Thursday, December 30, 2010

ஜே .பி .சி ( நாடாளுமன்ற கூட்டு குழு) என்றால் என்ன ?

ஒரு நாட்டின் முதுகெலும்பானபாராளுமன்றம் முடங்கிகிடக்கிறது. முக்கியமான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல்பெறவேண்டிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.ஆனால் ஜனநாயகமே கேலிகூத்தாக்கும் வகையில் அரசியல் கட்சிகளின்செயல்பாடுகள் உள்ளன.

காங்கிரஸ்அரசின் ஊழல் கறையாக தகவல் அலை கீற்று ஒதுக்கீட்டு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் ,கார்கில் வீடு ஒதுக்கீடு ஊழல் ஆகியவை சந்து சிரிக்கவைத்து கொண்டு இருக்கின்றன. அவர்களுக்கு தாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை காட்டும் வகையில் தற்போது கிளம்பியிக்கும் பா.ஜ .க முதல்வர் எடியூரப்பாவின் 5000 கோடி ரூபாய் நில ஒதுக்கீட்டு ஊழல் போன்றவையால்சாதாரண மனிதன் மிகவும் ஆச்சரியமுடன் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்தவனாய் பார்க்கிறான் . அன்று முந்த்ரா ஊழலில் தனது துறை தவறு செய்துவிட்டது என்று அன்றைய நிதி அமைச்சர் டி .டி .கிருஷ்ணமாச்சாரி யாருடைய வற்புறுத்தலும் இல்லாமல் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.அதுபோல் 1956 அரியலூரில் நடந்த ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அன்றைய ரயில்வே மந்திரி லால் பகதூர் சாஸ்திரி தனது பதவியை ராஜினாமாசெய்தார். அப்போது இருந்த அரசியல்வாதிகள் தன்னலம் கருதாதவர்கள் பிறர்நலம் பேணிய மகான்கள் .

சரி ..இதற்கெல்லாம் விடிவுகாலம் தான் எப்போது ?காலம் தான் பதில் சொல்லவேண்டும். எதிர்கட்சிகள் தகவல் இரண்டாம் தலைமுறை அலை கீற்றுஒதுக்கீட்டு ஊழலை வெளிக்கொணர நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து அன்றாடநாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வருகிறார்கள் .இந்நிலையில்நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை என்றால் என்ன ?இதற்க்கு முன்னால்அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைகள் என்ன ?என்பது பற்றிபார்ப்போம்.
.
ஜே.பி.சி., என்றால் என்ன?

அரசாங்கத்தின் அலுவல்கள் மற்றும் விவகாரங்கள் அனைத்திற்கும், பார்லிமென்ட் நடைபெறும் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வுகாண்பது என்பது இயலாத காரியம். எனவே அரசாங்கத்தின் வேலைப் பளுவை குறைத்து, அனைத்து விவகாரங்களையும் பரிசீலனை செய்து, தீர்வு காணும் வகையில், மத்திய அரசு பல்வேறு கமிட்டிகளை அமைக்கிறது.இந்த கமிட்டிகள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று பார்லிமென்ட் நிலைக் குழுக்கள் என்றும் மற்றொன்று தற்காலிக கூட்டுக் குழுக்கள் (எச்.ஓ.சி.,) என்றும் அழைக்கப்படுகிறது. பார்லிமெண்ட் நிலைக் குழுக்கள் ஆண்டுதோறும் அமைக்கப்படும். ஆனால், எச்.ஓ.சி., எனப்படும் தற்காலிக பார்லிமென்ட் கூட்டுக்குழுக்கள் (ஜே.பி.சி.,) தேவை ஏற்பட்டால் மட்டுமே அமைக்கப்படும்.


ஜே.பி.சி., அமைக்கப்படும் முறை :

ஜே.பி.சி., அமைப்பதற்கு பார்லிமென்டின் இரு அவைகளின் ஒப்புதலும் வேண்டும். ஒரு அவையில் ஜே.பி.சி., அமைக்க மசோதா நிறைவேற்றப் பட்டாலும், மற்றொரு அவையின் ஒப்புதலும் பெறவேண்டும். இல்லையென்றால், இரு அவைகளின் தலைவர்களும் கலந்து பேசி முடிவு எட்டப்படும். பார்லிமென்டில் கட்சிகளின் எம்.பி.,க்களின் பலத்தை அடிப்படையாக கொண்டு உறுப்பினர்கள் நியமனம் செய்யும் நடைமுறைகடைபிடிக்கப்படுகிறது. தவிர, மூன்றில் இரு பங்கு உறுப்பினர்கள்லோக்சபாவிலும், ஒரு பங்கு உறுப்பினர்கள் ராஜ்யசபாவில் இருந்தும் 2:1 என்றவிகிதத்தில் நியமிக்கப்படுவர்.

