Friday, December 24, 2010

30 நாட்களில் கூட்டணி முறியும்!

புதன்கிழமை, 22 டிசம்பர் 2010 22:59

சோனியா, யாரும் எதிர்பாராத ஓர் அவதாரத்தை டெல்லி காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்தில் எடுத்திருக்கிறார். ''காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் மத்தியிலும் சரி, எந்த மாநிலத்திலும் சரி... ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டால், அவர்கள் தொடர்ந்து பதவி வகிக்க அனுமதி இல்லை. காங்கிரஸ் கட்சி ஒருபோதும் ஊழலை ஊக்குவிக்காது. அதில் சமரசத்துக்கு இடமே இல்லை. காங்கிரஸ், தொடர்ந்து ஊழலை எதிர்த்துப் போராடும்!'' என்று சோனியா சொல்லச் சொல்ல, பலருக்கும் பைஜாமா வேர்க்க ஆரம்பித்தது.

இந்தப் பேச்சுக்குப் பின்னால் நம்மைச் சந்தித்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெடித்து இருக்கும் நேரத்தில் ஊழலை எதிர்த்து சோனியா பேசுவதைப் பார்த்தால், தி.மு.க-வுக்கு எதிரான பிரசார உத்தியே இதுவாகத்தான் இருக்கும்!'' என்று சொல்லிச் சிரித்தார்.

மிகச் சரியாக, சில நிமிடங்களுக்குள் சோனியாவிடம் இருந்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அவசர அழைப்பு வந்தது. ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கிருஷ்ணசாமி, ஜெயந்தி நடராஜன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மேடைக்குப் பின்னால் அழைக்கப்பட்டனர்.

''மேடம்! இந்த முறை நீங்கள் எடுக்கும் முடிவு, சிறந்த முடிவாக இருக்க வேண்டும். இதில்தான் தமிழக காங்கிரஸின் எதிர்காலம் இருக்கிறது. நாம் இந்தத் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால், தமிழக மக்கள் நம்மைப் புறக்கணித்துவிடுவார்கள். அதற்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுங்கள்'' என்று சொல்லிய ப.சிதம்பரம், ''இப்போதைய சூழ்நிலையில் இன்றைய கூட்டணி ஆரோக்கியமானதாக இல்லை!'' என்று சொன்னதாகச் சொல்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ''2ஜி விவகாரம் மக்கள் மத்தியில் நன்றாகப் பதிந்துவிட்டது. இந்தச் சூழலில் தி.மு.க-வோடு கூட்டணி வந்தால், அது காங்கிரஸுக்கு நல்லது அல்ல!'' என்றாராம். அப்போது சோனியா, ''பொறுத்திருங்கள், இன்னும் ஒரு மாதம்தான்...'' என்று எதையோ மனதில் வைத்துக்கொண்டு சொன்னாராம்.

ஜி.கே.வாசன், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் அதிகம் பேசவில்லை. கோவை செல்வராஜ் போன்ற சிலர் காரசாரமாகப் பேசினார்களாம். ''2ஜி விவகாரத்தில் தி.மு.க. பதில் சொல்ல வேண்டிய நிலையில் உள்ளது. மக்களும் இந்த விஷயத்தில் தி.மு.க. மீது அதிருப்தியில் உள்ளனர். இந்த சமயத்தில் நாம் அவர்களோடு சேர்ந்து இருந்தால் நம் மீதும் கேள்விகளை எழுப்புவார்கள்'' என்றார்களாம். ''நாமே கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை வீட்டு மனை ஒதுக்கீட்டில் பதவியை ராஜினாமா செய்யக் கோருகின்றோம். அதே மாதிரியான ஒரு ஊழல் தமிழகத்திலும் நடந்துள்ளது. தமிழக முதல்வரையும் நாம் பதவியில் இருந்து ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டிய நிலைதான் அங்கே...'' என்று இன்னொருவர் கூறினாராம்.

