Tuesday, October 19, 2010

சகோ. தினகரனின் “டூமில்” திட்டம்

சகோ. தினகரனின் “டூமில்” திட்டம் சகோ. தினகரனின் தற்போதைய “டூமில்” திட்டம் தங்க சாவியும் கிருபாசனமும். அது பற்றிய ஒரு விளக்கமான கட்டுரை:-

images (5)

http://drpethuru.blogspot.com/2007/05/blog-post.html

சுமார் 3 லட்சம் ரூபாய் காருண்யா விடுதி கட்டக் கொடுப்பவர்களுக்கு இந்த தங்கசாவி அன்பளிப்பாக கொடுக்கப்படும். இது சாதாரண தங்கசாவி அல்ல. இந்த தங்க சாவியை உங்கள் ஸ்தாபனத்தில் அல்லது கடையில் மாட்டினால் இந்த சாவி பரலோகத்தில் உள்ள பணபொக்கிஷப் பெட்டியை திறந்து அதிலிருந்து பொக்கிஷத்தை எடுத்து உங்கள் வியாபாரத்தில் பணமாக கொட்டுமாம். அடுத்தது கிருபாசன தங்கப்பெட்டி இது காருண்யா வளாகத்தில் உள்ள பெதஸ்தாகுள மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இரவு காவல் காக்கும் வாட்ச்மேன் (Watch Man) கண்ட சொப்பனத்தில் இறங்கியதாக கூறப்பட்ட சகோ.தினகரனின் பழைய கதையில் நட்சத்திரம் விழுந்ததாக கூறப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட பெதஸ்தாகுளமும், மண்டபமும், கேள்விப் பட்டிருப்பீர்கள். அந்த பெதஸ்தாவின் மண்டபத்தில்தான் கிருபாசன பெட்டி வைக்கப்பட்டுள்ளது. தங்கச்சாவியை 3லட்சம் கொடுத்து வாங்கியவர் தன் தாஸ்தாவேஜ்களின் காப்பி, அல்லது பத்திரங்கள் அல்லது வியாபார சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை இந்த பெட்டிக்குள் வைக்கவேண்டும். ஒருநாள் இவர்களின் தெய்வமான Mr.அருள்நாதர் அவர்கள் இந்த கிருபாசன பெட்டியில் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் ஆவணங்களை பார்ப்பாராம். அவர் பார்வை விழுந்தவுடன் அந்த தாஸ்தாவேஜ்களையும், ஆவணங்களையும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம் போலும்!. அதன்பின் இவர்கள் வியாபாரம் பன்மடங்கு செழிக்கும். அந்த கிருபாசனத்தில் எழுதி வைத்த ஜெபக் குறிப்புகளின்படி சகலமும் கிடைக்கும். இந்த வியாபார தந்திரம் எப்படி?. இப்படி ஒரு ஏமாற்றுத் திட்டம்

images (4)

