Saturday, January 8, 2011

2010 - மெகா ஊழல் வருடம்

21010-ம் வருடத்தை ஸ்பெக்ட்ரம் வருடம் என்று சொல்லுமளவுக்கு இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றியிருக்கிறது இந்த மெகா ஊழல்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நித்யானந்தாதான் Man of the year ஆக இருந்தார். கடைசி நிமிடத்தில் அவரைப் புறந்தள்ளிவிட்டு, டி.வி. சானல் பாஷையில் ‘இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முதலாக’ ஒரு ஊழல் கதை தினமும் செய்தியாகிற பெருமையைக் கொடுத்தவர் ஆ.ராசா. இந்த ஊழல் மகாத்மியத்தைப் பார்த்து ‘ஆ’ வென்று வாயைப் பிளந்த திருவாளர் பொதுஜனம் இன்றும் திறந்த வாய் மூட முடியாமல் தவிக்கிறார். 125 கோடி ரூபாய் GSLV ராக்கெட் புஸ்வாணமானது கூட மக்களுக்குப் பெரிதாகத் தெரியவில்லை இப்போது.
ஸ்பெக்ட்ரம், கல்மாடி ஊழல்களில் தும்பை வேண்டுமென்றே விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் அல்லது பிடிக்கிறாற்போல் நடிக்கும் வேலையைக் காங்கிரஸும், அதன் தலைவியும் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. இத்தனை மாதங்களுக்குப் பிறகு 27 இடங்களில் ரெய்டுகள் & 9 மணிநேர ‘கிரில்லிங்’ என்றெல்லாம் பரபரப்பு மூட்டுகிறது. ஆ.ராசாவும் சரி, கல்மாடியும் சரி & அசைந்து கொடுக்காமல் அசத்துவதிலிருந்து இரண்டு விஷயங்கள் பொதுவாகத் தெளிவாகிறது. ஒன்று - இந்த ஊழலை அவர்கள் தனியாகச் செய்யவில்லை. செய்திருக்கவும் முடியாது. இரண்டு & அதனாலேயே அவர்கள் பயப்படாமல் தெளிவாக இருக்கிறார்கள். இந்த விசாரணை எங்கு எப்படி முடியும் என்று அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் வரும் தைரியம்.

அது சரி & இந்த கண்துடைப்பு விசாரணை சர்க்கஸின் நோக்கம் என்ன? இறுதி முடிவு என்ன? எதிர்க்கட்சிகளின் நிலை என்ன? நோக்கம் & மக்கள் காதில் பூ சுற்றுவது (காகிதப் பூதான் அதுவும் & மல்லிகை
கிலோ ஆயிரம் ரூபாய் விற்கிறது!) இறுதி முடிவாக சட்ட ரீதியாக ஒன்றிரண்டு அதிகாரிகளைக் காவு கொடுப்பதைவிடப் பெரிதாக எதுவும் நடந்துவிடப் போவதில்லை. ஆக, ஏதாவது பயன் அல்லது முடிவு என்றால் அது அரசியல் ரீதியாகத்தான் இருக்க முடியும். எதிர்க்கட்சிகள் அதுவும் குறிப்பாக பி.ஜே.பி.யைப் பொறுத்தவரை வெறும் வாயில் மெல்லக் கிடைத்
த அவலாகக் கருதி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை என்று பிடிவாதம் பிடித்தாலும், நீரா ராடியாவுக்கும் பி.ஜே.பி. தலைவர்களுக்கு மிடையே கூட தொடர்பும், டீலிங்கும் இருந்தது என்ற காங்கிரஸ் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளின் வேகத்துக்கு முளைத்த ஸ்பீட்-பிரேக்கர்.

