Friday, December 17, 2010

எம்.ஜி.ஆரின் சாதனைகள்

போராட்டமே வாழ்க்கை!

”என் வாழ்க்கையில் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இன்றுவரை போரட்டமாகவே இருக்கிறுது!”

இப்படிச் சொன்னவர், காலம் சென்ற புரட்சித் தலைவர் திரு. எம்.ஜி.ஆர். அவர்கள்தான்!

இதை அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் சர்வ சாதாரணமாக, பேச்சோடு பேச்சாகச் சொன்னார். ஆனால், அதில் பொதிந்திருந்த அர்த்தங்கள்தாம் எத்தனை எத்தனை!

‘எம்.ஜி.ஆர்!’ என்று சொன்னாலே இந்தியா முழுவதிலும், – ஏன், உலகம் முழுவதிலும் – உள்ள தமிழர்கள் அனைவரும் உடனே புரிந்து கொள்ளும் நிலையையும் பிரபலத்தையும் பெரும்புகழையும் 1972 ஆம் ஆண்டில் அவர் எய்தியிருந்தார். ஆனால், அந்த நிலையை எட்டுவதற்கு தம் வாழ்நாளின் ஆரம்பக்கட்டத்தில் அவர் சந்தித்த போராட்டங்கள் ஒன்றா, இரண்டா?

அந்தப் போராட்டங்களில் வெற்றி பெறுவதற்கு அவர் ஆற்றிய சாகசங்கள் எத்தனை! சந்தித்த சோதனைகள் எத்தனை!

அந்த வாழ்க்கைப் போராட்டத்தில் அவர் நீந்திய நெருப்பு ஆறுகள் எத்தனை!

அவர் ஏறி இறங்கிய இமயக் கொடுமுடிகள் எத்தனை! அவர் தாண்டி வந்த சஹாராப் பாலைவனங்கள் தாம் எத்தனை! எத்தனை!

ஏழு வயதிற்குள் எத்தனை நாள் வறுமைத் தீயில் வாடி இருக்கிறார்!

கதாநாயகன் ஆவதற்குள் பட்ட துன்பங்கள்

ஏழாவது வயதிலேயே வயிற்றுப்பிழைப்புக்காக நாடக்க் கம்பெனியில் சேர்ந்து, நடிப்புக் கலையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு ஒரு நாடறிந்த நடிகராகப் பரிணாம வளர்ச்சி பெறுவதற்குள் அவர் பட்ட அல்லல்கள் எத்தனை! ஆசிரியர்களிடம் பெற்ற பிரம்படிகள் எத்தனை!

நாடக உலகிலிருந்து திரைப்பட உலகில் புகுவதற்காக அவர் நடந்து நடந்து தேய்ந்த செருப்புகள் எத்தனை!

‘சதி லீலாவதி’ என்னும் படத்தில் ஒரு சாதாரண வேடத்தில் அறிமுகமாகி, ‘ராஜகுமாரி’ என்னும் படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடிப்பதற்குள் இடையில் அவர் அடைந்த இன்னல்கள் எத்தனை! சந்தித்த ஏற்ற இறக்கங்கள் எத்தனை!

ராஜகுமாரி படத்தை அடுத்து பல படங்களில் சரித்திர காலக் கதாநாயகன் வேடம் தாங்கியே நடித்து வந்த அவரது திரைஉலக வா.க்கை, சமூகப்படங்கள் தயாராகி மக்கள் ஆதரவைப் பெறத் தொடங்கிய ஒரு கால கட்டத்தோடு முடித்துவிட்டதாக ஆரூடம் சொன்னவர்கள் எத்தனை பேர்!

சமூகப்பட நாயகனாகவும் தம்மால் சிறப்பாக நடிக்க முடியும்; எந்த வேடத்திலும் தம்மால் ஒளிவீசிப் பிரகாசிக்க முடியும் என்று அவர் நிரூபித்ததை நாடறியும். இன்று அது வரலாறு.

ஆனால் அப்படி நிரூபிப்பதற்குள் அவர் சந்தித்த சோதனைகள் எத்தனை!

ஆரம்ப காலத்தில் கதர் வேட்டி, கதர்ச் சட்டை அணிந்து சிறிய ருத்ராட்ச மாலையைக் கழுத்தில் தரித்துக் காங்கிரஸகார்ராக இருந்தார் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். அப்போது அவர் அறிஞர் அண்ணாவைச் சந்தித்து, அவரது அறிவார்ந்த பேச்சாலும், ஆணித்தரமான எழுத்தாலும் கவரப்பட்டு, அவர் காட்டிய மெய்யன்பால் திராவிட இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அவர் படிப்படியாய் உழைத்தார். உயர்ந்தார். அண்ணாவின் ‘இதயக்கனி’ யாகவும் மாறினார்.

ஆனால் அந்த இதயக்கனியை கன்றிவிடும்படி கல்லால் அடித்தவர்களும், சொல்லால் அடித்தவர்களும் எத்தனை பேர்! அவர்களை எதிர்த்துக் கழக்த்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணற்றன.