இந்த ரியாக்ஷன்களை எல்லாம் உற்று நோக்கிய சோனியா இறுதியில், ''உங்களுடைய கருத்துகள் குறித்து யோசிக்கப்படும். மத்தியத் தலைமை எல்லாவற்றையும் கவனித்து வருகிறது. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கட்சியைத் தேர்தலுக்குத் தயார்படுத்துங்கள். கட்சியினரைக் களத்துக்குக் கொண்டுவர பாடுபடுங்கள். மற்றவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்!'' என்று உறுதியாகச் சொன்னாராம்.

இந்தக் கூட்டத்தில் சோனியாவை சந்தித்துவிட்டு வந்தவர்கள் சிலரை சந்தித்தோம். தி.மு.க-வை தினமும் மைக்கில் சாடும் ஒரு பிரமுகர், ''மேடம் அ.தி.மு.க. விஷயத்தில் பாஸிட்டிவ்வாக இருக்காங்க. ஆனா, அவங்க முடிவை இப்ப சொல்ல மாட்டாங்க. நாங்க பிரதமரை வரும் ஜனவரி 3-ம் தேதி விழாவுக்கு அனுப்பக் கூடாது என்று கேட்டுக்கிட்டோம். தங்கபாலு எதுவும் பேசலை. பேசினால், ஆளும் கட்சியினால் பிரச்னை வரும் என்பதால் மௌனமாக இருந்தார்'' என்றார். முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் நம்மிடம் சொன்னது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது. ''தி.மு.க-வுடன் கூட்டணி தொடரக் கூடாது என்று மேடத்திடம் உறுதியாகச் சொல்லிட்டோம். இப்போது நாங்கள் எதிர்பார்ப்பது, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வருமா என்பதுதான். ஆ.ராசாவைக் கைது செய்தால், தி.மு.க-வே கூட்டணியில் இருந்து விலகிவிடும். அ.தி.மு.க-வும் காங்கிரஸுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு நெருங்கிட்டு இருக்கு. எம்.நடராஜனும் ஓ.பன்னீர்செல்வமும் கடந்த மாதமே அகமது பட்டேலை சந்தித்து கூட்டணி சம்பந்தமாக பேசிட்டாங்க!'' என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார்.

ஆனால், தி.மு.க. ஆதரவு காங்கிரஸ் பிரமுகரோ, ''இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது தி.மு.க. - காங்கிரஸுக்கு என்ன பிரச்னை? இந்த 2ஜி விவகாரத்தைத் தவிர, வேறு எதாவது பிரச்னை இருக்கா? 2ஜி விவகாரத்தில் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க தி.மு.க-வும் ஓ.கே. சொல்லிவிட்டது. இப்படித் தனிப்பட்ட முறையில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூட்டணி குறுக்கே இல்லை!'' என்றார்.

ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர் நம்மிடம் பேசும்போது, ''தி.மு.க., அ.தி.மு.க இல்லாத கூட்டணியை காங்கிரஸ் அமைக்கும் என்றுதான் தெரிகிறது. நடிகர் விஜய் உள்ளே வந்தோ அல்லது வெளியே இருந்தோ, அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுப்பார். விஜயகாந்த்தும் எங்கள் கூட்டணியுடன்தான் சேருவார். பா.ம.க-வும் எங்கள் கூட்டணிக்கு வரும். இதனால் எங்கள் கூட்டணி கணிசமான இடங்களில் வெற்றி பெறும்!'' என்கிறார்.

''அநேகமாக பொங்கல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சி தனது புதுப் பாதையைத் தொடங்கியாக வேண்டும் என்று சோனியா நினைக்கிறார். தமிழ்நாட்டுப் பத்திரிகைகளின் அனைத்துச் செய்திகளும் அவருக்கு மொழிபெயர்த்து வைக்கப்பட்டு உள்ளன. 'ஒரு மாதம் பொறுத்திருங்கள்’ என்று 30 நாட்கள் கால அவகாசம் கொடுத்திருப்பது கூட்டணியை முறிக்கத்தான்!'' என்று காங்கிரஸ் உள்விவகாரங்களைக் கவனித்து வருபவர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள்!

நன்றி ஜுனியர் விகடன்

No comments:

Post a Comment