அமெரிக்க ஊழியர்களுக்குக் கூட உதிக்கவில்லை. இப்படிப்பட்ட திட்டம் MBA மூளையிலிருந்து வந்ததா? இல்லை பேங்க் வேலை அனுபவத்தின் மூளையிலிருந்து உதித்தா? தெரியவில்லை!. என்றாலும் கர்த்தர் சொன்னார் என்ற பாதுகாப்பு போர்வை இவர்களுக்கு உண்டு. அப்படிக் கூறிவிட்டால் யாரும் கேள்வி கேட்க முடியாது என்பது இவர்களின் தைரியம். சாதாரண மக்கள் இங்கு காணப்படும் படத்தில் உள்ள அந்த தங்கசாவியையும், கிருபாசனப் பெட்டியையும் உங்கள் கண்களால் மட்டும் பார்த்து திருப்திபட்டுக் கொள்ளுங்கள். 3லட்சம், 6லட்சம் என்று பெரும் தொகை கொடுத்து உங்களால் அந்த தங்கசாவியை வாங்கமுடியாது. இந்த ஏமாற்று திட்டத்தில் முதல்முதல் விழுந்தவர் ஒரு மலையாளி என்பது வெட்கப்படக் கூடிய காரியம். பொதுவாக கேரளாவில் படித்தவர்கள் பெரும்பான்மையாக இருக்கிற மாநிலம் என்ற நல்ல பெயர் உண்டு. எளிதில் பண விஷயத்தில் மலையாளிகள் ஏமார்ந்து போகமாட்டார்கள். அதனால்தான் சபரி மலை தீபம் கடவுளால் காட்டப்படுவதல்ல என்று கேரளா சட்ட சபையில் அன்றைய முதல் மந்திரி திரு.நாயனார் அவர்கள் தன் பங்குக்கு உண்மையை தெளிவாக கூறிவிட்டார். அது மனிதர்களால் காட்டப்படும் ஜோதி என்பது கேரளா மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால்தான் சபரி மலைக்கு மலையாளிகளைவிட நம் தமிழ் நாட்டு மக்களும், ஆந்திரா மக்களும் பெருவாரியாக சென்று ஏமாந்து திரும்புகிறார்கள். அப்படியிருக்க இந்த தங்கசாவி விஷயத்தில் மட்டும் முதலில் ஏமாந்தது ஒரு மலையாளி ஆவார். இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களை என்ன செய்வது? பிசாசு இவர்கள் கண்களை குருடாக்கிப் போட்டான் என்று வேத வசனம் கூறுகிறதை போல இவருடைய கண்களையும், சிந்திக்கும் தன்மையையும் குருடாக்கி போட்டானோ? முன்பு எழுதியதைப் போல தங்கசாவி வாங்கியதாலும் கிருபாசன பெட்டியில் தாஸ்தாவேஜ்களை இட்டதாலும் கர்த்தர் என் தாஸ்தாவேஜ்களைக் கண்டார். அதனால் நான் புது மில் வாங்கினேன். புது நிலம் வாங்கினேன், மேலும் இரண்டு புதிய தொழில்கள் தொடங்கினேன் என்று புகைப்படத்துடன் சாட்சிகள் இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையிலும், T.Vயிலும் வரபோகும் நாட்களில் காண்பீர்கள்.

images

ஏமாந்து போகவேண்டாம். சகோ.தினகரன் பணவிசயத்தில் விழுந்துபோக காரணம் பல வருடகாலங்களாக சகோ.தினகரனும், மகன் பால்தினகரனும் தமிழ் நாட்டில் மிகப்பெரிய அற்புத ஊழியர்களாக எழும்பி பிரகசித்துக் கொண்டிருக்கிறார்கள். சகோ.தினகரனின் ஆரம்ப ஊழியம் மிகச் சிறப்பானது. தேவன் ஒரு வித்தியாசமான அதே சமயம் எல்லாரையும் கவரக் கூடியதும் எல்லா வகை மக்களுக்கும், ஊழியர்களுக்கும், புற ஜாதி மக்களுக்கும் பிரயோஜனமாக அமையக் கூடிய, மிக வித்தியசமான பிரசங்க தாலந்தை கர்த்தர் அவருக்கு அளித்தார்.

images (3)