ஊறரிந்த நடிகர் ஆகி, ஒப்பற்ற ‘புரட்சி நடிகர்’ ‘மக்கள் திலகம்’ என்றெல்லாம் ஏற்றிப் போற்றப்பட்ட காலத்திலுங்கூட அவர் சென்ற வழி மலர் தூவப்பட்ட பாதையாகவா இருந்தது? கல்லும், முள்ளும் நிரம்பி அவை அவர் காலைக் குத்திக் கிழித்துக் குருதியைக் கொட்டச் செய்தனவே!

கால் முறிந்தாலும் மனம் முரியாதவர்!

1959 ஆம ஆண்டில், தஞ்சை மாவட்டம் சீர்காழியில் ‘இன்பக்கனவு’ என்னும் நாடகத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சண்டைக்காட்சியில்
அவர் கால் எலும்பு முறிந்தது. அதனால் அவர் படுத்த படுக்கையானார். அந்த நிலையலேயே சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சில மாதங்கள் ஓய்வு பெறவும் நேர்ந்தது.

அப்பொழுது அவரது ‘அன்பார்ந்த’ எதிரிகள் என்ன சொன்னார்கள்? ‘முடிந்தது எம்.ஜி.ஆரின் கதை! இனிமேல் அவரால் முடியாது! ஒடிந்துவிட்ட அவர் கால் இனிமேல் ஒன்றுகூடாது. முரிந்த எலும்பு ஒன்றுகூடி அவர் எழுந்து நடந்தாலும் முன்போல அவரால் சண்டைக்காட்சிகளில் ஓடி ஆடி நடிக்க முடியாது” என்றுதானு கூறினார்கள்.

சண்டைக்காட்சிகளில் எம்.ஜி.ஆரின் அருகில் நிற்க முடியாதவர்களெல்லாம் அதை அறிந்து மகிழ்ச்சிக் கூத்தாடினார்கள்.

ஆனால், நடந்தது வேறு. ஆம்; மீண்டும் தமிழ்த்திரை உலகில் மிகச்சிறந்து நடிகராகத் தலை நிமிர்ந்து நின்றார்.

குண்டடிப் பட்டாலும் குன்றாதவர்

1967 ஆமு ஆண்டில் எம்.ஜி.ஆரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். குண்டு பாய்ந்த நிலையில் எம்.ஜி.ஆர். இராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதை அறிந்து நாடே திடுக்கிட்டது. தாய்க்குலம் அழுது புலம்பியது. இளைஞர் கூட்டம் பெருந்துன்பமுற்றது.

அப்பொழுதும் அவர் விரோதிகள் என்ன சொன்னார்கள்?

”முடிந்தது எம்.ஜி.ஆர் கதை இனி மேல் அவர் பிழைக்கமாட்டார்” என்று சிலர் அற்ப மகிழ்ச்சி கொண்டார்கள்.

மறுநாள் அந்தச் செய்தி வந்தது ”எம்.ஜி.ஆரின் தொண்டைக்கருகில் பாய்ந்த குண்டு அகற்றப்பட்டது; அவர் உயிருக்கு ஆபத்தில்லை! என்பதே அது.

அப்போதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்?

”பிழைத்து எழுந்தாலும் அவரால் முன்போலப் பேச முடியாது; பேச முடியாவிட்டால் எப்படி நடிக்க முடியும்?” என்று கூறி தங்கள் குரூரமான மகிழ்ச்சியைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்!

எம்.ஜி.ஆர். கழுத்தில் பாய்ந்த குண்டுச்சிதறல் ஓர் ஓராமாய் ஒதுங்கிவிட்டது. அவர் தும்மியபோது தானாகவே அது வெளியே வந்துவிட்டது. இப்படி மறுபிறவியெடுத்த எம்.ஜி.ஆரின் தொண்டைப்புண் ஆறே மாத்த்தில் ஆறியது. அவரால் பேச முடிந்தது. ஆனால், குரல், குழந்தைகள் பேசும் மழலைபோல் சற்றுத் தெளிவின்றி அமைந்தது; ஆனால், அவரது கோடான கோடி இரசிகர்களும், உடன் பிறபுக்களும் அக்குறயை எண்ணி அவர்மீது கொண்டிருந்த அன்பிலிருந்து சற்றும் மாறவில்லை. அது கண்டு எதிரிகள் வியப்பால் செயலற்றனர்.

1972 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டுத் தூக்கி எறியப்பட்டார்.

அவர் செய்த தவறு என்ன? கணக்குக் கேட்டார். ஆம், கட்சிக்கணக்கைக் கேட்டார்; சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு எவ்வளவு சொத்துகள் உள்ளன என்று கணக்கு காட்ட வேண்டும் என்று கேட்டார்.

அதனால் கட்சித் தலைமை சீறியது. அவரைக் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்தது. பின்னர் நிரந்திரமாகவே நீக்கிவிட்டதாகவும் அறிவித்தது!

அப்பொழுதும் அவர் எதிரிகள் என்ன சொன்னார்கள்? ”இன்றோடு முடிந்தது எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்வு” என்று கொக்கரித்தார்கள்.

