Wednesday, December 15, 2010

பத்திரிகையாளர் நிபந்தனையின் பேரில் விடுவிப்பு; ராசாத்தி அம்மாள் ஆடிட்டர் வீட்டில் ரெய்டு


சென்னை : 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சோதனைக்கு உள்ளான பத்திரிகையாளர் காமராஜை, சிபி.ஐ., அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவருடைய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். முன்னதாக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் ஆடிட்டர் வீடு மற்றும் நிருபர்‌கள், அதிகாரிகள் என பல முக்கியப்புள்ளிகள் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். கார்ப்பரேட் தரகர் நிரா ராடியாவின் டில்லி வீட்டிலும் சி.பி.ஐ., அதிரடி ரெய்டு மேற்கொண்டுள்ளது. டில்லி பாரகம்பா சாலையில் இருக்கும் நிராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் அலுவலகம், , டில்லி சத்தர்பூர் பகுதியில் இருக்கும் அவரது வீடு உள்ளிட்ட டில்லியில் மொத்தம் 7 இடங்களில் ரெய்டு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் 27 இடங்கள் : தமிழகத்தில் பெரம்பலூர் உள்ளிட்ட 27 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. டில்லியில் இருந்து வந்‌த சி.பி.ஐ., அதிகாரிகள் 150 பேர் கொண்‌ட குழு பிரிந்து ரெய்டு நடந்து வருகிறது. வாரப்பத்திரிகை ஒன்றின் இணை ஆசிரியர் காமராஜ் வீட்டிலும் , நுங்கம்பாக்கம் , காதர்நவாஸ்கான் ரோட்டில் இருக்கும் டிராய் மாஜி இயக்குநர் வீட்டிலும் ரெய்டு நடை‌பெறுகிறது. அதே சாலையில் இருக்கும் நிரா ராடியாவின் வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குவிந்துள்ளனர். ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்பாஷா. இவர் கிரீன் ஹவுஸ் புரோமட்டர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவரது வீட்டில் கடந்த வாரம் ரெய்டு நடந்தது. இன்று அந்நிறுவனத்தின் பங்குதாரரான சுப்புடு என்ற சுப்பரமணியன் வீட்டிலும் ரெய்டு நடக்கிறது. சுப்புடுவும் ராஜாவுக்கு நண்பர் தான். ராஜாவின் பெரம்பலூர் வீட்டிலும் மீண்டும் ரெய்டு நடக்கிறது.

ராசாத்தி ஆடிட்டர் வீட்டில் ரெய்டு : தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியும், ராஜ்யசபா எம்.பி., கனிமொழியின் தாயாருமான ராசாத்தி அம்மாளின் ஆடிட்டர் ரத்தினம் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு மேற்கொண்டுள்ளனர்.

சி.பி.ஐ., பார்வையில் பாதிரியார் : மயிலாப்பூரில் இருக்கும் ‌பாதிரியார் ஜெகத் கஸ்பர் அலுவலகத்திலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. தமிழ்மையம் என்ற என்.ஜி.ஓ., வின் இயக்குநர். இவர் ராஜாவுக்கு மட்டுமல்ல தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழிக்கும் ‌நெருக்கமானவர். சங்கமம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், சென்னை மாரத்தான் என்ற நிகழ்ச்சியையும் ஒருங்கிணைப்பதில் இவர் உதவியாக இருந்திருக்கிறார்.

அண்மையில் மாஜி அமைச்சர் ராஜாவின் ரெபம்பலூர் வீடு, அவரது சகோதரர் களியபெருமாள், நண்பர் சாதிக்பாஷா ஆகியோரது வீடுகள் என 14 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சியிலும் ரெய்டு : திருச்சி திருவாணைக்காவல் பெரியார் நகரில் இருக்கிறது மாஜி அமைச்சர் ராஜாவின் சகோதரி விஜயாம்பாளின் வீடு. அவரது வீட்டுக்கு இன்று காலையில் சி.பி.ஐ., அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதே போல் சிவரமான் நகரில் இருக்கும் ராஜாவின் சகோதரர் ராமசந்திரன் வீட்டிலும் ரெய்டு நடைபெறுகிறது. இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பருவ நிலை மாற்றம் தொடர்பான துறை இயக்குநராக இருக்கிறார்.

ஊட்டியில் பரபரப்பு : சி.பி.ஐ., அதிகாரிகள் ரெய்டு நடத்தியிருப்பதாக வெளியான தகவலை அடுத்து , ஊட்டி நீலகிரியில் இருக்கும் மாஜி அமைச்சர் ராஜாவின் அலுவலகத்தை சுற்றி பரபரப்பான சூழல் நிலவுகிறது.

டிராய் அதிகாரி வீட்டிலும் : டிராய் ( தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ) மாஜி தலைவர் பிரதிப் பாய்ஜால் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது. பிரதீப் பாய்ஜால் 2004 -2008 காலகட்டத்தில் டிராய் தலைவராக இருந்தார். அவர் கடந்த 2009ல் நிராவின் அலுவலகத்தில் சேர்ந்தார்.

நிராவின் பூதாகர வளர்ச்சி ? என்.ஆர்.ஐ.., யான நிரா 9 ஆண்டுகளில் பூதாகர வளர்ச்சி அடைந்துள்ளார். 300 கோடி ரூபாய் முதலீட்டில் மிகப்பெரிய பிசினஸ் நிறுவனம் அமைத்தது எப்படி என பல்வேறு கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. நிரா வெளிநாட்டு நுண்ணறிவு நிறுவனங்களுக்கு உளவு வேலை பார்த்தாரா என்ற சலசலப்பும் நிலவி வருகிறது.

சி.பி.ஐ., பிடியில் ஹவாலா ஏஜன்ட் : கடந்த 8ம் தேதியன்று ராஜாவின் வீட்டில் நடந்த ரெய்டின் ‌போது அவரது டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் பண பட்டுவாடா குறித்து முக்கிய தகவல்கள் இருந்தததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய ரெய்டில் சி.பி.ஐ., வளையத்துக்குள் வந்திருக்கிறார் ஹவாலா ஏஜன்ட் ஒருவர். மகேஸ் ஜெயின் என்ற அந்த ஹவாலா ஏஜன்ட் பெயர் ராஜா டைரியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சோதனை மட்டும் போதாது: 2ஜி ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ., அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்தக்கது என ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய ‌சாமி தெரிவித்துள்ளார். ஆனால் சோதனை மட்டும் போதாது. ஊழலுக்கு பின்னணியாக இருந்த ராஜா மீது சி.பி.ஐ., எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரணையை தொடர வேண்டும் என்றார்.

ரெய்டு கண்துடைப்பு : பா.ஜ., புடில்லியில் நிராராடியா வீடு, அலுவலகம், சென்னையில் அவரது அலுவலகம், ராஜாவின் நண்பர்கள், உறவினர்கள் என மீண்டும் சி.பி.ஐ., ரெய்டு நடத்தி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறுகையில் : சி.பி.ஐ., ரெய்டு வெறும் கண்துடைப்பு என கூறியுள்ளார். சி.பி.ஐ., அதிகாரிகள் இந்த ரெய்டு மூலம் எந்த ஒரு முக்கிய ஆவண‌ங்களையும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். 2ஜி விவகாரத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என காட்டிக் கொள்வதற்காக மட்டுமே ரெய்டு நடத்தப்படுகிறது என தெ‌ரிவித்தார்.

2ஜி ஊழல் : 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டால் நாட்டுக்கும் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கணக்கு தணிக்கை குழு தெரிவித்தது. நாட்டிற்கு பேரிழப்பு ஏற்படுத்திய மெகா ஊழல் குறித்து பார்லி., கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்திய அமளியால் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் முடங்கியது. தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் 2ஜி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது. 2ஜி விவகாரம் ஊழல் சார்ந்தது மட்டுமில்லை அது பல பரிமாணம் கொண்டதாக இருக்கிறது என கூறியிருந்ததார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=146504

No comments:

Post a Comment