Sunday, March 4, 2012

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - நடந்தது என்ன..? மிக எளிமையான விளக்கம்..!

உண்மையாக இந்தக் கட்டுரைதான் எனது தளத்தில் ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒரு அறிமுகம் என்னும் தலைப்பில் முதலில் வெளிவந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு எழுதுவதற்கு எனக்கு அறிவு போதாததால் கிடைத்தத் தகவல்களை மட்டும் வைத்து சிலவற்றையும், பல எடுத்துக்காட்டுக் கட்டுரைகளையும் தொகுத்து அளித்திருந்தேன்.

இந்தக் கட்டுரையை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியான திரு.என்.முருகன் அவர்கள், துக்ளக் இதழில் கடந்த டிசம்பர் மாதம் எழுதியிருக்கிறார். இப்போதுதான் படிக்க முடிந்தது.. படித்தவுடன் நிச்சயமாக இதனை எனது தளத்தில் பதிவு செய்தாக வேண்டும் என்கிற வெறியும் ஏற்பட்டுவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மிக எளிமையாக, மிகச் சுருக்கமாக அழகாகத் தொகுத்தளித்திருக்கிறார்..! முழுவதையும் படித்துப் பாருங்கள். இதுவரையில் நீங்கள் அறிந்திருந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றிய சந்தேகங்கள் உங்களுக்குள் இல்லாமல் போகலாம்..!

இனி முருகன் ஸார் எழுதியிருப்பது :

நம் நாட்டில் தொலைபேசிகள் லேண்ட்லைன் எனப்படும் கம்பிகளின் மூலம் வீடுகளிலும், அலுவலகங்களிலும் 1994 வரை இயங்கி வநதது சரித்திரம். அதன் பின், முதல் முறையாக பிற நாடுகளில் ஏற்பட்ட விஞ்ஞான முன்னேற்றத்தின் புதிய கண்டுபிடிப்புகளினால் ஒயர்லெஸ் எனப்படும் கம்பியில்லா டெலிபோன்களையும், கைப்பேசி எனப்படும் செல்போன்களையும் உருவாக்கக் கொள்கை முடிவு செய்யப்பட்டது.


இதே காலக்கட்டத்தில்தான், பொருளாதார தாராளமயக் கொள்கையும், பெரிய அளவில் அமலுக்கு வந்தது. இதனால், அதுவரை மத்திய அரசின் ஏக போகத்தில் இருந்த டெலிபோன் தொழிலில் தனியார் கம்பெனிகளையும் அரசு ஈடுபடுத்தியது.

ஒயர்லெஸ் செல்போன்கள் இயங்க, ஸ்பெக்ட்ரம் என்ற அலைக்கதிர்கள் அவசியம். அதாவது வானவெளியில், இயற்கையிலேயே ரேடியோ ஃப்ரீக்வன்ஸி ஸ்பெக்ட்ரம் என்னும் அலைவரிசை உள்ளது. இது உலகெங்கிலும் வியாபித்திருப்பதால், இதை உபயோகித்து ஒயர்லெஸ் கருவிகள் மூலம் செல்போன்களை இயக்கலாம். இதைப் பன்னாட்டு டெலிபோன்கள் சங்கம் என்ற அமைப்பு எந்த நாட்டிற்கு எந்த அளவு அலைக்கதிர்கள் என்று நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யும்.

நம் நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் அலைவரிசை 9 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 400 கிலோ ஹெர்ட்ஸ்வரை.

ஒரு நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட அலைவரிசையில் மற்ற நாடு இயங்கக் கூடாது. காரணம், ஒன்றையொன்று பாதித்து மொத்த உபயோகமும் தடைப்பட்டுவிடும். இது போன்ற அலைக்கதிர்களை பெரும்பாலும் இந்திய ராணுவம் பழைய காலங்களில் தங்கள் தொலைத் தொடர்புக்கு ஒயர்லெஸ் கருவிகள் மூலம் பயன்படுத்தி வந்தது. பின்னர் அவை தனியார் மற்றும் அரசு தொலைபேசி கம்பெனிகளின் செல்போன் உபயோகத்திற்கு ஒதுக்கிவிடப்பட்டன. இவற்றைத் தனியார் கம்பெனிகளுக்கு விடுவதில் 2001-ம் ஆண்டு குறிப்பிட்ட ஒரு முறை பின்பற்றப்பட்டது. அதன்படி ஒரு குறிப்பிட்ட தொகை, அலைவரிசை லைசென்ஸ் தொகையாக வசூலிக்கப்பட்டது.