வரங்களும் கிரியை செய்ய ஆரம்பித்தது. அதிலேயே நின்றிருந்தால் உலகிலேயே முன்மாதிரியுள்ள மிகச் சிறந்த ஊழியராக சகோ.தினகரன் விளங்கியிருப்பார். பண ஆசை வளர்ந்தது: பிள்ளைகளின் பிற்கால வாழ்க்கைக்கான காரியங்களை சிந்திக்க தொடங்கினார். ஊழியம் செய்து கொண்டே மகன் பால்தினகரன் அவர்களை MBA படிக்கவைத்தார். தன்மனதில் உள்ள திட்டத்தை யாரும் அறியாது சில காலம் மறைத்து வைத்து வெளிப்பட்டதுதான் காருண்யா பல்கலைக் கழகமாக வெளிவந்தது. ஏழைக்களுக்காகவே கல்லூரி ஆரம்பிப்பதாக வெளியரங்கமாகவே பொய்ப் பிரசாரம் செய்தார். மக்கள் ஏமாந்தார்கள். ஆனால் எல்லாரும் ஏமாறவில்லை. ஆகவே இவர் எதிர்ப்பார்த்த பெரும் பணத்தொகை வந்து சேரவில்லை. பேங்க் மூலம் கடன் வாங்க முயன்றார். தமிழ்நாட்டில் எந்த பேங்கும் அத்தனை பெரும்தொகையை கொடுக்க முன்வரவில்லை. முடிவாக கர்நாடகாவில் உள்ள மங்களுர் என்ற ஊரிலுள்ள தலைமை பேங்க் அதிக வட்டிக்கு பெரும்தொகையை கடனாக வழங்க முன் வந்தது. அந்த பணத்தை நேரில் சென்று வாங்க பயணம் செய்யும்போதுதான் கார் விபத்தில் தன் ஒரே மகளை இழந்தார். பணம் கிடைத்தது. ஆனால் வட்டி கட்டமுடியவில்லை. எதிர்பார்த்த வழிகளில் எல்லாம் பணம் பெற முடியாததால் வட்டி அடைக்க இயலவில்லை. இப்போதுதான் பணம்பெற புதுப் புது பெரும் திட்டங்களை கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் அறிவிக்க தொடங்கினார். அதில் ஒன்றுதான் இளம்பங்காளர் திட்டம். அதை தொடர்ந்து திருமணத்திட்டம் போன்ற ஏராளமான திட்டங்களும், டி.வி கிளப் மூலமும் பணம் குவிய தொடங்கியது. எஸ்தர் ஜெபக்குழு மூலமும் பணம் வந்து சேர்ந்தது. கல்லூரிக்காக, பணத்துக்காக, மகனுக்காக கல்லூரியை மேன்மைப்படுத்த எதைசெய்யவும் துணிந்தார். அதில் ஒன்றுதான் காஞ்சி சங்கராச்சாரியாரை இந்து ஆலயத்துக்குள்ளே சென்று தொழுது, பூஜைசாமான்களை அவருக்கு பரிசாக அளித்தார். மந்திரியின் ஒருகையெழுத்து பெற சங்காரச்சாரியின் சிபாரிசு தேவையாக இருந்தது. அந்த சிபாரிசு பெற அவர் கையாண்ட வழிகள் பல ஆகும். கர்த்தரின் மனம் நோக செய்யும் பல செயல்களில் துணிந்து சகோ.தினகரனும், பால்தினகரனும் இறங்கினார். கிறிஸ்தவ உலகம் திகைத்து நின்றது. என்றாலும் இப்படிப்பட்ட தவறான செயலையும் நம்புதவற்கு கிறிஸ்தவர்களில் ஒரு கூட்டம் உண்டே. இந்த சூழ்நிலையில்தான் இந்தியாவில் ஆட்சி மாறியது புது மந்திரிகள் வந்தார்கள். ஒரு வழியாக சுயநிதி கல்லூரியாகவும் பல்கலைக் கழகமாகவும் காருண்யா கல்லூரி உயர்வு பெற்றது. உயர்வு பெறப்பெற தவறுகளும் பண ஆசையும் கூடவே பெருக ஆரம்பித்தது. பல கோடி ரூபாய்கள் கொடுத்து சென்னையில் மிகப் பெரிய வியாபார பல மாடி கட்டிடங்களையும், வேறு பல இடங்களில் பல பெரிய கட்டிடங்களை விலைக்கு வாங்கினார்கள். வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் பல புதிய கவர்ச்சித் திட்டங்கள் மூலம் கல்லூரிக்கு பணம் கிடைக்க வழி உண்டாக்கினார்கள். அந்த