Sunday, December 5, 2010

தமிழ் சினிமாவை விமர்சித்ததாக சர்ச்சை: ஆர்யா வருத்தம்

தமிழ் சினிமாவைப் பற்றி தான் தவறாக விமர்சிக்கவில்லை என்றும், தன்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அதற்காக வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

அண்மையில் மலையாள அமைப்பு சார்பில் துபையில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசினார், நடிகர் ஆர்யா.

அதில், "நான் ஒரு மலையாளி என்பதில் பெருமைப்படுகிறேன். பொதுவாக மலையாளிகள் ரசனையில் உயர்ந்தவர்கள். கிளாஸ் படங்கள், உயர்ந்த நடிப்புத்தான் அவர்களுக்குப் பிடிக்கும், தமிழர்கள் ரசனை அப்படியல்ல. சுமாராக நடித்தாலும் லட்சங்கள், கோடிகளைக் கொட்டுவார்கள்," என்று அவர் பேசியதாக குற்றம்சாட்டி, தமிழ் சினிமாவில் ஒரு பிரிவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், இந்த சர்ச்சை குறித்து நடிகர் ஆர்யா வெளியிட்ட அறிக்கையில், "என்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கும், என்னை ஆளாக்கி ஆதரித்துக்கொண்டிருக்கும் தமிழ் திரையுலகினருக்கும் எனது நன்றி கலந்த அன்பு வணக்கங்கள்.

எந்த பிரச்னைகளுக்குள்ளும் போகாமல் நடிப்பு தொழிலில் மட்டும் முழுமையாக மனதை ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் என்னைப்பற்றி கடந்த ஒரு வாரகாலமாக சில விமர்சனங்கள் பத்திரிகைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதை படித்திருப்பீர்கள். அதுகுறித்து என் உண்மை நிலையை விளக்குவது தான் இந்த அறிக்கையின் நோக்கம்.

பிரச்னைக்குள்ளான அந்த துபை மேடை உட்பட பல மேடைகளில் இன்று எனக்கு இடம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணமே தமிழ்த்திரை ரசிகர்கள் எனக்கு தந்திருக்கும் அங்கீகாரம் தான் என்ற அடிப்படையை அறியாதவன் அல்ல நான்.

நான் அறிமுகமான உள்ளம் கேட்குமே படத்தில் என்னை உற்சாகப்படுத்தி நான் கடவுள் படத்தில் என்னை நடிகனாக அங்கீகரித்து, மதராசபட்டினம் படத்தில் எனக்கு தனி அடையாளத்தை தந்து, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் என்னை வெற்றிக்கதாநாயகனாக்கிய தமிழ் ரசிகர்களின் ஆதரவிற்கும், எல்லையில்லா அன்பிற்கும் அளவு கடந்த பாசத்திற்கும் காலம் பூராவும் நான் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.

தமிழ் திரையுலகம் எனக்கு தொடர்ந்து தந்து வரும் வரவேற்பு தான் திரையுலகில் இன்று என் சுவாசம் என்பதை நன்கறிந்து நான் தமிழ் திரையுலகைப்பற்றி தவறாக விமர்சிப்பேனா? கனவிலும் நான் எண்ணத் துணியாததை நான் பேசியதாக எழுந்துள்ள விமர்சனங்கள் என்னை மிகவும் பாதித்துள்ளன என்பது தான் உண்மை. நான் அப்படிப்பட்ட எந்த விமர்சனத்தையும் வெளியிடவில்லை என்பதை பணிவன்போடு உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இவை எல்லாவற்றையும் மீறி என்னால் யாராவது காயப்பட்டிருந்தால் அவர்களுக்கு என் வருத்தங்களை இதயசுத்தியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்காக குரல் கொடுத்த நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகளுக்கும், இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க உதவிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கும் என் இதயபூர்வமான நன்றியை காணிக்கையாக்குகிறேன்.

நடிகன் என்ற நிலையில் ஆரம்ப படிக்கட்டுகளில் இருக்கும் எனக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்திட வேண்டிக்கொள்கிறேன்," என்று நடிகர் ஆர்யா கூறியுள்ளார்.

http://new.vikatan.com/news.php?nid=150

No comments:

Post a Comment