Monday, December 20, 2010

2G-யை தூக்கி முழுங்கும் வைமேக்ஸ்!

அடுத்த மெகா அகா ஜுகா!

ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டுக்கு இன்னமும் நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தீர்வு எட்டப்படாத நிலையில், புதிய பூதம் ஒன்று

புறப்பட்டு இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்துவைத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான், இப்போது இந்தப் புதிய பூதத்தையும் எழுப்பிவிட்டு இருக்கிறது!

தொலைத் தொடர்புத் துறையில் கம்பி வழியாகவும் கம்பி இல்லாத வகையிலும் இன்டர்நெட் பிராட் பேண்ட் சேவை தரப்படுகிறது. அதிகபட்சம் 3.6 மெகா பைட் பெர் செகண்ட்ஸ் [Mbps] அளவுக்கு வேகம்கொண்ட பிராட்பேண்டை '3ஜி’ என்று வர்ணிக்கலாம். இதை வைஃபை [Wifi] முறையில் பெறுகிறோம். இதேபோல் மற்றொரு கம்பி இல்லா அதிவேக பிராட்பேண்டும் அறிமுகம் ஆகிறது. அதற்கு வைமேக்ஸ் [WiMax] என்று பெயர். இதை '4ஜி’ என்று வர்ணிக்கலாம். இது இன்னும் படு வேகமானது. இது தகவல்களை அனுப்பும் வேகம், மீடியாக்களுக்கும், பல்வேறு வியாபார நிறுவனங்களுக்கும் பெரிய உதவியாக இருக்கும்.

இந்த வைமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் மொபைல் களும் லேப்டாப்களும் இப்போது வரத் தொடங்கி உள்ளன. இந்த வைமேக்ஸுக்கு தொலைத் தொடர்புத் துறை, உரிமங்களை வழங்கியது. இதைப் பல தனியார் கம்பெனியினர் பெற்றுள்ளனர். இவர்கள் மட்டுமல்லாமல், அரசு நிறுவனங்களான எம்.டி.என்.எல். மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகிய இரு நிறுவனங்களும் இந்த உரிமங்களைப் பெற்றுள்ளன. இப்படி வழங்கப்பட்ட உரிமங்களிலும் ஊழல் நடந்து இருப்பதாக இப்போது டெல்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரசாந்த் சாட்டர்ஜிக்கு இது தொடர்பான தகவல்கள் ஆரம்பத்தில் லேசாகக் கிடைத்தன. உடனே தொலைத் தொடர்புத் துறையில் தனக்குத் தெரிந்த ஆட்கள் மூலமாக விசாரிக்க ஆரம்பித்தார். ஆனால், சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் சிலரிடம் நேரடியாகச் சென்று, கேள்வி கள் கேட்டபோது, குறிப்பிட்ட ஆவணங்களைத் தர மறுத்தார்கள்.

இந்த நிலையில் நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், இது சம்பந்தமான கேள்வியைக் கேட்டார். ''வைமேக்ஸ் விநியோகம் தொடர்பாக எந்தெந்த கம்பெனிகளுக்கு டெண்டர் உரிமம் தந்தீர்கள்? இந்த டெண்டரை எடுக்க என்னென்ன விதிமுறைகள்?'' என்று கேட்டு, அதற்கு எழுத்துப்பூர்வமான பதிலை கடந்த மார்ச் 11-ம் தேதி பெற்றார். 'வைமேக்ஸ் அனுமதியானது நான்கு கம்பெனிகளுக்குத் தரப்பட்டுள்ளது’ என மத்தியத் தொலைத் தொடர்புத் துறை இணை அமைச்சர் குருதாஸ் காமத் பதில் தந்து இருந்தார். பொதுவாக இணை அமைச்சர்களுக்கு, துறை சார்ந்த விஷயங்களில் முடிவெடுக்க பெரிய அதிகாரமும் கிடையாது. ஆனால், நாடாளுமன்றத்தில் வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல இவர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இந்த அடிப்படையில்தான் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசாவுக்குப் பதிலாக காமத் பதில் அளித்தார்.