முறையில் பணம் பெரும் ஏமாற்று வழியாக சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் தங்கசாவி – கிருபாசன பெட்டி திட்டமும் ஆகும். இதில் பெரும்பணம் வைத்திருக்கும் முதலாளிகளை மனதில் கொண்டு, அப்படிப்பட்ட பணக்காரர்களை கவரும் வண்ணம், அதே கர்த்தரின் பெயரில் திட்டங்களை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டப்படி மிக நல்ல சிறந்த கர்த்தருடைய ஊழியனாகத்தான் தன் ஊழியத்தை சகோ.தினகரன் ஆரம்பித்தார். சகோ.தினகரன் பண விஷயத்தில் மிக உண்மையுள்ள வராக இருந்தார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் கூறுகிறேன். செங்கோட்டையில் இயேசு அழைக்கிறார் கூட்டம் 1974ம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. AOG சபைதலைவர் பாஸ்டர்.ஜெயராஜ், சகோ.சாமுவேல் கணேசன் அவர்கள் பெறுப்பெடுத்து பொது மைதானத்தில் அந்தக் கூட்டத்தை நடத்தினார்கள். 3வது நாள் சகோ.சாமுவேல் கணேசன் ஆகியவர்கள் காணிக்கை வரவு மிக குறைவாக இருப்பதால் மைக்செட்காரனுக்குக்கூட வாடகைப் பணம் கொடுக்கமுடியாமல் போகும் நிலை உள்ளது. ஆகவே, காணிக்கை பாட்டுக்கு முன் சகோ.தினகரனை கூட்ட செலவுக்கு பணத்தேவை அதிகமாக இருக்கிறது. ஆகவே காணிக்கையை தாராளமாக போட்டு உதவுங்கள் என்று ஒரு வார்த்தை அவரை அறிவிக்க சொல்லுங்கள் என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். பாஸ்டர்.ஜெயராஜ் அவர்களும் கூறினார். ஆனால் எனக்குத் தெரியும் சகோ.தினகரன் அன்றைய நாட்களில் தன்னுடைய எந்த ஊழியத்துக்கும், தன் பத்திரிக்கையிலோ, கூட்டங்களிலோ ஒரு வார்த்தையும் பணம் தேவை என்று அறிவித்ததில்லை. அறிவிக்கமாட்டார் என்றாலும் சகோ.சாமுவேல் கணேசன் அவர்களின் நிர்பந்தத்தால் தயங்கித் தயங்கி சகோ.தினகரனிடம் பண விவரத்தை கூறினேன். அப்போது அவர் மிகவும் சோர்ந்து போனார். உங்களுக்கே தெரியும் நான் என் ஊழியத்தில் எதற்கும் இதுவரை பணம் கேட்டதில்லை என்று அப்படியிருக்க என்னை வற்புறுத்த வேண்டாம் என்றார். மேலும் நாம் இதுவரை பல்வேறு நகரங்களில் நடத்தின கூட்டங்களில் செய்த செலவுக்குமேல் அதிகமாகத்தான் காணிக்கை பணம் சேர்ந்துள்ளது. கூட்டம் நடத்தியவர் யாரும் கடன்காரர்களாக்க நம் கர்த்தர் அனுமதித்ததில்லை. அப்படிப்பட்ட அனுபவத்தில் நம் ஊழியம் நடந்து கொண்டு இருக்கும்போது நான் எப்படி பணம் போதவில்லை என்று ஜனங்களிடம் கேட்பேன் என்றார். அன்று சனிக்கிழமை பகலிலேயே பேங்க் சென்று தன்னுடைய சொந்தப் பணத்தை எடுத்து பாடல் குழுவினர், ஊழியம் செய்ய வந்தவர் அனைவருக்கும் பணம் கொடுத்து செட்டில் செய்துவிடும்படி என்னிடம் பணத்தை ஒப்படைத்தார். இந்த கூட்ட காணிக்கையிலிருந்து ஒரு காசும் நமக்கு வேண்டாம் என்று திட்டமாகவும் கோபத்துடனும் கூறி அப்படியே செயல்பட்டார். அன்று காணிக்கைக்கு வந்த ஒரு கோழி முட்டையை நான் ஏலத்தில் விட்டபோது ஒரே ஒரு முட்டையை 740 ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தார்கள். அந்த அளவு