அந்த ஆண்டு முதல் தனியார் கம்பெனிகள் செல்போன்களை அறிமுகம் செய்தன. யாருமே எதிர்பாராதவகையில் செல்போன்களின் உபயோகம் நம் நாட்டில் அதிகரித்தது. இதில் உலகிலேயே நம் நாடு இரண்டாவது இடமென்றும், சைனாவுக்கு அடுத்து உலகிலேயே அதிக செல்போன்கள் உள்ள நாடு இந்தியா என்றும் ஒரு சர்வே கூறுகிறது.

2001-ம் ஆண்டு முதலில் இரண்டு வகையான ஒயர்லெஸ் அலைக்கதிர்கள், சி.எம்.டி.ஏ. மற்றும் ஜி.எஸ்.எம். அமல்படுத்தப்பட்டன. பெரிய கம்பெனிகள் சில சி.எம்.டி.ஏ. சர்வீஸைவிட ஜி.எஸ்.எம். வளர்ச்சியே சிறந்தது என்ற கணக்குடன் தங்களுக்கும் புதிய ஜி.எஸ்.எம். லைசென்ஸ்கள் வேண்டும் என்ற வகையில் காய் நகர்த்தின.

இதேவேளையில், இரண்டு விஷயங்கள் உருவாகின. ஒன்று செல்போன்களின் உபயோகம் மிகவும் அதிகமானது. மேலும் எஸ்.எம்.எஸ். என்ற செய்திக் குறிப்புகள் போக, புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற புதிய அம்சங்கள் விஞ்ஞான வளர்ச்சியினால் உருவாயின. இது போன்ற சேவைகளுக்கு அலைக்கதிர்களின் அடுத்தத் தலைமுறை, இரண்டாம் ஜெனரேஷன் எனப்படும் 2-ஜி திட்டமிடப்பட்டது.

இந்த 2-ஜி அலைக்கதிர் ஒதுக்கீடு வருவதைத் தெரிந்து கொண்டு ஏற்கெனவே டெலிபோன் வியாபாரத்தில் இங்கு இயங்கி வரும் இந்தியக் கம்பெனிகளும், வெளிநாட்டுக் கம்பெனிகள் சிலவும், டெலிபோன் வியாபாரத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லாத பல கம்பெனிகளும் தீவிரமாகக் களத்தில் இறங்கி, லைசென்ஸ் பெற முயற்சித்தன.

பல கோடி ரூபாய்கள் கை மாறி, பல விதிமீறல்களின் மூலம், சிலர் லைசென்ஸ் பெறுகின்றனர். இதில் நடைபெற்ற முறைகேடுகளில் முதன்மையானது 2001-ம் ஆண்டு விதிக்கப்பட்ட லைசென்ஸ் கட்டணத்தையே 2008-ம் ஆண்டிலும் வசூலித்ததுதான்.

2001-ம் ஆண்டு நம் நாட்டில் டெலிபோன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 40 லட்சமாக இருந்தது. 2008-ம் ஆண்டு அது 35 கோடி சந்தாதாரர்களாக உயர்ந்தது. எனவே 2001-ம் ஆண்டு ஒரு செல்போன் கம்பெனியின் வியாபார வருமானம் எவ்வளவு இருந்திருக்க முடியுமோ அது சுமார் 88 மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால் 2001-ம் ஆண்டு விதித்த லைசென்ஸ் கட்டணத்தைத்தான் நான் வசூலித்தேன் என்று அத்துறையின் அமைச்சர் கூறுகிறார்.

