Friday, February 11, 2011

சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!

சண்டேன்னா மூணு! சிவப்புச் சேலையைக் கண்டு மிரளும் காங்கிரஸ்!அப்புறம்....!




ஐ மு கூட்டணிக் கூட்டணிக் குழப்பங்களில், சாதனையாக எது இருந்ததோ இல்லையோ, கூட்டணிக் குழப்பத்தின் மெஜாரிட்டி பார்ட்னர் காங்கிரஸ் கட்சியை எவர் விரட்டுகிறார்கள், எப்படி மிரட்டுகிறார்கள் என்பதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை நிச்சயமாகத் தொட்டுச் சொல்லலாம்! டம்மிப் பீஸ் பிரதமர் மன்மோகன் சிங் தன்னுடைய ஆட்சியின் சாதனைப் பட்டியலில் இதையும் சேர்த்துச் சொல்லாவிட்டாலும், அத்தனை பேருக்கும் தெரிந்த ரகசியமாகத் தான் இது இருக்கிறது!

காங்கிரசை இப்போது ஒரு சிவப்புச் சேலையும் சேர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கிறது!

சிவப்புச் சேலை என்றதும் மம்தா, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் வீரம் மிகுந்த பெண் என்று தப்புக் கணக்குப் போட்டு விடாதீர்கள்!


இந்த சிவப்புச் சேலை ஒரு புத்தகம்! சிவப்புச் சேலை:வாழ்க்கையே அதிகாரத்தின் விலை ( The Red Saree: When Life is The Price of Power)!

ஐ மு கூட்டணிக் குழப்பத்திற்குத் தலை தாங்குகிற சோனியா காந்தியின் கதையை ஜேவியர் மோரோ என்ற ஸ்பானிஷ் எழுத்தாளர், ஸ்பானிஷ் மொழியில் எழுதி இரண்டு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்த பிறகு, அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகத் தயாராக இருப்பது காங்கிரசின் ஒப்பற்ற தலைவிக்கு தர்ம சங்கடத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஏற்கெனெவே இந்தப் புத்தகம் பிஞ்சு, இத்தாலிய, போர்த்துகீசிய மொழிகளிலும், பிரேசிலியன், கடலா மற்றும் டச்சு மொழிகளிலும் வெளியாகி விட்டதைப் புத்தக ஆசிரியரின் வலைப்பக்கங்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.


புத்தகத்தின் முகப்பிலேயே, " dialogues, conversations and situations found therein are the product of the author's own interpretation and do not necessarily reflect authenticity." உரையாடல்கள், சம்பவங்கள் எல்லாம் ஆசிரியர் புரிந்துகொண்ட விதத்தில் இருந்து உருவாக்கப் பட்டவை; அப்படியே அச்சு அசலாக நடந்ததாகச் சொல்லவில்லை என்று சொல்லி விட்டு இந்த அறுநூறு ப்ளஸ் பக்கங்களைக் கொண்ட புத்தகத்தில், மோதிலால் நேரு, ஜவஹர், ராஜீவ், சோனியா என்று மேற்கத்திய வாசகர்கள் புரிந்துகொள்வதற்கு வசதியாக நடப்பைத் தொகுத்திருப்பதாக ஆசிரியர் சொன்னதை, காங்கிரஸ் கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. சோனியாவின் புகழுக்குக் களங்கம் விளைவித்திருப்பதாக வழக்கறிஞர் நோடீஸ் அனுப்பப் பட்டிருக்கிருக்கிறது.

நோடீசை அனுப்பியிருப்பவர், காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி! இந்தப் புள்ளி காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் மட்டுமல்ல யூனியன் கார்பைடின் புதிய முக மூடியான டவ் கெமிகல்சின் வழக்கறிஞரும் கூட! யூனியன் கார்பைடுக்கு வக்காலத்து வாங்குகிற காங்கிரசின் கோர முகங்களில் ஒருவர்.

காங்கிரஸ் கட்சி சிவப்புச் சேலையைக் கண்டு மிரள்கிற மாடு மாதிரி மிரளும்படிக்குப் புத்தகத்தில் அப்படிஎன்னதான் சொல்லி இருக்கிறாராம்?