யாரிடமும் பணம் கேட்காமல் ஊழியம் நடத்தி எல்லாருக்கும் மாதிரியாக இருந்த தினகரனா? பண விஷயத்தில் இத்தனை மோசமாக விழுந்துபோனார்! சில வருடங்களாக நடந்த கூட்டங்களில் பிரசங்க நேரத்தைவிட பண விஷயத்தை பற்றி பேசும் நேரம்தான் மிக அதிகமாக இருந்தது. அதே நிலை இப்போதும் இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் காணப்படுவதை குறித்து மக்கள் பரவலாக பேசுகிறார்கள். அதுவும் தகப்பன்.தினகரனும், மகன்.பால்தினகரனும் இளம்பங்காளர் போன்ற பொய் திட்டங்களுக்கு ஒவ்வொரு கூட்ட ஆரம்பத்திலும் பணம் கேட்பது பலர் தங்கள் முகம் சுளிக்க காரணமானது. பண விஷயத்தில் இப்படி முன்மாதிரியாக இருந்த சகோ.தினகரன் இன்று பண ஆசையில் விழுந்து தேவனையும் விட்டுப் பிரிந்து கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் பல பொய்யான திட்டங்களை வெளியிட்டு கோடிக்கோடியாக பணத்தைப் பெற்று பலமாடி கட்டிடங்களை வாங்கிக் குவித்துக் கொண்டு இருக்கிறார். பண ஆசை எல்லா தீமைக்கும் வேராக இருக்கிறது என்று பவுல் கூறுகிறார். இதோ தங்கச்சாவியும், கிருபாசன பெட்டியுமே அதற்கு சான்றாகும். இந்த பண ஆசை சகோ.தினகரனையும், பால்தினகரனையும் எப்படியெல்லாம் துணிக்கரப் பொய்களை பேச வைத்துள்ளதை தொடர்ந்து படித்து அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் பெயரில் பொய் சகோ.தினகரன் அவர்கள் இப்படி பணத்துக்காக கொஞ்சம் கொஞ்சமாக வசனத்தை விட்டு விலகிப் போவதை எங்களில் சிலர் கண்ணால் கண்டு கலங்கி நின்றோம். அவருக்கும் தெரியாமல் நண்பர்கள் 3 பேராக நாங்கள் இணைந்து அழுது ஜெபித்தோம். ஆனால் சகோ.தினகரனின் இருதயமோ மேலும் கடினமானது. மகளின் அகால மரணம் மூலம் கர்த்தர் பேசி பார்த்தார். மகளின் இழப்பு அவருக்குள் கர்த்தரின்மேல் வெறுப்பைத்தான் கூட்டின. அதனால் மனம் கடினமானது. தன் மனம் கடினப்பட்டதையும் தேவன்மேல் தான் வெருப்புற்றதையும் சொந்த குடும்பத்தினர் போலும் அறியவில்லை. காரணம், அவரின் ஜெப வாழ்க்கை, வேத வாசிப்பு யாவும் வழக்கம்போலக் காணப்பட்டது. பிரசங்கத்திலும் மன உருக்க பிரசங்கம் வழக்கம்போல் காணப்பட்டது. ஆனால் அவரின் இருதயமோ கர்த்தரை விட்டு வெகு தூரம் விலகி விலகி போய்க் கொண்டேயிருக்கிறது. தான் பேசும் பொய்யான தீர்க்கதரிசன வழியை தன் மகனுக்கும் கற்றுக் கொடுத்தார். எத்தனையோ வருடங்கள் வசனத்தில் மிக தெளிவாக இருந்த தன் மனைவியான திருமதி.ஸ்டெல்லா தினகரன் அவர்களைகூட தன் தவறான வழிக்கு சகோ.தினகரன் திருப்பிவிட்டார். மருமகளின் நிலையும் அப்படியே. இதன் உச்சக்கட்டமாக பேரன், பேத்திகளைகூட சிறு வயதிலேயே பொய்யான தீர்க்கதரிசனம் கூறவும், பொது இடங்களில் ஜெபிக்கவும் பழக்கி அவர்கள் மூலமாக சுகமளிக்கவும், பரிசுத்த ஆவியின் நிரப்புதலும் கிடைப்பதாக அறிவித்தார்கள். 