Tuesday, March 22, 2011

MGR 20 ஆம் நூற்றாண்டு கண்ட உத்தம தலைவன்


கைபட்ட இடத்தைக் கழுவ மனமில்லை…

பொன்மனச் செம்மலால் சாப விமோசனம் பெற்றது மதுரை மாவட்டம். அன்று வள்ளல் மட்டும் அரசியல் களத்தில் வெற்றி வாகை சூடாதிருந்திருப்பாரே யானால், ‘அத்திப்பட்டி கிராமம் மட்டுமல்ல, தென் மாவட்டங்களில் தண்ணீர் என்பது உலக அதிசயங்களில் ஒன்றாகி இருக்கும். அன்று மட்டும் வெற்றி சூடாதிருந்திருப்பாரேயானால் நெல்லுச்சோறு என்பது தீபாவளி, பொங்கலுக்கு மட்டும் சாப்பிடப்படும். அதிசய உணவாக நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கும். முப்பிறவி கண்ட நாயகன் மட்டும் முதல்வராக முடி சூட்டப்படாமல் இருந்திருந்தால், அந்தப் பாமர மக்களின் பிள்ளைகள் சத்துணவு கிடைக்காமல் மழைக்காக கூட, பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கியிருக்கமாட்டார்கள். அதுவரை வறட்சி, நிவாரணப் பணி வேலைகள் மட்டுமே நடந்து வந்த தமிழகத்தில் வள்ளல் முதல்வராக வாகை சூடியவுடன் தான் வெள்ள நிவாரணப் பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்படி தெற்குத் திசையையே மாற்றியமைத்த வள்ளல், அந்தக் கரிசல் பூமிக்கு ஒருமுறை சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்தச் செய்தி தென்மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவி, அரசு விடுமுறை போல், அத்தனை பாட்டாளி விவசாயப் பெருங்குடி மக்களும், அவரவர் வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு, வள்ளல் எந்த வழியில் வருவார் என்று திக்கு நோக்கி, கண்கள் பூக்க காத்துக் கிடக்கிறார்கள்.

அன்று வீரபாண்டித் திருவிழா வேறு, வள்ளலின் வருகைக்காக வானம் கூட , மழை தூவி வரவேற்கிறது. வள்ளலின் கார் தேனியில் இருந்து கிளம்பி, முத்துத் தேவன்பட்டியைத் தாண்டி வீரபாண்டியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது, என்கிற விபரம் திருவிழாக்கூட்டத்திற்குத் தெரிந்து விடுகிறது,. வீரபாண்டி தேர், வீதி உலாவர புறப்படத் தயாராகிறது. ஆனால் அந்தக் கண நேரத்தில், ஆடு வெட்டி பொங்கல் வைக்க வந்த லட்சத்தற்கும் மேற்பட்ட அத்தனை பக்தர்களும், அந்த இடத்தில் இல்லை, கோயில் வளாகமே வெறிச்சோடிக் கிடக்கிறது. குழம்பிப்போன தர்மகர்த்தாக்கள், கோயில் வளாகத்திறகு வெளியே வந்து பார்க்கிறார்கள். வீரபாண்டித் தேரைச் சுற்றி நிற்க வேண்டிய பக்தர்களெல்லாம் ரோட்டில், வள்ளலின் காரைச் சுற்றி வணங்கி நின்ற காட்சியைப் பார்க்கிறார்கள். வீரபாண்டிக் கோயிலே இடம்பெயர்ந்து போன அதிசயம், அங்கே நடந்துகொண்டிருக்கிறது.

ஆனால் வள்ளல் மட்டும், தான் தவறிழைத்துவிட்டதாக வருத்தப்படுகிறார். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் ,தான் வேறு வழியாக வந்திருக்கலாம் என்று திரும்பத் திரும்ப விசனப்படுகிறார். அந்தப் பாசமிகு பக்தர்களிடம் இருந்து எப்படி விடைபெறுவது? காவல்துறை தன் முழு பலத்தையும் பிரயோகித்து, வள்ளல் செல்ல வழியமைக்கப் பார்க்கிறார்கள். முடியவில்லை. அரைமணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வள்ளல் ஒரு முடிவுக்கு வந்து, தான் வந்த வேன் மீது ஏறி, “வீரபாண்டித் திருவிழா என்னால் பாதிக்கப்பட்டு விட்டது, என்ற பழி என் மீது வராதிருக்க வேண்டுமானால், நீங்கள் எல்லோரும் கலைந்து, கோயிலுக்குச் செல்லுங்கள்” என்று அன்புக் கட்டளையிடுகிறார்.

இப்பொழுது சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களைப் போலத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஏக்கத்துடன் சத்தமில்லாமல் செல்லும் பக்தர்களைப் பார்த்து, கையசைத்து விடைபெறுகிறார், வள்ளல்.

வள்ளலின் கார் வயல்பட்டியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இத்தனை அதிசயங்களும் அற்புதங்களும் இங்கே நடப்பதை கொஞ்சமும் அறியாத பஞ்சவர்ணம் என்ற பத்து வயதுப் பெண், வயலில் பருத்தி எடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுடன் பருத்தி எடுத்தக் கொண்டிருந்த பெரியாத்தா என்ற தோழி, எலே பஞ்சு “உனக்கு விஷயம் தெரியுமாழ” எம்.ஜி.ஆர் தேனிக்கு வந்திருக்கிறாராம். இப்பத்தான் எங்க அப்பன் எங்கிட்ட சொன்னாரு” என்று பஞ்சவர்ணத்திடம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, வயலை ஒட்டிய வண்டிப்பாதையில், ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் வாழ்க! பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் வாழ்க’ என்ற கோஷங்களுடன் கார்கள் வரிசையாகப் பறந்து கொண்டிருக்கிறது.

அவ்வளவுதான், மடியில் பறித்து வைத்திருந்த பருத்தியை ஆகாயத்தில் வீசி விட்டு, இருவரும் கார்கள் செல்லும் திசை நோக்கி, அந்தக் கரம்பைக் காட்டில், கால்கள் பின்னக்கு இழுக்க கஷ்டப்ப்ட்டு ஓடி வருகிறார்கள். தன் மீது அம்பு வீசினாலும் சரி, அன்பு வீசினாலும் சரி, நேரடியாகச் சந்திக்கிற சரித்திர நாயகன், நம சந்தனக் தலைவன். இந்த இரண்டு பெண்களும் தன்னை நோக்கித்தான் வருகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு காரை, நிறுத்தச் சொல்கிறார். அதனை கார்களும், ஒன்றன் பின் ஒன்றாக ரெயில் பெட்டியைப் போல் வளைந்து நிற்கிறது.

வள்ளல் காரைவிட்டு இறங்கி, அந்தக் கரிசல் பூமியில் கால் பதித்து நிற்கிறார். மூச்சிறைக்க ஓடி வந்த பெண்களுக்கு, முதலில் தான் வைத்திருந்த பழச் சாற்றைக் கொடுத்து, மூச்சு வாங்கச் செய்கிறார்.

“நீங்க வர்றது இந்த ஊர் முழுக்கத் தெரிஞ்சிருக்கு. இந்த ரெண்டு கூமுட்டைகளுக்கு மட்டும்தான் தெரியாமப் போச்சு. தெரிஞ்சிருந்தா, இந்த அஞ்சு ரூபா காசுக்காக வேலை செஞ்சுட்டு இருப்போமா?” என்று படபடவென்று; பேசுகிறாள் பஞ்சவர்ணம். நிதானத்துடன் கேட்டுக் கொண்டிருந்த வள்ளல், இருவர் கைகளிலும் ஆளுக்கு நூறு ரூபாய் நோட்டைத் திணிக்கிறார். “நாங்களென்ன காசுக்காகவா உங்களைப்பார்க்க, பரக்க பரக்க ஓடி வந்தோம். கருணை தெய்வத்தைக் கண்குளிரப் பார்த்தாலே போதும், என்றுதான் ஓடி வந்தோம்” என்கிற தோரணையில் அவர்களின் பார்வை இருந்தது. அந்தப் பரங்கிமலை மன்னனுக்கு புரிந்தது. “ஒரு அண்ணன், தங்கைக்குத் திருவிழாச் செலவுக்கு கொடுத்தது போல், நினைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி புறப்படுகிறார்.

அதோடு பஞ்சவர்ணம் பருத்தி எடுக்கவில்லை. வீட்டுக்குச் சென்று விடுகிறாள். சோறும் கறியும் தட்டில் போட்டு வைக்கிறார் உடன் பிறந்த அக்காள். பஞ்சவர்ணம் “பசியில்லை” என்கிறாள். பொங்கல் வைக்கத்தான் வீரபாண்டி கோயிலுக்கு வரலை சட்டுபுட்டுன்னு சாப்பிட்டியினா, பொழுது சாய திருவிழா பார்க்கவாவது போகலாம்ல்ல. வரவை கோறும் கோயிலுக்கும் வேண்டாம். இரவும் அதே பதில். மறுநாள் காலையில் கண்மாய்க்குக் குளிக்கச் செல்லவில்லையா? என்று பாட்டி கேட்கிறாள். “உடம்புக்குச் சரியில்லை” என்று பஞ்சவர்ணம் சொல்கிறாள். கும்பாவில் கூழும், கும்பாவின் வெளிப்புற விளிம்பில் துவையலையும் ஒட்ட வைத்துக் கொண்டு, “போவட்டும் கையையாவது கழுவிட்டு கரைத்துக்குடி” என்று மீண்டும் அக்கா வலியுறுத்துகிறார்.