1977 இல் இந்திரா காந்தி தேர்தலில் தோற்றவுடன் சோனியா,ராஜீவ் மற்றும் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இத்தாலியில் குடியேற விரும்பினாராம்! அதே மாதிரி, ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் பட்டவுடன் சோனியாவின் அம்மா போலோ மைனோவும், அக்கா அனுஷ்காவும் சோனியாவைக் குழந்தைகளோடு இத்தாலியில் அவர்கள் சொந்த கிராமமான ஆர்பசானோவுக்கே குடிபெயர்ந்துவிடுமாறு வலியுறுத்தியதும் சொல்லப் பட்டிருக்கிறதாம்.

நேருவின் வீரப்பரம்பரை வரலாற்றுக் கற்பிதத்துக்கு இப்படிச் சொல்லியிருப்பது, களங்கம் விளைவித்து விட்டதாம்! வீரத்தாய் இந்திரா பெற்ற வீரத் திருமகன் ராஜீவைத் திருமணம் செய்து கொண்டதாலேயே வீராங்கனை ஆகிப் போன சோனியாவின் புகழுக்கு இந்தப் புத்தகம் குற்றம் கண்டுபிடித்துச் சொன்னதால், இதன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டுமாம்! மற்ற மொழிகளில் ஏற்கெனவே வெளிவந்த பதிப்புக்களுக்கு....?

அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை! ஓட்டை இருப்பது இந்தியாவுக்குள் மட்டும் தெரியக் கூடாது! அம்புட்டுத்தேன்!

ஜேவியர் மோரோ நன்றாகத் தான் எதிர்க் கேள்வி கேட்டிருக்கிறார்! தன்னுடைய புத்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கூக்குரல் எழுப்புகிறவர்களிடம் அவர் முன்வைக்கும் கேள்வி இது தான்!

"ஏற்கெனெவே வெளியான புத்தகங்களில் இருப்பதைத் தான் நானும் சொல்லியிருக்கிறேன். பரம்பரை என்ற புத்தகத்தில் ஜாட் ஆடம்ஸ் சொல்லியிருப்பது, பப்புல் ஜெயகர் எழுதிய இந்திரா காந்தி: அணுக்கமான சரிதையில் சொன்னது, அப்புறம் கேதரைன் பிராங்க்ஸ் எழுதிய இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை இவைகளில் சொல்லி
ருப்பதன் அடிப்படையில் தான் நானும் சொல்லி ருக்கிறேன். அந்தப் புத்தகங்களுக்கு எதிராக எவரும் எதுவும் பேசவில்லையே!"

சாதாரண சர்டிபிகேட் கோர்ஸ் படித்ததையே பெரிய பட்டப் படிப்புப் படித்துக் கொண்டிருந்தபோது ராஜீவுடன் காதல் கொண்டதாக இங்கே பில்டப் கொடுத்து சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறவர்களிடம், அம்மா சும்மா ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த சாதாரணமான மனுஷிதான்..கல்யாணம் பண்ணிக் கொண்டு வீட்டோடு மனைவியாக இருக்க விரும்பிய கதையை எல்லாம் எடுத்து விட்டால் தாங்குவார்களா?

காங்கிரஸ்காரர்கள் அடிக்கும் கூத்துக்களை, ஜேவியர் மோரோ தன் வலைப் பக்கங்களிலேயே சுட்டி கொடுத்துக் காண்பித்திருக்கிறார்! காங்கிரஸ் காமெடியைத் தாங்கிக் கொள்ள முடிகிறவர்கள் போய்ப் படித்துக் கொள்ளுங்கள்!



இன்னும் கொஞ்சம் பொறுமை அவகாசம் இருப்பவர்கள், நம்மூர் சுப்பிரமணியம் சுவாமி தன்னுடைய வலைப் பக்கங்களில் ஜேவியர் மோரோ சொன்னதை விடக் கொஞ்சம் அதிகமாகவே சொல்லி இருக்கிறார், அதில் மூன்று பொய்கள் என்ற பகுதியை இங்கே பார்க்கலாம்!

http://consenttobenothing.blogspot.com/2010/06/blog-post_13.html

No comments:

Post a Comment