அது எவ்வளவு தூரம் தனியார் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தந்தது என்பதைக் கணக்கிட்டுள்ளது தணிக்கைத் துறையின் அறிக்கை. ஸ்வான் என்ற கம்பெனி இதற்கு முன் டெலிபோன் துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி. அமைச்சரின் உதவியுடன் 13 சரகங்களுக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வெற்ரிகரமாகப் பெற்ற கம்பெனி இது. ஒதுக்கீடு லைசென்ஸ் பெற்று சேவையை தொடங்கும் முன்னரேயே தனது பங்குகளில் 50 சதவிகிதத்தை ரூ.3597.50 கோடிக்கு விற்றுவிட்டது இந்தக் கம்பெனி. அதன்படி பார்த்தால் இக்கம்பெனியின் மொத்த மதிப்பீடு ரூபாய் 7195 கோடி.

இந்த மதிப்பீட்டைக் கூர்ந்து நோக்கினால், இந்தக் கம்பெனியிடம் செல்போன் சேவையை வழங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் எதுவும் கிடையாது என்பது தெரியும். அதாவது எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான செல்போன் டவர்கள், மற்ற பல கருவிகள் வாங்க இது போன்ற ஒரு கம்பெனிக்கு 25000 கோடி முதல் 35000 கோடி வரை தேவைப்படலாம்..

இதில் எதையும் செய்யாமல், இக்கம்பெனிகளின் மதிப்பீடு ரூபாய் 7195 கோடி என்றால், அந்த முழுத் தொகையும் இந்தக் கம்பெனி பெற்ற 2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரைசியின் மதிப்பீடுதான். அந்த மதிப்பீட்டிற்கு இந்தக் கம்பெனி அரசுக்குச் செலுத்திய லைசெனஸ் கட்டணம் ரூபாய் 1651 கோடி மட்டுமே..!

இதைப் போலவே யுனிடெக் என்ற கம்பெனி, ரூ.6120 கோடி மதிப்பீடுள்ள 2-ஜி அலைவரிசைகளை 1651 கோடி செலுத்திப் பெற்றுள்ளது. இந்த வகையில் 2008-ம் ஆண்டில் மத்திய தொலைத் தொடர்புத் துறை 122 லைசென்ஸ்களை வழங்கியுள்ளது என்றால், அவற்றால் அரசிற்கு ஏற்பட்டுள்ள மொத்த இழப்பை நாம் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்..!

மேலும் இந்த 122 லைசென்ஸ்களில் 85 லைசென்ஸ்கள் தகுதியில்லாத கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. பல கம்பெனிகள் தவறான தகவல்களை அளித்திருந்தும், அவற்றை வேண்டுமென்றே, சரியானபடி ஆய்வு செய்து நிராகரிக்காமல், லஞ்ச ஊழல் காரணமாகவே லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுபோக, லைசென்ஸ் வழங்க தவறான ஒரு அணுகுமுறையும் கையாளப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதிவரை மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு 575 விண்ணப்பங்கள் வந்தன. அமைச்சரின் தலைமையில் அதிகாரிகள்கூட, 2007-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதிவரையிலும் பெற்றப்பட்ட விண்ணப்பங்கள்தான் பரிசீலிக்கப்படும் என்று கூறிவிட்டனர். அதன்படி 232 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த விண்ணப்பங்களின் குறைபாடுகளை எல்லாம் சரியாக ஆராயமல் ஒரே நாளில் 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10-ம் தேதி 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இந்தக் கம்பெனிகள் இவ்வாறு லைசென்ஸ்களைப் பெறுவதற்குத் தேவையான தொகையை அன்றைய தினமே செலுத்த வேண்டும் என்ற பத்திரிகைச் செய்தியை மதியம் 2.45 மணிக்குத்தான் மத்திய தொலைத் தொடர்புத் துறை வெளியிடுகிறது. ஆனால் செலுத்த வேண்டிய கடைசி நேரம் மதியம் 3.30 மணி. அதாவது வெறும் 45 நிமிடங்களில்..!

