Tuesday, April 5, 2011

சோனியா சேலை அணிந்துள்ள கருணாநிதி


07-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய பேச்சின் சுருக்கம் இது. மிக எளிமையாக, புரியும்விதத்தில் சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்..!

குருமூர்த்தியின் பேச்சு :

ஸ்பெக்ட்ரமுக்கும், வெளிநாட்டுப் பணத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆகையால் இரண்டையும் இணைத்துத்தான் பேசியாக வேண்டும். முதலில் இந்தப் பிரச்சினை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தலைதூக்கியது. ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றிய ஒரு கற்பனைகூட அந்த நேரத்தில் இல்லை.

ஸ்விஸ் வங்கிகளின் அசோஸியேஷன் வெப்சைட்டில் இது பற்றி பார்த்தபோது, 1.4 ட்ரில்லியன் டாலர் - கிட்டத்தட்ட 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு வங்கிகளில் நமது நாட்டுப் பணம் முடங்கியுள்ளது தெரிய வந்தது. அதைத் திரும்ப இங்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி எடுத்தபோது, காங்கிரஸை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாட்டு வங்கிகளில் இதுபோல பணம் எல்லாம் கிடையவே கிடையாது. இது பூச்சாண்டி காட்டும் வேலை..” என்று கூறி முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்த்தார்.

தற்போது குளோபல் பைனான்ஸியல் இன்ட்டெக்ரெட்டி என்ற சுயசார்பு நிறுவனம், இந்திய நாட்டின் பணம் 21 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று புள்ளி விவரங்களுடன் கடந்த டிசம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகத்தில் உள்ள பல நாடுகளில் இந்தக் கறுப்புப் பணத்தைக் கொண்டு போய் வைப்பதற்கு, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத பனாமா போன்ற சில நாடுகள் இருக்கின்றன.

அங்கெல்லாம் யார் இந்தப் பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முறை கடந்த 50, 60 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. இது சில நாடுகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அது அமெரிக்கப் பொருளாதாரமாகவும் இருக்கலாம். பிரான்ஸ் நாட்டு பொருளாதாரமாகவும் இருக்கலாம். எல்லா நாடுகளின் பொருளாதார அமைப்புகளையும் இந்தப் பதுக்கல் பாதிப்பதால், இந்த நாடுகள் இதில் தீவிர கவனம் எடுத்துக் கொண்டு, அப்படி பதுக்கப்பட்ட பணத்தை எப்படியாவது திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது சில பேர், மனசாட்சியின் உந்துதல் காரணமாக, இப்படி பதுக்கப்பட்ட பணத்தைப் பற்றித் துப்புக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியொருவர், லெக்ஸ்டன்ஸ்டைன் பேங்க் என்ற அமைப்பில் யார், யார் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறார். நம் நாட்டைச் சேர்ந்த 250 பேர் அங்கு பணம் வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மன் நாட்டின் நிதியமைச்சர் இது பற்றிக் கூறி, “இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை யார் எங்களிடம் கேட்டாலும் கொடுப்போம்” என்று சொன்னார். ஆனால் அவர் அப்படிச் சொன்ன பிறகும், இந்தப் பட்டியலைத் தாருங்கள் என்று நம் நாட்டிலிருந்து கேட்கவே இல்லை.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உலகத்தில் பல நாடுகள் இந்த விவரங்களைக் கேட்கின்றன. ஆனால், கொடுக்கிறோம் என்று அவர்களே சொன்ன பிறகும், எங்களுக்கு அந்தப் பட்டியலைக் கொடுங்கள் என்று கடிதம் எழுதக் கூட இந்த அரசுக்கு நாதி இல்லையே என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் எழுதின.

பிறகு அரைகுறை மனதுடன் எங்களுக்கு அதைக் கொடுங்கள் என்று கேட்டார்கள். எப்படி கேட்டார்கள் என்றால், நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வருமான வரி தொடர்பான ஒப்பந்தத்தில் ஒரு ரகசிய ஷரத்து இருக்கிறது. அவர்கள் கொடுக்கிற எந்த விவரத்தையும் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வெளிப்படையாகத் தருகிறோம் என்று கூறியதை, “நீங்கள் ரகசியமாகக் கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி அந்த 250 பேர்களைப் பற்றிய விவரங்களை இந்த அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது.

அவர்கள் யார், யார் என்று நமக்குத் தெரியாது. அந்த 250 நபர்களின் பெயர்களில் இருக்கும் பணத்திற்கு அரசு வரி போடுகிறதா.. அதை இங்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறதா என்பதைப் பற்றி இன்றுவரை ஒரு விவரமும் இல்லை.