''நான்கு கம்பெனிகளுக்கு வைமேக்ஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெல்லி நொய்டாவைச் சேர்ந்த தெராகாம் லிமிடெட், சென்னையைச் சேர்ந்த டேக் சொல்யூஷன்ஸ் லிமிடெட், பெங்களூருவைச் சேர்ந்த அதீஸ்வார் இண்டியா லிமிடெட் மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் ஆகிய நான்கு நிறுவனங்களும் இந்த உரிமையைப் பெற்றுள்ளன. விதிமுறைகள் அனைத்தையும் நான்கு நிறுவனங்களும் முறையாகப் பின்பற்றியதால் இவற்றுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டது!'' என்றும் அந்தப் பதிலில் கூறப்பட்டது. இதோடு சாட்டர்ஜி அமைதியாகிவிடுவார் என்று பார்த்தது, தொலைத் தொடர்புத் துறை. ஆனால், அவரோ விடவில்லை.

தரப்பட்ட விவரங்களை வைத்துக்கொண்டு அடுத்த கட்ட விசாரணையில் குதித்தார்.

அதன் பிறகு நடந்ததுதான் அதிரடி!

''டேக் சொல்யூஷன்ஸ் நிறுவனம், அமெரிக் காவில் பதிவு செய்யப்பட்டு, தற்போது சென்னையில் ஆழ்வார்பேட்டை மற்றும் ராஜா அண்ணாமலைபுரத்தில் கன்சல்டேஷன் நிறுவனமாக இயங்கி வருகிறது. இதே மாதிரி டெல்லி நொய்டா நிறுவனம் டெலிகாம் உபகரணங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நிறுவனமாக இருந்து உள்ளது. ஆனால், கொல்கத்தா நிறுவனம் குறித்து எனக்கு அதிக சந்தேகம் ஏற்பட்டது. பெயரைப் பார்த்தாலே ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் நிறுவனம் என்று ஏதோ 'ஆட்டோ மொபைல்ஸ்’ நிறுவனம்போல இருந்தது. எனவே, அதன் கொல்கத்தா முகவரியைத் தேடிச் சென்றேன். ஆனால், அந்த விலாசத்தில் இப்படி எந்த நிறுவனமும் இல்லை. பி.எஸ்.என்.எல். டெண்டர் எடுத்த ஒரு நிறுவனத்தின் குறைந்தபட்ச தகுதியான விலாசமே உண்மையாக இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒருவேளை, முகவரி மாறிச் சென்று இருப்பார்களோ என்ற சந்தேகத்தால், கம்பெனி நிறுவனங்களுக்கான பதிவுத் துறை மூலமாக விசாரித்தேன். ஆனால், அந்தப் பெயரில் எங்குமே நிறுவனங்கள் பதிவாகவில்லை என்று தெரியவந்தது.

உடனே இந்தத் தகவல்களை, பிரதமர் மன்மோகன் சிங் கவனத் துக்குக் கொண்டு செல்ல கடிதம் அனுப்பினேன்.

விதிமுறைகளின்படி, இந்த வைமேக்ஸ் உரிமம் பெறும் நிறுவனங்களுக்குத் தொழில்நுட்பத் தகுதி தேவை. இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு 100 கோடி வரை வரவு செலவு செய்து இருக்க வேண்டும் என்பதுபோன்ற தகுதிகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆனால், கொல்கத்தா கம்பெனிக்கு முகவரியே இல்லை. 'இதுகுறித்து விஜிலென்ஸ் விசாரணை நடத்த வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கூறினேன். பிரதமரிடம் இருந்து உடனடியாகப் பதில் இல்லை. ஆனால், கடிதம் எழுதி விவரம் கேட்ட என்னுடைய பின்னணி தெரியாமல், என் கடிதத்தை உதாசீனப்படுத்தினார்கள்.