ஜே.பி.சி.,யின் விசாரணை நடைமுறை :

ஜே.பி.சி., அமைக்கப்பட்டவுடன்அதற்கென சில விதிகள் மற்றும் நடைமுறைகள் வகுக்கப்படும். அதன்படிஜே.பி.சி., செயல்படும். மேலும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளை நிபுணர்களிடமிருந்து பெற்று கொள்ளலாம். இதற்காக சிறப்பு ஆலோசகர்களும் நியமிக்கப்படுவர்.ஜே.பி.சி.,யி ன் விசாரணை மிகவும் ரகசியமாக நடைபெறும். ஆனால், விசாரணையின் தன்மைகள் குறித்து ஜே.பி.சி., தலைவர் அவ்வப்போதுபத்திரிகையாளர்களுக்கு செய்திகளை வெளியிடுவார்.

போபர்ஸ் ஊழல்:

கடந்த 1987ம் ஆண்டு, நாட்டின் மிகப்பெரிய ஊழலாக கூறப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து, ஜே.பி.சி., விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் போர் கொடி தூக்கின. இதனால், பார்லிமென்ட் அலுவல்கள் பலநாட்கள் ஸ்தம்பித்தன.மேலும், அப்போதைய மத்திய நிதி அமைச்சர் வி.பி.சிங், ஜே.பி.சி., அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக களமிறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்கஒப்புக் கொண்டது. நாட்டில் முதன்முதலில் அமைக்கப்பட்ட இந்த ஜே.பி.சி., பெரும் சர்ச்சையில் சிக்கியது. மத்திய அரசு அமைத்த ஜே.பி.சி.,யில், காங்கிரஸ்எம்.பி.,க்களே அதிகம் இடம் பெற்றிருந்தனர். எனவே, ஜே.பி.சி.,யை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. மேலும், ஜே.பி.சி., விசாரணை நியாயமாக நடக்கவில்லை என்று கூறி, விசாரணை அறிக்கையை எதிர்க்கட்சிகள் ஏற்கமறுத்தன. இதனால், போபர்ஸ் ஊழல் குறித்து அமைக்கப்பட்ட ஜே.பி.சி., பயனற்று போனது.

பங்கு சந்தை ஊழல்:

கடந்த 1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குவர்த்தகத்தில் ஹர்ஷத் மேத்தா உள்ளிட்ட பங்கு சந்தை தரகர்கள் 1,000 கோடிரூபாய் அளவிற்கு மோசடி செய்தனர். இதன் எதிரொலியால் இந்திய பங்கு சந்தைவர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தக துறையில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திய இந்த மெகா ஊழல் குறித்து ஜே.பி.சி., விசாரணை நடத்திஅறிக்கை சமர்ப்பித்தது. ஆனால், அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, சிறப்புகோர்ட் அமைத்து விசாரணை துவங்க ஐந்து ஆண்டு காலம் பிடித்தது. மேலும், விசாரணை அறிக்கையின் பெரும்பாலான பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை. இதுவே, பங்கு சந்தை வர்த்தகத்தில் அடுத்து ஒருமெகா மோசடி நடக்க காரணமாக அமைந்தது. மும்பையை சேர்ந்த பங்கு சந்தைதரகர் கேதன் பரேக்,கடந்த 1999 முதல் 2001 வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி மோசடி செய்தான்.இதனால், இந்திய பங்கு சந்தை வர்த்தகதில் பலத்த அடிவிழுந்தது. இந்த மெகா மோசடி குறித்து விசாரணை நடத்த மூன்றாவதுமுறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. பங்கு சந்தை தரகர் கேதனுக்கும், வங்கிமற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பு குறித்துவிசாரணை நடத்தி மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது ஜே.பி.சி., அளித்த பரிந்துரைகளை அமல்படுத்தியதால், பங்குவர்த்தகத்தில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து பங்கு வர்த்தகதுறையில் ஜே.பி.சி.,யின் பரிந்துரைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டன. இதனால், மூன்றாவது ஜே.பி.சி., விசாரணையிலும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை.

கோலா ஊழல்:

இதற்கடுத்து, கடந்த 2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்குதீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த ஜே.பி.சி., அமைக்கப்பட்டது. புகார் பற்றி விரிவாக ஆய்வு நடத்திய ஜே.பி.சி., கமிட்டி, 2004ம் ஆண்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதில் குளிர்பானங்களில் நச்சுத்தன்மை கலந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதை உறுதி செய்தது. மேலும், குளிர்பான நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இந்த நடைமுறைகள் எந்த அளவுக்கு பின்பற்றப்படுகின்றன என்பது வெளிப்படையாக தெரியவில்லை. இது புரியாதபுதிராகவே உள்ளது. எனவே, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடுகள் குறித்துஜே.பி.சி., விசாரணை நடத்தினாலும், அதில் எதிர்பார்க்கும் அளவுக்கு தீர்வுகள்எட்டப்படுமா? இதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கைகள்எடுக்கப்படுமா? என்பது போன்ற கேள்விகளுக்கு மவுனமே பதிலாகிறது.

http://karuthusuthanthiram.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D

No comments:

Post a Comment