Tuesday, April 5, 2011

கருணாநிதியும் சர்க்காரியா கமிஷனும்


முரசொலி மாறனின் தலையீடு - கருணாநிதி - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

30-03-2011

தி.மு.க. அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வழக்குப் போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் அரசிடம் பணிந்ததும் அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெயெல்லாம் 1969-ம் ஆண்டிலேயே கருணாநிதி நடத்தியிருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வர்கீஸ் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகும் அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் பிரிவின் ஆணையராகவும் பணியாற்றி வந்தார்.

அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிராட்வே டைம்ஸ் என்ற நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை அடுத்து வர்கீஸ், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் தனது மகன் கார் இறக்குமதி செய்ததில் சரியான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால் அந்தப் பத்திரிகை மீது அரசு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் மீது இந்தப் பத்திரிகை இப்படியொரு செய்தியை வெளியிடுவதற்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று உண்டு என்றார் வர்கீஸ். அது என்னவெனில், இந்த பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் உரிமையாளர் மேத்யூ செரியன் தி.மு.க. கட்சியினருக்குத் தெரிந்தவர்தான். அதிலும் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். முரசொலி மாறன் தேர்தலில் நிற்கும் காலங்களில் அவரது பிரச்சார உபயோகத்திற்காக தனது கம்பெனி கார்களை வழங்கி உதவிடும் அளவுக்கு நண்பர்தான் மேத்யூ செரியன்.

ஆனால் வர்கீஸ் மீது இந்த செரியனுக்கு என்ன கோபம் எனில், பிராட்வே டைம்ஸ் பத்திரிகையை அச்சிடும் நிறுவனம் தாம்ஸன் அண்ட் சன்ஸ். இதுவும் செரியனுக்குச் சொந்தமானதுதான். இந்த அச்சகத்தில் சில காலங்கள் தமிழக அரசின் பாட நூல் வெளியீட்டுக் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் தாம்ஸன் நிறுவனம் செய்த குளறுபடியால் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதமும், முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. இதனால் அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த வர்கீஸ், இந்த தாம்ஸன் அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கான பாட நூல் அச்சிடும் கான்டிராக்ட்டை ரத்து செய்துவிட்டு இந்நிறுவனத்தையும் கறுப்புப் பட்டியலில் வைத்துவிட்டார். இதனால் லம்பமாக அரசிடம் இருந்து வரும் பணத்தினை இழந்துவிட்டார் செரியன். இந்தக் கோபத்தில்தான் இப்படியொரு அபாண்டமான புகாரை செரியன் தன் மீது எழுப்பியிருப்பதாக வர்கீஸ், அரசிடம் கடிதம் மூலம் புகார் கூறினார்.

இந்தக் கடிதம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டது. செரியன் மீதும், அந்தப் பத்திரிகை மீதும் வழக்குத் தொடர கருணாநிதியால் உடனுக்குடன் அனுமதியும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு செரியனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவப் போகிறது என்று அப்போது வர்கீஸுக்குத் தெரியவில்லை.

வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றம் பிராட்வே டைம்ஸ் பத்திரிகைக்கு சம்மன் அனுப்பிய பின்புதான், இந்த விஷயத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

அந்தப் பத்திரிகையின் அதிபரை முதலமைச்சரான கருணாநிதியின் செயலாளர் தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி ஆசிரியரின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனையேற்று செரியனும் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வர்கீஸ் மற்றும் அவரது மகன் பற்றி ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் “பிராட்வே டைம்ஸ் பத்திரிகை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிகைக்கும், முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதாலும் எங்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்..” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதத்தைப் படித்த கருணாநிதி அக்கடிதத்திலேயே “அரசுத் தரப்பு வழக்கை வாபஸ் பெறலாம்” என்று எழுதி உத்தரவிடுகிறார்.

ஆனால் பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் அதிபரான செரியன் எழுதிய அக்கடிதத்தில் மன்னிப்புக் கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக, தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.

மேலும் பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசுத் தரப்பில் விரிவாக நடந்த ஆலோசனை.. சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை என்று எதுவுமே வாபஸ் பெறும்போது பின்பற்றப்படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது முதல் மாங்காய் என்றால் இரண்டாவது மாங்காயாக, அதே வேகத்திலேயே, அந்நிறுவனம் பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அச்சிடும் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் கறுப்புப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. இந்த நீக்கத்திற்கு அடிப்படையாகக் கருதப்பட்டது மேத்யூ செரியனின் அக்கடிதம்தான்.

இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்புக் காட்டினார் என்ற கேள்வி எழும். இங்கேதான் முரசொலி மாறன் வருகிறார்.

“மாறன்தான் அரசு இந்த வழக்கை வாபஸ் பெற்று, கறுப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி தன்னிடம் வலியுறுத்தினார்..” என்பதை கருணாநிதியே சர்க்காரியா கமிஷனில் அளித்த தனது வாக்குமூலத்தில் ஒத்துக் கொண்டார்.

இவ்வாறு மாறன் கருணாநிதிக்கு நெருக்கடி கொடு்த்தது வெறும் நட்பினால்தானா என்றால் இல்லை. பிராட்வே டைம்ஸ் நிறுவனம் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய கார்களை இலவசமாக வழங்கி உதவி செய்திருக்கிறது என்பதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தனியார் நிறுவனம் அரசின் கான்ட்ராக்டைப் பெற்று பாட நூல் தயாரிக்கும்போது முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது.

அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்து அவ்வாறே அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கிறார்.

அந்த அதிகாரியைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்தப் பத்திரிகை அவரைப் பற்றிய அவதூறான செய்தியை வெளியிடுகிறது. அப்பத்திரிகை மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப்படுகிறது.

வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரின் மருமகனான முரசொலி மாறன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவுகிறார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடும் நீதிபதி சர்க்காரியா, “இவ்வழக்கில் வரக் கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத்தனமாக ஒதுக்கிவிட்டுச் செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைத் தர மறுக்கவும், மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கருணாநிதி, செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் : 31-03-2011

http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_31.html

No comments:

Post a Comment