுப்பும் எதுவும் செய்ய முடியாத இயலாமையும் தவிப்பும் நம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இயற்றப்படும் சட்டங்கள் மக்களால் பின்பற்றப்படத் தக்கவையாக இருந்தால் மட்டும்தான் சிறப்பாகவும் முழுமையாகவும் அமல்படுத்தப்படமுடியும் என்பது சட்ட இயலின் (Law of Jurisdiction) முதன்மை விதிகளாகும். சமஸ்காரம் என்ற வாழ்க்கை நெறிகளின் கீழ் இயற்றப்படும் பழக்கவழக்கம் என்ற சட்டங்களும், புரோகித வைதீக ஆச்சார நெறிகளும், கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு மதிப்பளித்தும் அமல்படுத்தப்படும் வரைதான் அவை வெற்றிகரமாகத் தொடரப்படும்.

‘நான் சொல்வதுதான் சட்டம் என்ற புரோகிதர்களின் எதேச்சப் போக்கும்’, ‘எல்லாம் என் சவுகரியப்படிதான் நடக்க வேண்டும் என்ற கிரஹஸ்தர்களின் ஆணவமும்’, ‘எது நடந்தாலும் நாம் தலையிட்டு ஆகப்போவதில்லை என்ற பிராமணச் சமூக பெரியவர்கள் மற்றும் வைதீகர்களின் அலட்சியமும்’ ஒரு சிறந்த நோக்கத்திற்காகச் செப்பனிடப்பட்டுச் சிறப்பாகச் செதுக்கிய சிரார்த்தம் என்ற சிற்பத்தைக் ‘காலைக் கட்டிக்கொண்ட கருநாகமாக’, ‘கழற்றி வீசமுடியாத கருஞ் சட்டையாக, விட்டுவிட முடியாத வாழ்க்கை பந்தமாக மாற்றி நம்மீது சுமத்துவது நம் மனதிற்கு உகந்தது அல்ல.

http://www.brahmintoday.org/issues/issues-001/bt0807t_beliefs.php

அபிராமிப் பட்டர் அருளிச் செய்த - அபிராமி அந்தாதி

காப்பு

தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை
ஊரர்தம் பாகத்து உமை மைந்தனே.-உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
கார் அமர் மேனிக் கணபதியே.-நிற்கக் கட்டுரையே

நூல்

1. ஞானமும் நல் வித்தையும் பெற


உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின் கொடி, மென் கடிக் குங்கும தோயம்-என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி, எந்தன் விழுத் துணையே


2. பிரிந்தவர் ஒன்று சேர


துணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபட


அறிந்தேன், எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், நினது திருவடிக்கே,-திருவே.- வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால்,
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே

4. உயர்பதவிகளை அடைய


மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து, சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே.கொன்றை வார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும்,பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே.

5. மனக் கவலை தீர


பொருந்திய முப்புரை, செப்பு உரைசெய்யும் புணர் முலையாள்,
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி, வார் சடையோன்
அருந்திய நஞ்சு அமுது ஆக்கிய அம்பிகை, அம்புயமேல்
திருந்திய சுந்தரி, அந்தரி-பாதம் என் சென்னியதே.

6. மந்திர சித்தி பெற


சென்னியது, உன் பொன் திருவடித் தாமரை. சிந்தையுள்ளே
மன்னியது, உன் திரு மந்திரம்,- சிந்துர வண்ணப் பெண்ணே.-
முன்னியநின் அடியாருடன் கூடி, முறை முறையே
பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே.

7. மலையென வருந் துன்பம் பனியென நீங்க


ததியுறு மத்தின் சுழலும் என் ஆவி, தளர்வு இலது ஓர்
கதியுறுவண்ணம் கருது கண்டாய்-கமலாலயனும்,
மதியுறுவேணி மகிழ்நனும், மாலும், வணங்கி, என்றும்
துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே.

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட


சுந்தரி எந்தை துணைவி, என் பாசத்தொடரை எல்லாம்
வந்து அரி சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
கம் தரி கைத்தலத்தாள்-மலர்த்தாள் என் கருத்தனவே

9. அனைத்தும் வசமாக


கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே

10. மோட்ச சாதனம் பெற


நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை,
என்றும் வணங்குவது உன் மலர்த் தாள்.-எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே. அருளே. உமையே. இமயத்து
அன்றும் பிறந்தவளே. அழியா முத்தி ஆனந்தமே.

