Wednesday, November 24, 2010

மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் விற்கப்படும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை : ""தமிழகத்தில் மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் விற்கப்படும்'' என, பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளிடமிருந்து இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வியில் சமநீதி மற்றும் சமநிதி கோரி நடைபெறும் பிரசார யாத்திரை துவக்க பொதுக்கூட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நடந்தது.

மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்., மற்றும் தி.மு.க., அரசிடமிருந்து இந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற்று தருவதற்காக தாமரை யாத்திரை நடத்தப்படுகிறது. இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது. இந்து மக்கள் மீது காங்., அரசுக்கு அக்கறை இல்லை.

சிறுபான்மை மக்களான முஸ்லிம், கிறிஸ்தவர்களின் ஓட்டுகளைப் பெற கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தனர். 85 சதவீதம் இந்துக்களை கண்டுகொள்ளாமல், 15 சதவீதம் மக்களைக் கொண்ட இஸ்லாம், கிறிஸ்தவ மக்களின் மீது பாசம் உள்ளதுபோல் பாவனை காட்டுகின்றனர். இந்து மாணவர்களுக்கு எதுவும் வழங்கப்படுவதில்லை.

இந்துக்களுக்கு 100 ரூபாய் கொடுத்தால் ஓட்டு போட்டுவிடுவர். இந்துக்கள் ஓட்டு நட்பு மற்றும் உறவின் அடிப்படையில் கிடைக்கும். இந்துக்களை திருப்திபடுத்த பொங்கல் இனாம் அறிவித்துள்ளார் கருணாநிதி. ஐந்து முறை முதல்வராக உள்ள கருணாநிதி, மக்களை 60 ரூபாய் கொடுத்து வேட்டி வாங்கி கட்டிக் கொள்ள முடியாத நிலையில் வைத்துள்ளார். டாஸ்மாக் மூலம் மக்கள் பணத்தை கொள்ளையடித்து, மக்களை வேட்டி, சேலைக்கு பிச்சை எடுக்க வைத்துள்ளதை, பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. தமிழக தாய்மார்கள் அவதிப்படுவதற்கு தமிழக அரசு தான் காரணம்.

தமிழக மக்களே உங்களை திருத்திக் கொள்ளுங்கள். அர்ச்சனை முதல் அபிஷேகம் வரை திடீர் உயர்வு என "தினமலர்' இதழில் செய்தி வந்துள்ளது. இந்து கோவில்களில் வழங்கும் பிரசாதத்தை கிண்டல் செய்கிறார் கருணாநிதி.

தெய்வத்தை நம்பாத கருணாநிதி எப்படி கோவில் நிர்வாகத்தில் தலையிட முடியும்? எங்கள் சாமியை கும்பிட நீங்கள் கட்டணம் நிர்ணயிக்கும் நிலைமை உள்ளது.கிறிஸ்தவர்களின் தேவாலய நிர்வாகம் மற்றும் நிலங்கள் கிறிஸ்தவர்களிடம் உள்ளது. முஸ்லிம்களின் மசூதி முஸ்லிம் மக்களிடம் உள்ளது. ஆனால் இந்து கோவில்களின் நிர்வாகம் மற்றும் நிலங்கள் கட்சியினரிடம் உள்ளது.கோவில் பணத்தை பொது கணக்கில் போட்டு, பொது கணக்கிலிருந்து சிறுபான்மை கிறிஸ்தவ மாணவர்களுக்கு சலுகை வழங்குவது சரியா? நாத்திகவாதிகள் கோவில்களிலிருந்தும், நிர்வாகத்திலிருந்தும் விரட்டி அடிக்கப்பட வேண்டும்.

மீண்டும் திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் விற்கப்படும். வரும் ஜன., 29ல் சென்னையில் பா.ஜ.க., சார்பில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. போராட்டத்திற்கு பின் தமிழக அரசியல் தலைகீழாக மாறும். பா.ஜ.க., நடத்தும் போராட்டம் தேசத்தில் உள்ள குழந்தைகளுக்கான போராட்டம்.இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=132386

No comments:

Post a Comment