Monday, July 19, 2010

Present day Indian Youth

பண போதையில் வயதை தொலைக்கும் இளைய சமுதாயம்

புதுடில்லி : சாதனை செய்யும் ஆசையில், இளைய சமுதாயம், மனரீதியிலும், உடல்ரீதியிலும் பாதிக்கப்படுவதாக, மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம் நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் வருகையால், வேலைவாய்ப்பும் பெருகி விட்டது. ஒரு டிகிரிப் படிப்பு முடித்தாலே, கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கிறது.

சாதிக்க துடிக்கும் ஆவலுடன், இளைஞர்கள், கால நேரம் பாராது உழைக்கின்றனர். இதனால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். முதுமைக்குரிய உடல் பாதிப்புகள், அவர்களுக்கு நடுத்தர வயதிலேயே ஏற்படுகிறது.

பிரபல பன்னாட்டு நிறுவனத்தில் சீனியர் அதிகாரியாக வேலைபார்க்கும் சதீஷ் என்பவர் கூறியதாவது:

நான் கடந்த ஏழு ஆண்டுகளாக, இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறேன். என் திறமையால் பல பணி உயர்வுகளையும், எதிர்பார்ப்புகளுக்கு மிஞ்சிய சம்பளத்தையும் பெற்றேன்.பணி நிமித்தமாக, பல்வேறு நாடுகளுக்கும் சென்று வருகிறேன். எனக்கு தற்போது 32 வயதாகிறது. ஆனால் நான், அந்திம காலத்தை நெருங்கிவிட்டது போல உணர்கிறேன். பணிச்சுமையால் மன ரீதியிலும்,உடல் ரீதியிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். வாழ்க்கையில் மாற்றத்தை விரும்புகிறேன். எனவே வேலையை விட்டுவிட முடிவு செய்துள்ளேன்.இவ்வாறு சதீஷ் கூறினார்.

இதே போன்று, பெரும்பாலான இளைஞர்கள், பணிச்சுமையால் மன அழுத்த நோய்க்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து விமான்ஸ் மருத்துவமனை மனோதத்துவ நிபுணர் சமீர் பரிகார் கூறியதாவது:

கைநிறைய காசு சம்பாதிக்கும் ஆசையில், இளைஞர்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலைக்கு சேர்கின்றனர். தொடர்ந்து திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம், வேலைப்பளு, நிச்சயமற்ற பணிச் சூழல் ஆகியவற்றால், குறுகிய காலத்தில் அவர்கள் மன அழுத்த நோய்க்கு ஆட்படுகின்றனர். தற்போதைய வாழ்க்கை சூழலில் இளைஞர்கள் மன அழுத்த நோயால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது. வசதியான வாழ்க்கை அமைய, 32 வயதுக்குள், அள வுக்கு அதிகமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைவிட, அலுவலகத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் அவர்கள், மன அழுத்த நோய்க்கு ஆட்படுவது தவிர்க்க இயலாததாகி விடுகிறது.தற்போதைய வாழ்க்கை முறையில், எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளது. அதை அடைவதற்கு இளைய சமுதாயத்தினர், அதிக "ரிஸ்க்'குகளை எடுக்கின்றனர். இதனால் அவர்கள் இளம் வயதிலேயே முதுமையை உணர்கின்றனர். இவ்வாறு சமீர் கூறினார்.

"மன அழுத்த நோயை தவிர்க்க, தனிப்பட்ட வாழ்க்கைக்கும், அலுவலகத்திற்கும் இடையில் சமநிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம்; வாழ்க்கையில் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் தரும் பழக்கத்தை விட்டொழித்து சுமூகமாக அணுக பழகி கொண்டால், மன அழுத்த நோய் நம்மை அண்டாது' என, நிபுணர்கள் தீர்வு கூறுகின்றன.

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=42194

No comments:

Post a Comment