11. இல்வாழ்க்கையில் இன்பம் பெற


ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவு உடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான, சரணாரவிந்தம்-தவள நிறக்
கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

12. தியானத்தில் நிலை பெற


கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில், பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து-நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும் பூத்தவளே.

13. வைராக்கிய நிலை எய்த


பூத்தவளே, புவனம் பதினான்கையும். பூத்தவண்ணம்
காத்தவளே. பின் கரந்தவளே. கறைக்கண்டனுக்கு
மூத்தவளே. என்றும்மூவா முகுந்தற்கு இளையவளே.
மாத்தவளே. உன்னை அன்றி மற்று ஓர் தெய்வம் வந்திப்பதே?

14. தலைமை பெற


வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
சிந்திப்பவர், நல்திசைமுகர் நாரணர், சிந்தையுள்ளே
பந்திப்பவர், அழியாப் பரமானந்தர், பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி. நின் தண்ணளியே.

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற


தண்ணளிக்கு என்று, முன்னே பல கோடி தவங்கள் செய்வார்,
மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர் தம்
விண் அளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடும், அன்றோ?-
பண் அளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

16. முக்காலமும் உணரும் திறன் உன்டாக


கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த அம்மே.-
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே.

17. கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய


அதிசயம் ஆன வடிவு உடையாள், அரவிந்தம் எல்லாம்
துதி சய ஆனன சுந்தரவல்லி, துணை இரதி
பதி சயமானது அபசயம் ஆக, முன் பார்த்தவர்தம்
மதி சயம் ஆக அன்றோ, வாம பாகத்தை வவ்வியதே?

18. மரணபயம் நீங்க


வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்து என்னை ஆண்டபொற் பாதமும் ஆகிவந்து-
வெவ்விய காலன் என்மேல் வரும்போது-வெளி நிற்கவே.

19. பேரின்ப நிலையடைய


வெளிநின்ற நின்திருமேனியைப் பார்த்து, என் விழியும் நெஞ்சும்
களிநின்ற வெள்ளம் கரைகண்டது, இல்லை, கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது, என்ன திருவுளமோ?-
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக


உறைகின்ற நின் திருக்கோயில்-நின் கேள்வர் ஒரு பக்கமோ,
அறைகின்ற நான் மறையின் அடியோ முடியோ, அமுதம்
நிறைகின்ற வெண் திங்களோ, கஞ்சமோ, எந்தன் நெஞ்சகமோ,
மறைகின்ற வாரிதியோ?- பூரணாசல மங்கலையே.

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய


மங்கலை, செங்கலசம் முலையாள், மலையாள், வருணச்
சங்கு அலை செங்கைச் சகல கலாமயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள்
பிங்கலை, நீலி, செய்யாள், வெளியாள், பசும் பெண்கொடியே

22. இனிப்பிறவா நெறி அடைய


கொடியே, இளவஞ்சிக் கொம்பே, எனக்கு வம்பே பழுத்த
படியே மறையின் பரிமளமே, பனி மால் இமயப்
பிடியே, பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே.
அடியேன் இறந்து இங்கு இனிப் பிறவாமல் வந்து ஆண்டு கொள்ளே.

23. எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க


கொள்ளேன், மனத்தில் நின் கோலம் அல்லாது, அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன், பரசமயம் விரும்பேன், வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே, உள்ளத்தே விளைந்த
கள்ளே, களிக்குங்களியே, அளிய என் கண்மணியே.

24. நோய்கள் விலக


மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த
அணியே, அணியும் அணிக்கு அழகே, அணுகாதவர்க்குப்
பிணியே, பிணிக்கு மருந்தே, அமரர் பெரு விருந்தே.-
பணியேன், ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்தபின்னே.

25. நினைத்த காரியம் நிறைவேற


பின்னே திரிந்து, உன் அடியாரைப் பேணி, பிறப்பு அறுக்க,
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்,- முதல் மூவருக்கும்
அன்னே. உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே.-
என்னே?-இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே.