பட்ஜெட் தொடரைப் புறக்கணிப்பது எதிர்க்கட்சிகளின் பெயருக்கே களங்கமாக முடிய வாய்ப்பிருப்பதால் ஸ்பெக்ட்ரம் புயல் பிப்ரவரிக்குப் பிறகு தேய்ந்து, ஓய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கலாம். சரி... அரசியல் ரீதியாக ஸ்பெக்ட்ரம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? காங்கிரஸைப் பொறுத்தவரை இது ஏதோ ஆ.ராசா & தி.மு.க. தொடர்பான ஊழல்; மத்திய அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் வாயில் விரல் வைத்தால் கடிக்கத் தெரியாத அப்பாவிகள் என்பது போல் ஒரு நாடகம் போட்டு வருகிறார்கள். காலில் காங்கிரின் வந்துவிட்டால் கால்வரையில் வெட்டிவிடுவதுதான் சாமர்த்தியம் என்ற ரீதியில் தி.மு.க.வை வெட்டிவிடப் பார்க்-கிறார்கள். திரிணாமுல் மம்தாவும் அவ்வப்போது முரண்டு பிடிப்பதால் இந்த விவாகரத்தை மிகவும் நாசூக்காக காங்கிரஸ் கையாள்கிறது. இந்த நாடகத்தின் ஒரு காட்சிதான் ராகுலின் சமீபத்திய தமிழ்நாடுசுற்றுப்பயணமும் அப்போது நிகழ்ந்த நிகழ்வுகளும். மக்கள் விருப்பம் ஒன்றேதான் தங்களுக்கு முக்கியம் என்று காட்டிக்கொள்கிறது காங்கிரஸ். அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் வசதி. பந்து பட்டால் சிக்ஸர், படாவிட்டால் பாதகமில்லை என்ற நிலைப்பாடு. சட்டமன்றத் தேர்தலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் ஒன்றே பிரதானப் பிரசார ஆயுதமாகக் கொள்ளும் வாய்ப்பு. காங்கிரஸ், அ.தி.மு.க.வுடன் சேர்ந்தாலும் சரி, மூன்றாவது அணியானாலும் சரி & தி.மு.க.வைக் கை கழுவ முடிவு செய்துவிட்டதோ என்றே தோன்றுகிறது.


இப்போது தி.மு.க. நிலைக்கு வருவோம். இப்படிப்பட்ட ஒரு மெகா ஊழல், ஒரு கட்சியின் தலையெழுத்தை நிர்ணயிக்குமளவு வந்துவிட்ட பின் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று & இந்த ஊழலில் காங்கிரஸின் பங்கு என்ன என்பதை மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருக்க வேண்டும். அப்பட்டமாக அப்படிச் செய்தால் ஊழல் நடந்ததை ஏதோவொரு வகையில் ஒத்துக்கொள்வது போலாகிவிடும் & உண்மை. ஆனால், இரண்டு மிகப்பெரிய டி.வி. சானல்களை வைத்துக்கொண்டு காங்கிரஸுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை மக்கள் மனதில் கொண்டு வருவது தி.மு.க.வினருக்கு கஷ்டமில்லை. அவர்கள் நினைத்து மிகப் பிரபலமான ஒரு சாமியாரையே ஒரே நாளில் சந்திக்கு கொண்டு வர முடிந்ததே? ஆனால், கலைஞரால் அப்படி முடிவெடுக்க முடியாததற்குக் காரணம் ஆ.ராசா விஷயத்தில் அவர் குடும்பத்திற்குள்ளேயே குழப்படிகள். ஆழ்வார்பேட்டையின் அதிகாரத்தை இந்த சாக்கில் ஒரேடியாக அழித்துவிட வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே சில வியூகங்கள் நடப்பது தெரிகிறது.