‘கட்சியால் எம்.ஜி.ஆர் வளர்ந்தாரா, எம்.ஜி.ஆரால் கட்சி வளர்ந்ததா? என்று பத்திரிக்கைகளுர், அரசியல் கட்சிகளும் ஆராய்ச்சி நடத்தின.

ஆனால், எம்.ஜி.ஆரின் நிலை என்ன?

எம்.ஜி.ஆர். மீண்டும் இமயம்போல் எழுந்து நின்றார்.

புரட்சி நடிகர் புரட்சித் தலைவராக மாறினார். அண்ணாவின் பெயரால் ஓர் அரசியல் கட்சியைத் தொடங்கினார். ஐந்தே ஆண்டுகளில் கடுமையான அடக்குமுறைகளையும் மீறி, கட்சியை வளர்த்தார். 1987 இல் தமிழகத்தின் ஆட்சியிலும் அமர்ந்தார்.

ஆனால், அந்த ஐந்தாண்டுகளுக்குள் அவர் சந்தித்த போராட்டங்கள்தான் எத்தனை.

முதல் போராட்டம்


1967 ஆம் ஆண்டில், தமிழக்த்தில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் செயல்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் அமர்ந்தது. அதற்கு வித்தாக அமைந்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் ஆவார். ஆம்; நடிகர் எம்.ஆர். ராதா, எம்.ஜி.ஆர் வீட்டினுள் புகுந்து அவரைத் தம் கைத்துப்பாக்கியால் சுட்டார், குண்டடிப்பட்ட எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றார்.

அப்போது கட்டிடப்பட்ட நிலையில் மக்கள் திலக்த்தைப் புகைப்படமெடுத்து சுவரொட்டிகள் அச்சிட்டுத் தமிழகம் முழுவதிலும் ஒட்டச் செய்தது.

தமிழக மக்களிடம் ஒரு வகையான அனுதாப அலையை உருவாக்கி மக்களிடம் வாக்கைப் பெறக் கட்சித் தலைவர்கள் சிலர் சொன்ன யோசனை இது.

அதிக வாக்கு யாரால் கிட்டியது?

அதுவரை தி.மு.க.வுக்குப் பெருமளவில் வாக்களிக்காத தாய்க்குலம், குண்டடிப்பட்டுக் கட்டிடப்பட்ட நிலையில் இருந்த புரட்சித் தலைவரின் தோற்றத்தைப் பார்த்து முதன் முறையாக தி.மு.க.வுக்கு வாக்களித்தது. அதனால் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி தோற்றகடிக்கப்பட்டுத் தி.மு.க ஆட்சியில் அமர முடிந்துது.

ஆக, எதிர்க்கட்சியாய் இருந்த தி.மு.க.வை ஆளுங்கட்சியாக ஆக்கியது புரட்சித்தலைவர் மீது தமிழ்நாட்டுத் தாய்க்குலமும், இளைஞர்களும் கொண்டிருந்த அபரிமிதமான அன்பு என்று சொன்னால் அதிக மிகையில்லை.

தி.மு.க.வுக்கு மக்கள் இவ்வளவு பெரிய வெற்றியை அளிப்பார்கள் என்று கனவு கூட காணவில்லை.

தலைவரின் தவறான கணிப்பு!

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற அண்ணா 1969 – இல் நோயுற்று மரணமடைந்தார். அவருக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி அண்ணாவைப் போல் எம்.ஜி.ஆரிடம் சுமூக நட்புக் கொள்ளவில்லை. முதல்வர் பொறுப்பேற்ற கருணாநிதி மூன்றே ஆண்டுகளில் தமிழகத்தின் தன்னேரில்லாத்த் தலைவராக உயர்ந்தார். அதுமட்டுமா? அப்போது அகில இந்தியக் கட்சியான காங்கிரஸில் ஏற்பட்ட மாற்றமும் அவருக்குப் பயனுள்ளதாய் அமைந்தது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது. பிரதமர் இந்திராகாந்தி ஒரு அணியிலும், பெருந்தலைவர் இன்னோர் அணியிலும் பிரிந்து நின்றனர். அது கலைஞருக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.அவர் பிரதமர் இந்திராகாந்தியின் அணியோடு தேர்தல் உறவை ஏற்படுத்திக்கொண்டார். 1971 இல் நடந்த பாராளுமன்றத் தேர்தலோடு தமிழகச் சட்டமன்றத் தேர்தலையும் சேர்த்து நடத்தி, மிகப்பெரும் வெற்றியைப் பெற்றார். அதனால் மீண்டும் முதல்வரான கலைஞர் கருணாநிதிக்கு முன்னிலும் அதிகமான தன்னம்பிக்கை ஏற்பட்டது. அதன் விளைவாகத் தி.மு.க. வின் எல்லா மட்டங்களிலும் கலைஞரின் செல்வாக்குப் பெருகியது. ஆட்சியும் தன் கையில், கட்சியும் தன் கையில் என்னும் நிலை ஏற்பட்டபோது எம்.ஜி.ஆரின் உதவி தமக்குத் தேவையில்லை என்று கருதி விட்டார் கலைஞர்.

ஆட்சியின் சரிவுக்கு அடித்தளங்கள்

இதற்கிடையில் தி.மு.கழக ஆட்சியைப்பற்றிய தவறான கருத்துக்கள் மக்களிடையே பரவின. மேற்சொன்ன போக்கு அந்த நேரத்தில் எம்.ஜ.ஆருக்கு வேதனை அளப்பதாய் இருந்தது. இந்நிலையில், எம்.ஜி.ஆர். இரசிகர் மன்றங்களின் மீது சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு மன்றங்கள் உதாசீனப்படுத்தப்பட்டன.கட்சி அமைப்பின் கீழ் பதிவு செய்துகொண்டு, கட்சியின் அனுமதியோடு தான் எம்.ஜி.ஆர் மன்றங்கள் செயல்படவேண்டும் என்னும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

முதலில் ஊமை யுத்தமாகத் தொடங்கி ஊர்தோறும் ஓசையில்லாமல் பரவி வந்த இந்தப் பனிப்போர், மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படம் வெளிவந்ததும், பகிரங்கமாய் வெடித்தது.

நாடு முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்ற அமைப்பாளர்ள். புரட்சித்தலைவருக்குப் புகார் கடிதங்களை அனுப்பினர். எம்.ஜி.ஆர் மன்றங்களை மாற்றந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இந்நடவடிக்கைகள் புரட்சித் தலைவரை மிகவும் வேதனைப்படுத்தின.

இந்நிலையில் தி.மு.கழக அரசு பூரண மது விலக்குக் கொள்கையை அடியோடு கைவிட்டது. அதாவது மது விலக்குச் சட்டம் இரத்து ஆகிவிட்டது. பெருந்தலைவர் காமராஜரும் மூதறிஞர் ராஜாஜியும் இதைப் பகிரங்கமாய் எதிர்த்தனர்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். கட்சிக் கட்டுப்பாடு கருதி தி.மு.கழகப் பொதுக்குழுவில் மதுவிலக்குச் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால், அத்தீர்மானம் தாய்க்குலத்திற்குப் பெருந்தீங்கு விளைவிக்கும் என்று கருதித் தனிப்பட்ட முறையில் அதனை எதிர்த்தார். அதைக் கலைஞரிடமும் எடுத்துரைத்தார். அதனால் பயன் எதுவும் ஏற்படவில்லை.

அடுத்து, மத்திய அரசை ஆளுகின்ற தி.மு.க. வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் போக்கு பிடிக்காத்தால் திடீரென்று ஒருநாள் ”உறவு முறிந்தது” என்று கருசணாநிதி அறிவித்தார்.

மேற்குறித்த நடவடிக்கைகள் கழக ஆட்சிக்குப் பிற்காலத்தில் பெரிய இடையூற்றை ஏற்படுத்தக்கூடும் என்பது எம்.ஜி. ஆரின் கணிப்பாய் இருந்தது.

அந்த அக்டோபர் 10 – ஆம் நாள்!

இத்தகைய சூழ்நிலையில், 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 8 – ஆம் தேதியன்று. (பழைய) செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றத்தில் ஒரு தி.மு.கழகப் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது. அதில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பின்வருமாறு பேசினார்;

”அறிஞர் அண்ணாவின் பெயரால் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் ஆட்சியைக் கைப்பற்றிய கலைஞரின் தலைமையில் செயல்படும் தி.மு.க. ஆட்சியில் இலஞ்சமும் ஊழலும் பெருகிவிட்டன எனப் பொதுமக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. இது நம்மையெல்லாம் வளர்த்து ஆளாக்கிவிட்ட அறஞர் அண்ணாவுக்கு நாம் செய்யும் கைம்மாறு ஆகாது. இலஞ்சத்தை ஊழலையும் ஒழித்துச் சுத்தமான நல்லாட்சியை நடத்துவதுதான் அண்ணாவுக்குச் செய்கிற நன்றியாகும்; பெருமை ஆகும்.

கழகத் தலைவர்கள் அனைவரும் தங்கள் சொத்துக் கணக்கைப் பொதுமக்கள் முன்னால் சமர்பிக்க வேண்டும். கழகச் சட்டமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் த்த்தமது சொத்துக்கணக்குகளைஞ்ச் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் இலஞ்சத்தையும் ஊழலையும் ஒழிப்பதற்கு ஆரம்ப்பணியாய் இருக்கும்.

அறிஞர் அண்ணாவே கைவிடத் துணியாத மது விலக்குக் கொள்கையை கைவிட்டது, கலைஞர் அரசு அண்ணாவுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். அண்ணாவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய துரோகமாகும்!”

கணக்குக் கேட்டால் கட்சியை விட்டுச் செல் என்பதா?

எம்.ஜி.ஆரின் இந்த முழக்கம் கழகத்தலைமையை அதிர்ச்சியடையச் செய்தது

உடனே கழகச் செயற்குழுவும் பொதுக்கழுவும் கூட்டப்பட்டன. இந்த இரு குழுக்களிலும் அங்கம் வகித்த பெரும்பாலானவர்களும் பலைவருக்குக் கட்டுபட்டவர்கள் தாம. இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனைப்போன்ற சிலரைத் தவிர, அத்தனை பேரும் ஏகோபித்த குரலில் ”எம்.ஜி.ஆரைக் கழகத்திலிருந்து தூக்கியெறிய வேண்டும்!” என்றனர். அதைத் தொடர்ந்து தி.மு.க.தலைமை எம்.ஜி. ஆரைத் தி.மு.க. விலிருந்து தற்காலிகமாக நீக்கி வைத்திருப்பதாக அறிவித்தது. அன்று 1972 – ஆம் ஆண்டு அக்டோபர் 10 – ம் நாளாகும்.

தி.மு.க. தலைமை தன்னைக் கழகத்தைவிட்டு நீக்கிய அன்று புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் காலையிலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்தில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்தார். தி.மு.க. தலைமை நிலையத்திலிருந்து சத்யா படப்பிடிப்பு நிலையத்திற்கு விரைந்த வந்த பத்திரிகை நிருபர் ஒருவர் புரட்சி நடிகரை அணுகி, அந்தத் தகவலைத் தயங்கித் தயங்கிச் சொன்னார். அதைக் கேட்ட புரட்சி நடிகர் தமக்கே உரிய மந்தகாசப் புன்னகை மாறாமல், ”அப்படியா? மிக்க மகிழ்ச்சி!” என்றார். சற்று நேரத்தில் மேலும் பத்திரிகையாளர் பலரும் அங்கே வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரும் எம்.ஜி.ஆரின் மீது தனிப்பட்ட முறையில் அன்பு கொண்டவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் எம்.ஜி. ஆரை விலக்கியது குறித்து மிகுந்த வருத்தமுற்றனர். அவர்கள் முகங்களெல்லாம் வாட்டமுற்றிருந்தன. அவர்களை யெல்லாம் புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் வேடிக்கையாகப் பேசி உற்சாகப்படுத்தினார்.

”இன்றுதான் நான் மிகவும் நிம்மதியடைகிறேன். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வாருங்கள். சாப்பிடலாம்!” என்று எம்.ஜி.ஆர். அவர்களை அழைத்தார்.

அவர்களுள் சிலர் தாங்கள் ஏற்கெனவே சாப்பிட்டு விட்டதாக்க் கூறினார்கள்.

”பரவாயில்லை. இந்த நல்ல செய்தியைச் சொன்ன உங்களுக்கு நான் இனிப்பு வழங்க விரும்புகிறேன். கொஞ்சம் பாயாசமாவது சாப்பிடுங்கள்” என்ற கூறி எல்லாரையும் அழைத்துச் சென்றார். எல்லாருக்கும் பாயசம் வழங்கி தானும் பாயசம் சாப்பிட்டார்.

அன்றுவரை, அந்த நிமிடம்வரை, அண்ணாவின் பெயரால் தாம் தனிக்கட்சி அமைப்போம்; அதற்குக் கழக உடன் பிறப்புகளும், தமிழக மக்களும் எதிர்பாராத வகையில் பேராதரவை அளிப்பார்கள், அதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கும். அந்தப் புதிய வரலாற்றின் நாயகனாகத் தாம் ஆவோம் என்று அவர் கனவிலும் கருதியதில்லை.

கணக்குக் கேட்டதற்காக, கழகத்தின் பொருளாளரான புரட்சி நடிகரை, கழகத்திலிருந்து விலக்கியதன் மூலம் கழகத் தலைமை தன்னையறியாமலேயே ஒரு புதிய சக்தி உருவாக வழி செய்து கொடுத்துவிட்டது.

இனி, அந்த அக்டோபர் 10 – ஆம் தேதிக்குப் பின்னர் அறிவோம்.

புரட்சித் தலைவரைக் கழக்த்திலிருந்து தறகாலிகமாக நீக்கிவிட்டார்கள் என்னும் செய்தி அன்று மாலைப் பத்திரிகைகள் மூலமும், வானொலிச் செய்தி மூலமும் தமிழகம் முழுவதிலும் காட்டுத்தீயாகப் பரவியது.

அடுத்த நாள் முதல் தமிழகம் முழுவதிலும் தமிழகத்தின் சாலைகளில் ஓடிய வாகனங்களில் எல்லாம், ”பொன் மனச் செம்மல் வாழ்க! பொன்மனச்செம்மலை சஸ்பெண்ட் செய்தததை வாபஸ் வாங்கு!… சர்வாதிகாரம் ஒழிக! அண்ணாவின் இதயக்கனி எம்.ஜி.ஆர் வாழ்க என்னும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தன.

அந்த சுவரொட்டிகளுள் பாதி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களால் கையாலேயே எழுதப்பட்டவையாகும். மீதி உள்ளதை ஆங்காங்கே இருந்த சிறுசிறு அச்சகங்களில் இரவோடு இரவாக அச்சடிக்கப்பட்டவையாகவும் பெரிய அச்சகங்களில் அடிக்கப்பட்டு, ஈரம் காய்வதற்கு முன்னரே எடுத்து வரப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளாயும் இருந்தன.

நெஞ்சில் எழுந்த நினைவலைகள்

சென்னை முதல கன்னியாகுமரி வரையிலும் உள்ள கழகத் தொண்டர்கள் தாங்களாகவே கிளர்ந்தெழுந்து முடிவு செய்து நடவடிக்கையில் இறங்கினார்கள். யாரும் அவர்களைக் கேட்டுக்கொள்ளவில்லை; தூண்டிவிடவில்லை.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆருக்காக பொங்கி எழுந்து களத்தில் குதித்த கழகச் செயல் வீரர்கள் அடுத்த ஒரு வாரகாலம் வரை தம் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தம் பொருட்டுத் தம் தோழர்கள் கொந்தளித்துக் கொண்டிருந்த அந்த நெருக்கடியான நிலையில் எம்.ஜி.ஆர் தம் ராமாவரம் தோட்டத்தில் தம் நண்பர்களோடு அமர்ந்து அடுத்துச் செய்யவேண்டியதைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டிருந்தார்.

அப்போது அவர் உள்ளத்தில் சில பழைய நிகழ்ச்சிகள் திரைப்படம் போல ஓடிக்கொண்டிருந்தன.

அறிஞர் அண்ணாவைத் தாம் சந்தித்தது.

முதன்மதலாகச் சென்னை மாநகராட்சியைக் கைப்பற்ற அண்ணாவின் ஆணைப்படி அல்லும் பகலும் தாம் உழைத்தது;

அண்ணா தம்மைத் ‘தம் இதயக்கனி’ என்று சிறப்பித்தது.

சில முடிவுகளில் ‘எம்.ஜி.ஆரின் கருத்து என்ன’ என்று கேட்டு அண்ணா செயல்பட்டது;

இக்கட்டான சூழ்நிலையில் கலைஞரை முதல்வராக்கியது

கருணாநிதியை மீண்டும் முதல்வராக்கத் தாம் உதவியது. அதன் பின்னர் கழக அரசு அண்ணாவின் பாதையை விட்டு விலகிச் சென்றதும், அதைத் தொடர்ந்து நடந்த சில விரும்பத்தகாத நிகழ்ச்சிகளும் முதலியனவெல்லாம் உள்ளத்திரையில் அடுத்தடுத்து எழுந்தன.

நெருங்கிய நண்பர்களெல்லாம் தனி இயக்கம் தொடங்கியே தீரவேண்டும் என்று வற்புறுத்திக் கொண்டிருந்தனர். நாடெங்கும் உள்ள எம்.ஜி.ஆர் மன்ற மறவர்களோ தாங்கள் இனி எவ்வாறு செயல்பட வேண்டும் எனத் தானைத் தலைவனின் கட்டளையை எதிர்பார்த்திருந்தனர். எம்.ஜி.ஆரோ அண்ணாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் பிளவுபடுவதா? அதற்குத் தாமே காரணமாய் இருக்கலாமா என்று எண்ணிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் கழகத் தலைமைக்கும், புரட்சித் தலைவருக்கும் இடையில் சமரசம் செய்து வைக்க சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அருமை நண்பர்கள் எங்கே?

வழ்க்கமாகப் பொழுது விடிவதற்கு முன்பாகவே எம்.ஜி.ஆர். இல்லத்தின் முன்பு அவர் முகதரிசனம் காணவும் உதவி பெறவும், அரசியல் ஆலோசனை பெறவும், கூட்டம் கூடியிருக்கும். அன்று எஸ்.எம். துரைராஜ், கே.ஏ.கிருஷ்ணசாமி,அனகாபுத்தூர் இராமலிங்கம், ஆளந்தூர் மோகனரங்கம் போன்ற ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் வரவில்லை. இது எம்.ஜி. ஆருக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆனார்கள் என் நண்பர்கள்? என்னிடம் உதவி பெற்றவர்கள், என் உதவியால் பதவி பெற்றவர்கள் எங்கே? நேரில் வர இயலாவிட்டாலும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டிருக்கலாமே! பதவியில் இருக்கும் கருணாநிதியை எதிர்க்க அஞ்சுகிறார்களோ? அவர் கோபத்திற்கு ஆளாக நேரிடுமே என்று பயப்படுகிறார்களோ? என்று எண்ணி வருந்திக் கொண்டிருந்தார்.

ஆனால், அரசியலைப் பிழைப்பாக்க் கொண்ட சிலர் தான் அற்ற குளத்து அறுநீர்ப பறவைகளாய் இருந்தார்களே தவிர, சாதாரணத் தொண்டர்கள் அப்படி இருக்கவில்லை.

தமிழகம் முழுவதிலும் உள்ள எம்.ஜி.ஆர். மன்றத் தோழர்கள் தங்களுக்குத் தாங்களே தளபதிகளாக மாறினர். புரட்சித் தலைவரை விலக்கிய தி.மு.க. தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கொடிகளை இறக்கினர். ‘தாமரை’ உருவம் பொறித்த கொடிகளை ஏற்றினர். ஓர் ஊரில் நிகழ்ந்திருந்த இந்த நிகழ்ச்சி பல ஊர்களுக்கும் பரவியது. ஆங்காங்கு உள்ள தோழர்கள் தாமரைக் கொடுகளை ஏற்றி வைத்துப் ‘புரட்சித் தலைவர் வாழ்க!’ என்று முழக்கமிட்டார்கள்.
நானகாம் நாளன்று பற்பல ஊர்களிலிருந்து, தோழர்கள் லாரி, வேன், பஸ், இரயில் எனப் பல வாகனங்களில் ஏறி சென்னையை நோக்கிப் படையெடுத்தது போலச் சாரி சாரியாக வரத் தொடங்கினார்கள்; சமுத்திரமாகப் பெருகினார்கள்.

அலை கடல் எழுந்ததோ?

ஒரே நாளில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் சென்னை நகரத்தில் திரண்டுவிட்டனர். அவர்களுள் பெரும் பாலானோர் புரட்சித் தலைவரின் வீடு எங்கே இருக்கிறது என்பதை அறியமாட்டார்கள். அவர்கள் சென்னை அவ்வை சண்முகம் சாலையிலிருந்த எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அலுவலக்த்தை அறிவார்கள்; சத்யா ஸ்டுடியோவை அறிவார்கள்.

எம்.ஜி.ஆர் பிக்சர்ஸில் எம்.ஜி.ஆர் இல்லை என அறிந்ததும் அலை அலையாகத் திரண்டு தோழர்கள், அடுத்து சத்யா ஸ்டுடியோவுக்குச் சென்று, சாலைகளில் குழுமினார்கள்.

காலை ஏழு மணிமுதல் திரளத் தொடங்கிய கூட்டம் எட்டு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காமல் பெருகியது; அடையாறு சந்திப்பு, இராஜா அண்ணாமலைபுரம், கேசவப் பெருமாளபுரம்,கிரீன்வேஸ் சாலை, ராபர்ட்சன் பேட்டை, நாராயணசாமித்தோட்டம், மந்தைவெளி போன்ற பகுதிகளிலெல்லாம் பரவி மகாசமுத்திரம்போல விரிந்துகிடந்தது- போக்குவரத்து நிலை குலைந்துவிட்டது!.

”எங்கே மக்கள் தலைவர்? பொன்மனச் செம்மல் எங்கே? புரட்சித் தலைவரின் முகத்தைக் காணாமல், அவருடைய புன்சிரிப்பைப் பார்க்காமல், அவருடைய குரலைக் கேட்காமல்,நாங்கள் போக மாட்டோம், போகமாட்டோம்!” என்று அவர்கள் முழங்கினார்கள்.

சத்யா ஸ்டுடியோ நிர்வாகி பத்மனாபன் கூட்டத்தைப் பார்த்துச் செயலற்றவரானார். ”புரட்சித் தலைவர் இங்கே இல்லை!’ என்று அவர் கூறினார். ஆனால், பொங்குமாங் கடலெனத் திரண்டிருந்த மக்கள் கூட்டம் கலையவில்லை.

”தலைவரை வரச்சொல்லு! தலைவரை வரச் சொல்லு!” என்று பெரும் முழக்கமிட்டது.

உடனே உள்ளே சென்ற பத்மநாபன் ராமாவரம் தோட்டத்திற்குத் தொலைபேசியில் செய்தியைக் கூறினார்.

”இன்னும் அரை மணி நேரத்திற்குள் தலைவர் இங்கே வந்து சேரவில்லை யென்றால் அவர்கள் சத்யா ஸ்டுடியோவுக்குள் புகுந்துவிடுவார்கள் தலைவரை உடனே வரச்சொல்லுங்கள்!” என்ற தொலைபேசியில் கூறினார் பத்மநாபன்.

செய்தியறிந்ததும் புரட்சித் தலைவர் சில நண்பர்களுடன் புறப்பட்டுக் காரில் விரைந்து வந்தார்.

புரட்சித்தலைவர் கிண்டி கவர்னர் மாளிகையை நெருங்கும்பொழுதே வழியெல்லாம் தோழர்கள் கூட்டம் நிரம்பி வழிந்து. அவருடைய காரைக் கண்டதும் ”புரட்சித்தலைவர் வாழ்க! பொன்மனச்செம்மல் வாழ்க!” என்று விண்ணதிரத் தோழர்கள் முழங்கினர்.

புரட்சித் தலைவர் அந்தத் தோழர்களைக் கடந்து அடையாறு முனைக்கு வந்து சேருவதற்குள் பெரும்பாடாகிவிட்டது. தேர் அசைவது போல அவருடைய கார் மிக மெதுவாகவே ஊர்ந்து செல்ல நேரிட்டது.

அன்பு வெள்ளத்தில் எம்.ஜி.ஆர்!

அடையாறு சந்திப்பை அடைந்தபோதே அதற்கு மேல் எம்.ஜி.ஆர் கார் போகவே முடியாது என்னும் நிலை நின்ற மக்கள் வெள்ளத்திற்குள் போய் நின்றார். அப்பொழுது அங்கே கூடியிருந்த தொண்டர்களின் உணர்ச்சியும், உற்சாகமும் கட்டு மீறின. எழுச்சி கொண்ட தொண்டர்கள் தங்கள் தலைவரைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு கூத்தாடினார்கள். ஏக காலத்தில் தங்கள் அன்புத் தலைவரின் பொன்னுடலைத் தொட்டுப் பார்க்கவும், அவரோடு கைகுலுக்கவும், எல்லாரும் முண்டியடித்துக் கொண்டு முன்னேறினர். அப்படி முன்னேறிய தோழர்கள் எல்லாரும் சேர்ந்து நெருக்கித் துன்புறச் செய்து விடுவார்களோ என்று அவரோடு வந்த நண்பர்கள் அஞ்சி நடுங்கினார்கள்.

ஆனால், புரட்சித் தலைவரோ, சற்றும் அஞ்சாமல் தொண்டர்களின் அன்பினில் திளைத்தார். தமக்கே உரிய வீரசாகசங்களைப் புரிந்து கீழே இறங்கி நின்றார். தம்மை நெருங்கிய தொண்டர்களைப் பார்த்து, ‘இனிமேல் நானும் உங்களோடு நடந்தே வருகிறேன். வாருங்கள் போகலாம்!” என்றூ கூறி விட்டுப் புறப்பட்டார்.

ஆனால், எம்.ஜி.ஆர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்த தொண்டர்கள் அவரை நடக்க விடுவார்களா? அவரைத் தம் தோளில் தூக்கிக்கொண்டனர். அதற்குதப் பின்னர் அடையாறு சந்திப்பிலிருந்து சத்யா ஸ்டுடியோ வாசல் வரை இலடசக்கண்க்கான தம் தம்பிகளின் தலையிலும் தோளிலும் அமர்ந்து ஊர்வலமாய்ப் போய்ச் சேர்ந்தார் எம்.ஜி.ஆர்.

அடையாறு சந்திப்புக்கும், சத்யா ஸ்டுடியோவுக்கும் இடையே உள்ள தூரம் அரை கிலோமீட்டர்தான். ஆனால் அந்தத் தூரத்தைக் கடந்து செல்ல அன்று புரட்சித் தலைவருக்கு இரண்டு மணி நேரம் ஆனது; ஆம்; செல்லும் வழியெல்லாம் மக்கள். கால் வைக்ககூட இடமில்லாத அளவுக்கு எல்லாத் திக்குகளிலும் மக்கள். எள விழவும் இடமற்ற அந்த மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் புகுந்து முன்னேறிச செல்வது இயலாத காரியமாகவே இருந்தது.

எம்.ஜி.ஆரைத் தொண்டர்கள் தூக்கிக் கொண்டுதான் சென்றார்கள் என்றாலும் அவர்கள் முன்னேறிச் செல்லவும் இடம் வேண்டுமல்லவா? நெருக்கியடித்து நினுற தொண்டர்கள் வழிவிட்டால்தானே? அவர்கள் வழிவிட அங்கே துளி இடமாவது காலியாக இருந்தால்தானே?

எப்படியோ ஒரு வழியாக புரட்சித்தலைவர் சத்யா ஸ்டுடியோ வாசலை அடைந்தார்.

தொண்டர்களின் உணர்வுகள் வடியட்டும் என்று காத்திருந்த புரட்சித்தலைவர் பின்னர் அவர்களை ஒரு வழியாகச் சமாதானப் படுத்தினார்.

‘மக்கள் யார் பக்கம்’ என்று அதுவரை மருகிக் கொண்டிருந்த அந்த மக்கள் திலகம், தாம் அழைக்காமலே வந்து திரண்டு நின்று, அன்பைச் சொரிந்து, ஆதரவு முழக்கம் எழுப்பிய அந்த மகள் கடலைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.

நாங்கள் உங்கள் பின் இருப்போம்!

அவர்களிடையே சில நிமிடங்கள் பேசிய அவர் அடுத்து தாம் என்ன செய்யவிருக்கிறார் என்று ஒரு கோடு காட்டிவிட்டு மக்கள் கூட்டத்தைப் பார்த்து, ”நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்கள்?” என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.

அப்பொழுதும் அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மன்ற மறவர்களும், பொதுமக்களும், ”தனிக்கட்சி அமையுங்கள்! தமிழகத்தை காப்பாற்றுங்கள்!” என்று குரல் கொடுத்தனர்.

அவர்கள் கோரிக்கையை புன்னகைத்ததும்ப வரவேற்றார், புரட்சித் தலைவர். பின்பு அவர் , ”ஓரிரு நாள்களில் தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். மக்கள் கருத்தை அறிந்து கொண்டு உங்கள் கருத்துப்படி செயல்படுவேன்” என்று உறுதியளித்தார்.

கருத்தறியும் சுற்றுப்பயணம்

எம்.ஜி.ஆர் தாம் கூறியபடியே மறுநாளே பொது மக்களின் கருத்தை அறியும் தம சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.

ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும்.

அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர். அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.

பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.

அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிர்க்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு மு.க்கமிட்ட மக்கள கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.

மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.

அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காக்க் கண்விழித்துக் காத்திருந்தது.

காஞ்சியில் கரைபுரண்ட மக்கள் வெள்ளம்

நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர். அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந் பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.

http://www.tamildesam.org/special-pages/indian-leaders/mgr/mgr-achievement/

No comments:

Post a Comment