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக


ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாளிணைக்கென்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே

27. மனநோய் அகல


உடைத்தனை வஞ்சப் பிறவியை, உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை, பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை, நெஞ்சத்து அழுக்கையெல்லாம் நின் அருட்புனலால்
துடைத்தனை,- சுந்தரி - நின் அருள் ஏதென்று சொல்லுவதே.

28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய


சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழுமவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே

29. எல்லா சித்திகளும் அடைய


சித்தியும் சித்தி தரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும், சக்தி தழைக்கும் சிவமும், தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.

30. விபத்து ஏற்படாமல் இருக்க


அன்றே தடுத்து என்னை ஆண்டுகொண்டாய், கொண்டது அல்ல என்கை
நன்றே உனக்கு? இனி நான் என் செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமோ.-
ஒன்றே, பல உருவே, அருவே, என் உமையவளே.

31. மறுமையில் இன்பம் உண்டாக


உமையும் உமையரு பாகரும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கின்பு செய்யவைத்தார் இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே

32. துர்மரணம் வராமலிருக்க


ஆசைக் கடலில் அகப்பட்டு, அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லற்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக் கமலம் தலைமேல் வலிய வைத்து, ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்?- ஈசர் பாகத்து நேரிழையே.

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

இழைக்கும் வினைவழியே அடும் காலன், எனை நடுங்க

அழைக்கும் பொழுது வந்து, அஞ்சல் என்பாய். அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே.
உழைக்கும் பொழுது, உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க


வந்தே சரணம் புகும் அடியாருக்கு, வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய் இருக்கும்--சதுர்முகமும்,
பைந் தேன் அலங்கல் பரு மணி ஆகமும், பாகமும், பொற்
செந் தேன் மலரும், அலர் கதிர் ஞாயிறும், திங்களுமே

35. திருமணம் நிறைவேற


திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க
எங்கட்கு ஒரு தவம் எய்தியவா, எண் இறந்த விண்ணோர்--
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ?- தரங்கக் கடலுள்
வெங் கண் பணி அணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

36. பழைய வினைகள் வலிமை அழிய


பொருளே, பொருள் முடிக்கும் போகமே, அரும் போகம் செய்யும்
மருளே, மருளில் வரும் தெருளே, என் மனத்து வஞ்சத்து
இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உன்தன்
அருள் ஏது.- அறிகின்றிலேன், அம்புயாதனத்து அம்பிகையே

37. நவமணிகளைப் பெற


கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை விட அரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கே அணியும் திருவுடையானிடம் சேர்பவளே

38. வேண்டியதை வேண்டியவாறு அடைய


பவளக்கொடியில் பழுத்த செவ்வாயும் பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெற


ஆளுமைக்கு உந்தன் அடித்தாமரைகளுண்டு அநத்கன்பால்
மீளுகைக்கு உந்தன் விழியின் கடையுண்டு மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாணுதலே

40. பூர்வ புண்ணியம் பலன்தர


வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே

41. நல்லடியார் நட்புப் பெற


புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக்
கண்ணியம் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணியிங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே

42. உலகினை வசப்படுத்த


இடங்கொண்டு விம்மி இணைகொண்டு இறுகி இளகிமுத்து
வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை
நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே

43. தீமைகள் ஒழிய


பரிபுரச்சீறடிப் பாசங்குசை பஞ்சபாணியின் சொல்
திருபுரசுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில்
புரிபுரவஞ்சரை அஞ்சங்குனி பொருப்புச் சிலைக்கை
எரிபுரைமேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே

44. பிரிவுணர்ச்சி அகல


தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்
அவளே அவர்தமக்கு அன்னையும் ஆயினன் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன் இனியரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே

45. உலகோர் பழியிலிருந்து விடுபட


தொண்டு செய்யாது நின்பாதந்தொழாது துணிந்திச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசடியேன்
கண்டு செய்தால் அது கை தவமோ அன்றிச் செய்தவேமா
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றேபின் வெறுக்கையன்றே

46. நல்நடத்தையோடு வாழ


வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம்மடியாரைமிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சையுண்ட
கறுக்குந் திருமிடற்றாள் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்குந் தகைமைகள் செய்யினும் யான் உன்னை வாழ்த்துவனே