“ஊட்டி விடு, இல்லாட்டி கரைத்து லோட்டா சொம்பில் கொடு. கடகடவென்று குடித்து விடுகிறேன்” என்கிறாள் பஞ்சவர்ணம். இப்படிப் பஞ்சவர்ணம் பிரமை பிடித்தவள் போல் பேசியதால், அக்கா பயந்து போய்,

“ஏலே உனக்கு என்னாச்சுடி பணம் கொடுக்கிறபோது, அவரின் தங்கக்கரம் தன் கையில் பட்டுவிட்டது என்றும், இந்தச சாதாரண பக்தைக்குத் தெய்வம் கரம் தொட்ட இடம் தண்ணீர் பட்டால் அழிந்துவிடும் என்று பயந்துதான் குளிக்காமல், சாப்பிடாமல் இருந்தேன்” என்கிறாள். இப்பொழுதுதான் நிம்மதி அடைந்தனர் பெற்றோர்கள்.

இப்படி ஆறு வயதில் இருந்து அறுபது வரை, வயது வித்தியாசம் இல்லாமல் பொன்மச் செம்மல் மீது வைத்திருந்த அன்பை, மூட நம்பிக்கையென்றும், சினிமாக் கவர்ச்சியென்றும் கேலி செய்தனர். சிலர் உலக அரங்கில் சர்வாதிகாரி என்றும், கொடுங்கோலன் என்றும் வர்ணிக்கபட்ட அடால்ப் ஹிட்லர், ஒருமுறை வயலில் வேலை செய்து கொண்டிருந்த இரண்டு ஏழை பெண்மணிகள் தோள்களில் கைபோட்டு நடந்து சென்றிருக்கிறார். அந்த நிமிடத்தில் இருந்து, அந்த சக்கரவர்த்தியின் கைகள் பட்ட தோள்களில் தண்ணீர்பட்டால், அவனின் கைத்தடம் அழிந்துவிடும் என்று, தன் வாழ்நாள் முழுவதும், குளிக்காமலேயே இருதிருக்கிறார்கள்.

கொடுங்கோலன் என்று வர்ணிக்கப்பட்டவனின் கரங்களுக்குகே அவ்வளவு மவுசு என்றால், கொடுத்துச் சிவந்த நம் கொற்றவன் கரங்களுக்கு எவ்வளவு மவுசு இருந்திருக்கும். சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள். சில பேர் பொன்னுக்கு அடிமையாவார்கள். சிலர் பெண்ணுக்கு அடிமையாவார்கள். ஆனால் கொடுப்பதற்கு அடிமையான ஒரே கருணை வள்ளல், கண் முன் கண்ட கலங்கரை விளக்கம் நம் காவிய நாயகன் ராமாவரத் தோட்டத்தில் கொலு வீற்றிருந்த பொன்மனச் செம்மல் ஒருவர்தான்.. அப்படிப்பட்ட புண்ணியவானை புழுதி வாரித் தூற்றியவர்கள், பொல்லாங்கு பேசியவர்கள் பலரை, மக்கள் தண்டித்து விட்டார்கள். சிலரை சட்டம் தண்டித்துவிட்டது.

மற்ற சினிமாக்காரர்கள் மீது இல்லாத பக்தி, இவர் மீது மட்டும் ஏன் எப்படி வந்தது? அவர்கள் எல்லோரும் தன்னுடைய நடிப்பு என்கிற வித்தைக்குக் கைத்தட்டினாலே போதும், நாலு காசு சம்பாதித்தால் போதும் தன் சந்ததிகள் வாழ்ந்தால் போதும். என்கிற அளவில் மட்டும் இருந்து விட்டார்கள். ஆனால் வள்ளல் ஒருவர்தான், உங்களால் கிடைத்ததை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் என்றார். என் அளவுக்கு உடலை உறுதியாக வைத்திருங்கள். உழைத்து வாழுங்கள். உண்மையாக இருங்கள். சத்தியத்தை நம்புங்கள். தன்னம்பிக்கை கொள்ளுங்கள். இப்படி நடிப்பில் மட்டுமல்ல; நடப்பிலும் செய்து காட்டியவர். அதனால்தான் அந்தத் தலைவன் மீது அதிசயத் தக்க அதீத பக்தி செலுத்தினார்கள் என்று, அன்று கொச்சைப்படுத்தியவர்களெல்லாம் இன்று உணர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கொடுக்கிற காலம் நெருங்குவதால் – இனி
எடுக்கிற அவசியம் இருக்காது
இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்
பதுக்கிற வேலையும் இருக்காது
ஒதுக்கிற வேலையும் இருக்காது.

http://www.puratchithalaivar.org/tamil/special-pages/eighth-gift/


No comments:

Post a Comment