Tuesday, December 14, 2010

தலையங்கம்: உதறலால் வரும் உளறல்!

தலையங்கம்: உதறலால் வரும் உளறல்!
First Published : 13 Dec 2010 12:11:00 AM IST



ஹமந்த் கர்கரே கொல்லப்பட்டு இரு ஆண்டுகள் முடிவுற்றுள்ளன. இந்நிலையில், இந்து தீவிரவாத அமைப்புகள் மூலமாக என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அஞ்சுகிறேன் என்று தம்மிடம் ஹேமந்த் கர்கரே கூறியதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலர் திக்விஜய் சிங் கூறியிருப்பதன் உள்நோக்கம், ஹேமந்த் கர்கரே மீதான நட்போ, பாசமோ அல்ல. எதையாவது பேசி, அரசியல்வாதிகளின் கவனத்தையும் மக்களின் கவனத்தையும் திசைதிருப்ப வேண்டும் என்பதுதான்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடாளுமன்ற விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பாஜக உள்பட எந்தவொரு எதிர்க்கட்சியும் சற்றும் பின்வாங்காத நிலையில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் அலுவல் ஏதும் நடைபெறாமலேயே முடிந்துவிட்ட மனக்கசப்பின் வெளிப்பாடே ஹேமந்த் கர்கரே மீதான இந்த திடீர் அக்கறை என்று தோன்றுகிறது.

திக்விஜய் சிங், தற்போது, இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தகவலை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இதனால் யாருக்கு லாபம், இதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்கிற சிறிதளவு எண்ணம்கூட அவரது சிந்தனையில் இருக்கக்காணோம்.

மும்பை தாக்குதல் வழக்கில் இரு ஆண்டுகள் முடிந்த பின்னரும் இதுவரையும் ஒரேயொரு ஒத்துழைப்பைக்கூட பாகிஸ்தான் வழங்க முன்வரவில்லை. இந்நிலையில், பிடிபட்ட தீவிரவாதி கசாப் நாள்தோறும், ""இன்றுஒரு தகவல்'' போல ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். கடைசியாக கசாப் கூறியிருப்பது: தாஜ் ஓட்டலில் பதிவான விடியோ படங்களில் இருப்பது நான் இல்லை. அதெல்லாம் போலியானவை (மார்பிங் செய்யப்பட்டுள்ளது) என்கிற வாதம்.

""இந்த நிலையில், இந்து தீவிரவாதிகளால்தான் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தான் கொல்லப்படும் சில மணி நேரத்துக்கு முன்பாக அவர் கூறியிருந்தார் என்று சொல்வதன் மூலம், கர்கரே கொல்லப்பட்டது பாகிஸ்தான் தீவிரவாதியால் அல்ல என்பதை சந்தேகத்துக்கு இடமாக்குவதோடு, தாக்குதல் நடத்தியவர்களும்கூட, இந்து தீவிரவாதிகளாக இருக்கலாமே என்ற கேள்வியை பாகிஸ்தான் நம்மிடம் கேட்கும் நிலையையும் அல்லவா ஒரு கட்சியின் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர் உருவாக்கியிருக்கிறார்'' என்று பாஜகவின் கொள்கைநிலை விளக்குநர் ரவிசங்கர் பிரசாத் எழுப்பியுள்ள கேள்வி நியாயமானது.

ஹேமந்த் கர்கரேயின் மனைவி கவிதா இதுபற்றி மனவருத்தத்துடன், என் கணவரின் சாவை வைத்து அரசியல் விளையாட்டை நடத்தாதீர்கள் என்று கூறியுள்ளார். மலேகாம் குண்டுவெடிப்பு விவகாரத்தில் புலனாய்வு செய்தபோது, ஹேமந்த் கர்கரேவுக்கு சிலர் மிரட்டல் விடுத்திருக்கலாம். அதுவும்கூட, உண்மைதானா என்பதை உறுதிப்படுத்த இயலாது. அதன்பின்னர், மும்பையில், ஒரு ஊடுருவல் போரினைப் போல வெறித்தனமாக நடத்தப்பட்ட தாக்குதலை அத்தகைய மிரட்டலுடன் தொடர்பு படுத்தக்கூடாது என்றும் தெளிவாகவே கூறியிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும் காங்கிரஸ் கட்சி அமைதி காத்து, இந்தப் பிரச்னை இரு தனிநபர்களுக்கு இடையே நடந்த உரையாடல் என்று சொல்லிவிட்டு சும்மா இருக்குமானால் அதைப் போன்ற அநியாயம் வேறு எதுவும் இருக்க முடியாது. திக்விஜய் சிங்கின் பேச்சை காங்கிரஸ் கட்சி மறுதலிக்க வேண்டும் என்பதுடன் இத்தகைய தேவையற்ற வார்த்தைகளால் நாட்டின் இறையாண்மைக்கே ஊறுவிளைவிக்கும் செயல்களில் இறங்கியதற்காக அவர் மீது கட்சி நடவடிக்கை மேற்கொள்ளவும் வேண்டும்.

கர்கரே மீது உண்மையான நட்பும் பாசமும் இருந்திருக்குமேயானால், அல்லது உண்மையாகவே கர்கரே அவ்வாறு கருத்து தெரிவித்திருப்பாரேயானால், அந்தக் கருத்தை அவர் கொலையுண்ட சில மணி நேரத்திலேயே திக்விஜய் சிங் கூறியிருப்பாரேயானால், இன்று நாம் அவரது நோக்கத்தை சந்தேகத்துடன் பார்க்க நேரிட்டிருக்காது.

கர்கரே ஒரு திறமையான காவல்துறை அதிகாரி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அவர் கொல்லப்பட்ட விதமும், சம்பவத்தின் போது நேர்ந்த குளறுபடிகளும் அந்தத் தேதியிலேயே பெரிதாக விவாதிக்கப்பட்டன. தீவிரவாதிகள் கொன்றார்களா அல்லது தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததை பயன்படுத்திக்கொண்டு, மறைந்து வாழும் தாவூத் இப்ராகிம் ஆட்கள் கொன்றார்களா என்ற சந்தேகம்கூட எழுந்தது.

அவர் ஏன் குண்டுதுளைக்காத ஆடை அணியவில்லை என்று கேட்டார்கள். அணிந்திருந்தார் என்று உறுதியாகக் கூறப்பட்டபோது, மருத்துவமனையின் குப்பைத் தொட்டியிலிருந்து அந்த குண்டுதுளைக்காத ஆடை எடுத்துக் கொடுக்கப்பட்டது.

இத்தகைய நடைமுறைக் குளறுபடிகளை மையமாக வைத்து அவர் கொல்லப்பட்டது குறித்து மேலும் ஐயங்களை எழுப்பிக் கொண்டே இருந்தால் அது முறையல்ல. அவர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார் என்பது மட்டுமே மறுக்க முடியாத உண்மை. இந்த நேரத்தில் தேவையில்லா பேச்சுகளால் ஓர் உண்மை நீர்த்துப் போக வழிவகுக்க வேண்டுமா?

1,76,0000000000 ரூபாய்க்குமேல் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியிருக்கும் செயலின் பின்னணியை முழுமையாக ஆராய, சம்பந்தப்பட்ட, சந்தேகத்துக்குரிய யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரையும் அழைத்து விசாரிக்கும் அதிகாரம் படைத்த நாடாளுமன்ற விசாரணைக் குழுவை அமைக்கத் தயாராக இல்லாத மத்திய அரசை, எதிர்க்கட்சிகளின் தாக்குதலில் இருந்தும், மக்கள் மன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளில் இருந்தும் காப்பாற்ற, கட்சித் தலைமையின் மறைமுக ஆசியுடன் திக்விஜய் சிங் அரங்கேற்றியிருக்கும் திசைதிருப்பும் முயற்சிதான் இது. என்ன இருந்தாலும் குற்றவாளிகளான தீவிரவாதிகளுக்கும், மும்பைத் தாக்குதலில் தனக்குத் தொடர்பில்லை என்று நழுவுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பாகிஸ்தானுக்கும் துணைபோகும் கேவலமான செயலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் ஒருவர் இறங்கியிருக்க வேண்டாம்.

No comments:

Post a Comment