47. யோக நிலை அடைய


வாழும் படியன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும் படியன்று விள்ளும் படியன்று வேலைநிலம்
ஏழும் பருவரை யெட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே

48. உடல்பற்று நீங்க


சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்பொது இருப்பார் பின்னும் எய்துவரோ
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரும்பையிலே

49. மரணத்துன்பம் இல்லாதிருக்க


குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட
வரம்பை அடுத்து மருகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்த அஞ்சல் என்பாய்
நரம்பை அடுத்த இசை வடிவாய் நின்ற நாயகியே

50. அம்பிகையை நேரில் காண


நாயகி நான்முகி நாராயணி கை நளினபஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதிநச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கியென்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே

51. மோகம் நீங்க


அரணம் பொருளென்று அருள் ஒன்றிலாத அகரர்தங்கள்
முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும் முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன்னடியார்
மரணம் பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

52. பெருஞ் செல்வம் அடைய


வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலைஆரம் பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

53. பொய்யணர்வு நீங்க


சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய செய்யட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சிமொய்த்த
கன்னங்கரிய குழலுங்கண் மூன்றுங் கருத்தில் வைத்துத்
தன்னந் தனியிருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே

54. கடன் தீர


இல்லாமை சொல்லி ஒருவர் தம் பாற் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்த நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே

55. மோன நிலை எய்த


மின் ஆயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்ற(து)
அன்னாள் அகமகிழ் ஆனந்தவல்லி அருமறைக்கு
முன்னாய் நடுவெங்குவமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழீயினும் உன்னினும் வேண்டுவ தொன்றில்லையே

56. யாவரும் வசமாக


ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகெங்குமாய்
நின்றாள் அனைத்தையும் நீங்கி நிற்பாள் என்றன் நெஞ்சின் உள்ளே
பொன்றாது நின்ற புரிகின்றவா இப்பொருளறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே

57. வறுமை ஒழிய


ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம் செயும் உன்னையும் போற்றி ஒருவர் தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே

58. மன அமைதி பெற


அருணாம் புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயமுலைத் தையல் நல்லாள் தகைசேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்
சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர


தஞ்சம் பிறிதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சு அம்பும் இக்கு அலராக நின்றாய் அரியாரெனினும்
பஞ்சு அஞ்சு மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே

60. மெய்யுணர்வு பெற


பாலினுஞ் சொல் இனியாய் பனிமாமலர்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்க நின்றோன் கொன்றை வார் சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சால நன்றோ அடியேன் முடை நாய்த்தலையே

61. மாயையை வெல்ல


நாயேனையும் இங்கொரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலை மகளே செங்கண்மால் திருத்தங்கச்சியே

62. எத்தகைய அச்சமும் அகல


தங்கச் சிலைகொண்டு தானவர் முப்புரம் சாய்த்து மத
வெங்கண் கரியுரி போர்த்த செஞ்சேவகன் மெய் அடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி கோகனகச்
செங்கை கரும்பும் மலரும் எப்போதும் என் சிந்தையதே

63. அறிவு தெளிவோடு இருக்க


தேறும்படி சில ஏதுவும் காட்டி முன்செல்கதிக்குக்
கூறும் பொருள் குன்றில் கொட்டும் தறிகுறிக்கும் சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயமுண்டென்று கொண்டாடிய வீணருக்கே

64. பக்தி பெருக


வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு
பூணேன் உனக்கு அன்பு பூண்டு கொண்டேன் நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன் ஒரு பொழுதும் திருமேனிப்ரகாசமன்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் சுகனமும்

65. ஆண்மகப்பேறு அடைய


ககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இரு மூன்று எனத்தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோ வல்லி நீ செய்த வல்லபமே

66. கவிஞராக


வல்லபம் ஒன்றறியேன் சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்றொன்றிலேன் பசும்பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் வினையேன் தொடுத்த
சொல் அவமாயினும் நின்திரு நாமங்கள் தோத்திரமே

