Tuesday, January 18, 2011

சபரிமலை விபத்து - தேவை விவேகம்


இடுக்கி/திருவனந்தபுரம்,ஜன.14: சபரிமலைக்கு அருகில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் 104 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்,50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பியவர்கள் இந்த விபத்தில் சிக்கினர். விபத்தில் இறந்தவர்கள், காயம் அடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.



இடுக்கி மாவட்டத்தில்:
கேரளத்தில் இடுக்கி மாவட்டத்தில் புல்லுமலை என்ற இடத்தில் சபரிமலைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவில் உப்புப்பாறை என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது. இந்த இடம் தமிழக எல்லையை ஒட்டியது. வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடந்தே தமிழ்நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். யாத்ரிகர்களை ஏற்றிக்கொண்டு குறுகலான அந்தப் பாதையில் வந்த ஒரு ஜீப் திடீரென நின்றுவிட்டதாம். அதை மீண்டும் ஸ்டார்ட் செய்தபோது நிலை தடுமாறி பக்தர்கள் கூட்டத்தில் பாய்ந்து கட்டுப்பாடு இல்லாமல் ஓடி பிறகு பள்ளத்தில் விழுந்ததாம். ஒதுங்க இடம் இல்லாமல் பக்தர்கள் இருட்டில் ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு அதிகம் பேர் உயிரிழக்க நேர்ந்தது என்று தெரிகிறது.

ஆம்புலன்ஸ்கள் போக முடியவில்லை: மிகவும் குறுகலான பாதை என்பதால் ஆம்புலன்ஸ்களோ வேன்களோ செல்ல முடியவில்லை. இதனால் மீட்புப் பணியை உடனே தொடங்க முடியவில்லை. 70 சடலங்கள் மீட்கப்பட்டன. விபத்து நடந்த இடத்தில் தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. செல்போன்களும் ஓலிபரப்பு கோபுரம் இல்லாததால் செயலிழந்தன. விபத்து நடந்த இடத்துக்கு அருகில் உள்ள தீயணைப்பு நிலையத்திலிருந்தும் மருத்துவக் கல்லூரியிலிருந்தும் மீட்பு, உதவிக் குழுவினர் விரைந்தனர். கோட்டயம் மருத்துவக் குழுவினரும் உதவிக்கு விரைந்தனர். காயம் அடைந்தவர்கள் பீர்மேடு, கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வண்டிப்பெரியாறு போலீஸார் சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிச் சென்ற ஜீப் விபத்தில் சிக்கியதாக ஒரு தகவலும், பயணிகளுடன் சென்ற பஸ் விபத்தில் சிக்கியதாக மற்றொரு தகவலும் தெரிவிக்கிறது. நெரிசலில் இறந்ததாக ஒரு வட்டாரமும், வாகனம் ஏறியதால் நசுங்கி இறந்ததாக மற்றொரு வட்டாரமும் தெரிவிக்கிறது.

சோகம் கப்பியது:
பொங்கல் விழாவில் பங்கேற்க வீடு திரும்பிக் கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள்தான் பெரும்பாலும் இறந்தனர் என்று தெரிகிறது. கேரளத்திலும் தமிழகத்திலும் இந்த விபத்து குறித்த செய்தி பரவியதும் சோகம் கப்பியது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் சம்பவ இடத்துக்கு விரைந்தார். உடன் மாநில அமைச்சர்கள் முகாமிட்டுள்ளனர். கேரள அரசு சார்பில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. பலியான 102 பேரில் 29 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை தேனி மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்துக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் உதவி அனுப்ப உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உதவிப் பணிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தமிழக அரசின் சார்பில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரண உதவியும் வழங்கப் படும் என்று அறிவித்தார்.

www.dinamani.com

No comments:

Post a Comment