Thursday, January 13, 2011

குழந்தைகள் கடத்தல்… குறிவைக்கும் கும்பல்கள்..!

தமிழகத்தில் குழந்தை கடத்தல் சம்பவம் நடைபெறுவது அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் எல்லோரது பார்வைக்கும் தெரிந்தது. கிருஷ்ணகிரியில் சிக்கிய குழந்தை கடத்தல் கும்பலிடம் நடத்தபட்ட விசாரணைக்கு பிறகுதான், இவ்வளவு குழந்தைகள் கடத்தபட்டு இருக்கிறார்களா? என்று எல்லோரும் அதிர்ச்சியின் எல்லைக்கே போனார்கள்.

`பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?’ என்று எல்லோரையும் கேட்க வைத்த இந்த குழந்தைகள் கடத்தல் சம்பவம், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுக்கவும் தொடர்கதையாகத்தான் உள்ளது. பாதாளம் வரை பாயும் பணத்தாசைதான் சிலரை இந்த இரக்கமற்ற செயலில் ஈடுபட வைக்கிறது.

கடத்திய குழந்தைகளுக்கு ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்து, ஏதோ விலை உயர்ந்த பொருள் போல் விற்பனை செய்கிறது இந்த கும்பல். குழந்தை இல்லாத தம்பதியரிடம் இவர்கள் முடிந்தவரை பணத்தை கறந்து இருக்கிறார்கள். உடல் உறுப்புகளை பெறுவதற்காக, குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வது உலக அளவில் நடக்கும் கொடூரம்.

பொதுவாக இந்தியா முழுக்க குழந்தைகளை கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கும், விபசார கும்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அழகான சிறுமிகளை குறி வைத்து கடத்தும் இவர்கள், விபசார கும்பலிடம் அந்த சிறுமியை ஒப்படைத்துவிட்டு, மிகபெரிய தொகையோடு திரும்பி விடுகிறார்கள்.

ஒருசில லட்சம் ரூபாய்க்காக விற்கபட்ட சிறுமிகள், ஆயுள் முழுக்க விபசார கும்பலிடம் அடிமை வாழ்க்கை வாழ்ந்து தங்கள் வாழ்க்கையையே தொலைத்து விடுகிறார்கள். அங்கே, நாள்முழுக்க விபசாரம் செய்து, விபசார தாதாக்களுக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதுதான் இவர்களது வேலை. அவர்களுக்கு கிடைக்கும் கூலியோ மாதத்திற்கு சில ஆயிரங்கள் தான். எவ்வளவோ விழிப்புணர்வு இருந்தும் கூடிய விரைவிலேயே எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய் தாக்குதலுக்கும் இவர்கள் ஆளாகி விடுகிறார்கள்.

ஆபாச படம் எடுப்பதற்காகவும் சிறுமிகள் கடத்தபடுகிறார்கள். கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இதற்காக கடத்தபடும் சிறுமிகள் எண்ணிக்கை அதிகம் என்கிறது போலீஸ் வட்டாரம்.

வயதுக்கு வரும் வரை இவர்களை அடைத்து வைத்து வளர்க்கும் கும்பல், அதன்பிறகு இவர்களை வைத்து விதவிதமாக படங்களை தயாரித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து விடுகிறது. 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பயன்படுத்தி எடுக்கபட்ட புளுபிலிம்களுக்கு நல்ல வரவேற்பும், அளவுக்கு அதிகமான விலையும் கிடைக்கும் என்பதால், இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரித்த வணம் உள்ளன.

இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் ஒருபுறம் நடக்க… மறுபுறம் அந்த குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் இன்னும் வேகமாக அதிகரித்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் உள்ள குழந்தைகளில் 53 சதவீதத்தினர் பாலியல் கொடுமைகளை சந்தித்தவர்கள் என்கிற ஐ.நா. குழந்தைகள் நல அமைப்பின் தகவலே அதற்கு சான்று.

மேலும், நாட்டில் உள்ள 28 லட்சம் பாலியல் பெண் தொழிலாளர்களில் 25 சதவீதம்பேர் கடத்தபட்டு வந்தவர்களே என்று அதிர வைக்கிறது இன்னொரு கணக்கெடுப்பு. காணாமல் போகும் குழந்தைகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை என்பதே உண்மை என்கின்றன, குழந்தைகள் நல அமைப்புகள்.