3வயது பிள்ளையைக்கொண்டு கர்த்தர் அற்புதங்களை நடப்பிப்பதாகக் கூறி பேரப் பிள்ளைகளையும்கூட தகப்பனும் மகனும் ஊக்கப் படுத்திவிட்டார்கள். இதன் ஆபத்தை உணர்ந்துதான் இதைத் துணிந்து செய்கிறார்களோ! அல்லது தெரியாமல் செய்கிறார்களோ! என்று பெரிய ஊழியர்கள் கூட பெரிதும் மனம் உடைந்து பேசியதை கேட்டேன். இப்போது நான் கூறப்போவதை நீங்கள் யாரும் நம்பவே முடியாது. கிறிஸ்தவர்களும், புறமதத்தினர்களும்கூட நம்பமாட்டார்கள். ஆனால் இதை நம்பித்தான் ஆகவேண்டும் என்று நடந்த உண்மையை நான் கூறுகிறேன். சகோ.தினகரன் அவர்கள் வேதவசனத்தை புரட்டி பரலோகத்தில் மரித்த ஆவிகளுடன் பேசுகிறார். ஆனால் அவைகள் மரித்த ஆவிகள் அல்ல பிசாசுகள். பரலோகத்திற்கு சுற்றுலா (டூர்) போல அடிக்கடி போய் வந்து கொண்டிருக்கிறதாக அறிவிக்கிறார். சகோ.தினகரனின் மிகப்பெரிய வேத விபரீதம் அதாவது சகோ.தினகரனுக்கு பிறந்த முதல்மகன் குழந்தை பருவத்திலேயே பிறந்த உடனேயே இறந்துபோனது. இப்போது அந்தக் குழந்தையை காண சகோ.தினகரன் அடிக்கடி பரலோகம் போகிறாராம். அதைக் குறித்து விவரிக்கும்போது இப்போது அந்த குழந்தை பரலோகத்தில் சாப்பிட்டு வளர்ந்து நல்ல வாட்டசாட்டமான வாலிபனாக, பால் தினகரனைவிட உயரமாக வளர்ந்துவிட்டான். அந்த நிலையில் மரித்த அந்த மகனை காணுவதன் மூலம் அவன் மரித்தான் என்ற வேதனையை என்னை விட்டு நீங்கச் செய்ய, கர்த்தர் என்னை ஆறுதல் படுத்த, அவனை எனக்கு கர்த்தர் அடிக்கடி காட்டுகிறார். கொஞ்ச நேரம் அவனோடு பேசிவிட்டு பிறகு பூலோகத்துக்கு திரும்புவேன். அந்த அனுபவம் எத்தனை பரவசம் இப்படி பேசி பகிர்ந்து கொண்டதைக் கேட்ட ஆவிக்குரிய சிலர் மிகவும் மன வேதனையுடன் சகோ.தினகரன் இப்படி மாறுவார். இந்த அளவு வசனத்தை விட்டு விலகுவார் என்று நாங்கள் யாரும் நினைக்கவேயில்லை! என்று கண் கலங்க கூறினார்கள். வாசகர்களே! என்ன நினைக்கிறீர்கள்? நிலைமை மிக மோசமாகிக் கொண்டே போகிறது இல்லையா? தங்கசாவி, கிருபாசனப் பெட்டி, இவற்றொடு செத்துப்போன மகள் வீட்டுக்குவந்து தன்னோடு சொன்னால்தான் ஊழியத்துக்குப் புறப்படுவது, செத்துப்போன மகள் செய்யும் அற்புதங்கள். செத்துப்போன முதல் குழந்தை வளர்ந்து வாலிபனாக பரலோகத்தில் காணப்படுவது அவனோடு இவர் பேசிவிருவது இப்படிப்பட்ட விஷயங்களை எங்காவது கேட்டதுண்டா? வேத வசனத்தில் எந்த மூலையிலாவது இப்படிப்பட்ட விஷயங்களை யாராவது காணமுடியுமா? சகோ.தினகரனும், பால்தினகரனும், இவர்களை சார்ந்த இயேசு அழைக்கிறார் ஸ்தாபனமும் செத்த ஆவிகளை தேடிப் போகிறது. பழைய ஏற்பாட்டு கால கிருபாசனத்தை புதிதாக அறிமுகப்படுத்துவது இவைகளை எந்த கிறிஸ்தவர்கள் நம்புகிறார்களோ அவர்கள் நிலைமை மிக மோசமாகும். கிறிஸ்தவ உலகில் உள்ள ஒரு பெரும் கூட்டத்தை வசனத்தைவிட்டு விலக்கி அழைத்துக்கொண்டு போக இயேசு அழைக்கிறார் குடும்பம் புறப்பட்டுவிட்டது. இன்னும் என்னென்ன சம்பங்களை, விபரீதங்களை கேள்விப்படபோகிறமோ! “நாங்கள் கண்டவைகளையும், கேட்டவைகளையும் பேசாமலிருக்க கூடாதே” – அப் 4:20 ( நன்றி: ஜாமக்காரன்

http://devapriyaji.wordpress.com/category/d-g-s-

No comments:

Post a Comment