Sunday, November 21, 2010

ஊழல் பிரச்னையை முதல்வர் திசைதிருப்புகிறார் - இராம.கோபாலன்

First Published : 22 Nov 2010 09:32:13 AM IST

Last Updated : 22 Nov 2010 09:35:15 AM IST

சென்னை, நவ.22: தமிழக முதல்வர் கருணாநிதி ஊழல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற அத்தனையும் செய்து தோல்வி கண்டுவிட்டார். எனவே பிரச்னையை திசை திருப்ப ஜாதியை முன்வைத்து, பத்திரிகைகளை சாடும் முதல்வரை கண்டிக்கிறோம் என்று இந்து முன்னணி அமைப்பாளர் இராம.கோபாலன் இன்று அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...

நாடு முழுக்க ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சியான தி.மு.க.விற்கும் பெருத்த அவமானத்தையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

முதலில் இந்தக் குற்றச்சாட்டு வெளிவந்தவுடன் ராசா ஒரு தலித் என்பதால் அவரைக் குறிவைத்து இந்த ஊழல் குற்றச்சாட்டுத் தாக்குதல் நடத்தப்படுகிறது என்று பகிரங்கமாகப் பேசினார் தமிழக முதல்வர். தலித் ஒருவர் நாட்டுக்கும், சமூகத்துக்கும் பெருமை சேர்த்தால் அவரை அடையாளப்படுத்தி பாராட்டலாம்.

முன்னாள் மந்திரி கக்கன் அப்பழுக்கற்ற தேசபக்தர், தூய்மையான அரசியல்வாதிக்கு இன்றும் முன் உதாரணமாக நல்லோர்களால் பாராட்டப்படுபவர், மதிக்கப்படுபவர். அமரர் கக்கனால் தலித் - தாழ்த்தப்பட்ட சமூகத்துக்குப் பெருமை! ஆனால், ராசாவின் நிலை அப்படி அல்ல!

இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கைக்குப் பதில் கூற வந்த கருணாநிதி, மக்களைத் திசைதிருப்ப மனு தர்மத்தை சுட்டிக்காட்டி வம்புக்கிழுக்கிறார். தான் ஒரு சூத்திரன் என்பதால்தான் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாகக் கதைவிடுகிறார். மனு தர்மத்தின்படி யாரும் ஆட்சி செய்யவில்லை, இந்தியாவிலும் மனு தர்மம் ஆட்சியில் இல்லை. மனு என்பவர் பிராமணர் இல்லை; க்ஷத்திரியர். ஆரிய - திராவிட இனவாதம் என்பது உளுத்துப்போன கீறல் விழுந்த ரெக்கார்ட். இதனையும் மனு தர்மத்தையும் பேசி மக்களை திசை திருப்பப் பார்க்கிறார் கருணாநிதி.

ஜாதி வெறியில் வளர்ந்து, ஜாதியை வைத்து ஆட்சிக்கு வந்தவர், இன்று ஜாதியை வைத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். ஜாதிப் பாகுபாடு பேசி மக்களைப் பிளவுபடுத்தும் கருணாநிதி முதல்வராகும்போது தான் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறுகிறார். ராசாவின் ஊழலில் வந்த பணம் என்னவாகும் என்ற கவலை முதல்வருக்கு வந்துவிட்டதால் வாய்க்கு வந்தபடி பிதற்றுகிறார்!

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைத்து விசாரிக்கும் முன், ராசாவால் ஒதுக்கீடு செய்யப்பட்ட எல்லா நிறுவனங்களின் உரிமங்களையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இதற்குக் காரணமான ராசா மற்றும் தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

ராசா ஊழல் செய்த தொகை, இந்த ஒதுக்கீட்டால் கம்பெனிகளிடமிருந்து பெற்ற பிரதிபலன்கள், இந்த ஊழலில் யார் யார் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய ராசாவை உண்மை அறியும் சோதனைக்கு அறிவியல்பூர்வமாக உட்படுத்த வேண்டும். இதன் முடிவுகளைப் பகிரங்கமாக நீதித்துறையும், புலனாய்வு அமைப்புகளும் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், லெனின் ஆகிய சர்வாதிகாரிகள் மீடியாவை தங்களின் துதிபாடிகளாக வைத்திருந்தனர். அதுபோல கருணாநிதியும் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். இவரைப் பாராட்ட, இவரது கருத்துகளை மட்டுமே வெளியிடும் இவரது சொந்த மீடியாக்கள் பல இருக்கின்றன. எல்லாப் பத்திரிகைகளும் இவரது கருத்துகளை வெளியிடுகின்றன. இவரை விமர்சித்து ஒருசில செய்திகள் வருவதைக்கூட தாங்கமுடியாமல் பத்திரிகைகளைப் பகிரங்கமாகச் சாடுகிறார்! இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது, ஜனநாயக மரபுக்கு எதிரானது! கண்டிக்கத்தக்கது!

Source: www.dinamani.com

முதல்வர் கருணாநிதி இந்து நம்பிக்கைகளைக் கேலி பேசி, பிரச்னையைத் திசை திருப்ப முயற்சிப்பதையும், ராசாவின் ஊழலை பகிரங்கப்படுத்தும் பத்திரிகைகளை மிரட்டுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறோம் -

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment