Tuesday, February 15, 2011

கோவிந்த ராஜன் கமிட்டி & தமிழக அரசின் குள்ள நரித்தனம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவோடும் (!), பாராட்டுகளுடனும் (!) பீடு நடை போட்டு வரும் தமிழக அரசின் புதிய முயற்சி, கோவிந்தராஜன் கமிட்டி.

அதாவது, தமிழகம் முழுவதும் புற்றீசல் போல முளைத்துள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்காகவும் அப்பாவி பெற்றோர்களை பாதுகாக்கவும் புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்காக அந்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டியும் மிக தீவிரமாக பரிசீலனை செய்து ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு வகுப்புக்கும் எந்த அளவுக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானித்து அரசுக்கு அளித்தது.

அந்த அறிக்கையை வெளியிடுவதிலேயே அரசின் குயுக்தி வெளியாகி விட்டது. அறிக்கையின் முழு விபரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டது போல அரசு செய்யவில்லை. ஒவ்வொரு பள்ளியின் அறிவிப்பு பலகையிலும் கட்டண விபரங்களை ஒட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்கவில்லை. மாறாக, கோவிந்தராஜன் கமிட்டியிலேயே மேல்முறையீடு செய்வதற்கு தனியார் பள்ளிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதில் தவறு ஏதும் கிடையாது. ஏனென்றால், பாதிக்கப்பட்டவர்கள் என்ற முறையில் தனியார் பள்ளிகளுக்கு நிவாரணம் அளிப்பது சரியே.

அதைத் தொடர்ந்து, 6 ஆயிரம் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. தமிழகத்தில் மொத்தம் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மேல் முறையீட்டை விசாரித்த கோவிந்தராஜன் கமிட்டி, ‘இந்த ஆண்டு நாங்கள் நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும். மேல் முறையீட்டு மனுக்களை பரிசீலித்து, அது தொடர்பான விசாரணைக்கு கால அவகாசம் தேவைப்படுவதால் அந்த பணிகள் முடிந்தபிறகு நிர்ணயிக்கப்படும் புதிய கட்டணத்தை அடுத்த கல்லி ஆண்டு (2011&12) வசூலிக்கலாம்’ என்று கூறியது.

இங்கு தான், தமிழக அரசின் குள்ளநரித்தனம் வெளிப்படுகிறது. அதாவது, தேர்தல் ஆண்டான இந்த ஆண்டில் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்து விட்டால் பெற்றோரான பொதுமக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க நேரிடும். அதனால், வித்தியாசமானதொரு முடிவை அறிவித்து விட்டது. சரி. இத்துடன் பிரச்சினை முடிந்து விட்டதா? என்றால் அது தான் இல்லை. தமிழகம் முழுவதும் பல்வேறு மெட்ரிகுலேசன் பள்ளிகளின் முன்பு பெற்றோர்கள் திரண்டு, அறிவிக்கப்பட்ட கட்டணத்துக்கு அதிகமாக வசூலிப்பதாக கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் சென்னை முதல் பல்வேறு நகரங்களிலும் இது நடைபெறுகிறது.

கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையில் தமிழக அரசு உறுதியாக இருந்தால், அதை கண்டிப்பாக பின்பற்றுமாறு தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு உத்தரவிடலாமே? அதை ஏன் செய்யவில்லை. தலைநகர் சென்னையில் சில மேல்தட்டு பள்ளிகளில் எல்.கே.ஜி. சேர்ப்பதற்கே ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இதெல்லாம் தமிழக அரசுக்கு தெரியாமல் நடைபெறுகிறதா? 11&ம் வகுப்பில் கணிதம், வேதியியல், இயற்பியல், உயிரியல் உள்ளிட்ட முதல் பாடப்பிரிவில் படிப்பதற்கு சில மெட்ரிகுலேசன் பள்ளிகளில் ஒரு பருவத்துக்கு ரூ.75 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இந்த கட்டணத்துக்கு அந்த பள்ளிகள் கூறும் விளக்கம் என்ன தெரியுமா? நல்ல பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலமாக பாடம் சொல்லித் தரப்படுகிறது. சிறந்த வகுப்பறை, மின் விசிறி வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி இப்படி பல்வேறு வசதிகள் செய்து தரப்படுவதாகவும் கூறுகின்றன. இவை உண்மையாகவே இருக்கலாம். அரசு பள்ளிகளை விட, சற்று தரமானதாக இருப்பதால் தானே ரூ.75 ஆயிரம் கொடுத்து பிள்ளைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் அளிக்கும் நிலையில், இத்தகைய மேல்தட்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் அதற்கு நிகராகவே சம்பளம் அளிக்கப்படுகின்றன. இத்தகைய பள்ளிகளில் பணி புரியும் பல ஆசிரியர்கள், அரசு வேலைக்கு செல்ல விரும்பவதில்லை என்பதும் கூடுதல் தகவல்.

இதை எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இப்படிப்பட்ட பள்ளிகளை கோவிந்தராஜன் கமிட்டி கட்டுப்படுத்துகிறதா? என்பதே எனது கேள்வி. ஏனெனில், கமிட்டியின் பரிந்துரையை அமல் படுத்த உத்தரவிடும் ஆளும் மற்றும் அதிகார வர்க்கத்தில் உள்ளோரின் வாரிசுகளே இந்த பள்ளிகளில் தானே படிக்கின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள இந்த பள்ளிகளை விட்டு விட்டு, மற்ற மெட்ரிகுலேசன் பள்ளிகள் தான் இப்போது படாதபாடு படுகின்றன. கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரையை ஏற்றால் ஆசிரியர்களின் சம்பளத்தில் ‘கை வைக்க’ நேரிடும். (பல பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான இன்கிரிமெண்ட் போடப்படவில்லை என்பது கூடுதல் தகவல்). அதே நேரத்தில், கட்டணத்தை வசூலிக்கும்போது பெற்றோரின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த இடத்தில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் என்ற இரண்டு ஆடுகளை மோதவிட்டு ரத்தம் குடிக்க காத்திருக்கும் குள்ள நரித்தனம் தான் தமிழக அரசின் திட்டமாக இருக்கிறது. இல்லாவிட்டால், ஏதாவது ஒரு நிலையில் உறுதியாக இருந்திருக்குமே? முன்பே, நான் குறிப்பிட்டது போல கோவிந்த ராஜன் கமிட்டி பரிந்துரைகளில் உறுதியாக இருந்தால், அதை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிடலாமே? அதை விட்டு விட்டு, பெற்றோருக்கும் பள்ளிகளுக்கும் இடையே மோத விட்டு வேடிக்கை பார்ப்பது ஏன்? தமிழக அரசின் இத்தகைய செயல்களால், பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தான் படிக்கும் பள்ளிக் கூடத்தின் முன்னால், தன்னுடைய அம்மாவோ அப்பாவோ போராட்டம் நடத்துவதை பார்க்கும் ஒரு மாணவன், தனது பள்ளியைப் பற்றி என்ன நினைப்பான்? தனது ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பற்றிய அவனது மதிப்பீடு என்னவாக இருக்கும்?

இத்தகைய நிலையில் படித்து வளரும் அந்த எதிர்காலத் தலைமுறை எப்படி இருக்கும்? மாதா, பிதா, குரு, தெய்வம் & என தெய்வத்துக்கு ஒரு படி மேலாக வைத்து போற்றப்படும் ஆசிரியர்களை இந்த மாணவத் தலைமுறை போற்றிப் பாராட்டுமா?

அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு ஏராளமாக சம்பளத்தை அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு, சுமார் 8 ஆயிரம் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் (சராசரியாக ஒரு பள்ளிக்கு 50 பேர் என்றால் கூட, 4 லட்சம் பேர்) நிலைமையை யோசித்து பார்க்கிறதா? அந்த ஆசிரியர்களுக்கென குறைந்தபட்ச ஊதியம் எதையாவது கோவிந்தராஜன் கமிட்டி நிர்ணயித்து இருக்கிறதா? கட்டணத்தோடு, அது பற்றியும் பரிசீலித்து முடிவு எடுப்பது அவசியம்.

தனியார் பள்ளிகள் அனைத்தும் கட்டணக் கொள்ளை அடிப்பதாக கருதினால், அதற்கு கடிவாளம் போடும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றலாம். அல்லது, அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கலாம். தனியார் பள்ளி ஆசிரியர்களைப் போல, அரசு பள்ளி ஆசிரியர்களையும் கடுமைமயாக வேலை வாங்கினால் தானாகவே அரசு பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். தனியார் பள்ளிகளின் வியாபாரம் பிசு பிசுத்துப் போகும்.

தமிழகத்தில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு பள்ளிகள் இல்லை என்றால், அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசுடைமை ஆக்கி விடலாமே? இலவச கலர் டி.வி. ஒரு ரூபாய் அரிசி போன்றவற்றுக்கு பதிலாக கல்விக்கு செலவிடலாமே? கலர் டி.வி.யை யார் கேட்டது? தனியார் பள்ளிகளை அரசுடையாக்கும் செலவுக்காக அரிசியின் விலையை ரூ.3 வரை உயர்த்தலாமே-? ‘அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விட, ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தலே புண்ணியம் யாவிலும் சிறந்தது’ என்பது நம்முடைய முன்னோர் வாக்கு.

இதை எல்லாம் விட்டு விட்டு, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக பெற்றோரிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக கட்டண நிர்ணயம் என்ற நாடகத்தை நடத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். பெற்றோரையும் & தனியார் பள்ளி நிர்வாகங்களையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் குள்ள நரித்தனத்தை எந்த காரணத்தை கொண்டும் நியாயப்படுத்த முடியாது. பள்ளிக் கல்வியில் அரசியல் விளையாட்டை காண்பிப்பது, எதிர்கால சமூகத்தையே அரித்து விடும். குளறுபடியான பள்ளிக் கல்வியால் எதிர்காலத்தில் குழப்பமான சமுதாயம் உருவாகும்.

http://thileeban-ravi.blogspot.com/2010/09/blog-post_14.html

No comments:

Post a Comment