சரி & இந்த நிலைப்பாடு சரிப்படவில்லை என்றால் ஆ.ராசாவை விலக்கி வைத்து (அல்லது விலக்கினாற்-போல் நடித்து) கட்சியைக் காப்பாற்ற முனைந்திருக்கலாம். ஓரளவாவது கலைஞரை மக்கள் நம்பியிருப்பார்கள். 13 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாதபோதும், தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை மடிந்துவிடாமல் காப்பாற்றிய அரசியல் சாணக்கியரான கலைஞர், ஒரு சாதாரண நிருபர் கூட்டத்தில் நிதானம் தடுமாறிப் பேசும் நிலை வந்தது எதனால்? அவரே எழுதிய மனோகரா நாடகத்து வசந்தசேனைதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஒரு வசந்தசேனைக்காக வாழ்நாள் பூராவும் வளர்த்த இயக்கத்தை அழியவிடப் போகிறாரா? வசந்தசேனையால் அரண்மனையும் அரசுமே இடிந்து விழுந்த கதையை வீரத்துடன் எழுதிய கலைஞருக்கே அந்தக் கதையின் நீதி புரியாமல் போனது பரிதாபம்.

பாசம் அவரது நிதானத்தையும் சாதுரியத்தையும் மறைக்கிறது. நேரடியான பாசத்தைவிட நாலுபக்கமும் பாசவலையில் சிக்கித் தவிக்கும் இயலாமை அவருடைய குழப்பத்தை உச்ச நிலைக்குக் கொண்டுபோய்விட்டது. இந்த சமயத்திலும் அவர் ஆ.ராசாவைக் காப்பாற்ற கட்சியை முடுக்கிவிடுவது & பலிகொடுக்கிறோம் என்று தெரிந்தே படைவீரர்களை மரணத்தின் வாயிலுக்கு படைத்தலைவன் அனுப்புவது போன்றதுதான்.

இதுவும் ஒருவகையில் சுயநலம் & குடும்பநலம் கலந்த கோழைத்தனம். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடக்கவில்லை என்ற வாதம் கேலிக்குரியது. அப்படியென்றால் ஏதோ முப்பதாயிரம் & நாற்பதாயிரம் கோடி ஊழலை ஏன்
இவ்வளவு பெரிதாகச் சொல்கிறீர்கள்? என்று கேட்பதாக மக்களே புரிந்துகொள்கிறார்கள். தலைவன் முடிவெடுக்கத் தடுமாறும்போது அல்லது தலைவனின் முடிவு தடுமாற்றமாய் இருக்கும்போது உப தலைவர்களுக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.

தலைவனைத் தற்காலிகமாகவோ, வயது கருதி நிரந்தரமாகவோ ஓய்வு பெறச் செய்துவிட்டு, தலைமைப் பொறுப்பை உப தலைவர்கள் கையில் எடுக்க வேண்டும். கலைஞர் குடும்பம் வேண்டுமானால் தி.மு.க. என்ற இயக்கத்தால் வளர்ந்திருக்கலாம். தி.மு.க. என்ற இயக்கம் வளர்ந்தது கலைஞர் குடும்பத்தினால் மட்டுமல்ல, எண்ணற்ற பல தலைவர்களினாலும், கோடிக்கணக்கான கடைநிலைத் தொண்டர்களின் உழைப்பினாலும். அந்த உழைப்பும் சரித்திரமும் வீண் போகாமலிருக்க வேண்டுமானால்... இந்தத் தேர்தலுக்குப் பின்னும் தி.மு.க. என்ற இயக்கம் தொடர்ந்து அரசியல் வானில் மின்ன வேண்டுமென்றால்... ஸ்டாலின் & அழகிரி என்ற இரண்டு உப தலைவர்களும் தங்கள் கசப்புகளை மறந்து, துறந்து, கைகோர்த்து தலைமை ஏற்று ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கட்சிக்கு சாதகமான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்தத் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறலாம் & பெறாமல் போகலாம். ஆனால், இப்போது இவர்கள் எடுக்கும் நடவடிக்கை காலா காலத்திற்கும் தி.மு.க. என்ற இயக்கத்தைக் காப்பாற்றும். தகப்பன் சாமிகளாக மாறி, இதைச் செய்வார்களா பார்ப்போம்!

http://www.tamiltodaynow.in/2011/01/21010.html

No comments:

Post a Comment