Friday, March 2, 2012

கொழும்பில் சுவாமி விவேகானந்தர் விழா

இலங்கையில் சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழா

சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் சுவாமிஜி அவர்கள் ஹிந்து வேதாந்தக் கருத்துக்களை சிங்கத்தைப் போன்று கர்ஜனை செய்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்ததுடன் ஒரே நாளில் புகழின் உச்சிக்கே சென்றுவிட்டார். அதை தொடர்ந்து 4 வருடங்கள் அவர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து ஹிந்து தர்மத்தின் பெருமைகளை எடுத்துரைத்துவிட்டு நாடு திரும்பிய போது அவர் முதலில் காலடி வைத்தது இலங்கை கொழும்பு நகரத்தில்தான்.

ஹிந்து மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு உலகெங்கிலும் இருக்கின்ற ஹிந்துக்கள், ஹிந்து இயக்கங்கள், ஹிந்து ஆன்மீக இயக்கங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திடத் துவங்கியுள்ளன. இந்நிகழ்ச்சிகள் இவ்வருடம் முழுவதும் நடைபெற இருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வருகின்ற 2013-14 ஆம் ஆண்டில் சுவாமிஜியின் 150 வது ஜெயந்தியை மிகப் பிரம்மாண்டமான அளவில் நடத்திடத்திட்டமிட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் (HSS) உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்ற ஹிந்துக்களை ஒருங்கிணைக்கிற இயக்கமாகும். இலங்கையில் கடந்த 10௦ ஆண்டுகளாக ஹிந்துஸ்வயம் சேவக இயக்கம் அந்நாட்டு ஹிந்துக்களிடையே சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடிட அகில இலங்கை விழாக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு கொழும்பு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவில் அறங்காவலர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் தலைவராக இருக்கின்றார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். அக்குழுவில் இலங்கையில் இருக்கின்ற முக்கியமான ஹிந்து சமுதாயப் பெரியோர்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர். இலங்கை முழுவதிலுமிருந்து இக்குழுவில் உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

இலங்கை முழுவதும் அக்குழுவின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த வருடத்தினை மிக சிறப்பாகக் கொண்டாடித் தீர்மானிக்கப் பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக கொழும்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று துவக்க விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

கொழும்பு நகரில் இருக்கின்ற புகழ்பெற்ற சரஸ்வதி திருமண மண்டபத்தில் இவ்விழா பிப்ரவரி 26 அன்று மாலையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 500௦௦க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இலங்கையில் இருக்கின்ற 25 மாவட்டங்களில் ஒரு மாவட்டம் தவிர மீதமுள்ள 24 மாவட்டங்களில் இருந்து பிரதிநிதிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர். இலங்கை முழுவதிலிமிருந்து இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டது பலருக்கு பெரும் மகிழ்ச்சியை மட்டுமல்ல பெரும் ஆச்சரியத்தையும் அளித்தது. பலர் இதை வெளிப்படையாகவே தெரிவித்தனர். நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்டிருந்தபடி மாலை 5.30 ௦க்கு சரியாகத் துவங்கி இரவு 7.30 க்கு நிறைவு பெற்றது. இதுவும் கூட பலருக்கு வியப்பை அளித்தது.

விழாவினை கொழும்பு ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைமைத் துறவி சுவாமி ஸ்வருபானந்த மகராஜ் மங்கள விளக்கு ஏற்றி வைத்தார். பிறகு அதை தொடர்ந்து சுமார் 125 சிறுவர்கள் சிறுமியர்கள் பங்கேற்ற யோகசாப் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் துவங்கிய நிகழ்ச்சியில் இலங்கை ஹிந்து சேவா சங்கத்தின் சேவைப் பணிகளின் பொறுப்பாளர் கொழும்பு நகரைச் சார்ந்த திரு.திருச்செல்வன் அனைவரையும் வரவேற்று, விருந்தினர்களை அறிமுகப்படுத்திப் பேசினார்.

அடுத்து சுவாமி சர்வரூபானந்த அவர்கள் ஆசியுரை நிகழ்த்தினார்கள். அவர்தனது உரையில் ஏழ்மையில் இருக்கின்ற மனிதனுக்கு கடவுளைப் பற்றி எப்படி சிந்திக்க முடியும். எனவே முதலில் பசிப்பிணியை அகற்றிட நாம் முனைந்திட வேண்டும். சுவாமி விவேகானந்தரும் இதைத் தான் வலியுறுத்தி இருக்கின்றார் என்று கூறினார் சுவாமி சர்வரூபானந்தா.

விழாக்குழுவின் தலைவர் திரு.டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தனது தலைமை உரையில் சுவாமிஜி அவர்கள் சிகாகோவிலிருந்து வெற்றிகரமாகத் திரும்பி வந்தபோது முதலில் அவர் காலடி எடுத்து வைத்தது கொழும்பு நகரில்தான் என்பதை நினைவுபடுத்தினார். அப்போது மாபெரும் வரவேற்பு ஒன்று கொழும்பு நகர் ஹிந்துக்களால் சுவாமிஜி அவர்களுக்கு கொடுக்கப்பட்டது என்பதை தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.