பூனாவைச் சேர்ந்த ஹசன் அலி என்பவர் வெளிநாட்டில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து இங்கே அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருக்கு வருடத்திற்கு மிஞ்சிப் போனால், இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் லாபம் வரலாம். இவருடைய இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி அவருடைய கணக்குகளை ஆராய்ந்தபோது, அவருக்கு வெளிநாட்டில் 1,50,000 கோடி ரூபாய் இருப்பதாக பல தாஸ்தாவேஜூகள் கிடைத்தன. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தவுடன், ஆளும் கட்சிப் புள்ளிகள் பலருடைய விவரங்கள் இத்துடன் தொடர்புடையவர்களாக இருந்ததால், இது அப்படியே மறைக்கப்பட்டது. அவருடைய பெயரில் 76000 கோடி ரூபாய் வரி போடப்பட்டு அந்த வரித் தொகை அரசுக்குக் கிடைக்க வேண்டியது என்று டிமாண்ட் தயார் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பெயரில் இருந்த 1,50,000 கோடி ரூபாய் நம் நாட்டுக்குத் திரும்ப வருமா? வரி மூலமாக வருமா என்ற விவரங்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

1991 நவம்பர் 11-ல் அதாவது ராஜீவ்காந்தி மறைந்து சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்விஸ் இல்லஸ்ட்டிரியேட் என்ற பத்திரிகையில் வளர்ந்து வரும் நாடுகளின் 16 தலைவர்களின் படங்களைப் பிரசுரித்து, அவர்கள் எல்லாம் அந்த நாடுகளில் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சப் பணத்தை இங்கே கொண்டு வந்து பதுக்கியிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தது.

அந்தத் தலைவர்களின் வரிசையில் ராஜீவ்காந்தியின் படத்தையும் பிரசுரித்திருந்ததோடு, 2.2 பில்லியன் டாலர் இவருடைய கணக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அப்போது வெளியிட்டிருந்தது.

1998-ல் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் ஏ.ஜி.நூரானி இது பற்றி முதன்முதலாக எழுதினார். அதன் பிறகு சுப்பிரமண்யம் சுவாமியும் வெப்சைட்டில் அந்தப் பத்திரிகையின் பக்கங்களை அப்படியே பிரசுரித்து அவர் இதற்கு ஒரு லிங்க்கும் கொடுத்தார். ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் தாஸ்தாவேஜூகளை வெளியே கொண்டு வந்த டாக்டர் ஆல்பர்ட்ஸ் என்ற ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட், “ராஜீவ்காந்தி எப்படி கே.ஜி.பி.யிடம் இருந்து ரகசியமாகப் பணம் பெற்றார்..? ரஷ்யாவுடன் வியாபார சம்பந்தத்தின் மூலம் எப்படி ராஜீவ்காந்தியின் குடும்பத்துக்கு ஏராளமான பணம் கிடைத்தது என்பதையும் வெளியிட்டிருந்தார். அந்தப் பணம் அங்கு வங்கியில் இருக்கிறது என்று சுப்பிரமணியம் சுவாமி 2002-ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார்.

2009-ல் நான் இது பற்றியெல்லாம் கோர்வையாக எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இதையெல்லாம் தொகுத்து கோர்வையாக எழுதியிருந்தது. இந்தப் பின்னணியில் இந்த விவரங்கள் எல்லாம் தவறு என்றோ, இவை எல்லாம் அவதூறு என்றோ எனக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டது என்றோ, ஒரு அவதூறு வழக்கைத் தொடர்வதற்கு சோனியாகாந்திக்கு இன்றுவரை தைரியமில்லை.

காங்கிரஸ் கட்சியிலும் யாரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. சோனியா காந்தியும் எதுவும் கூறவில்லை. மூடி மறைக்க முயற்சி மட்டுமே நடக்கிறது. இப்போது இந்தச் சூழ்நிலையில் அதாவது அந்த 250 பேர் அடங்கிய பட்டியலில் ஆளும் கட்சியோடு சம்பந்தப்பட்ட புள்ளிகளின் பெயர்கள் உள்ளன. ஹசன் அலியின் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் பின்னணியிலும், ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் இருக்கிறார்கள். 2.2. பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கப் பங்கு பத்திரத்தில் போட்டு வைத்திருந்தால், இன்றைக்கு அது 9 பில்லியன் டாலராக விசுவரூபம் எடுத்திருக்கும். அந்தப் பணமும் இப்போது வெளிநாட்டில் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் எந்த அதிகாரி அல்லது எந்த மந்திரி, எந்த பிரதம மந்திரி இந்தப் பணத்தையெல்லாம் திரும்ப நம் நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய முடியும்..? சோ கூறியது போல, யார் பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்கள் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் பதவியில் இருந்து விலக்கப்பட்டால்தான், அந்தப் பணம் நம் நாட்டுக்குத் திரும்ப வர முடியும்.

இன்னொன்று வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 21 லட்சம் கோடி ரூபாயில் நான்கில் ஒரு பங்குத் தொகை இங்கு திரும்ப கொண்டு வரப்பட்டாலே நம் நாட்டின் வளர்ச்சி 14 முதல் 15 சதவிகிதம்வரை உயரும். நம் நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கும். நம் நாட்டுக்கு இப்போதே பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடு தேவையில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது.

நன்றி : துக்ளக்

No comments:

Post a Comment