நமது கிராமங்களில், கிராம அதிகாரிகளிடமோ அல்லது பஞ்சாயத்து அலுவலகத்திலோ வரி செலுத்தும்போதுகூட, இது போன்ற கோமாளித்தனமான அறிவிப்புகள் வருவதில்லை. அகில இந்திய அளவிலும் வேறு பல நாடுகளிலும் உள்ள பல டெலிபோன் கம்பெனிகளுக்கு லைசென்ஸ் வழங்கியதைக் கூர்ந்து நோக்கும்போது, ஸ்பெக்ட்ரம் அலைக்கதிர் ஒதுக்கீட்டு நடைமுறையில் இது போன்ற கோமாளித்தனங்கள் நடந்திருப்பதைக் கண்டு எல்லோரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதைவிடவும் கேலிக்குரியது. சில கம்பெனிகள் அன்றைய தினத்தில்(10.-01-2008) 45 நிமிடங்களில் சரியான தொகைக்கு பேங்க் டிராப்ட்டை தொலைத் தொடர்புத் துறைக்கு கொடுத்துள்ளன. இந்த டிராப்ட்டுகள் ஏற்கெனவே பல தொடர்களுக்கு முன்னரே எடுக்கப்பட்டிருந்ததாம்..! ொரு கம்பெனியின் டிராப்ட் மும்பை வங்கி ஒன்றில் எடுக்கப்பட்டிருந்ததாம்.

ஆக, என்ன மாதிரியான அறிவிப்புகள் வரும் என்பதை இவர்கள் முன்கூட்டியே தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. அதாவது, சரியான சிபாரிசுடன் கவனிக்க வேண்டியவர்களைக் கவனித்தால், நடைமுறைகள் எப்படியிருக்கும். என்ன செய்ய வேண்டும் என்பதை முன்னரே தெரிவித்து விடுவார்கள் என்பது ஊழல் நடவடிக்கையி்ன அடிப்படை.

லைசென்ஸ் வழங்குவதில் முதலில் வருபவர்களுக்கு முதலில் உரிமை என்ற நடைமுறை என்றால் - பர்ஸ்ட் கம் பர்ஸ்ட் சர்வ்ட் - விண்ணப்பங்களை தபாலில் பெறப்படும்போது அவற்றை ரிஜிஸ்தரில் வரிசையாக எழுதி, வரிசையாக டோக்கன் எண்ணிட்டு அதன்படி வரிசைக்கிரமமாக பரிசீலனை செய்யப்படும்.

இதுவரையிலும் மத்திய அரசின் அனைத்துத் துறைகளிலும் நடைமுறையில் இருக்கும் பழக்கம் இதுதான். லைசென்ஸ் கொடுக்கும்போது விண்ணப்பங்களை இதுபோல் பரிசீலனை செய்த பின் முதலில் LOI எனப்படும் Letter of Intent என்ற முதற்கட்ட அனுமதி வழங்கப்படும்.

இதைப் பெற்றுக் கொண்டவர்கள் டெபாசிட், லைசென்ஸ் தொகை, இருப்பிடச் சான்றிதழ் போன்ற பல சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு முழுமையாக லைசென்ஸ் வழங்கப்படும். ஆனால், இதன்படி Letter of Intent பெற்றவர்கள் அனைவரும் 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று முக்கால் மணி நேரத்தில் அனைத்துச் சான்றிதழ்களையும் வழங்க வேண்டுமென்று அவர்களுக்கு பத்திரிகைச் செய்தி அனுப்பப்பட்டது.

இதன்படி பயில்வான்கள் போன்ற அடியாட்கள் கம்பெனிகளின் சான்றிதழ்களையும், வங்கி டிராப்ட்டுகளையும் கொண்டு வந்து முண்டியடித்துக் கொண்டு கெளண்ட்டரில் பணத்தைச் செலுத்திய கேலிக்கூத்து 2008-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதியன்று தொலைத் தொடர்புத் துறையில் நடந்திருக்கிறது. அரசுக்கு வேண்டியவர்களுக்கும், கையூட்டுப் பெற்றவர்களுக்கும் செய்யப்பட்ட வசதி இது என்பது சொல்லாமலேயே தெரியும்..!

நன்றி : துக்ளக் - 01-12-2010

http://truetamilans.blogspot.in/2011/03/2.html

No comments:

Post a Comment