இலங்கை அரசின் ஹிந்து சமய தினைக்களத்தின் செயலாளர் திரு சாந்தி திருநாவுக்கரசு அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியர் திரு.நா.சடகோபன் அவர்கள் சிறப்புரையில் “சுவாமி விவேகானதருக்கும் தமிழகத்திற்கும், தமிழக இளைஞர்களுக்கும் இருத்த நெருக்கத்தினையும் தொடர்பினையும் எடுத்துக்கூறினார்.

சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடைபெற்ற சர்வமத மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என அவரைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது மட்டுமின்றி அவர் சிகாகோ செல்வதற்கான நிதியை சேகரித்துக் கொடுத்ததில் சென்னை நகரின் இளைஞர்கள் மாபெரும் தொண்டாற்றியுள்ளனர்.

சுவாமி மீது அபாரமான பக்தி செலுத்தி வந்த அளசிங்கப் பெருமாள் என்கிற
இளைஞருடன் சுவாமி விவேகானந்தர் மிக நெருக்கமாக இருந்தார். அத்துடன் அந்த இளைஞர் குழுவில் இருந்த டாக்டர் நஞ்சுண்ட ராவ், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார், ரங்காச்சாரி, பிலிகிரி ஐயங்கார், என அனைவருடனும் சுவாமிஜி அவர்கள் நெருங்கிய தொடர்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்.

சுவாமி விவேகானந்தரையும் தமிழகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சுவாமிஜி பிறந்த வங்கத்தைக் காட்டிலும் அதிகமான பெயரும் புகழும் தமிழகத்தில் காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற சீடர்கள் மற்றும் பக்தர்களால் நூற்றுக்கணக்கான தொண்டுக் காரியங்கள் இன்றும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

நாட்டினைப் பற்றியும் ஹிந்து மதத்தைப் பற்றியும், சமுதாயத்தைப் பற்றியும் முழு அக்கறை கொண்டிருந்தவர் சுவாமி விவேகானந்தர், எனவே சுவாமிஜின் 150 வது பிறந்த வருடத்தினை முன்னிட்டு அவரது கருத்துக்களை இலங்கை முழுவதும் இருக்கின்ற ஹிந்துக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது நோக்கமாக இருக்கவேண்டும்” என்று பேசினார்.

ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்வதேச ஒருங்கிணப்பாளர் திரு.சௌமித்ர கோகலே அவர்கள் தனது சிறப்புரையில் உலக அளவில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் செய்து வருகின்ற பல பணிகளைப் பற்றி பவர் பாயிண்ட் பிரசன்டேஷன் மற்றும் காணொளி வாயிலாக பார்வையாளர்களுக்கு விளக்கினார். மேற்கத்திய மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஹிந்து பண்பாட்டின் தாக்கம் எப்படி இருந்து வருகிறது என்பது பற்றி அவர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் வேத மந்திரங்களை துல்லியமான உச்சரிப்புடன் மிக அழகாக சொல்லும் இங்கிலாந்து நாட்டு சிறுவர், சிறுமியர்கள், மற்றும் ஆப்ரிக்க நாட்டு சர்ச் ஒன்றில் பாதிரியார் ஒருவர் இருகரம் கூப்பி நமஸ்தே என்று சொல்வதின் உள் அர்த்தத்தையும் அதன் மகத்துவத்தையும் எடுத்துரைத்துரைப்பதும் அதைத் தொடர்ந்து சர்ச்சுக்கு வந்திருந்த அனைவரும் கைகூப்பி ஒரே குரலில் நமஸ்தே என்று சொல்லும் காட்சி உட்பட, காணொளிக் காட்சிகள் அனைத்தும் விழாவிற்கு வந்திருந்த அனைவரது மனதிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.

சர்வதேச அளவில் சுவாமிஜி அவர்களின் 150 வது பிறந்த வருடத்தினை நடைபெற இருக்கின்ற பல்வேறு நிகழ்ச்சிகள் பற்றியும் சௌமித்ர கோகலே தனது உரையில் எடுத்துரைத்தார்.

அகில இலங்கை ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் இணைச் செயலாளர் திரு.எஸ்.கே.தேவன் அவர்கள் நன்றி கூற, இறைவணக்கத்துடன் விழா இனிதே நிறைவுற்றது. இலங்கையில் சுவாமி விவேகானந்தரது 150வது பிறந்த வருடத்தில் நாடெங்கிலும் குறைந்தது 150 நிகழ்ச்சிகளாவது நடத்திட வேண்டுமென ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தினர் தீர்மானம் செய்துள்ளனர்.

http://hindusanghaseidhi.net/?p=1691

No comments:

Post a Comment