நான் கொல்கத்தாவில் மேயராக இருந்தவன். எனக்கு அந்த ஊரில் முக்கியமான இடங்கள் அனைத்தும் அத்துபடி. நான் தொடர்ந்து விசாரணை செய்தேன். வைமேக்ஸ் உரிமத்தை சிலர் பினாமி பெயரில் எடுத்து இருப்பதைக் கண்டுபிடித்தேன். தொலைத் தொடர்பு அமைச்சகத்தினர் உதவி இல்லாமல், இந்த முறைகேட்டை யாரும் செய்திருக்க முடியாது. ஆம்புலஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம்தான் பின்னர் ஸ்டார்நெட் கம்யூனிகேஷன் என்று பெயர் மாற்றப்பட்டு உள்ளது. 'இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் யார்? இவை எப்படிப்பட்ட நிறுவனங்கள்? இவர்களின் நிதி நிலைமை என்ன? இவர்கள் எப்படி பொது மக்களுக்கு இந்த சர்வீஸைத் தொடருவார்கள்?’ என்பதற்கு எல்லாம் எந்தவிதமான பதிலும் இல்லை. இவற்றையட்டி, பிரதமருக்கு ஏற்கெனவே எழுதிய இரண்டு கடிதங்களுடன் மீண்டும் கடந்த வாரம் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். மூன்று கடிதங்களுக்கும் பிரதமரிடம் இருந்து பதில் இல்லை. இதனால், இப்படிப்பட்ட பல ஊழல்கள் தொலைத் தொடர்புத் துறையில் இருப்பதால்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் கூட்டுக் குழு விசாரணை கேட்கிறோம்!'' என்கிறார் பிரசாந்த் சாட்டர்ஜி.

இந்தப் பின்னணியில் யார் சம்பந்தப்பட்டு உள்ளனர், அவர்களுக்கு இதன்மூலம் ஏதாவது ஆதாயம் கிடைத்ததா என்ற கோணத்தில் மிக வேகமாக விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி!

இந்த வைமேக்ஸ் விவகாரத்தில் சில காலத்துக்கு முன்னால் சஞ்சய் கபூர் என்ற ஒரு நபரின் பெயர் அடிபட்டதையும், அவரும் அவருடைய உறவினர்களுமாக உள்ள சிலரின் பெயரில் வைமேக்ஸ் லைசென்ஸ் அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்ததையும்... அதில் ஏதோ சில மர்மங்கள் இருப்பதாக தகவல் கசிந்ததைத் தொடர்ந்து... அப்போதைக்கு லைசென்ஸ் வழங்குவதையே அடக்கி வாசித்தது பற்றியும் ஜூ.வி. 13-05-09 இதழில் நாம் விளக்கமாக எழுதியிருக்கிறோம்.

இந்த வைமேக்ஸ் தொழில்நுட்பத்துக்கான 'பிரான்சைஸ்' வாங்கக்கூடிய நிறுவனங்கள், 2ஜி ஸ்பெக்ட்ரம் போலவே வெறும் கையில் முழம் போடுவதற்கு எப்படியெல்லாம் வாய்ப்பு இருக்கிறது என்பதையும் அந்தக் கட்டுரையில் நாம் குறிப்பிட்டிருந்தோம். மக்கள் பணத்தில் இயங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கேபிள்களையும், டவர்களையும் பயன்படுத்தியே இந்த 'பிரான்சைஸ்' நிறுவனங்கள் எப்படி தங்கள் வைமேக்ஸ் அலைகளை நாடு பூராவும் விநியோகிக்க வழி வகுக்கப்பட்டது என்பதையும் அந்தக் கட்டுரை கூறியது.

தற்போது லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், பிரசாந்த சாட்டர்ஜி கிளப்பியிருக்கும் இந்த அகாஜுகா விவகாரம் 2ஜி-க்கு அடுத்தபடியாக தொலைத் தொடர்புத் துறையில் மற்றொரு மெகா பூகம்பத்தை கிளப்புவதற்கான வாய்ப்புகள் நிறையவே தெரிகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்தளவுக்கு மிக வலுவான விசாரணை ஆயுதங்களுடன் களத்தில் இறங்கியிருக்கிறது!

நன்றி ஜுனியர் விகடன்

http://www.savukku.net/index.php?option=com_content&view=article&id=213:2g-&catid=10:2010-10-16-14-42-56&Itemid=14

No comments:

Post a Comment