கடத்தபடும் குழந்தைகள் பற்றிய தகவல்கள் நம்மை அதிர வைக்க, தாங்களாகவே கடத்தல் கும்பலிடம் சிக்கிக்கொள்ளும் சிறுவர்-சிறுமிகளும் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டைவிட்டு வெளியேற முக்கிய காரணம் அவர்களது பெற்றோர்கள்தான். சரியாக படிப்பு வரவில்லை, நல்ல மார்க் எடுக்கவில்லை என்ற காரணங்களுக்காக அச்சுறுத்தபடும் இவர்கள், வேறு வழி தெரியாமல் வீட்டைவிட்டு ஓடி விடுகிறார்கள். பஸ், ரெயில் நிலையங்களில் வழி தெரியாமல் இவர்கள் தவிக்கும்போது, போலீசார் வசம் சிக்கினால் பிரச்சினை இல்லை. மீண்டும் வீடு வந்து சேர்ந்துவிடலாம். அதுவே, கடத்தல் கும்பல் என்றால், அவர்கள் கதி அதோகதி தான்.

சமீப காலமாக அதிகரித்து வரும் குழந்தை இல்லாத பெற்றோர்களின் எண்ணிக்கையும் கூட, குழந்தைகள் கடத்தலுக்கு ஒரு வகையில் காரணமாக அமைந்து விடுகிறது. சட்டபூர்வமாக குழந்தையை தத்து எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதால், குறுக்கு வழியில் குழந்தைகளை பெற அவர்கள் முயற்சி செய்கிறார்கள். கடத்தல் கும்பலை தொடர்பு கொள்கிறார்கள். அந்த கும்பலும் பெரும் தொகையை வாங்கிக்கொடு பச்சிளங்குழந்தைகளை அவர்களுக்கு கடத்தி வந்து விற்று விடுகிறது. இதனால்தான், கைக்குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாக பயணம் மேற்கொள்ள பெண்கள் பயப்படுகிறார்கள்.

பல்வேறு தேவைகளுக்காக நடைபெறும் குழந்தைகள் கடத்தல், ஒவ்வொரு பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளில் அவர்கள் தங்களை எவ்வாறெல்லாம் விழிப்புணர்வுக்கு உள்ளாக்கிக் கொள்ளலாம்?

* குழந்தைகளுடன் வெளியூர் செல்லும்போது அவர்களை தங்களது கண்காணிப்பில் வைத்துக்கொள்வது நல்லது. கைக்குழந்தைகள் இருக்கும்பட்சத்தில், அவசர நேரங்களில் முன்பின் தெரியாத – சில மணி நேரத்திற்கு முன்பு பழக்கமான நபரிடம் அவர்களை ஒப்படைக்க வேண்டாம்.

* பிறந்த குழந்தைகளும் திருடு போவதால், பிரசவம் நடைபெறும் மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என்று உணர்கிறபோது உஷாராக இருப்பதுதான் நல்லது.

* பெற்றோர்களுக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்-சிறுமியரின் எண்ணிக்கை தடுக்கபட வேண்டும். பெற்றோரின் கனிவான நடவடிக்கைகளும், ஆதரவான பேச்சுக்களுமே அத்தகைய சம்பவம் மீண்டும் ஒருமுறை நடைபெறாமல் தடுக்க உதவும்.

* பள்ளிக்கூடத்திற்கு குழந்தையை அனுப்பும்போது, முன்பின் தெரியாத ஒருவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு, முன்பின் தெரியாத ஒருவர் ஏதேனும் உணவு பொருள் வாங்கிக்கொடுத்தால் அதை வாங்கி சாப்பிடக்கூடாது… அவர் வற்புறுத்தி அழைத்துச் செல்ல முயன்றால், அடுத்தவர் உதவிக்காக கூக்குரலிட வேண்டும்… அம்மா, அப்பா பெயரைச் சொல்லி, அவர்கள் அழைத்ததாக யாரென்றே தெரியாத ஒருவர் கூறினால் அவருடன் சென்றுவிடக்கூடாது… என்றெல்லாம் கூறி பயிற்சி கொடுத்து, அவர்களை பக்குவபடுத்த வேண்டும்.

* பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகளை அடுத்தவர்களின் பாலியல் சில்மிஷங்களை கண்டிக்கும் தைரியத்தோடு வளர்க்க வேண்டும்.

* தற்காப்பு கலைகளை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதும், எதிரிகளிடம் இருந்து அவர்களை தற்காத்துக்கொள்ள உதவும்.

* பெற்றோர்களின் இத்தகைய விழிப்புணர்வுடன், ஆசிரியர்களின் பங்களிப்பும் இருப்பது மாணவ-மாணவியருக்கு கூடுதல் பலத்தை தரும.

நன்றி- தினத்தந்தி

http://senthilvayal.wordpress.com

No comments:

Post a Comment