67. பகைவர்கள் அழிய


தோத்திரம் செய்து தொழுது மின்போலும் நின்தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை குலம்
கோத்திரம் கல்வி குணம் குன்றி நாறும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலா நிற்பர் பாரெங்குமே

68. நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக


பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர்விசும்பும்
ஊரும் உருகு சுவையளி ஊறொளி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாருந் தவம் உடையார் படையாத தனம் இல்லையே

69. சகல சௌபாக்கியங்களும் அடைய


தனம் தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவம் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே

70. நுண்கலைகளில் சித்தி பெற


கண்களிக்குமூபடி கண்டு கொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே

71. மனக்குறைகள் தீர


அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள் பனிமாமதியின்
குழவித் திருமடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல் உனக்கு என்குறையே

72. பிறவிப்பிணி தீர


என்குறை தீரநின்று ஏத்துகின்றேன் இனியான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார்குறை காண் இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்
தன்குறை தீர எங்கோன் சடைமேல் வைத்த தாமரையே

73. குழந்தைப்பேறு உண்டாக


தாமம் கடம்பு படைபஞ்சபாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம் திருவடிச் செங்கைகள் நான்கு ஒளி செம்மை அம்மை
நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே

74. தொழிலில் மேன்மை அடைய


நயனங்கள் மூன்றுடை நாதனும் வேதமும் நாரணனும்
அயனும் பரவும் அபிராம வல்லி அடியிணையைப்
பயன் என்று கொண்டவர் பாவையர் ஆடவர் பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே

75. விதியை வெல்ல


தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வழவாப் பிறவியை மால்வரையும்
பொங்குவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

76. தனக்கு உரிமையானதைப் பெற


குறித்தேன் மனத்தில் நின் கோலமெல்லாம் நின்குறிப்பறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப்பிரான் ஒரு கூற்றை மெய்யில்
பறித்தேன் குடிபுகு தும்பஞ்பாண பயிரவியே

77. பகை அச்சம் நீங்க


பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிருங்கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகியென்றே
செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே

78. சகல செல்வங்களையும் அடைய


செப்பு ம்கனக கலசமும் போலுந் திருமுலைமேல்
அப்பும் களப அபிராமவல்லி அணிதரளக்
கொப்பும் வயிரக் குழையும் விழியின் கொழுங்கடையும்
துப்பும் நிலவும் எழுதி வைத்தேன் என் துணை விழிக்கே

79. கட்டுகளில் இருந்து விடுபட


விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே

80. பெற்ற மகிழ்ச்சி நிலைத்திட


கூட்டியவா என்னைத் தன்னடி யாரில் கொடியவினை
ஒட்டியவா என்கண் ஒடியவா தன்னை உள்ள வண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டி நடமாடகத் தாமரை ஆரணங்கே

81. நன்னடத்தை உண்டாக


அணங்கே அணங்குகள் நின்பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிறேன் நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன் எனது என்றிருப்பார் சிலர் யாவரோடும்
பிணங்கேன் அறிவு ஒன்றிலேன் என்கண் நீ வைத்த பேரளியே

82. மன ஒருமைப்பாடு அடைய


அளியார் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின்
ஒளியாக நின்ற ஒளிர்திருமேனியை உள்ளுதொறும்
களியாகி அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே

83. ஏவலர் பலர் உண்டாக


விரவும் புதுமலர் இட்டு நின்பாத விரைக் கமலம்
இரவும் பகலும் இறைஞ்சவல்லார் இமையோர் எவரும்
பரவும் பதமும் அயிராவதமும் பகீரதியும்
உரவும் குலிசமும் கற்பகக்காவும் உடையவரே

84. சங்கடங்கள் தீர


உடையாளை ஒல்குசெம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சடையாளைத் தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இங்கு என்னையினிப்
படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே

85. துன்பங்கள் நீங்க


பார்க்கும் திசைதொறும் பாசாங்குசமும் பனிச்சிறைவண்டு
ஆர்க்கும் புதுமலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம்
தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும் சிற்றிடையும்
வார்க்குங்கும முலையும் முலைமேல் முத்து மாலையுமே

86. ஆயுத பயம் நீங்க


மால் அயன் தேட மறைதேட வானவர் தேடநின்ற
காலையும் சூடகக் கைகையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெங்காலன் என்மேல் விடும்போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே

87. செயற்கரிய செய்து புகழ்பெற


மொழிக்கும் நினைவுக்கும் எட்டாது நின்திருமூர்த்தி என்றன்
விழிக்கும் வினைக்கும் வெளிநின்றதால் விழியால் மதனை
அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை அண்டமெல்லாம்
பழிக்கும் படி ஒரு பாகங் கொண்டாளும் பராபரையே

88. எப்போதும் அம்பிகை அருள்பெற


பரமென்று உனை யடைந்தேன் தமியேனும் உன் பத்தருக்குள்
தரமன்று இவனென்று தள்ளத் தகாது தரியலர்தம்
புரமென்று எரியப் பொருப்புவில் வாங்கிய போதில் அயன்
சிரமொன்று செற்றகையான் இடப்பாகம் சிறந்தவளே

89. யோக சித்தி பெற


சிறக்கும் கமலத் திருவே நின் சேவடி சென்னிவைக்கத்
துறக்கம் தரும் நின் துணைவரும் நீயும் துரியமற்ற
உறக்கந்தர வந்து உடம்போடு உயிர்உறவு அற்று அறிவு
மறக்கும் பொழுது என் முன்னே வரல் வேண்டும் வருந்தியுமே

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்க


வருந்தா வகையென் மனத்தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்குப்
பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண்மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெற


மெல்லிய நுண்ணிடை மின்னனையாளை விரிசடையோன்
புல்லிய மென்முலைப் பொன் அனையாளைப் புகழ்ந்து மறை
சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பகடு ஊரும் பதம் தருமே

92. மன நிலை பக்குவமடைய


பதத்தே உருகிநின் பாதத்திலே மனம்பற்றி உன்றன்
இதத்தே ஒழுக அடிமை கொண்டாய் இனியான் ஒருவர்
மதத்தே மதிமயங்கேன் அவர்போன வழியும் செல்லேன்
முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே

93. உள்ளத்தில் ஒளியுண்டாக


நகையே இஃதிந்த ஞாலமெல்லாம் பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ் முலைமானே முதுகண் முடிவில் அந்த
வகையே பிறவியும் வம்பே மலைமகள் என்பது நாம்
மிகையே இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே

94. மனநிலை தூய்மையாக


விரும்பித்தொழும் அடியார் விழி நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பி ஆனந்தமாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடுமாறி முன் சொன்ன எல்லாம்
தரும்பித்தர் ஆவரென்றால் அபிராமி சமயம் நன்றே

95. மன உறுதி பெற


நன்றே வருகினும் தீதே விளைகினும் நானறிவது
ஒன்றேயுமில்லை உனக்கேபரம் எனக்கு உள்ள எல்லாம்
அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாதகுணக்
குன்றே அருட்கடலே இமவான் பெற்ற கோமளமே

96. எங்கும் பெருமை பெற


கோமளவல்லியை அல்லியந் தாமரைக் கோயில் வைகும்
யாமள வல்லியை ஏதமிலாளை எழுதரிய
சாமள மேனிச் சகல கலாமயில் தன்னைத் தம்மால்
ஆமளவும் தொழுவர் எழுபாருக்கும் ஆதிபரே

97. புகழும் அறமும் வளர


ஆதித்தன் அம்புலி அங்கி, குபேரன் அமரர்தங்கோன்
போதிப் பிரமன் புராரி முராரி பொதிய முனி
காதிப் பொருபடைக் கந்தன் கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே

98. வஞ்சகர் செயல்களிலிருந்து பாதுகாப்பு பெற


தைவந்து நின்னடித் தாரை சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த ஆறுங் கரந்த தெங்கே
மெய்வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகல் அறியா மடப் பூங்குயிலே

99. அருள் உணர்வு வளர


குயிலாய் இருக்கும் கடம்பா அடவியிடைக் கோலவியன்
மயிலாய் இருக்கும் இமயாசலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம்
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனங்குழையே

100. அம்பிகையை மனத்தில் காண


குழையைத் தழுவிய கொன்றையற் தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண் நகையும்
உழையைப் பொருகண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே

நூற் பயன்


ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசங்குசமும் கருப்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத், தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே.