Friday, December 17, 2010

நீரா ராடியா டேப் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி

நீரா ராடியா டேப் : கருணாநிதிக்கு ஜெ. கேள்வி

சென்னை, நவ.24,2010

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் குறித்து முதல்வர் கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்காதது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

பகுத்தறிவு...

தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொண்டு, தஞ்சை பெரிய கோயிலின் பிரதான வாயில் வழியாக கோயிலுக்குள் சென்றால் தனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பதால் பின்பக்க வாசல் வழியாக கோயிலுக்குள் சென்றவர், கருணாநிதி.

அப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டை சகிதமாக கோயிலுக்குள் சென்று ஆயிரம் நடனக் கலைஞர்கள் நடனமாடியதை கண்டு களித்த கருணாநிதி; ஜோதிடரின் சொல்லுக்கு இணங்க மஞ்சள் துண்டை அணிந்து கொள்ளும் கருணாநிதி; பெரியார் கொள்கை குறித்து அறிக்கை வெளியிட்டு இருப்பது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது.

இது மட்டுமல்லாமல், கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவுடன், குடும்பத்துடன் திருக்குவளை கிராமத்திற்குச் சென்று குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோயிலில் சாமி தரிசனம் செய்தது; கோயில் குடமுழுக்கு விழாக்களில் தன் மனைவி, துணைவி, மகள்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வது; வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால் தன் குடும்ப உறுப்பினர்கள் சுற்றித் திரிவது - இவற்றை எல்லாம் மறந்து, பகுத்தறிவு குறித்து கருணாநிதி அறிக்கை விடுத்திருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது.

"பணத்தால் இயங்க வேண்டிய நிலையிலுள்ள அரசியல் இயக்கம் பணக்காரர்களின் இயக்கமாகி விடும். அங்கே தியாகமும், தொண்டுணர்வும் பின்னுக்குத் தள்ளப்படும். சுழல் சொல்லாளர்களும், தன்னலங்களும் தலைமையேற்று விடுவர்" என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப்பட்ட தி.மு.க-வை பணக்கார இயக்கமாக மட்டுமல்லாமல், குடும்ப இயக்கமாகவே மாற்றிய பெருமை கருணாநிதியையே சாரும்.

"அரசியல் இயக்கம் பொதுப்பணி உணர்வோடு கூடிய கூட்டமாக அமையாவிடில், பதவியைப் பெறும் வாயிலென்றும், உடமையாளன் தன் உடமையைக் காக்கும் பீடம் என்றும் கருதும் மனப்போக்கு உருவாகிவிடும்" என்றார் பேரறிஞர் அண்ணா. இன்று தன் குடும்ப உறுப்பினர்களுக்கு பதவியைப் பெறுவதற்கும், சொத்துகளை குவிப்பதற்கும் தானே தி.மு.க. என்கிற கட்சியை கருணாநிதி பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்? கருணாநிதியிடம் பொதுப்பணி எங்கு இருக்கிறது? அவரிடம் இருப்பதெல்லாம் குடும்பப் பணி ஒன்று தான்.

"ஜனநாயகம் பின்னோக்கிச் செல்லும் நிலை கூடாது. சிறந்த ஜனநாயக சூழ்நிலை வளர அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார் பேரறிஞர் அண்ணா. ஆனால், ஜனநாயகத்தை வேரோடு அழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. இப்படிப்பட்ட கருணாநிதிக்கு, தந்தை பெரியார் கொள்கை மற்றும் பேரறிஞர் அண்ணா கோட்பாடுகளைப் பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? திமுக-வை குடும்ப நிறுவனம் ஆக்கிவிட்டார் கருணாநிதி என்று உலகப் புகழ்பெற்ற "THE NEW YORK TIMES" அமெரிக்க நாளிதழ் கூட விமர்சனம் செய்திருக்கிறது.

அறிக்கைகள்...

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், "யாரோ எழுதுகிறார்கள் - யாரோ தட்டச்சு செய்து அதனை "பேக்ஸ்" மூலம் அனுப்புகிறார்கள். சில நாட்கள் அதைப் படித்து அம்மையார் கையெழுத்து போடுகிறார். சில நாட்களில் அவருக்கு அதற்கே நேரம் கிடைப்பதில்லை. எனவே அதையும் தட்டச்சு செய்தே அனுப்பி விடுகிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கருணாநிதி தன்னைப் போலவே அனைவரையும் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்! எனது அறிக்கைகள் அனைத்தும் என்னால் எழுதப்பட்டு, தட்டச்சு செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, என்னுடைய கையெழுத்துடன் தான் தினமும் வெளியிடப்படுகின்றன என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நேரடியாகவும், "பேக்ஸ்" மூலமும் பத்திரிகைகளுக்கு கொடுக்கப்படும் அறிக்கைகளில் என்னுடைய கையெழுத்து நிச்சயம் இருக்கும்.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் வசதிக்காக மின் அஞ்சல் மூலம் அனுப்பப்படும் போது என்னுடைய கையெழுத்து அதில் இருக்காது. அதற்கு அவசியமும் இல்லை. வங்கிகள், பொதுத் துறை மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர் கணக்குகள் குறித்த விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்படும் போது இந்த முறை தான் பின்பற்றப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பத் துறை மூலம் இந்திய அரசின் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை தன்னுடைய அமைச்சர் மூலம் சுருட்டிக் கொள்ளும் கருணாநிதிக்கு, தகவல் தொழில்நுட்பத்தின் பயன்களை அறிந்து கொள்ள நேரமில்லை போலும்! அந்த அளவுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கிறது!

"உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்" என்ற அடிப்படையில் செயல்படக் கூடியவர் கருணாநிதி என்று நான் தெரிவித்த கருத்திற்கு நீண்ட விளக்கம் அளித்து இருக்கிறார் கருணாநிதி.

இந்திரா...

முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி மதுரை வந்த போது அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திவிட்டு, அந்தத் தாக்குதலில் அன்னை இந்திரா காந்தி அவர்களுக்கு ஏற்பட்ட ரத்தக் காயத்தை, பெண்ணினத்தையே இழிவுபடுத்தும் வகையில் கொச்சைபடுத்திவிட்டு, பின்னர் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக" என்று கூறியதை மக்கள் இன்னமும் மறக்கவில்லை என்பதையும்; விதவை ஓய்வூதியத் திட்டத்திற்கு அன்னை இந்திரா காந்தி விண்ணப்பித்தால் அதை பரிசீலிக்கத் தயார் என்று தி.மு.க. அறிவித்ததை யாரும் மறக்கவில்லை என்பதையும்;

பெருந்தலைவர் காமராஜ், தியாகி கக்கன்ஜி, மூதறிஞர் ராஜாஜி என அனைத்துத் தலைவர்களையும் கருணாநிதி வசைபாடியதும்; ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சந்தேகத்தின் நிழல் கருணாநிதியின் மீது படிந்திருக்கிறது என்று ஜெயின் கமிஷன் இடைக்கால அறிக்கை சுட்டிக்காட்டியதும் மத்தியிலே உள்ளவர்களுக்கு நன்றாகத் தெரியும் என்பதையும் கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிபிஐ அதிகாரி மாற்றம்...

அடுத்தபடியாக, 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டதற்கு தான் காரணமல்ல என்றும், இதற்கு ஆதாரம் இருக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார் கருணாநிதி. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கிய குற்றவாளி முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா. இதற்கு பின்னணியில் கருணாநிதியும், அவரது குடும்பமும் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கை நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரித்து வந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்படுகிறார் என்றால், இந்த மாறுதலில் கருணாநிதியின் தலையீடோ அல்லது கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக-வின் தலையீடோ நிச்சயம் இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இந்த மாற்றம் ஏற்பட்டு இருக்காது. சூழ்நிலைச் சான்று (Circumstantial evidence) தான் இதற்கு ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

மத்திய கண்காணிப்பு ஆடையர் நியமனம் குறித்து அண்மையில் உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து உள்ளது. ஏற்கெனவே ஊழல் வழக்கில் சிக்கியுள்ள, ஸ்பெக்ட்ரம் ஊழலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மத்திய தொலைதொடர்புத் துறை செயலாளர் எப்படி மத்திய கண்காணிப்பு ஆடையராக நியமனம் செய்யப்பட்டார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், இதிலும் கருணாநிதியின் தலையீடு இருக்குமோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் தற்போது பரவலாக ஏற்பட்டுள்ளது. இதற்கும் சூழ்நிலைச் சான்று தான் ஆதாரம் என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீரா ராடியா...

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து முதலில் பேட்டி அளித்த கருணாநிதி, முந்தைய அமைச்சர்கள் பின்பற்றியதைத் தான் ராசா பின்பற்றினார் என்றும், அதில் தவறு ஏதும் நடைபெறவில்லை என்றும் கூறினார். இதனை அடுத்து, 2ஜி ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து அமைச்சர்கள் அடங்கிய குழுவுக்கு (Empowered Group of Ministers) மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தி பாரதப் பிரதமருக்கு 2006-ஆம் ஆண்டே கடிதம் எழுதியுள்ளார் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன்.
இதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் விலையை நிர்ணயிப்பதில் தி.மு.க. குறியாக இருந்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது போன்று ஆதாரங்கள் வந்து கொண்டுள்ள நிலையில், ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டு கருணாநிதி அறிக்கை வெளியிடுவது அவரது அறியாமையைத் தான் காட்டுகிறது.

நீரா ராடியா - ராசா, நீரா ராடியா - கனிமொழி உரையாடல்கள் தொலைக்காட்சியிலும், பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளன. இது குறித்து கருணாநிதி இதுநாள் வரை வாய் திறக்கவில்லை.

இதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் கட்சித் தலைவரை அவரது இல்லத்தில் ரகசியமாக சந்தித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இதன் மர்மம் என்ன என்பது குறித்து கருணாநிதி இதுவரை விளக்கவில்லை.

எது எப்படியோ, உலக மகா ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதியின் குட்டு வெளிப்படும் நாள் வேகமாக நெருங்கிக் கொண்டு இருக்கிறது," என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

http://vikatan.com/news.php?page=5&nid=63

No comments:

Post a Comment